Saturday, November 29, 2025

ஒருதலை ராகம்







என்றேனும் ஒரு நாள் 

நீ என்னை நோக்கி

கண்களால் காதலை 

வெளிப்படுத்துவாய் என

மழைக்கான பிராத்தனைக்கு

குடையுடன் செல்லும்

சிறுவனைப் போல

தன் தலைக்கு மேலே 

தென்படும் நீர் குடித்த  

கருமேகங்கள் மழையாக 

பொழியாதா என

தவிப்புடன் காத்திருக்கும்

விவசாயி போல

சாலையில் தனியே 

தனது ஜோடியை 

இழந்து கிடக்கும்

ஒற்றை செருப்பு போல

சற்றுமுன் மடிந்த

காதல் கணவன்

ஒருமுறை கண் திறக்க 

வேண்டும் மனைவி போல

ஏங்கும் எனது 

ஒருதலை காதல்....



Saturday, March 9, 2024

தெய்வத்திரு வயலின் குன்னக்குடி வைத்தியநாதன் அவர்களின் கொள்ளு பேத்தி


 பேசும் விரலும் வயலின் குரலும்

உருளும் விழியும் மேதமை - மிளிரும்

இசை யாவும் மேதினி வலம்வர

பெண்ணாக பிறந்த தெய்வம்.

Wednesday, December 6, 2023

Sonnet on ‘The Wind’

It touched with its magic fingers

As I turned and tried to catch

It went far away from the notch

May it be called as breeze

Or which something that freeze

I could see its track

It left behind traces

What could it be and why it should be?

Am I the paragon to feel

The boat struggles to sail

 

The wind blows across lee

That treats the sea and ship as me

The wind keeps troubling the sea

As the life does the same for me

Still, I bargain with the wind

for which till my death no end 

Monday, October 31, 2022

அகவை 17ல் அடி எடுத்து வைக்கும் என் மகனுக்கு பிறந்த நாள் வெண்பா

 

          பிறந்த நாள் வெண்பா (01/11/2022)

நின்ற செல்வம் வென்ற புகழ்
தேடிச்சென்று பெற்ற மதி - இவை 
யாவும் என்றுமுள மொழியாய் உன்னோடு
இணைந்து வாழ்கநீ தமிழாய்...!



Monday, September 5, 2022

ஆசிரியர் தினம் - 05/09/2022 தலைமை ஆசிரியர் கணபதி அவர்கள் நினைவாக

 தியாகராஜர் கலைக்கல்லூரியில் 1990-93 வேதியியல் இளங்கலை பட்டப்படிப்பு. கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்று இருந்தது கல்லூரியின் முதலாண்டு. 

அதற்கு அடித்தளமிட்டது ஆயிரவைசியர் மேல்நிலைப்பள்ளி. 1988ஆம் ஆண்டு சேதுபதி மேல்நிலைபள்ளியில் பத்தாவது முடித்து அது கூட கரணம் தப்பினால் மரணம் என்னும் சாகசமான வெற்றி. ஆம், அறிவியலில் வெறும் 35மதிப்பெண்கள். எனது வகுப்பில் 55மாணவர்கள். அதில் வெறும் 7பேர் மட்டுமே தேர்ச்சி. இந்த மதிப்பெண்ணை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக்கொண்டிருக்கும் போது எனது எட்டு தாய்மாமன்மார்களில் கடைசி மாமா கதிர்வேல் படித்த ஆயிரவைசியர் மேல் நிலைப்பள்ளி பரிந்துரை செய்யப்பட்டது. காரணம், மிக எளிமையாக இடம் கிடைத்துவிடும் என்பது தான். அரசு உதவி பெறும் பள்ளி. விண்ணப்பபடிவத்தில் அனைத்து விருப்பத்தேர்வுகளிலும் இயற்பியல், வேதியியல். தாவரவியல் மற்றும் விலங்கியல் என்று எழுதி தொலைத்து விட்டேன். காரணம் அதைத்தான் என் மாமாவும் படித்தார். குடும்பம் மிகச்சோதனையான காலகட்டத்தில் போய்க்கொண்டிருந்தது. எனது தந்தையார் தொழிலில் மிகப்பெரிய பின்னடைவை சந்தித்து எழ முடியாமல் தத்தளித்த காலகட்டம். 

பள்ளியின் தலைமை ஆசிரியர் எனது விண்ணப்ப படிவத்தை பார்த்ததும் கொதித்தெழுந்து விட்டார்.

''ஏண்டா தற்குறி நாயே! எடுத்தது முப்பத்தஞ்சு மார்க்கு இதுல உனக்கு ப்யூர் சைன்ஸ் கேட்குதா? அட நாயே! என்னை மாதிரி ஒரு நல்லவன் உன் பேப்பரை திருத்தியிருக்காண்டா.. ஒரு வர்சம் உனக்கு வீணாயிடுமேனு பாவம்னு பாஸ் போட்டிருக்கான்..என்ன மார்க் எடுத்திருப்ப...முப்பது எடுத்திருப்ப...அஞ்சு மார்க்கு பிச்சை போட்டு பாஸ் போட்டிருப்பான்...''

என் பின்னால் நின்றிருந்த என் தந்தையார் பத்தடி பின்னால் நகர்ந்து பதுங்கி விட்டார். நான் தலைகுனிந்த வண்ணம் நின்று கொண்டிருந்தேன்.

தலையெழுத்தை கண்டவர் உண்டோ இவ்வுலகில்? நான் இருக்கிறேன். ஒரு கணம் என்னை உற்று நோக்கிய எங்கள் தலைமை ஆசிரியர் கணபதி எனது விண்ணப்பப் படிவத்தை திருப்பி பச்சை மையினால் ஆங்கிலத்தில் ''Admitted'' என்று எழுதி கையொப்பமிட்டு விண்ணப்பப்படிவத்தை என் முகத்தில் விட்டெறிந்தார்.


1990ஆம் ஆண்டு பள்ளி இறுதித்தேர்வில் வெற்றி. வேதியியலில் 188 மதிப்பெண்கள். மதுரைக்கல்லூரியிலும் தியாகராஜர் கல்லூரியிலும் கூப்பிட்டு இடம் கொடுத்தார்கள். கட்டணம் எதுவுமில்லை. கல்லூரி படிப்பு முழுக்க இலவசம். புத்தகங்கள் மட்டும் வாங்க வேண்டியிருந்தது. ஆனால் தமிழ் வழிக்கல்வியிலிருந்து ஆங்கில வழிக்கல்விக்கு மாறுவதில் காலக்கெடு மிகவும் குறைவாக இருந்தது. இந்த காலக்கெடு முடிவதற்குள் முதல் அகமதிப்பு தேர்வு வந்து முடிந்தும் விட்டது.


திருத்தப்பட்ட விடைத்தாள்களை இயற்பியல் பேராசியர் வைத்தியநாதன் கொடுத்துக்கொண்டிருந்தார். 

எனது விடைத்தாள் திருத்தப்பட்டிருந்தது ஆனால் மதிப்பெண்கள் எதுவுமில்லை.

நான் எழுந்து அவரிடம் கேட்டேன். 

''I thought of giving zero; but zero also has a value, your paper doesn't deserve that'' என்றார். 

மொத்தம் மூன்று அகமதிப்பீட்டு தேர்வுகளில் இரண்டு சிறப்பான மதிப்பெண்கள் எடுத்துக்கொள்ளப்படும் என்பது விதி. 

அடுத்த தேர்விலும் அதற்கு அடுத்த தேர்விலும் சிறப்பான மதிப்பெண்கள் எடுத்து வெற்றி பெற்றேன். 

பேரா. வைத்திய நாதன் மட்டுமல்ல, பேரா. ஜனார்த்தனன், ஈஸ்வரன், கணேசன், சுகந்தி, சிவகாமசுந்தரி, தாமரைசெல்வன், மகேந்திரன் என்று ஒரு பெரிய பட்டாளமே என் முன்னேற்றதிற்காக உழைத்தது. அதிலும் பேரா. ஜனார்த்தனன் ஆங்கில இலக்கண பிழைக்கு கூட மதிப்பெண்ணை குறைத்து விடுவார். 


பத்தாம் வகுப்பில் அறிவியலில் முப்பத்து ஐந்து மதிப்பெண் பெற்று பன்னிரெண்டாம் வகுப்பில் வேதியியலில் 188 மதிப்பெண்கள் பெற்று இளங்கலை பட்டப்படிப்பில் 70% பெற்று முதுகலைக்கு காமராஜர் பல்கலைகழகத்தில் இடம் கிடைத்தும் கட்டணம் கட்ட பணம் கிடைக்காததால் மருத்துவ விற்பனை பிரதிநிதியாகி அதில் படிப்படியாக வளர்ச்சி அடைந்து சர்வதேச வணிகத்தில் நுழைந்து கானா என்னும் ஆப்பிரிக்க நாட்டின் தலைநகர் ஆக்ராவில் அமைந்துள்ள மருத்துவப்பள்ளியில் ஒரு முறை பணி நிமித்தம் விஜயம் செய்த போது அங்குள்ள மனநலத்துறை பேராசிரியர் காமே போங்க் என்பவருடன் உரையாடிக்கொண்டிருந்த போது அங்கே வந்த அவருடைய மாணவர்கள் நேற்று அவர் நடத்திய பாடம் புரியவில்லை என்று கூறினர். 

மூளைக்குள் டோப்பமின் செல்லும் பாதைகளை பற்றிய பாடம் அது. மனநல மருத்துவத்தின் மிகச்சிக்கலான பாடங்களில் அதுவும் ஒன்று. 

நான் எனக்கு அவர்களுடன் உரையாட வாய்ப்பு கிடைக்குமா என்று கேட்க பேராசியர் காமே திறந்த மனதுடன் அனுமதித்தார்.

மூளைக்குள் டோபமின் செல்லும் வழித்தடங்கள் பற்றி மிக எளிமையாக நாற்பது நிமிடங்களில் அவர்களுக்கு தெளிவுபட உரைத்தேன். 

பேரா. காமே போங்க் பாராட்டி நற்சான்று வழங்கினார். இவர்களுக்கு இதைவிட தெளிவாக யாராலும் புரியவைக்க முடியாது என்று பாராட்டினார். இதற்கு காரணம் நான் ஒரு பெல்ஜியம் மருந்து நிறுவனத்தில் வேலை பார்த்த போது பேரா. ஹெச். பி கத்தூரியா அவர்கள் கற்றுக் கொடுத்தது. 


ஆனால் இந்த பாராட்டுகள் அனைத்தும் எங்கள் தலைமையாசிரியர் கணபதி அவர்களுக்கே போய்ச்சேரும். உண்மையில், அந்த அரங்கத்தின் வாயிலில் என்னை பேரா. காமே பாராட்டிய போது அந்த பாராட்டுக்களை மானசீகமாக என் தலைமை ஆசிரியர் கணபதி அவர்கள் பாதங்களில் சமர்பித்து விட்டேன்.


என்னை செதுக்கிய அனைத்து ஆசிரிய பெருந்தகைகளுக்கும் ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்



Thursday, August 18, 2022

தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் நினைவாக....


1995ஆம் ஆண்டு ஒரு மருத்துவ விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்த காலம். நெல்லை சந்திப்பில் பெருமாள் தெற்குரத வீதியில் வாணிவிலாஸ் காம்பௌண்டில் குடியிருந்தேன். அதே தெருவின் மத்தியில் இருக்கும் மோகன் கடையில் காலை சிற்றுண்டியும் காபியும். நண்பர்களோடு ஒரு நாள் காலை உணவின் போது விவாதத்தின் இடையே சட்டென ஒரு புறநானூற்றுப் பாடலை நான் எடுத்து விட அதே மேஜையின் கடைசியில் உணவருந்திக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் என்னும் ஆசிரியர் வியந்து போய் என்னைப் பற்றி விசாரித்தார். அவர் தான் என்னை என் பாசத்துக்குரிய தந்தையார் நெல்லை கண்ணனிடம் அறிமுகம் செய்து வைத்தார். 

ஒவ்வொரு மாதமும் சம்பளம் வந்ததும் 100ரூபாய்க்கு நூல்கள் வாங்குவதை பழக்கப் படுத்திக்கொண்டேன். அதற்கு காரணம் ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் தான். அவர் வீட்டிற்கு சென்றால் எப்போதும் அவரை சுற்று ஒரு கூட்டம் இருக்கும். வானத்திற்கு கீழே உள்ள அனைத்துமே பேசுபொருட்கள் தான். சங்க இலக்கியங்கள், கம்ப ராமாயணம், பிரபந்தம் என அவர் தொடாத தலைப்பே இல்லை. கூட்டத்தில் தமிழாசிரியர்கள் இருந்தால் அவர்கள் பாடு திண்டாட்டம் தான். வரைமுறை இல்லாமல் கிழித்து தொங்க விட்டுவிடுவார். 


காணும் போதெல்லாம் மிகவும் வாஞ்சையுடன் ''படிடா குட்டி கிடைக்கற எல்லாத்தையும் படி அது ஒரு நாளும் வீணா போகாது'' என்பார். அவர் ஒரு நாளும் எனக்கு இந்த நூல் தான் படிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது இல்லை. நான் இந்த நூல்களை படித்துக் கொண்டிருக்கின்றேன் என்று மட்டுமே கூறுவேன். விவாதத்தின் போது தவறான கருத்துக்களை பதிவு செய்ய ஒப்புக்கொள்ள மாட்டார். 


அவர் ஔவை பற்றி பேசுவதை கேட்பது ஒரு தனி சுகம். ஒரு பண்பாட்டில் பெண்ணின் சிந்தனையும் ஆணின் சிந்தனையும் எவ்வாறு காலப்போக்கில் மாறுகின்றன. அந்த மாற்றங்கள் சமூகத்தின் கூட்டு நனவிலியில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை அகச்சான்றுகள் / புறச்சான்றுகள் வழியே நின்று நிறுவுவார். மாற்றுக்கருத்து என்ற ஒன்று அங்கே எழ வாய்ப்பே இல்லாதது கண்டு நான் வியந்ததுண்டு. அப்பா என்று அழைத்தால் மிகப் பெருமையாக கருதுவார். நண்பர்களை அறிமுகம் செய்யும் போது உறவுமுறையோடு அறிமுகப் படுத்துவார். 


நெல்லையில் பணிபுரிந்த அந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் எண்ணிலடங்கா முறை அவரது இல்லத்திற்கு சென்றிருக்கின்றேன். அவர் இல்லாதபோது ஏமாற்றத்துடன் திரும்பி இருக்கின்றேன்.


அது ஒரு ஞாயிற்றுகிழமை பகல்பொழுதில் வழக்கம் போல ஒரு சபை கூடியிருந்தது. இந்த முறை பத்துக்கும் குறைவான நபர்களே இருந்தனர். நான் அவரது கால் அருகே அமர்ந்திருந்தேன். ஔவையின் படைப்புக்களை பற்றி விவாதம் சென்றது. மிகச் சரளமாக ஔவையின் ஆத்தி சூடியைய்ம் கொன்றை வேந்தனையும் கூறிக் கொண்டே பாரதியின் புதிய ஆத்தி சூடிக்கு தாவினார். அங்கே இருந்து பாரதி தாசனுக்கு தாவினார். பெரியாரை துணைக்கொள் என்னும் ஔவையின் வாக்கு பாரதிக்கு வரும்போது பெரிதினும் பெரிது கேள் என்று மாறிய அதிசயத்தை அவர்களின் சிந்தனையின் வழியே எடுத்துரைத்தார். பாரதிதாசனுக்கு வரும் போது பெண்ணும் ஆணும் சமம் என்ற பாவேந்தரின் வரிகளைக் கூறி நிறுத்தி விட்டு என்னிடம் ''குட்டி...கவனி ஆணும் பெண்ணும் சமம் அல்ல; பெண்ணும் ஆணும் சமம்'' என்று கூறி சிரித்தார்.

எனக்கு புரியவில்லை. ''என்னப்பா சொல்றே...இரண்டும் ஒன்னு தானே A + B = B + A அப்படித்தானே..நீ என்னமோ புதுசா கண்டுபிடித்த மாதிரி சொல்ற'' (பழகிய மூன்று மாதங்களில் ஒருமையில் பேசும் அளவுக்கு துணிச்சல் வந்து விட்டது அதை அவர் அங்கீகரித்தார்).

''டேய் லூசுப்பயலே அப்படி இல்லடா., கிழவி என்ன சொல்றான்னா பெண் தான் முதல்ல...பெண் அப்பறம் பெண்ணிலிருந்து ஆண்...ஒரு ஆணாதிக்க சமூகத்திற்கு பெண்ணாக ஔவை விடுத்த அறைகூவல்...நாங்க இல்லைன்னா நீங்க கிடையாதுடான்னுட்டு....என்ன அண்ணாச்சி சரிதானே என்று நண்பர் ஒருவரிடம் அந்த கருத்துக்கு ஒப்புதலும் பெற்றார். 


தொடர்ந்து ஆத்தி சூடியை கூறி வந்தவர் இயல்வது கரவேல், ஈவது விலக்கேல், உடையது விளம்பேல், ஊக்கமது கைவிடேல் என்று கூறி கூட்டத்தில் இருந்த தமிழாசிரியரை நோக்கி ''டேய் வாத்தி இந்த கரவேல், விலக்கேல், விளம்பேல், கைவிடேல் இதுக்கு இலக்கணக் குறிப்பு சொல்லுடே'' என்றார்.


தமிழாசிரியருக்கு வியர்த்து கொட்டிவிட்டது. அந்த நபருக்கு தெரியாது என்பது தந்தையாருக்கு தெரியும். இருப்பினும் வீம்புக்கு தான் கேட்டார். 

அவர் விழித்துக்கொண்டே இருந்தார். திடீரென என்னை பார்த்து ''குட்டி நீ சொல்லுடே'' என்றார்.

நான் அமைதி காத்திருக்க வேண்டும். பொறுமையுடன் அந்த சூழலை கையாண்டிருக்க வேண்டும். ஆனால் அதீத ஆர்வத்தில் ''அப்பா! அது எதிர்மறை ஏவல் வினைமுற்று என்றேன். தமிழாசிரியர் என்னை எரிக்கும் கண்களுடன் ''ஏலேய் நீ கெமிஸ்ட்ரி ஸ்டூடண்ட் தானே...வாய மூடிட்டு பேசாம இருடே...வந்துட்டான் பெரிய பண்டிதனாட்டம்'' என்று சாமியாடினார். இது போதாதா...தமிழாசிரியரை உண்டு இல்லை என்று செய்துவிட்டார். எனக்கு தர்மசங்கடமாக போய்விட்டது. 


''ஏண்டா தமிழை படிச்சிட்டு தமிழை புள்ளைகளுக்கு கற்றுகொடுக்கும் உனக்கு இலக்கணக்குறிப்பு தெரியல., வேதியியல் படிச்சவன் சொல்றான் வெக்கமாயில்லை...உன்னை நம்பி வர்ற புள்ளைகளுக்கு துரோகம் பண்றதுக்கு எப்படிடே மனசு வருது...'' மனுசனா பொறந்தா துளியாவது உண்மையோடு வாழணும்டே...இதெல்லாம் ஒரு பொழப்பா? எரிமலையாய் குமுறினார்.


வழக்கமாக சபை கலைந்த பின்பு உணவருந்தி விட்டு விடை பெறுவோம். ஆனால் அந்த தமிழாசிரியர் அன்று சரியாக சாப்பிடவே இல்லை. எனக்கோ ஒரு குற்ற உணர்ச்சி உறுத்திக்கொண்டே இருந்தது. குறிப்பாக அந்த தமிழாசிரியர் சாப்பிடும் முறையை பலமுறை கவனித்திருக்கிறேன். சோறுடன் கூட்டு, பொரியல் இவை இரண்டையும் சேர்த்தே சாப்பிடுவார். நாம் முதலில் சோறு அடுத்து கூட்டு அடுத்து சோறு அடுத்து பொரியல் என்று உண்போம். அவர் அனைத்தையும் கலந்துகட்டி அடிப்பார். அளவு கூட சராசரிக்கும் சற்று மேலே தான். நான் மிகக்குறைவாகவே சாப்பிடுவேன். எனவே அவர் உண்ணும் அளவு எனக்கு வியப்பை ஏற்படுத்தும். ஆனால் அன்று அந்த தமிழாசிரியர் சரியாக சாப்பிடவே இல்லை. அமைதியாக விடைபெற்றார். அனைவரும் விடைபெற்றனர். தந்தையார் அன்று மாலை நெல்லைக்கு அருகே இருக்கும் கோயிலில் பேச வேண்டும். எனவே ஓய்வெடுக்க அவரது அறைக்கு கிளம்பினார். நான் மட்டும் அந்த சபை நடந்த அறையின் சுவரில் சாய்ந்து கொண்டு விட்டத்தை பார்த்தபடி நின்று கொண்டிருந்தேன்.

அனைவரும் விடைபெற்ற பின் நான் மட்டும் நின்று கொண்டிருந்ததை கவனித்த தந்தையார் துணுக்குற்று என்னை நோக்கி ''என்னடே?'' என்றார்.


எனக்கு கொட்டித்தீர்த்துவிட வேண்டும் இல்லையெனில் தலைவெடித்துவிடும் போலிருந்தது.


''எதுக்குப்பா அவ்வளவு மோசமா நீ ரியாக்ட் பண்ணினே? உனக்கு தமிழ் தெரியும்னா  அதே அளவுக்கு அவருக்கும் தெரியணும்னு கட்டாயமா? அவசியமில்லையே...நீயே அடிக்கடி சொல்ற மாதிரி உனக்கே தெரியாத விசயங்கள் தமிழில் இருக்கே...அது மாதிரி தானே அவருக்கும்...உனக்கு தெரியாதுன்னா சரி அவருக்கு தெரியாதுன்னா குற்றமா...என்ன மாதிரியான தர்க்கம் இது...உங்கிட்ட    இருந்து இதை நான் எதிர்பார்க்கவே இல்லைப்பா...'' என்றேன்.


தந்தையார் எதுவும் பேசவில்லை. என்னை நோக்கி மெல்ல நடந்து வந்தார். என் கண்களை உற்று பார்த்தார். என் தலைமுடியை கோதிவிட்டபடியே ''குட்டி., அவன் மார்க்கெட்ல அநியாய வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் பண்றாண்டா'' என்றார்.

(பாசத்துகுரிய எனது தந்தையார் நெல்லை கண்ணன் அவர்களின் நினைவுகளின் ஊடே பயணிக்கும் இந்த கட்டுரை அவர் தந்த தமிழால் அவருக்கே அஞ்சலியாக...)

Thursday, March 4, 2021

Sonnet on his Birthday (01/11/2020)

  

 


Oh my son, you came as bolt from the blue

  Even your mother didn’t have clue!

 Grand  clouds showered earth

  As bursted hive spilt honey on your day of birth!

  I saw harbinger in your beaming smile

  That kept my worries away from mile!

  My lap was the cradle where you nap

  That bridged my life sans any gap!

 

  The aroma of your breath by which my wounds  heal

  In joy and glee, my soul would dwell

  Sparkling eyes and silky skin all I feel

  Let this scintillating occasion be with me forever 

  The day you born first of November

  Even after my death I should remember

பிறந்த நாள் வாழ்த்துப்பா- 01/11/2006

 

 

 
   விசும்பு அதிர முளைத்த தாரை
   சிறுகை நீட்டி தூமலர்பாதம் பதிய
   மழலைச் சொல் பேசி- விளிக்கும்
   கண்ணொளி கண்டு மொட்டுநாசி  தொட்டு
   மென்பட்டு மெய்தடவி கேசம் வருடி
   பல்லில்வாய் நகைகண்டு மயங்கிய வேளை
   தெய்வம் உண்டெனக் கண்டேன்!
 

   நுண்புல் தாங்கிய பனித்துளி - செறிந்த
   அடவி சுரந்த நன்னீர் புனல்
   பாழ்பாலை கண்ட பெருமழை
   ஆவின் பால்சுவை நறுவீ மணமென
   செப்பிடினும் உன்தீண்டல் ஈடோ

 
   வற்றாத செல்வம் பொதிந்த மெய்வளம்
   திரள்மிகு நிறைகேள்வி பெற்றாங்கே 
   விளையும் மகிழ்ச்சி பெறுகி - நெடுநாள்
   இசைபெற வாழ மகிழ்ந்தே வாழ்த்தும்
   வானும் மண்ணும் தமிழும் - உன்
   அன்னையும் நானும் இயைந்து.






கம்யூனிசம் என்றால் என்ன? என்ற நூலுக்கு எழுதிய அணிந்துரை


கம்யூனிசம் என்றால் என்ன? என்ற இந்த நூலை தோழர் ரகு வாசிக்க அளித்தபோது நேரமின்மையால் தவித்து வந்தேன்.  (உபயம்: கொரோனா) ஆனால் வாசிக்க ஆரம்பித்தவுடன் அதை ஒரே மூச்சில் வாசித்து முடித்தேன்.

எந்தவொரு தத்துவமும் அறியப்படும் வரை சோர்வை வரவழைக்கும் என்பது இயல்பு. காரணம், தத்துவம் அறிதல் என்பது பல்வேறு பருண்மையான தரவுகளின் வழியே ஒரு உண்மையை கண்டு தெளியும் முயற்சி என்பது எனது புரிதல். அந்த வகையில் பொதுவுடைமை தத்துவம் என்பது சுரண்டலற்ற சமூகம் ஒன்றை படைக்க விரும்புவோர் கைக்கொள்ள வேண்டிய ஒன்று. தத்துவத்தை பயில வேண்டுமே அன்றி படிக்க இயலாது. பயிலுதல் வேறு படித்தல் வேறு. ஆனால் தற்கால தமிழ்ச்சூழலில் படித்தோரே பயின்றவர் போல் மிகைப்படுத்திக் காட்டிக்கொண்டு தத்துவவியலாளர்களாக உலாவருதல் வருத்தத்திற்குரிய ஒன்று. 

தத்துவம் பயிலுலதல் அனைவரும் பயிலக்கூடிய ஒன்றல்ல. காட்டாக, தலைவலிக்கு பாராசிட்டமால் உட்கொள்ளும் ஒருவர் அதன் வேதியியல் இயல்புகளை அறிய மாட்டார். தேவையுமில்லை. மாறாக அதை உற்பத்தி செய்து வணிகபடுத்தும் ஒருவர், அதன் வேதியியல் & மருந்தியல் கூறுகளை (Chemical and Pharmacological properties) அறிந்திருத்தல் முதன்மையானது. அதைப்போன்றே, தான் வாழும் சமூகம் எம்மாதிரியான திசையில் செல்கிறது அதை சரியான திசையில் செலுத்த தனது பங்களிப்பு என்ன என்பது குறித்த சிந்தனை கொண்டோரே தத்துவம் பயில வேண்டும். 

இந்த நூல் கம்யூனிசத்தை மிக எளிமையாக அறிமுகப்படுத்துகிறது. ஆசிரியரின் குரல் மிகவும் தோழமையானது. மலையேறி பிரசங்கம் செய்யவில்லை. மேடையேறி சங்க நாதம் முழங்கவில்லை. மாறாக, உங்கள் அருகே அமர்ந்து கொண்டு தோளில் கைபோட்டுக்கொண்டு  இந்த சமூகத்தின் இயக்கத்தையும் அதை தீர்மாணிக்கும் காரணிகளையும்  கவனப்படுத்துகிறது. 

பொருள்முதல்வாதம் என்று அதை எளிமைப்படுத்திய பதிப்புகளும் பிரச்சாரங்களும் மிகுந்த அறிவுச்சூழலில் முதலில் பொருள் என்றால் என்ன என்ற நமது அடிப்படை புரிதலை தகர்த்து உண்மையை எடுத்துக்காட்டும் விதமே இந்த நூல் இன்றைய தேவையை உறுதிப்படுத்துகிறது. பொருள் என்றால் என்ன என்ற இந்த கேள்வி எவ்வளவு கடினமானது  என்பதை நூலை வாசித்தோர் தங்களது நண்பர்களிடையே வினவி விடைபெற முயற்சிக்கலாம். 

''பொருள் என்பது தோற்றமும் முடிவும் இல்லாத ஐம்புலன்களால் அறியப்படக்கூடிய புறநிலை எதார்த்தமே பொருள்'' (பக்கம் - 21) என்ற சொற்றொடருக்கு அஞ்சி புத்தகத்தை வாசகர் கீழே போட்டுவிடுவாரோ என்ற அச்சமே ஏற்படாதவகையில் அதற்கான விளக்கத்தை எளிமையான சொற்களில் ஆசிரியர் தந்துள்ளார். இது இந்த நூலின் மேன்மைக்கு ஒரு சான்று அவ்வளவே. இதைப்போலவே பல்வேறு சான்றுகள் நூலெங்கும் விரவி உள்ளன. வாசகரின் வாசிப்பு உற்சாகம் குன்றகூடாது என்பதற்காக அவற்றை இங்கே தவிர்க்கிறேன்.

இந்த படைப்பு முகனூல் விவாதத்திலிருந்து நூலாக பரிணாமம் பெற்றது என்பதை அறியும் போது சற்றே வியப்பாக இருக்கிறது. பொதுவாக சமூக இணையதளங்களில் லாவணி கச்சேரிகளே மிகுதி என்ற நிலையிலிருந்து நாம் சிறிது சிறிதாக மீள்கிறோம் என்ற நம்பிக்கை பிறக்கிறது. கம்யூனிசம் என்றால் என்ன என்று அறிந்து என்ன சாதிக்கப் போகிறோம் என்று சில அறிவுஜீவிகள் கேட்கக்கூடும். ஒருபுறம் கம்யூனிசம் ருஷ்யாவிலும் லத்தீன் அமெரிக்க நாடுகள், வியட்நாம் கம்போடியோ போன்ற தேசங்களிலிலேயே தோற்றுவிட்டது என்று அரவிந்தன் நீலகண்டன் போன்ற சங்கிகள் மற்றும் பிற சுரண்டல் சக்திகள் புத்தகம் எழுதி தங்களது அரிப்பை தீர்த்துக்கொள்கிறார்கள். 

கம்யூனிசம் என்பது சுரண்டலற்ற சமூகத்தை படைப்பதற்கான ஒரு சமூக சிந்தனை. அதை மிகச்சரியாக தான் வாழும் சமூகத்திற்கு பயனளிக்கும் விதத்தில் பயன்படுத்துவோர்க்கு இது ஒரு சிறந்த படைப்பு. எது ஒன்றை நாம் முழுமையாக அறிகிறோமோ அதைத்தான் செயல்படுத்த முடியும். அறிந்த ஒன்றை செயல்பாடாக மாற்ற தன்னலமற்ற உழைப்பு முக்கியம். கம்யூனிசம் போதிப்பது திறனுக்கேற்ற உழைப்பை சமூகத்திற்கு அளித்து தேவைக்கேற்ப பலனைப் பெறுதலைத்தான். சுரண்டலும் ஏற்றத்தாழ்வும் அற்ற சமூகத்தை கட்டமைப்பதின் முதல்படி இதுவே. இந்த சமூக சிந்தனையே பிச்சைக்காரர்கள் அற்ற சோவியத் ரஷ்யாவை கட்டமைத்தது. அது 75 ஆண்டுகள் நிலைத்து முதலாளித்துவ ஆற்றல்களை தூங்கவிடாமல் செய்தது. நான் மாஸ்கோவில் பயணம் செய்த ஐந்து நாட்களிலும் லெனின்கிராட் என்று அன்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் என இன்றும் அழைக்கப்படும் நகரத்தில் இருந்த இரண்டு நாட்களிலும் ஒரு பிச்சைக்காரரைக் கூட பார்க்கவில்லை என்பதே இதற்கு சான்று. கடந்த முப்பது ஆண்டுகளாக முதலாளித்துவத்தின் பிடியில் ரஷ்யா சிக்கியபின்பும் கூட கம்யூனிச சித்தாந்தம் கட்டியமைத்த சமூகத்தின் வலிமை குறையவில்லை என்பதனை இது காட்டுகிறது. 

இந்தியா போன்ற நிலப்பிரபுத்துவத்தின் விழுமியங்கள் கோலோச்சும் சமூகத்தில் கம்யூனிச தத்துவத்தின் இருப்பும் செயல்பாடுகளும் இன்றியமையாதவை. தோற்றுவிட்டது என்று கேட்கும் மேதாவிகளுக்கு கப்பல்கள் மூழ்குவதால் ஆர்க்கிமிடீசின் மிதவை தத்துவம் தவறு என்றோ இஸ்ரோ விஞ்ஞானிகள் செலுத்திய செயற்கைக்கோள் ஏந்திய ராக்கெட்டுகள் கடலுக்குள் விழுந்ததால் நியூட்டனின் இயக்கவிதிகள் தவறு என்றோ கூறுவீர்களா என்று நாம் தான் தெளிவை ஏற்படுத்த வேண்டும். 

கம்யூனிசம் ஒரு சமூக அறிவியல் தத்துவம். அது ஒரு நாளும் தோற்காது பொய்க்காது. வாள் இருக்கும் வரை கேடயமும் இருக்கும் என்பதைப் போல சுரண்டல் இருக்கும் வரை கம்யூனிச தத்துவமும் இருக்கும். 


சுரண்டலுக்கு எதிராக கரம்கோர்க்கும் அனைவருடைய கையிலும் திகழ வேண்டிய கையேடு ''கம்யூனிசம் என்றால் என்ன?''. படைத்து பதிப்பித்தோர்க்கு பாராட்டுக்களும் வாங்கி வாசிப்போருக்கு வாழ்த்துகளும்.



Wednesday, February 24, 2021

கலையும் பொழுது...

காற்றில் கலைந்து 

வடிவமிழந்த மணல்கோடுகள் 

கனவுகள்...!


நதிநீரை உப்பாய் 

மாற்றும் சமுத்திரமாய்

வாழ்க்கை...!


தன் இனத்தையே

தின்னும் பாம்புகளாய்

நினைவுகள்...!


தன் பலம் மறந்து

பிச்சை எடுக்கும்

யானையாய் 

இலட்சியங்கள்...!


சூரிய ஒளியின்

ஸ்பரிசத்தில்

கரைந்து போகும் 

பனித்துளியாய்

ஆசைகள்...!


இத்தனைக்கும் மத்தியில்

கடந்து செல்லும் தென்றலாய்

புதிதாய் பூத்த பூவாய்

எழுந்து மடியும் அலையாய்

ரத்தம் நாளம் அறுபட்டு

உடலிலிருந்து 

வெளியேறத் துடிக்கும் உயிராய்

கழிகிறது பொழுது

குறிக்கோளின்றி...!

Monday, September 21, 2020

அடவி (சிறுகதை)

 

இருண்டு கிடந்தது காடு. காட்டை இரண்டாக பிளந்தது தார்ச்சாலை. வணிக போக்குவரத்து இல்லாவிடினும் வனத்துறையினரின் வாகனத்திற்காக அமைக்கப்பட்ட சாலை பாதகமின்றி இருந்தது. பருத்து உயர்ந்து செழித்து வளர்ந்த மரங்கள் சூரியக்கதிர்களை பகைகொண்டு அனுமதிக்க மறுத்தன. கோடைகாலம் என்ற போதிலும்  காடு குளிர்ந்த காற்றால் நிரம்பியிருந்தது. எப்போது வேண்டுமானாலும் மழை பெய்யலாம் என்பது போல் நீர் குடித்த மேகங்கள் மரங்களின் இலைகளை முத்தமிட்டபடியே சூழ்ந்திருந்தன. வனவிலங்குகள் சமூக விலங்குகளின் பாதிப்பின்றி நடமாடிக் கொண்டிருந்தன. பகல்பொழுதை இரவாக்கி வைத்திருந்த வனத்தின் இருளை கிழித்துக்கொண்டு விளக்கின் துணைகொண்டு சீரான வேகத்தில் முன்னேறியது காவல்துறையின் இரண்டு வாகனங்கள். முதலில் சென்று கொண்டிருந்த வாகனத்தில் இரண்டு கைதிகள் மற்றும் உணவு மூட்டைகளுக்கு மத்தியில் கைகள் பின்புறமாக விலங்கு பூட்டப்பட்டு மயங்கிக்கிடந்தான் கதிர்.

அதைத்தொடர்ந்து சென்ற நவீன வாகனத்தில் ஒட்டுனர் இருக்கையில் ஏட்டு சுந்தரம் மற்றும் பின்னிருக்கையில் இரு இணை ஆணையர்கள். வாகனத்தின் கதவுகள் இருக பூட்டப்பட்டிருந்த போதிலும் சுந்தரம் மெதுவாகவே பேசினார்.

''ஐயா...இங்கிருந்து இன்னும் 20 கிலோமீட்டர் போனோம்னா ரோடு ரெண்டா பிரியும்ங்க...அங்கே இருந்து வலது பக்கம் ஒரு கி,மீ போய்ட்டோம்னா நம்ம இடம் வந்துடும்...ஒரே நாள்ல சோலிய முடிச்சிபுட்டு நாளைக்கு காலை கிளம்புனோம்னா  ராத்திரி கீழே கேம்ப் ஆபிசுக்கு வந்துடலாம்ங்க...''

இணை ஆணையர் ஆனந்த்குமார் சர்மா '' அது என்னவோ அவ்வளவு சீக்கிரம் முடியற வேலையில்லை சுந்தரம்...இவன்கிட்ட இருந்து இன்னும் நிறைய தகவல் வாங்க வேண்டியிருக்கு....நமக்கு தேவையான தகவல் அவ்வளவும் கிடைச்ச பிறகுதான் மற்றதை செய்ய செய்ய முடியும்''

''.கே....நீங்க சொல்றது சரிதான்...இந்த மாதிரி ஆளுக கடுமையான பயிற்சி எடுத்துருப்பாங்க...சித்ரவதையை எப்படி தாங்கிக்கிறதுங்கற ப்ராக்டிஸ் அவர்களுக்கு இயக்கத்துல சேர்ந்த நாள்ல இருந்து தொடர்ந்து கொடுக்கப்பட்டிருக்கு...மத்திய பிரதேசத்தில நான் வேலை பாத்தப்ப நேரடியாகவே பாத்திருக்கேன்...'' என்றார் இணை ஆணையர் கோவிந்தராஜன்.

 

''என்னங்க ரெண்டு பேரும் இப்படி பேசுறீங்க...இன்னைக்கு நம்ம பண்ணப்போற விசயம் இருக்கே அதுக்கு இவன் தாங்க மாட்டான்...மற்றவர்கள் மாதிரி இவனுக்கு உடல் வலு இல்லைங்கய்யா...வெறும் சித்தாந்த வலு தான்....நானும் கேள்விப்பட்டேன்...தோழர் நல்லா பேசுவாராம்...ஆளைப்பாத்தீங்கள்ல எப்படி இருக்கான்னு....நீங்க நெனெக்கிற மாதிரி ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்காதுன்னுதான் நான் நெனெக்கிறேன்...''

 

''சுந்தரம்...பேசிக்கிட்டே நாம ஸ்பாட்டை மிஸ் பண்ண போறோம்...கரெக்ட்டா பாய்ண்ட பாருங்க...முன்னாடி போற வேனை ஒவர்டேக் பண்ணி நம்ம வண்டியை ஃபாலோ பண்ணச் சொல்லுங்க'' என்றார் .கே.

 

''அதுதானுங்கய்யா...நானும் யோசிச்சிக்கிட்டே வர்றேன்...இருபது கிலோ மீட்டர்னு சொன்னானுக...நாம ரொம்ப தூரம் வந்துட்டோம் போலருக்கே...ரோடு எங்கேயும் பிரியலையே''

''மைலா...கிலோமீட்டரா?'' என்றார் .கே.

''அப்படி ஒன்னு இருக்கோ....அது தெரியாம போச்சே...ஃபாரஸ்ட்டு காரனுக நேத்தே வந்து அங்கே டெண்ட் போட்டு வச்சிருப்பாங்க...நாம ஈசியா கண்டுபிடிச்சிடலாம்ங்கய்யா...''

''சீக்கிரம் போய்ச்சேர வழிய பாருங்க சுந்தரம்....இந்த காட்டுல பகல் பன்னிரண்டு மணிக்கெல்லாம் இருட்டிடும்'' என்றார் .கே.

''ஐயா இதோ வந்துடுச்சிங்கய்யா...இது தான் பள்ளத்தூர் விலக்கு...ரைட்ல கட் பண்ணணும்''

வண்டி வலதுபக்கம் திரும்பி ஒரு மைல் தூரம் கடந்ததும் மீண்டும் திரும்பி ஒரு சிறிய குன்றின் பின்புறம் வனத்துறை அமைத்திருந்த கூடாரத்தை வந்தடைந்தது.

சுந்தரம் அத்தியாவசிய பொருட்களை இறக்கி வைக்க கைதிகளை பணித்தார்.

''இதோ பாருங்கப்பா...இங்க நடக்குறது எதுவும் வெளியே தெரியக்கூடாது...ஒங்கள நான் எதுக்கு கூட்டிட்டு வந்துருக்கேன்னு கூட வந்திருக்குற அதிகாரிகளுக்கு இனிமே தான் சொல்லப் போறேன்...புரிஞ்சதா...அவங்க மனசு கோணாதபடிக்கு நடந்தா...நீங்க திரும்பி ஜெயிலுக்கு போனதுக்கப்பறம் ராஜா மாதிரி இருக்கலாம்...புரிஞ்சதா? அவனை கீழே இறக்கி சுத்தம் பன்ணி நாற்காலி ஒக்கார வைங்க...காரியத்தை சீக்கிரம் ஆரம்பிக்கணும்...''

''நீங்க சொன்னபடியே நடந்துக்குறோமுங்க....'' இருவரும் ஒருமித்த குரலில் ஒலித்தனர்.

சரி...சரி...நேரத்தை கடத்த வேணாம்...ஒருத்தரு அவனை சுத்தமாக்கி ஒக்கார வைங்க... ஒருத்தரு குழி வெட்ட ஆரம்பிங்க...இன்னும் ஒரு மணி நேரத்தில இருட்ட ஆரம்பிச்சுடும்..பெட்ரோமாக்ஸ் வச்சிக்கிட்டு வேலையை முடிங்க...சரியா...ம்ம்ம்..சீக்கிரம்'

சற்று ஈரம் கலந்த நிலத்தை கைதிகளில் ஒருவன் தோண்ட ஆரம்பித்தான். மற்றொருவன் தனக்கு பணிக்கப்பட்ட பணியை செவ்வனே செய்யத்துவங்கினான். மயங்கிய கதிரின் கைகால் விலங்குகள் அகற்றப்பட்டன. அரசு மருத்துவர் செலுத்திய மருந்தின் தாக்கம் இன்னமும் இருந்தது. ஆடைகள் அகற்றப்பட்டு நாற்காலில் அமரவைக்கப்பட்டான். கைகால்களில் மீண்டும் விலங்குகள் நாற்காலியோடு இணைத்து பூட்டப்பட்டன.

சுந்தரம் மீண்டும் வந்தார்.

''தம்பி...இதோ அங்கே கீழே பாரு...அங்கே ஒரு ஊற்று இருக்கு...அங்கே இருந்து தண்ணி எடுத்துட்டு வந்து இந்த கேன்ல நிரப்பு...அப்புறம் சமைக்க ஆரம்பிச்சிடு...ஐயாமாரு இப்போ வந்துடுவாங்க...வேலைய ஆரம்பிக்கணும்...அப்டியே இவன் மேலேயும் ரெண்டு குடம் தண்ணி ஊத்து...''

நிலம் தோண்டிக்கொண்டிருந்தவனை நோக்கி ''டேய்...நீ ஒரு நாலடி தோண்டிட்டு நிறுத்திடு....சரியா? என்றார்.

''ஐயா...இந்தாளு அஞ்சரை அடிக்கு மேலே இருப்பார் போலருக்கே...பத்தாதுங்கய்யா...''

''அதெல்லாம் நாங்க பாத்துக்கிடுவோம்...நான் சொன்னதை மட்டும் செஞ்சா போதும்...புரிஞ்சதா?''

''சரிங்க ஐயா....எனெக்கெதுக்கு வம்பு...நீங்க சொல்றபடியே செஞ்சுறேனுங்க...'

சுந்தரம் உயரதிகாரிகளின் கூடாரத்துக்கு வந்தார்.

''ஐயா...ஒரு முக்கியமான விசயம்....சொல்லலாமுங்களா?''

மதுக்குப்பியை திறந்து இரு கண்ணாடி மதுக்கிண்ணங்களில் ஊற்றியபடியே பார்வையாலேயே சொல் என்றார் கோவிந்த ராஜன். ,கே சிப்ஸ் பாக்கெட்டை திறப்பதில் கவனமாக இருந்தார்.

''ஐயா...இந்த மாசம் முப்பதாம் தேதி எனக்கு ரிடையர்மென்டுங்க...''

''அதுதான் உனக்கு இப்போ பிரச்சினையா?''

''இல்லைங்க...நான் இப்போ கந்தசஷ்டி விரதத்தில இருக்கேனுங்க...''

''யோவ்..என்னய்யா வேணும் ஒனக்கு..ரிடையர்மெண்ட்ங்கற விரதம்ங்கற...வாட் இஸ் யுவர் ப்ராப்ளம்?''

''ப்ராப்ளம்லாம் ஒன்னும் கிடையாதுங்க....இவனை பேசாம சுட்டு கொன்னுட்டு புதைச்சிட்டு போய்டலாம்ங்க...எதுக்குங்க வீணா அதை இதைப் பண்ணிக்கிட்டு...''

''என்ன சுந்தரம் திடீர்னு ரூட்டு மாறுது....நீ பாட்டுக்கு ப்ளானை மாத்துங்கற...பண்றது எவ்ளோ பெரிய மேட்டரு...மனித உரிமை கமிசன், கோர்ட் ஆர்.டி. விசாரணைன்னு எவ்வளவு சங்கடம் இருக்கு தெரியுமா? அதுலயும் எங்க சம்மதம் இல்லாம பள்ளத்தூர் சப்ஜெயில்ல இருந்து ரெண்டு பேரைக் கூட்டிட்டு வேற வர்ற... என்ன நெனெச்சிட்டுருக்க மனசில...ம்ம்''

ஐயா., அது வேற ஒண்ணுமில்லங்க...சுட்டு கொல்றதுல எனக்கு ஒரு சங்கடமுமில்லங்க...ஆனா மலத்தை ஒடம்புல பூசுறது, மிளகாய் தூளை ஆசனவாயில திணிக்கிறது இதுமாதிரி வேலையை செய்றதுக்கு தான் அவனுகள கூட்டிட்டு வந்தேன்...நீங்க ஒண்ணும் வித்தியாசமா நினைக்கக்கூடாது...''

அதுவரை பேசாம இருந்த .கே ''ஏய்...சுந்தரம் ப்ளான்ல எந்த சேஞ்சும் இல்லை...போய் ஆகவேண்டியதை பாரு'' என்றார் கடுமையான குரலில்.

''உத்தரவுங்கய்யா'' என்றவாரு சுந்தரம் பின்னோக்கி நடந்து நகன்றார்.

முழுபோதை கண்களில் தெரிந்தாலும் மிக நுட்பமாக பயிற்றுவிக்கப்பட்ட மூளை கேள்விகளை வரிசைப்படுத்திக் கொண்டே இருந்தது.

''கதிருக்கு எதிரே இருந்த இரு நாற்காலிகளில் அமர்ந்த இருவரும் ஒரே குரலில் ''எழுப்புய்யா அவனை'' என்றனர்.

ஒரு குவளை நீரை வேகமாக முகத்தில் வீசியடித்து கதிரை எழுப்பினர்.

''அப்புறம் தோழர்...உடம்பு எப்படி இருக்கு...?'' என்றார் ,கே

முதல்நாள் செலுத்தப்பட்ட மருந்தின் தாக்கம் சற்றுதான் குறைந்திருந்தது. கண்கள் சிவந்திருந்தன. கருவிழிகள் மேல் நோக்கி இமைகளுக்குள் சுழன்றபடி இருந்த போதிலும் சில நொடிகளில் தலையை உலுப்பி நிதானத்திற்கு வந்த கதிர் சூழ்நிலை உணர வெகுநேரம் பிடிக்கவில்லை. தனக்கு முன்னே அமர்ந்திருந்த இரு அதிகாரிகளையும் சினேகமாக புன்னகை செய்தான். அது கேலியாக புரிந்துக்கொள்ளப்படும் சாத்தியக்கூறுகள் இருந்த போதிலும் அவன் துணிந்தே அதைச் செய்தான்.

''என்ன தோழர்., பார்வையில கேலியும் கிண்டலும் தெரியுதே...?''

''உங்களை கேலி செய்து என்ன பலன்....நான் அதிகாரத்தை நோக்கி மட்டுமே எனது விமர்சனங்களை வைக்கிறேன்...அமைப்பு மாற்றத்தை விரும்பும் ஒருவன் அதைத்தான் எதிர்க்க வேண்டும். அதிகார அமைப்பு நிலையானது...அதை இயக்குபவர்கள் வந்து போவார்கள்...எனவே...

''உஷ்...கொஞ்சம் நிறுத்த சொல்லுங்க சார்...என்ன கேட்டோம்னு இப்படி லெக்சர் விட்ராரு தோழரு...''

இடைமறித்த சுந்தரம் ''இதுக்குத்தான் நான் அப்பவே சொன்னேன்...பேசாம் சுட்டு பொதைச்சிட்டு போய்டலாம்னு...''

''அடச்சீ வாயை மூடு...என்ன செய்யணும்னு நீ எங்களுக்கு சொல்லித்தர வேண்டியது இல்ல'' எகிறினார் கோவிந்த ராஜன்.

''கதிர்...எனக்கு நேரத்தை வேஸ்ட் பண்றது பிடிக்காது....எனக்கு சில கேள்விகளுக்கு பதில் தெரியணும்...அதுக்கு பதில் சொல்லிட்டா...பதில்னா உண்மையான பதில்....புரிஞ்சதா....உயிர் கொஞ்சம் கஷ்டம் இல்லாம போகும்...இல்லைனா...ஏண்டா பொறந்தோம்னு நினைக்க வேண்டி வரும்''

''சாகபோறப்ப எதுக்கு சார் ஏன் பிறந்தோம்னு நினைக்கப்போறேன்?''

''இனி பேசி பிரயோஜனமில்லை....ஏட்டு...கம்பி காயப்போட்டியா...''

''ஆச்சுங்கய்யா....ஆரம்பிச்சிடலாம்ங்கலா?''

''இரு...இரு...தோழர்கிட்ட கேள்வியே இன்னும் கேட்க ஆரம்பிக்கலையே...'' என்றவர் முதல் கேள்வியை தொடுத்தார்.

''கதிர்...கமிசனர் வினாயக் சர்மா ஒப்பணக்கார வீதி கணபதி சில்க்ஸுக்கு வர்ற விசயம் உங்க குரூப்புக்கு எப்படித் தெரியும்''

''அதைக் கண்டுபிடிக்கிறது தானே உங்க வேலை''

''நாயே...அதைத்தாண்டா செஞ்சிக்கிட்டு இருக்கோம்'' என்றபடியே கோவிந்தராஜன் கன்னத்தில் மூர்க்கமாக குத்தினார்.

''நீங்கல்லாம் கமிசனரையே தூக்குற அளவுக்கு பெரிய ஆளாடா...ம்!

கதிருக்கு பொறிகலங்கியது. ஆனால் மீண்டும் தன்னை நிதானத்திற்கு கொண்டு வந்தான்.

''மரியாதையா உண்மையை சொன்னா உங்க உடம்புக்கு நல்லது தோழர்...எப்படி வசதி?'' ன்றார் ஏ.கே.

''அவர் செஞ்ச வேலை என்னென்னு உங்க ஏட்டையாவை கேட்டா சொல்வாரு...அப்புறமா எங்க குரூப் ஏன் அவரை போட்டதுங்கற விசயத்துக்கு வரலாம்...''

''அட நாயே...நாங்க உன்னை விசாரணை பண்றோமா இல்லை நீ எங்களை விசாரணை பண்றியா...கேட்ட கேள்விக்கு பதிலை சொல்றா...பரதேசி நாயே''

''பாத்தீங்கலா  ஐயா...  நைசா என்னை கோர்த்துவிடுறான்......அவர் கூட பள்ளிக்கூடத்துக்கு போனது என்னவோ உண்மைதான்...ஆனால் காரியத்தை பண்ணினது...நான் இல்லைங்கய்யா....சத்தியமா நான் இல்லை...'' என்றார் சுந்தரம் நடுக்கத்துடன்.

''அடச்சீ...! நீயெல்லாம் ஒரு போலிஸ்காரனா...வெட்கமாயில்லை ஒனக்கு...ஒரு அக்யூஸ்ட் முன்னாடி நடுங்குற...'' என்றார் .கே.

இது தெரியாத கோவிந்தராஜன் சுந்தரத்தை நோக்கி ''என்ன இது புதுசா கதை சொல்றான்...என்ன அது பள்ளிக்கூடம் மேட்டரு?'' என்றார் .

''சார்... இது ஒரு நாலஞ்சு வருசத்துக்கு முன்னாடி நடந்த மேட்டரு சார்...கர்னாடகா பார்டருல இவங்க ஏரியாவுல ஒரு பள்ளிக்கூடம் இருந்துச்சு சார்...அங்கே போஸ்டிங்க்ல வர்ற வாத்தியார் யாருமே ஒழுங்கா வேலைக்கு வர்றது கிடையாது சார்....அதுனால இவனுக குரூப்பை சேர்ந்த ஆளுகளே பாடம் நடத்த ஆரம்பிச்சிட்டானுக சார்...நமக்கு இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட் வந்தது சார்....அதுதான் அப்படி ஒரு காரியம் பண்ண வேண்டியதா போச்சு...''

''என்னையா பைத்தியக்காரத்தனமா இருக்கு....பாடம் தானய்யா நடத்துனானுக...அதுல என்ன ப்ராப்ளம்? அது என்ன மயிரு இண்டெலிஜென்ஸ் ரிப்போர்ட்?..''

''ஐயா...ஒங்களுக்கு இவனுக என்ன பாடம் நடத்துனானுகன்னு தெரியலைங்க...பள்ளிக்கூடத்துல படிக்கிற புள்ளைகளுக்கு என்னங்க பாடம் நடத்துறது? அணில் ஆடு அப்படி நடத்தலாம் இல்லை வாய்பாடு நடத்தலாம்...இவனுக அதை விட்டுட்டு உற்பத்தி, மூலப்பொருள், உழைப்பு, ஊதியம் உபரி மதிப்புன்னு சின்னப்புள்ளைக மனசுல நஞ்சை விதைக்கிறானுக ஐயா...இதை பாத்துக்கிட்டு டிபார்ட்மெண்ட் சும்மா இருக்க முடியுமா?

''அதுக்கு என்ன பண்ணுனீங்க...?''

''விசயம் கேள்விப்பட்டவுடனேயே  சர்மா சார் கொதிச்சு போய்ட்டாரு...நாங்க ஒரு டீமா வந்து அந்த புள்ளைகளோட கைவிரல்களை வெட்டிட்டோம். அதாவது கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் விட்டு மத்த மூனு விரல்களையும் இரண்டு கைகள்ல இருந்து வெட்டி விட்டுட்டு மருந்து போட்டு கட்டிவிட்டு வந்தோம்...அடுத்து கட்டை பிரிச்சு மருந்து போட இவங்க ஆளுக அனுமதிக்கலைங்கய்யா..பாவிக...இவனுகளுக்கு ஈவு இரக்கமே கிடையாது...அரக்கனுக....'' என்றார் சுந்தரம்.

''அப்போ குழந்தைகள் கைவிரலை வெட்டுன உங்களுக்கு பேரு என்ன?'' என்றான் கதிர்.

''எதுக்குயா வெட்டுனீங்க?'' - கோவிந்தராஜன்.

''ஐயா...சர்மா சாரை பத்தி உங்களுக்கு நல்லாத்தெரியும்..அவர் எப்போதுமே தொலைநோக்கு பார்வையோடு தாங்க ஆக்சன் எடுப்பாரு...இவனுகளால அந்த குழந்தைகள் எதிர்காலத்தில் ஆயுதம் தாங்கி தீவிரவாதி ஆகிடக்கூடாதே அப்படிங்கற நல்லெண்ணெத்தில தான் அப்படி பண்ணினாரு...நம்ம கண்ணு முன்னாடி தீவிரவாதிகள் உருவாகிறத எந்த போலிஸ்காரன் பாத்திட்டு சும்மா இருப்பான் சொல்லுங்க...'' பதட்டமே இல்லாமல் விவரித்தார் சுந்தரம்.

''என்னய்யா மடத்தனமா இருக்கு....எவன்யா இந்த ஐடியாவை கொடுத்தது....என்னமோ பாடம் நடத்துனாங்களாம் இவங்க போய் கையை வெட்டுனாங்கலாம்....அறிவுகெட்டத்தனமா இருக்கே...'' - கோவிந்தராஜன் இந்த செயலுக்கு பின் உள்ள தர்க்கத்தை புரிந்து கொள்ள இயலாமல் விழித்தார்.

''ஐயா...இது மேலிடத்து உத்தரவுங்க....எல்லார்கிட்டயும் சொல்லிட்டுதான் செஞ்சோம்...தேசத்துக்கு ஒரு ஆபத்துன்னு வரும் போது நாம சும்மா இருக்க முடியுமா?''

''கோவிந்தராஜன்...இப்போ இதை பேச வேண்டாம்...நமக்கு இப்போ தெரியவேண்டியது என்னன்னா இவனோட ஆளுக நம்ம டிபார்ட்மெண்டுக்குள்ள இன்ஃபில்ட்ரேட் ஆயிருக்காங்க...அதை முளையிலே கிள்ளி எறியணும்...இல்லைனா பெரிய ஆபத்தா போய்டும்...சர்மா துணி எடுக்க வர்றது எப்படி இவனோட ஆளுகளுக்கு தெரிஞ்சது...அந்த டீடெயில்ஸ் வேணும்'' என்றார் .கே.

''கதிர்...எங்களுக்கு நேரமுமில்ல...பொறுமையுமில்ல....உங்களுக்காக வேலை பார்க்குற எங்காளுக யாருன்னு இப்போ தெரிஞ்சாகனும்...கமான் க்விக்''

கதிர் திடமாக ''அதிகாரத்தின் சகலமட்டத்திலும் எங்கள் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய சிலர் இருக்கிறார்கள்...என்னால் எந்த தகவலையும் உங்களுக்கு தர முடியாது....நீங்கள் என்ன செய்யணுமோ அதை செய்யலாம்'' என்றான் .

கோவிந்தராஜன் எழுந்து விட்டார். .கே அதிர்ந்து போய் '' என்ன எந்திருச்சிட்டீங்க...இவனை அப்படியே விட்ரலாம்னு சொல்றீங்களா?'' என்றார்.

பதில் எதுவும் சொல்லாமல் கோவிந்தராஜன் டெண்ட்டை நோக்கி நடந்தார். அங்கு என்ன நடக்கிறது என்று புரியாமல் கைதிகள் இருவரும் விழித்தனர். கதிர் தலையை தொங்கவிட்டவாறு அமர்ந்திருந்தான்.

சுந்தரம் இருவரின் பின்னாடி நடந்தபடியே ''ஐயா, நான் தான் அப்பவே சொன்னேனுங்களே...இவன்கிட்ட இருந்து எந்த தகவலும் கிடைக்காது...அவனுக கட்சி ட்ரெயினிங் அப்படி...!

.கே சற்று யோசித்தபடி ''கோவிந்தராஜன், நாம இவனை ரெக்கார்ட் எதுவும் இல்லாமத்தான் எடுத்துட்டு வந்துருக்கோம்...பேசாம இங்கேயே போட்டுத்தள்ளிட்டு ஆளு அப்ஸ்காண்ட்னு ரிப்போர்ட் எழுதிட்டு போய்ட்டே இருக்கலாம்..அதுதானே நம்ம ஐதீகம்...என்ன சொல்றீங்க? என்று நக்கல் தொனியில் கூறினார்.

கோவிந்தராஜனின் முகத்தில் எந்தவொரு உணர்ச்சிகளும் இல்லை. சேரில் அமர்ந்து வானத்தை சில விநாடி பார்த்து விட்டு மது நிரம்பிய கிளாசை ஒரே மூச்சில் குடித்து விட்டு சுந்தரத்தை உற்று பார்த்தார்.

சுந்தரம் குவளையை மதுவால் மீண்டும் நிரப்பினர். .கே ஒன்றும் தெரியாமல் விழித்தார். ஆனால் சுந்தரத்திற்கு தெரியும் மதுவின் அளவு கூடக்கூட அவருக்குள்ளே இருக்கும் மிருகம் வெளியே வரும்.

மதுவை நிரப்பி விட்டு மெதுவாக கேட்டார். ''ஐயா, அப்போ கம்பியை காயப்போட்டுறேன்., மலத்தை பூசி ஒக்காரவைக்க சொல்றேன்..நீங்க வந்ததும் ஆரம்பிச்சிடுங்க...'

கோவிந்தராஜன் பொதுவாக தலையாட்டினார்.

.கே ''சுந்தரம் ஒரு நிமிசம் பொறு..." என்றார்.

கோவிந்தராஜன் .கேவை நிமிர்ந்து பார்த்தார்.

.கே. ''சார், நாம இப்படி செய்யலாமா...அவனை ஒண்ணுமே செய்யாம உயிரோட புதைச்சிட்டு போயிடலாம்...அவனோட இயக்கத்து ஆளுகள்ல வீக்கான ஆளு யாருன்னு பார்த்து தூக்கலாம்...அவனிடமிருந்து விசயத்தை கறக்கலாம்...என்ன சொல்றீங்க?

கோவிந்தராஜனிடம் வெறி ஏறி இருந்தது ''.கே...இதை இப்படியே விட்டுற கூடாது....''

''சார், நாம தான் அவனை உயிரோட புதைக்க போறோமே?''

சுந்தரம் இடைமறித்தார்..''ஐயா இன்னொன்னு செய்யலாம்ங்க...பக்கத்துல ஆசிரமத்துக்கு யோகாவும் தியானமும் கத்துக்க .டி.சர்மா வந்துருக்காருங்க...அவரை வரச்சொல்லுவோம்...

.கே கத்தினார் ''யோவ் வாயை மூடிக்கிட்டு சும்மா இருய்யா...அவர் ஏற்கனவே வெறில இருக்காரு....நீ வேற...ஏத்திவிட்டுக்கிட்டு''

கோவிந்தராஜன் ''யாருய்யா...இங்கே இருந்து காஷ்மீருக்கு டெபுடேசன்ல போனானே அவனா?''

சுந்தரம் மகிழ்ச்சியாக ''ஆமாங்க...அவரை பற்றி உங்களுக்கு தெரியும்ல....

.கே...சுந்தரத்தை நிறுத்த முயற்சி செய்தார்.

கோவிந்தராஜனின் போதை நிறைந்த கண்கள் அது எவ்வாறு என்று வினவின.

சுந்தரம் ''ஐயா, அவர் ஒரு பீடோஃபைல்ங்க...குடும்பத்தினர் முன்னாடி அவங்க குழந்தையை பயங்கரமா டார்ச்சர் பண்ணுவாரு...அது மயங்கின பிறகு அவருக்கு பயங்கரமான வேகம் வரும்...குழந்தை செத்த பிறகு மிருகமாகவே மாறிடுவாரு...அவரை வரவழைப்போம். தோழரோட ஏரியாவுல இருந்து ஒரு குழந்தையை தூக்குவோம்...உண்மை தானா வெளியே வரும் பாருங்க...!''

.கே.பதட்டத்துடன் ''சார், வேணாம் சார், எனக்கென்னவோ இது மறுபடியும் சதாசிவம் கமிசன் லெவலுக்கு போகும் போல தெரியுது...வேணாம் சார், மிளகாய் பொடி கொண்டுவந்துருக்கோம், மலம் இருக்கு...ரெண்டையும் கீழே கொட்டி தலைகீழா புதைச்சிட்டு போய்டலாம்...''

சுந்தரம் ''ஐயா, நீங்க ஏன் பயப்புடுறீங்க...இந்த வழிமுறை மூலமா பல தீவிரவாதிகள் காஷ்மீர்ல திருந்தியிருக்காங்க....நீங்க ஏன் இதை டார்ச்சர்னு நினைக்கிறீங்க., இந்த தேசத்தை துண்டாட நினைக்கிற சக்திகளுக்கு நாம கொடுக்கற தண்டனைனு நினைச்சுக்கோங்க...அதுவும் போக இவரால பல பேர் ஆயுதத்தை கீழே போட்டுட்டு தேசிய நீரோட்டத்துல கலந்துருக்காங்கன்னா பார்த்துக்கோங்களேன்.. அதையும் நீங்க கன்சிடர் பண்ணணும் சார்''

கோவிந்தராஜன் ''போய் அவனை ரெடி பண்ணுயா...வர்றேன்..."

.கே...சற்று பதட்டத்துடன் அவர் பின்னே நடந்தார்.

தூரத்திலேயே நாற்றம் குடலை புரட்டியது. அவர் அளவுக்கு அதிகமாக மது அருந்தியதின் காரணத்தை .கே புரிந்து கொண்டார்.

பழுக்க காய்ச்சிய கம்பியை அவன் முதுகில் வைத்து இழுத்தார். மயக்கத்திலிருந்து அலறி எழுந்தான். அலறலில் மரத்தில் இருந்த பறவைகள் மிரண்டு கூட்டை விட்டு பறந்தன. பறவைகளின் சிறகடிப்பு பேரோசை கதிரின் அலறலை குறைத்தது.

.கே. கர்சீப்பால் தனது பாதிமுகத்தை மூடிக்கொண்டார்.

''சொல்லுடா...எங்க டிபார்ட்மெண்ட்ல இருக்குற உங்களோட ஆளுக பேரை சொல்லு...''

உடலில் நான்கு இடங்களில் பழுக்க காய்ச்சிய கம்பியின் தடம் பதிந்தது. மலத்துடன் சருமம் கருகும் வாடையும் சேர்ந்துகொள்ள .கே வாந்தி எடுப்பது போல குரல் எழுப்பி உமட்டலை தவிர்க்க அந்த இடத்தை விட்டு விலகினார்.

''இவன் மேலே தண்ணி ஊத்துயா...அப்புறமா ஈரம் காயிறதுகுள்ள மிளகாய் பொடியை காயத்துல தூவு...முடிச்சிட்டு சொல்லி அனுப்பு...நான் போய் இன்னொரு ஆஃப் ஏத்திட்டு வர்றேன்''

அனைத்தையும் செவ்வனே செய்தனர் பள்ளத்தூர் கைதிகள்.

கோவிந்தராஜனும் ஏகேவும் மது அருந்திய படியே பேசிக்கொண்டிருந்தனர். அவர்களை கதிரின் கதறல் அழைத்தது.

.கே கோவிந்தராஜனிடம் '' சார், எனக்கென்னவோ இவனிடமிருந்து எந்த தகவலையும் வாங்க முடியாதுனு தோணுது...பேசாம துப்பாக்கியால சுட்டு பொதைச்சிட்டு போய்டலாம்...அதுக்கு முன்னாடி இந்த பள்ளத்தூர் கைதிகளை கீழே அனுப்பிடலாம்...வீணா எதுக்கு சாட்சிகளை வச்சிட்டு இதைப் பண்ணனும்...ஒங்களுக்கு தெரியாதது இல்ல..கேரளாவுல இப்படித்தான் அந்த ராஜன் கேசுல...பின்னாடி அது சினிமா நாவல்னு பெரிய லெவல்ல அசிங்கமாய்டுச்சு'' என்றார்.

கோவிந்தராஜன் போதையில் தலையைக் கவிழ்ந்தவாறே '' சரி, வேணும்னா கடைசியா நகங்களை மட்டும் புடுங்கிப் பார்ப்போம்..அப்போவாவது உண்மையை சொல்றானானு...இல்லைனா துப்பாக்கி தான் ஒரே வழி...நாம சுட வேணாம்...சுந்தரத்தை சுடச்சொல்லலாம்...அவனுக்கும் கடைசியா ஒரு கம்யூனிஸ்ட்டை சுட்டு கொன்றோம்னு ஒரு திருப்தி கிடைக்கும்...நாம சுடுறதுக்குத்தான் இன்னும் நிறைய பேரு இருக்கானுகளே.'' என்றார் க்கலாக.

.கேவுக்கும் போதை தலைக்கேறி விட்டது. ''நீங்க சொல்றதும் சரி தான் சார், தருமபுரில நக்சலைட்டை ஒழிச்சப்பவும் இதே மாதிரி தான்...மற்றவரு எல்லோருக்கும் சமமா சான்ஸ் கொடுப்பாரு...!

சுந்தரம் கைதிகள் இருவரையும் மலைமுகட்டிலிருந்து கீழே இரண்டு கி.மீ நடந்து சென்று அனைவரும் சந்திக்கும் ஒரு இடத்தை விவரித்து அனுப்பி வைத்தார். ''போறதுக்கு முன்னாடி சாமானை எல்லாம் வண்டில ஏத்தி வச்சிட்டு போய்டுங்க...நாங்க பின்னாடியே வந்து பள்ளத்தூர் விலக்குக்கிட்ட உங்களை பிக்கப் பண்ணிக்கிடுவோம்..சரியா...!''

கைதிகள் இருவரும் சாமான்கள் அனைத்தையும் வண்டியில் ஏற்றி விட்டனர். மர நாற்காலியில் இருந்த கதிரை இறக்கி தோண்டிய பள்ளத்திற்கு அருகே கிடத்தி விட்டு நாற்காலி தண்ணீர் விட்டு அலம்பினர்.

கைதிகள் கீழே இறங்கத்துவங்கி ஒரு மணி நேரம் ஆனதும் ஏகேவும் கோவிந்தராஜனும் கதிரிடம் வந்து சேர்ந்தனர்.

ஏகே துப்பாக்கியை சுந்தரத்திடம் நீட்டி ''யோவ் நீயே போட்டுத்தள்ளிட்டு அவனை புதைச்சிடு'' என்றார்.

சுந்தரம் புரியாமல் விழித்தார்.

கோவிந்தராஜனின் போதை நிரம்பிய கண்கள் செய் என்று உத்தரவிட்டது.

புதைக்குழிக்குள் உப்பும் மிளகாய் தூளும் சீராக தூவப்பட்டிருந்தன.

தண்ணீரில் நனைந்த கதிரின் உடல் குளிரில் நடுங்க பார்வை மட்டும் தீர்க்கமாக சுந்தரத்தின் கையில் இருக்கும் துப்பாக்கியை பார்த்துக்கொண்டிருந்தது.

.கே கதிரை நோக்கி ''என்ன தோழர்! பயமா இருக்கா?'' என்றார்.

கதிர் ஆர்ப்பரித்து சிரித்தான். அடக்க இயலாத சிரிப்பு....அவன் சிரிப்பு கானகமெங்கும் எதிரொலித்தது.

கோவிந்தராஜன் கொந்தளித்தார். திரின் சிரிப்பு அதிகாரத்திற்கு எதிரானது என்று அவர் உணர்ந்திருந்த போதிலும் அந்த சிரிப்பில் இருந்த நக்கலும் எகத்தாளமும் அவருடைய பதவிக்கான தன்முனைப்பை பதம் பார்த்தது. ன்னிடமிருந்து எந்தவொரு தகவலையும் பெற இயலவில்லை என்ற வெற்றியை கொண்டாடும் விதமாக அந்த சிரிப்பு இருந்ததை அவர் உணர்ந்தார். கூடவே, தமது கையாலாகத்தனத்தை கதிர் எள்ளி நகையாடுவதாகக் கருதினார்.

கோவிந்தராஜன் தனது கையை சுந்தரத்திடம் நீட்டி சைகையாலேயே துப்பாக்கியை  கேட்டார்.

அடுத்த நொடி துப்பாக்கியிலிருந்து அடுத்தடுத்து இரண்டு தோட்டாக்கள் கோவிந்தராஜனின் மார்பையும் ஏகேவின் மார்பையும் துளைத்தன. என்ன நிகழ்கிறது என்று அவர்களுடைய பயிற்றுவிக்கப்பட்ட மூளை சிந்திக்கக்கூட நேரமில்லை.

''தோழர், இப்படியே கீழே இறங்கி ஓடுங்க...அங்கே கிணத்தூர் ஜங்க்சன்ல பாலனும் சதீஷும் காத்திட்டிருப்பாங்க...ஓடுங்க...சீக்கிரம்'' என்று கைகால் கட்டுக்களை அவிழ்க்கத் துவங்கினார் சுந்தரம்.

(முற்றும்)