Tuesday, May 15, 2018

வளர்ச்சி...மாயை...புள்ளிவிவரம்...விலைவீக்கம் (16-05-2018)

நீண்ட இடைவேளைக்கு பிறகு முகனூலுக்கு திரும்பிய நான். இனி ஏதேனும் அறிவுப்பூர்வமாக மட்டுமே எழுதுவது, வெட்டி விவாதகங்களில் பங்கேற்பதில்லை என்ற கொள்கையுடன் வருகிறேன். அதன் விளைவே இந்த பதிவு. வீட்டில் யாருமில்லாத காரணத்தால் அலவலகத்திற்கு சீக்கிரம் வந்து வரவேற்பறையிலிருக்கும் செய்தித்தாள்களை புரட்டியதன் விளைவு இது. போலி ஜனநாயகத்தின் பிரதான விழாவான தேர்தல் கர்நாடகத்தில் நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் வெளியான சூழலில் மயிர்பிளக்கும் விவாதங்களில் நகைச்சுவை நாயகர்கள் (காவி + காதி) முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மக்களை பாதிக்கும் ஒரு விசயத்தை பற்றி எழுதத்துணிந்தேன். இனி யாராவது உங்களிடம் வந்து மோடி, வளர்ச்சி, வலிமையான பாரதம் என்று வியாக்கியானம் பேசினால் செருப்பால் அடிக்கவும்.

கடந்த திங்களன்று (14-05-2018) ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் புள்ளிவிபரங்கள் வெளிவந்தது. பொருளாதார வல்லுனர்களாலும் அறிவுஜீவிகளாலும் உற்பத்தி மற்றும் சேவைத் துறையின் சமீபத்திய செயல்பாடுகளும் அதன் வளர்ச்சியும் ஒரு நிவாரணமாக காணப்பட்டன. ஆனால் சமீபத்திய பணவீக்க புள்ளிவிவரங்கள், சந்தையில் சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை ஆகியவற்றின் தரவுகள் இந்த நிவாரணத்தை நோக்கி சந்தேகத்தை எழுப்புகின்றன.  கடந்த சில மாதங்களில், பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தோன்றியது அல்லது அவ்வாறு நம்பவைக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அந்த நிவாரணமானது தற்காலிகமானது என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.. இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை ‘hold versus cut’ என்பதிலிருந்து ‘hold versus raise’ என்பதை நோக்கி மாறுகிறது.

பணவீக்கம் மார்ச் மாதத்தில் 4.28 சதவீதமாகவும், முந்தைய ஆண்டு (2017) இதே காலத்தில் 2.99 சதவீதமாகவும் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.58 சதவீதமாக உயர்ந்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணியாக தானியங்கள், இறைச்சி, மீன் மற்றும் பழங்களின் விலையேற்றமே ஆகும்.

இப்போது மொத்த பணவீக்க தரவை பாருங்கள். ஏப்ரல் மாதத்தில் இது 3.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மாதத்தில் இது 2.47 சதவீதமாக இருந்தது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் அதிவேக உயர்வு இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்பதை எளிதில் நாம் அறிந்து கொள்ளலாம். மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 0.27 சதவீதம் குறைந்து தற்போது 0.87 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரம் விலை 7.70 சதவீதம் அதிகரித்தது இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம். மார்ச் மாதத்தில் 4.70 சதவீதமாக இருந்த. எரிபொருள் விலை உயர்வில் பெட்ரோல் விலை 9.45 சதவீதமாக உயர்ந்தது, டீசல் விலை 13.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை மாற்றி அமைக்கும் காரணியாக கருதப்படுகின்றன.  ஆனால், இந்த பிரச்சினைக்கு மிகவும் பாதிக்கக்கூடிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்க வேண்டியதில்லை. அதைவிட துயரமானது இந்திய ரூபாயின் மதிப்பு. அமெரிக்க நாணயத்திற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 67.51 என்ற அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இது கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வீழ்ச்சியாகும். (மோடி ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40ரூபாயாக மாறும் என்று விதந்தோதிய வாழும் கலை வல்லுனர் ரவிசங்கரனை தேடிக்கொண்டிருக்கிறேன், யாராவது பார்த்தால் சொல்லவும், தாடி வைச்சிருப்பான், சட்டை போட மாட்டான், துண்டு போர்த்தியிருப்பான்) பணவீக்கத்திற்கு எதிரான திட்டங்கள் மற்றும் டாலருக்கு எதிராக இந்திய ஒன்றிய நாணயத்தின் மதிப்பை பாதுகாக்க ஏதேனும் திட்டம் ரிசர்வ் வங்கியிடமோ அல்லது நிதித்துறையிடமோ இருப்பதாக தகவல்கள் இல்லை.

வளர்ச்சி என்று எதை மத்திய அரசு மக்களுக்கு படமாக காட்டுகிறதோ அது வெறும் படம் மட்டுமே என்று அவர்களுடைய பொருளியல் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.