Wednesday, July 27, 2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(5): 28-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(5):
--------------------------------------------------------
ரயிலுக்கான அறிவிப்பு வந்தவுடன் பாதுகாப்பு சோதனையை முடித்து பயணிகள் நுழைய அனுமதிக்கப்பட்டனர். எனது முறை வந்தது. பயணச்சீட்டு  ஆய்வாளர் ஒரு பெண்மணி.
''உங்கள் பெயர்?''
''ஜெயசீலன்''
''மன்னிக்கவும்...உங்கள் பெயர் பட்டியலில் இல்லை.."
''அதெப்படி...43ஆம் இருக்கை எனக்காக ஒதுக்கப்பட்டது''
''இல்லை...அது கணபதி என்பவருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது''
''அதுவும் நான் தான் ...அது என் தந்தையாரின் பெயர்''
''உங்கள் தந்தை எங்கே?''
''அவர் இந்தியாவில் இருக்கிறார்...ஏன் கேட்கிறீர்கள்?''
''இந்தியாவில் இருக்கும் நபருக்கு எதற்காக இங்கே டிக்கெட் வாங்குகிறீர்கள்?''
''ஐயோ...மேடம் என் பாஸ்போர்ட்டை பாருங்கள் இரண்டுமே நான் தான்''
''அதெப்படி நீங்களும் உங்கள் தந்தையும் ஒன்றாக முடியும்...நீங்கள் சற்று ஒதுங்கி நில்லுங்க...எங்கள் கண்காணிப்பாளர் வந்து விசாரிப்பார்''
சரிதான்...இந்தம்மாவே இப்படி...இதுக்கும் மேல ஒருத்தர் இருக்காரா....சரி என்ன தான் நடக்குன்னு பார்ப்போம். காத்திருந்தேன்.
கண்காணிப்பாளர் வந்தார். பயணச்சீட்டை பார்த்தார். பாஸ்போட்டை பார்த்தார்.
''இது உங்கள் பாஸ்போர்ட் தானா?''
''ஏன் அதிலென்ன சந்தேகம்...என்னுடையது...என்னுடையது தான் ஐயா''
''இல்லியே...நிறைய வித்தியாசம் இருக்கே''
''அதாவது சார்...போன மாதம் என் அம்மா இறந்து விட்டார்..அதனால்....''
''ஹலோ மிஸ்டர்...அதை நான் கேட்கவில்லை...அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?''
''அது தான் சார்....சொல்ல வர்றேன்... அவ்வாறு துக்க சம்பவம் நடக்கும் போது நாங்கள் தலை மழிப்பது வழக்கம்''
''உங்கள் தாயார் இறந்ததற்கு நீங்கள் ஏன் தலைமழிக்க வேண்டும்...அப்படி செய்தால் முடி முளைக்க இரண்டொரு மாதம் ஆகுமே?''
''சார் இப்ப அதுவா பிரச்சினை...இதில் உள்ள பெயர் என்னுடையது தான் ஐயா''
''பெயரில் பிரச்சினை இல்லாவிட்டாலும் புகைப்படத்தில் பிரச்சினை உள்ளதே''
கடவுள் மாதிரி என்னமோ புஷ்கின் வந்தார்.
''ஹாய்...ஜெ என்ன பிரச்சினை?''
''சார்...சார் நீங்களாவது சொல்லுங்க சார்...இந்த பாஸ்போர்ட் என்னுடையது இல்லைன்னு சொல்றார் சார்''
''மிஸ்டர் மிஷேல்! இவரை எனக்கு நன்றாகத் தெரியும். இவர் இந்தியாவில் தமிழர் என்னும் தேசியஇனத்தை சார்ந்தவர். தாய் இறந்தால் தலையை மழிப்பது அவர்களின் மரபாக இருக்கலாம். அதற்காக அவரை ஏன் துன்புறுத்துகிறீர்கள்? பாஸ்போர்ட்டை கொடுங்கள்''
ஒருவழியாக பாஸ்போர்ட் கைக்கு வர நிம்மதியாக ரயிலேறினேன்.

மழைக்காலத்தில் மாஸ்கோ(4): 27-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(4):
இப்போது அந்த ரஷ்யத்தாய் களைப்பிலிருந்து மிதமாக விடுபட்டிருந்தார். எனது பெயரைக் கேட்டார். அவரால் உச்சரிக்க முடியவில்லை. என்னமோ புஷ்கின் கூட சற்று சிரமப்பட்டு தான் உச்சரித்தார். நானும் அந்த ரஷ்யத்தாயும் உரையாடத் துவங்கினோம். புஷ்கின் தான் மொழிபெயர்த்தார்.
''மகனே...நீ எங்கிருந்து வருகிறாய்...திருமணம் ஆகிவிட்டதா...எத்தனை குழந்தைகள்?''
''அம்மா...நான் இந்தியாவிலிருந்து வருகிறேன்...எனக்கு திருமணம் ஆகி பத்து வயதில் மகனுண்டு''
''பெண் குழந்தைகள் எத்தனை பேர்?''
''இல்லை அம்மா...எங்களுக்கு பிறந்தது ஒரே ஒரு மகன் மட்டுமே''
ஏன்...குழந்தைகளை தொல்லையாக நினைக்கிறீர்கள்? இங்கே எங்கள் ஊரில்தான் பெண்கள் பிள்ளை பெற தயங்குகிறார்கள். உங்களுக்கு என்ன பிரச்சினை? நான் 6 குழந்தைகளை பெற்றேன். அதில் நான்காவது குழந்தை பிறந்த மூன்றாவது மாதத்தில் இறந்து விட்டது. அதிபர் பிரஷ்னேவ் குழந்தை பிறந்த போது வாழ்த்தும் இறந்த போது இரங்கலும் தெரிவித்தார். என் கணவருக்கு பிடித்தமான குழந்தை அது. தொடர்ந்து மூன்று ஆண் குழந்தைகளுக்கு பின் பிறந்தவள் என்பதால் அவள் எங்களை விட்டு பிரிந்த போது எங்களால் அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை.
என் கணவரின் தங்கை அதற்கு முந்திய ஆண்டு தான் இறந்து போனாள். எனவே தனது தங்கையே மீண்டும் வந்து பிறந்ததாக என் கணவர் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தார். ஆனால் அது நீடிக்கவில்லை. என் கணவரின் தங்கை எங்களுக்கு திருமணமான பொழுதுதான் பூப்படைந்திருந்தாள். அவள் கொள்ளை அழகு தெரியுமா? ரோஜாப்பூ நிறத்தில் அவள் கன்னங்கள், சற்றே நீலவண்ண கண்கள், வெள்ளை நிறக்கூந்தல், எப்போதும் தூய வெள்ளையாடையில் தேவதை போன்று பவனி வருவாள். அவளுக்கு திருமணமாகி முதல் பிரசவத்தில் தாயும் சேயும் எங்களை விட்டு பிரிந்தார்கள். எங்கள் நிலத்தில் தான் நாங்கள் அடக்கம் செய்தோம். எங்கள் கிராமத்தின் தேவாலய இடுகாட்டில் எங்களுக்கு இடம் உண்டு. ஆனால் நாங்கள் அதில் அவளை புதைக்க விரும்பவில்லை. எங்கள் முன்னோர்களையும் நாங்கள் எங்கள் நிலத்திலேயே அடக்கம் செய்தோம். அடக்கம் செய்த அன்றிரவு என் கணவர் எங்கள் நிலத்தை விட்டு வீட்டிற்கு வரவே இல்லை. அந்தப் பனியிலும் இறந்த போன தங்கையின் சடலத்தோடு உரையாடிக் கொண்டிருந்தார். பாவம்...அன்பே உருவான மனிதர் அவர். எங்களது மரணத்திற்கு பிறகும் நாங்கள் அங்கேயே புதைக்கப்பட வேண்டுமென விரும்புகிறோம். எங்களையும் நிலத்தையும் பிரிக்கவே இயலாது....விவசாயிகளுக்கு நிலம் தான் எல்லாம். விவசாயியும் தாயும் ஒன்று தெரியுமா? தாய் தன்னுள்ளே கருவை சுமந்து இந்த உலகத்திற்கு புதிய உயிரை தருவது போல விவசாயி தன் நிலத்திலிருந்து புதிய தானியங்களை உருவாக்கி இந்த உலகத்திற்கு தருகிறான். இதோ இந்த பையில் இருக்கும் உருளைக்கிழங்குகளும் கேரட்டும் எங்கள் நிலத்தில் விளைந்தவை. அறுவடை முடிந்தபின் இதை முதலில் எங்கள் மூத்தமகன் வசிக்கும் கிராமத்திற்கு எடுத்து சென்று பேரக்குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டுத்தான் கூட்டுறவு பண்டக சாலையில் விற்பனை செய்வோம். இந்தமுறை அறுவடை முடிந்தபின் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டேன். இருப்பினும் பண்டகசாலை அலுவலர்கள் வந்து கேட்ட போது மறுத்துவிட்டேன். நாங்கள் தனியாருக்கு விற்பதில்லை. உணவை உற்பத்தி செய்வதும் அதை பசித்தவர்களுக்கு சுயநலமின்றி சரியாக பகிர்ந்தளிப்பதும் எங்களை அப்போது வழி நடத்திய தலைவர்கள் கற்றுத்தந்த பாடங்கள். இன்று அவை மாறிக்கொண்டு வருகின்றன. நாங்கள் மாறமாட்டோம். பசிக்கு உணவளிப்பது மாபெரும் அறமல்லவா...அதை இந்த பிறவியில் எங்களுக்கு ஆண்டவன் அளித்திருக்கிறார். அதை எவ்வாறு மறுதளிப்பது? இந்த கிழங்கும் கேரட்டும் எங்கள் மண்ணில் புதைக்கப்பட்ட மூதாதையர்கள் அல்லவா...அவர்கள் மரணித்து விட்டார்கள் என்று நீ நம்புகிறாயா?''
இல்லை...சத்தியமாக இல்லை...நீங்கள் அறுவடை செய்யும் ஒவ்வொரு தானியத்தின் வாயிலாக அவர்கள் காலம் கடந்து வாழ்கிறார்கள்...உங்களோடே பயணிக்கிறார்கள்...மரணம் என்பது என்ன...அது தற்காலிக விடுப்பு தானே.... அவர்கள் உங்களிடமிருந்து நிரந்தரமாக ஒரு போதும் பிரியவில்லை என்றே நானும் நம்புகிறேன்''. நான் இந்தியாவில் இருக்கும் பல்வேறு தேசிய இனங்களில் மூத்த தேசியஇனமான தமிழ் என்னும் தேசிய இனத்தை சார்ந்தவன். எங்கள் மரபும் இதேதான். உழுதுண்டு வாழ்வோரை  மற்றவர் தொழுது வாழவேண்டும் என்று போதித்த மரபு என்னுடையது.
''இந்தியாவும் பழைய சோவியத் ஒன்றியம் போலத்தானே?''
''ஆம்...பல்வேறு மொழி, பண்பாடு கொண்ட தேசிய இனங்கள் ஒரு அரசியலமைப்புச் சட்டத்தை ஏற்றுக் கொண்டு வாழ்கிறோம்.''
''நல்லது மகனே...நாங்கள் பல்வேறு சோவியத்துகளாக ஒன்றாக வாழந்த போது மகிழ்ச்சியாக இருந்தோம். உக்ரேனின் கோதுமை உஸ்பெகிஸ்தானின் குழந்தைகளின் பசியை போக்கியது, எங்கள் மின்சாரம் உக்ரேன் குழந்தைகள் கல்வி கற்க வெளிச்சம் தந்தது...இப்போது அவை இல்லை....பகைமை உணர்ச்சி தான் மேலோங்கி உள்ளது''
''நீ சமைக்காத கேரட் தின்பாயா?''
''ஓஓ...சமைக்க வேண்டாம்...அப்படியே சாப்பிடுவேன்''
''இந்த கேரட்டை பயிரிட்டு முதல் தளிர்விடும் போது என் கணவரின் தங்கை சிரிப்பது போன்றே இருக்கும். தினமும் காலை தோட்டத்திற்கு சென்று அதை பார்த்து விட்டு வருவேன்...அதில் ஒரு நிம்மதி எனக்கு...''
கையில் தனியாக ஒரு சிறு பையில் நான்கு உருளைக்கிழங்கும் இரண்டு கேரட்டுகளும் வைத்திருந்தார். ஒன்றை எனக்கும் புஷ்கினுக்கும் தந்தார்.
''மகனே! நீங்கள் ஏன் இன்னும் இரண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளக்கூடாது?''
சென்னையிலிருந்து மாஸ்கோ கிளம்பும் போது தான் இரண்டு தென்னைமாறு வாங்கிக் கொடுத்துவிட்டு வந்தேன். வெறும் தென்னை ஓலையால் கட்டப்பட்ட விளக்கமாறு அது. எனவே பழைய நைலான் கயறால் நன்றாக இறுக்கி கட்டிக் கொடுத்துவிட்டு வந்தது ஞாபகத்திற்கு வந்து தொலைத்தது. ஆனால் இதை சொன்னால் அந்தம்மாவிற்கு புரியாது.
''இல்லை அம்மா...முதல் குழந்தை பிறந்தபோதே அவள் மிகவும் கஷ்டப்பட்டாள். குழந்தை சற்று கனம் கூடுதலாக இருந்ததாலும் அவள் சற்று பருமனாக இருந்ததாலும் அறுவை சிகிச்சை செய்தே என் மகன் பிறந்தான். அதில் அவள் பட்ட வேதனைகளை நேரில் கண்ட நான் இனி அப்படி ஒரு துயரத்தை அவளுக்கு கொடுக்கக்கூடாது என்று எண்ணினேன்.''
ஓஓ...குழந்தைகள் கூடி ஒரு வீட்டில் வாழ்வதும் அவர்களை வளர்த்தெடுப்பதும் ஒரு பெரிய வரம்...அது எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.
காடும், வீடும் காரும் பணமுமா செல்வங்கள்...குழந்தைகள் அல்லவா உண்மையான செல்வங்கள்...''
''உண்மை'' நான் ஆமோதித்தேன்.
மாஸ்கோவிற்கும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்கிற்கும் இடையில் உள்ள ஒகுலோவ்கா என்னும் இடத்தில் அவர் இறங்க வேண்டுமெனவும் ரயில் வரைக்கும் இந்த பைகளை சுமந்து வர இயலுமா எனக் கேட்டார்.
இடையில் புகுந்த புஷ்கின் ''அதற்கு அவசியமே இல்லை...நான் வண்டி ஏற்பாடு செய்கிறேன் என்று பேட்டரியால் இயங்கும் வாகனத்தை கொண்டு வர ஆணை பிறப்பித்தார்.
அவர் கிளம்ப எத்தனித்த போது மானசீகமாக அவர் முன் முழங்காலிட்டேன்.
தனது வலது கட்டைவிரலால் என் நெற்றியில் சிலுவை இட்டார்.
மகனே...என் மனம் மிக இலகுவாக உள்ளது....வீட்டில் என் கணவர் படுத்தபடுக்கையாகி விட்டார். வேலையாட்கள் மாலை அவரவர் வீட்டிற்கு சென்று விடுவர்....பேசுவதற்கு ஆளில்லாமல் தவித்தேன். உனக்கும் புஷ்கினிற்கும்தான் நன்றி சொல்ல வேண்டும். இனி ஒவ்வொரு முறை பிரார்த்தனை செய்யும் போது உன்னையும் உன் மகன், மனைவியையும் நினைத்து ஆண்டவரின் வேண்டுவேன்''
பேட்டரி வாகனம் வர ரஷ்ய தாயும் புஷ்கினும் விடைபெற்றனர்.









மழைக்காலத்தில் மாஸ்கோ:(3)


----------------------------------------------------
27ஆம் தேதி காலை எட்டு மணிக்கு தயாராக இருக்க மருத்துவர்.வினய் உத்தரவிட்டு சென்றார். ஒரு நாளைக்கு சராசரியாக 200கி.மீ தூரம் பயணம் செய்து கலைத்துப் போன இருவருக்கும் வேறு வழியில்லை. மாஸ்கோ நகரத்தின் பிரதான மருத்துவமனைக்கு எதிரே இருக்கும் மருந்துக்கடைகளுக்கு சென்று ஆய்வு செய்ய வேண்டும். மதியம் 1.30க்கு லெனிங்கிராட் என்று அன்றும் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் என்று இன்றும் அழைக்கப்படும் ஊருக்கு செல்ல வேண்டும். போக்குவரத்து நெரிசலை ஊகித்து நமது சாரதி நிகோலாய் மிகச்சரியாக 8மணிக்கு ஆஜராக வேண்டுமெனவும் 11.30க்கு மீண்டும் ஹோட்டல் காஸ்மோஸ் வந்து லெனிங்க்ராட்ஸ்கி பக்சல் (பக்சல் என்றால் ரஷ்ய மொழியில் ரயில் நிலையம் என்று பொருள்) சென்று தொடர்வண்டியை பிடிக்க வேண்டும் எனவும் மரு.வினய் உத்தரவிட்டிருந்தார். நிகோலாய் மிகச் சரியாக 8 மணிக்கு வந்தார். மாஸ்கோவின் மத்திய நகரிலிருந்து மேற்கு நோக்கி வாகனத்தை செலுத்தினார். வண்டியை எடுத்த 3ஆவது நிமிடத்தில் 120 கி.மீ வேகம் என அதன் டிஜிட்டல் மானிட்டர் காட்டியது. நான் மிரண்டு போய் ''நிகோலாய்...கொஞ்சம் மெதுவாக போலாமே'' என்றேன். என் உத்தரவை சிரமேற்கொண்டு ஏற்ற நிகோலாய் அதை உடனடியாக 119க்கு குறைத்தார். ஆய்வுகளை முடித்துவிட்டு ஹோட்டல் வந்து ரயில் நிலையத்திற்கு செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசலில் மாட்டிக் கொண்டேன். நிகோலாய் ஒரு யோசனை சொன்னார். அருகில் இருக்கும் சுரங்கப்பாதை வழியாக எதிர்ப்புற சாலைக்கு சென்று இடது புறம் செல்லும் டாக்சியை பிடித்தால் விரைவாக சென்று விடலாம் இல்லையெனில் கடினம் என்றார். உடனே திட்டத்தை செயல்படுத்தினேன். சுரங்கப்பாதை வழியாக சென்று டாக்சி பிடித்து ரயில் நிலையத்திற்கு 12.15க்கெல்லாம் வந்து சேர்ந்தேன்.
மாஸ்கோ நகரம் மிதமான வெயிலில் இதமாக இருந்தது. பெண்கள் அனைவரும் மார்பிலிருந்து இடுப்புக்கு கீழே நான்கு விரற்கிடை அளவிற்கு மட்டும் உடையுடுத்தி நகரத்தை வெப்பத்தை மேலும் குறைத்துக் கொண்டிருந்தார்கள். கையில் கைப்பைக்கு அடுத்து எல்லோர் கைகளிலும் சிகரெட் புகைந்து கொண்டிருந்தது. ஏன் இவர்கள் இவ்வாறு உடை அணிகிறார்கள் என்ற ஆய்வை பாங்காக் விமான நிலையத்தில் ஆய்வு செய்ய துவங்கிய போது நண்பர். பேராசிரியர். அ. மார்க்ஸ் அவர்கள் நீண்ட பயணத்தின் வசதி பொருட்டு அவ்வாறு அணிகிறார்கள் என்று அந்த ஆய்விற்கு முற்றுப்புள்ளி வைத்தார். இங்கும் அதே கதை தான். ஆனால் பாங்காக் மாஸ்கோவிடம் பிச்சை வாங்கணும். அக்டோபர் மாதத்திலிருந்து பெப்ருவரி வரை இவர்கள் உடல் அனைத்தையும் மூடிக்கொண்டு தான் ஜீவிக்க முடியும். எனவே இந்த இளவேனிற்காலத்தில் இவ்வாறு உடை உடுத்து தானும் மகிழ்ந்து மற்றவரையும் மகிழ்விக்கிறார்கள் என்று உணர்ந்தேன். எனவே இனி குளிர்காலத்தி மாஸ்கோவிற்கு செல்லும்படி என்னை வற்புறுத்தக்கூடாது என நிர்வாகத்திற்கு கடுமையான எச்சரிக்கை விட உத்தேசித்திருக்கிறேன்
நேரம் 12.30 ஆன போது ஒரு மூதாட்டி கையிரண்டிலும் இரு பெரிய பைகளை சுமந்து கொண்டு படியேற முயற்சித்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் பையை அவர் தவற விட ஓடிச்சென்று அவரையும் அந்த பைகளையும் தாங்கினேன்.
இதைக்கண்ட இன்னும் இரு வாலிபர்கள் என் உதவிக்கு வந்தார்கள். அவர்கள் இருவரும் பைகளை ஏந்திக்கொள்ள நான் அந்தத்தாயை ரயில் நிலையத்தின் பாதுகாப்பு அதிகாரி அமரும் நாற்காலியில் அமர வைத்தேன். ரயிலுக்கு நேரமானதால் வாலிபர்கள் விடைபெற்றனர். பாதுகாப்பு அதிகாரி என்னமோ புஷ்கின் (என்னமோ என்றால் தமிழ் என்னமோ இல்லை இது ரஷ்ய மொழியில் 'என்னமோ'') என்னை விசாரித்தார். அற்புதமான ஆங்கிலம் அவருடையது. விசாரித்த போது 1989ஆம் ஆண்டு மாஸ்கோ பல்கலைகழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதல் மாணவராக வந்து அதிபர் கோர்பச்சேவிடம் விருது வாங்கியதாக தெரிவித்தார். விருது வழங்கிய கோர்ப்பசேவ் அவரை கம்யூனிஸ்ட் கட்சியின் மக்கள் தொடர்புத்துறையில் பணியாற்ற அழைக்க இவரோ நான் நீட்சேயின் ரசிகன் எனக்கும் கம்யூனிசத்திற்கு ஒத்துவராது என்று அங்கேயே பதில் சொல்லிவிட்டார். அதற்கு கோர்ப்பசேவ் ''உன் விருப்பத்திற்கு மாறாக உன்னை நிர்பந்திக்க நீ வெறுக்கும் கம்யூனிசம் என்னை அனுமதிக்காது'' என்றாராம். 

Tuesday, July 26, 2016

மழைக்காலத்தில் மாஸ்கோ(2)- 26-07-2017

மழைக்காலத்தில் மாஸ்கோ(2)- 26-07-2017
-------------------------------------------------------------------------
அதிகாலையா நள்ளிரவா என்று நிர்ணயிக்க இயலாத 3.05மணிக்கு அபுதாபி விமான நிலையத்திலிருந்து மாஸ்கோ பயணம் துவங்கியது. தூக்கம் கலைந்ததும் பயணம் தந்த அலுப்பும் இணைந்து கொள்ள நிலைகொள்ளாமல் தவித்தது உடல். எஸ்.ராமகிருஷ்ணன் உபபாண்டவம் வழியாக துணைக்கு வந்தார். பீஷ்மர் தன் தந்தை சந்தனுவிற்காக சத்தியவதியின் தந்தையிடம் தான் இனி பிரம்மச்சாரியாகவே வாழப்போவதாக உறுதி அளித்துக் கொண்டிருந்தார். பத்து பக்கங்கள் தாண்டுவதற்குள்ளாகவே தூக்கம் கண்களை தழுவ அயர்ந்தேன்.
பணிப்பெண் காலை சிற்றுண்டிக்காக எழுப்பினார். அவித்த உருளைக் கிழங்கும் முட்டையும் தயிரும் பரிமாறப்பட்டது. காலை சரியாக 7.15க்கு மாஸ்கோ தெமோஜெடொவோ விமான நிலையத்தில் இறங்கினேன். குடியேறல் பிரிவில் இருந்த அதிகாரி எனது பாஸ்போட்டில் இருக்கும் புகைப்படத்திற்கும் எனது தற்போதைய தோற்றத்திற்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கூறி அதை உயரதிகாரி ஒருவர் வந்து உறுதிப்படுத்த வேண்டுமென்றார். ஆங்கிலம் தெரியாத அவருக்கு எனது தாயார் சமீபத்தில் இயற்கை எய்தினார் என்பதையும் அதன் பொருட்டு நான் தலை மழிக்க வேண்டியதாயிற்று என்று சொல்லிப் புரியவைப்பதற்கும் போதும் போதுமென்றாகி விட்டது. அடுத்து சுங்க அதிகாரிகளின் சோதனை. தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை என்ற போதும் நான் வைத்திருந்த பெண்களுக்கான பாடிவாஷ் குப்பிகளில் இரண்டை அவர் உரிமையுடன் எடுத்துக் கொண்டார். வெளியே வந்த போது ஜனாரும் அவருடைய கணவரையும் காணவில்லை. கலவரமானேன். என்னுடைய செல்பேசியில் ரோமிங்க் வசதி உண்டென்ற போதிலும் ரஷ்யாவில் அது வேலை செய்ய மறுத்தது. அருகில் இருந்த ரஷ்ய பெண்மணியிடம் அவருடைய செல்பேசியை தரமுடியுமா என்று கேட்டேன். புன்னகையோடு தந்தார். ஜனாரை அழைத்த போது அவர் 2ஆம் நுழைவு வாயிலில் காத்திருப்பதாகவும் நான் காத்திருக்கும் முதல் நுழைவு வாயிலுக்கு வருவதாகவும் சொன்னார். அடுத்த 5நிமிடத்தில் கணவருடன் ஆஜரானார். நான் தங்கவிருந்த விடுதியான ஹோட்டல் காஸ்மோஸ் மிக அருகாமையில் அதாவது 70 கி.மீ தூரத்தில் இருந்தது. 1.45 மணி நேர பயணத்திற்கு பின் விடுதி வந்தடைந்தோம்.

ஹோட்டல் காஸ்மோஸ் 1787 அறைகளைக் கொண்ட பிரம்மாண்டமான விடுதி. 1980 ஆம் ஆண்டு ரஷ்யா நடத்திய ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளுக்காக கட்டப்பட்டது. சற்றே ஓய்வெடுக்க கண்ணயர்ந்தேன், ஆழ வேர்விட்டு பரந்து கிளை பரப்பி விழுது கொண்டு பூமியோடு தொடர்ந்து சங்கமிக்கும் ஒரு ஆலமரத்தின் கீழே வாழும் ஒரு சிறு எறும்பு போன்ற உணர்வு ஏற்பட்டது. 

மழைக்காலத்தில் மாஸ்கோ:25-07-2016

மழைக்காலத்தில் மாஸ்கோ:
ாயிற்றுக்கிழமை அபுதாபி வழியாக மாஸ்கோ பயணம். முன்பதிவு உறுதியானதும் எனது ரஷ்ய தோழி ஜனார் கொசம்குலோவாவை அழைத்து வருகையை தெரிவு படுத்தினேன், அவரும் அவரது துணைவரும் உடனடியாக அவர்களது சமையலறையை சுத்தம் செய்து வைப்பதாக தெரிவித்தனர். இவருக்கும் பருப்பு ரசம் வைத்து தருவதாக கடந்த ஒண்ணரை ஆண்டுகாலமாக ஸ்கைப் வாயிலாகவும் மின்னஞ்சல் மூலமாகவும் ஆசை காட்டி வந்தேன். இப்போது தப்பிக்க இயலாது. எனவே துவரம் பருப்பு, கடுகு, பெருங்காயம், பட்டை வற்றல், மிளகு போன்றவற்றையும் எனது பெட்டியில் எடுத்து வைத்துக் கொண்டேன். மல்லித்தழை இல்லாமல் ரசம் சுவைக்காது, எனவே எனது மனைவி அதை ஒரு நெகிழிப்பையில் காற்றுப் புகாவண்ணம் சுற்றிக் கொடுத்தாள். அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்னை விமான நிலையம் வந்த போது அங்கிருந்த கூட்டத்தைக் கண்டு அதிர்ந்து போனேன். அனுமார் வால் போல வரிசை நீண்டு நான் செல்ல வேண்டிய எத்திஹாட் நுழைவு வாயிலுக்கருகில் 500க்கும் மேற்பட்டோர் காத்திருந்தனர். முக்கால் மணிநேரம் காத்திருந்து உள்ளே நுழைந்து போர்டிங் பாஸ் வாங்கி இமிக்ரேசன் பிரிவுக்கு சென்ற போது அங்கே ஒரு ஆயிரம் பேர் காத்திருந்தனர். எனது அபுதாபி விமானத்தின் புறப்பாடு இரவு 9.35மணிக்கு உறுதி செய்யப்பட்டிருந்தது. ஆனால் இந்த வரிசையில் சென்றால் கண்டிப்பாக விமானத்தை தவற விட்டுவிடுவேன். அது உறுதி. காரணம் குடியேறல் பிரிவை கடந்து பாதுகாப்பு சோதனைக்காக காத்திருந்தவர்கள் அதை விட அதிகம். எனவே குறுக்கு வழியில் என்ன செய்ய முடியும் என்று யோசித்த பொழுது தூதரக அதிகாரிகளுக்காக அமைக்கப் பட்டிருந்த பிரத்யேக கவுண்டரில் ஒரு அதிகாரி சும்மா அமர்ந்து கொண்டு பல் குத்திக் கொண்டிருந்தார். அவரை அணுகினேன். அவர் என்ன மனநிலையில் இருந்தாரோ உடனே என் கடவு சீட்டில் முத்திரை குத்தி இந்த தேசத்தை விட்டு உடனடியாக வெளியேற்றினார். அவருக்கு அருகில் இருந்த சிறப்பு பாதுகாப்பு சோதனை அதிகாரி உடனே என்னை அழைத்தார். என்னை ஒரு வெளி நாட்டு தூதர் என்று எண்ணி விட்டார் போலும். ஆனால் விதி வேறொரு ரூபத்தில் சிரித்துக் கொண்டிருந்தது. எனது பெயரை எத்திஹாட் விமான அதிகாரி ஒருவர் பகிரங்கமாக பொது அறிவிப்பு மூலமாகஏலம் விட்டுக் கொண்டிருந்தார். என்னவென்று விசாரித்த போது எனது பைகளை சோதனை இட வேண்டுமென்றும் அதில் தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக தெரிவித்தார். என்னடா இது...துவரம் பருப்பும், பெருங்காயமும் தடை செய்யப்பட்ட பொருட்களா...என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை?
ான் எனது நண்பர்களுக்காக எடுத்து சென்ற வாசனை திரவியங்கள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப் பட்டு தனியே ஒதுக்கி வைக்கப் பட்டிருந்தன. பாதுகாப்பு கருதி அதை நான் பாலித்தீன் கொண்டு அதற்கான இயந்திரத்தின் உதவியோடு சுற்றி வைத்திருந்தேன். ஒரு பைக்கு 300 ரூபாய் கொடுத்து ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுங்க அதிகாரிகள் அதை நிர்வாணப் படுத்தியிருந்தனர். நேரம் 09:18. என்னோடு வந்த எத்திஹாட் அதிகாரி அதில் உள்ள வாசனை திரவியங்கள் அனைத்தையும் நீக்க வேண்டுமென சுங்க அதிகாரிகள் கோருவதாக தெரிவித்தார். என்னோடு இன்னொரு பயணி முறையான மருந்து பரிந்துரை சீட்டு இல்லாமல் நிறைய மருந்துகளை சுமந்து வந்ததால் அதையும் தடுத்து நிறுத்தி வைத்திருந்தனர். ஒரு வழியாக வாசனை திரவியங்களை நீக்கி அதை மீண்டும் முறையாக கட்டி சேர்ப்பதற்குள் மணி 9.35 ஆகி விட்டது. எத்திஹாட் அதிகாரி, அடில் என்பது அவரது நற்பெயர், பொறுமையாக விமானிக்கு எடுத்துச் சொல்லி விமானத்தை தாமதப்படுத்தி என்னையும் மற்றொரு பயணியையும் அழைத்துக் கொண்டு விமான நிலையத்தின் இரண்டாம் தளம் விரைந்தார். அறிவிப்பாளர் எனது பெயரை ஏலம் விட்டு இது இறுதி அழைப்பு என்று சொல்லும் போது திரைப்படத்தின் அறிமுகக் காட்சியில் கதாநாயகன் நுழைவது போன்று நுழைந்தேன். அனைத்து பயணிகளும் எங்கள் இருவருக்கும் சாபமிட்டபடி காத்திருந்தனர்.
ான்வழியே 3064 கி.மீ தூரம் பயணம் செய்ய வேண்டுமெனவும் கடல் மட்டத்திலிருந்து 35,000 அடி உயரத்தில் விமானம் பறக்கும் எனவும் முதன்மை விமானி அபு சலீம் குரைஷி தெரிவித்தார். எனக்கு மூச்சு வாங்கியது. என் 88கிலோ உடலை என்னாலேயே சுமக்க இயலவில்லை என்பதை உணர்ந்தேன். விமானத்தில் நுழைந்ததும் குடிக்க தண்ணீர் கேட்டேன். பணிப் பெண்ணோ எனக்கு எலுமிச்சை சாறு தந்து இளைப்பாற்றினார்.
ிமானம் என்னை சுமந்து கொண்டு தரையிலிருந்து ஆகாயத்தை தொட்ட போது வழக்கமாக புத்தகம் படிக்கும் வழக்கமுள்ள நான் பாடல் கேட்க எனது அலைபேசியை இயக்கினேன். எப்போதோ கேட்டு நிறுத்தி வைக்கப்பட்ட பாடல் ஒலிக்க ஆரம்பித்தது. வித்யாசாகர் இசையில் நடிகர் ஸ்ரீகாந்தின் கேள்விகளுக்கு பாடகி ஹரிணி தனது இசையால் பதில் சொல்லிக் கொண்டிருந்தார்.
்ரீகாந்த்: ம்ம்ம்....காதல்
ஹரிணி: நம் நான்கு கண்ங்களில் தோன்றும் ஒற்றை கனவடா...
யார் எழுதியது? தெரியவில்லை....சென்னை திரும்பியதும் சைதை  துரைசாமியை சந்தித்து பாடலாசிரியருக்கு சிலை வைக்க ஒரு விண்ணப்பம் தர உத்தேசித்திருக்கிறேன்.
விமானத்தில் உணவு பரிமாறும் சமயம், வழக்கமாக நான் வெளிநாடு செல்லும் போது ''என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா'' என்று ஜனகராஜ் பாணியில் குதித்து கூத்தாடும் ஒரு குழுவும் திரும்பி வருகையில் நான் கொண்டு வரும் இலவச மதுபானக் குப்பிகளை கவர ஒரு குழுவும் எப்போதும் காத்திருக்கும். அவர்களுக்கு மதுபான குப்பிகளை சேகரிக்க ஆயத்தமானேன். விமானத்தின் முதல் வரிசையில் முதல் ஆளாக இருந்ததால் பணியாள் என்னிடமே அவரது கணக்கைத் துவக்கினார். நானோ வழக்கம் போல ''டூ லார்ஜ் வோட்கா வித் லெமெனேட்'' என்றேன். அவன் சிறிய 50மிலி கொள்ளளவு கொண்ட இரண்டு குப்பி தருவான் என்பது எனது எண்ணம். ஆனால் அவன் குனிந்து ஒரு பெரிய அப்சொலுயூட் வோட்கா பாட்டிலை திறந்து ''ரெண்டு லார்ஜையும் இப்பவே குடுக்கவா...இல்லைனா அடுத்த ரவுண்டு வரும் போது தரவா'' என்று வெடிகுண்டு வீசினான். இந்த தாக்குதலை நான் எதிர்பார்க்கவில்லை. நான் விமானப் பயணங்களில் மது அருந்துவதில்லை. அதுவும் போக இவன் கொடுப்பதை கொண்டு செல்வது எவ்வாறு என்று குழம்பி எனக்கு வேண்டாம் என்றேன். அருகில் இருந்த நபர் திருநெல்வேலிக்காரர். அவன் கொடுத்ததை மறுபேச்சில்லாமல் எதுவும் கலக்காமலேயே வாங்கி குடித்து பணியாளை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். ''சார்...போதுமா'' என்று பணிவாக பணியாள் வினவ '' இன்னொரு லார்ஜ் கொடுங்க...அதில கொஞ்சம் தண்ணி மட்டும் கலந்துடுங்க'' என்றார். அதிர்ச்சியிலிருந்து மீளாமலே பணியாள் நகர்ந்தார்.
அபுதாபி வந்திறங்கிய போது நள்ளிரவு மணி 12.30.

ாஸ்கோ விமானம் அதிகாலை 3..05க்கு...காத்திருக்கிறேன்....பயணம் தொடரும். என்னோடு எஸ்.ராமகிருஷ்ணனும், சதத் ஹாசன் மண்டோவும், ராகுல சாங்கிருத்யனும் அவர்களின் படைப்புகள் வாயிலாக பயணிக்கிறார்கள். வாசகனுக்கு ஏது தனிமை?