Monday, June 10, 2019

அக்னியும் மழையும் - கிரீஷ் கர்னாட் நினைவாக...!



11-12-2011 அன்று தான் கிரீஷ் கர்னாட் அவர்களை சென்னையில் சந்தித்தேன்.
அண்ணா சாலையில் ஸ்பென்சர் பிளாசா எதிரே அமைந்திருக்கும் புக் பாய்ண்ட் அரங்கில் மாலை 5.00 மணிக்கு நான் நுழைந்த போது தற்கால தமிழ்ச்சூழலுக்கு ஏற்ப வெறும் பத்து நபர்கள் சிதறிக்கிடந்தனர். விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் 'வெளி' ரங்கராஜன், ந.முத்துசாமி, இந்திரா பார்த்தசாரதி மற்றும் திரைப்பட நடிகர் சண்முக ராஜா. இவர்களில் எவரும் அப்போது வந்திருக்கவில்லை. காலச்சுவடு பதிப்பகத்தின் அதிபரும் எனது நண்பருமான கண்ணன் இருந்தார். நூலை மொழிபெயர்த்த எழுத்தாளர் பாவண்ணன் கூட அப்போது அரங்கில் இல்லை.

ஆனால் கிரீஷ் கர்னாட் இருந்தார். அரங்கின் மூலையில் கிரீஷ் கர்னாடும் கவிஞர் சல்மாவும் உரையாடிக் கொண்டிருந்தார். சல்மாவின் உடைந்த ஆங்கிலத்திற்கு பொறுமையாக பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
கவி.சல்மா என்னை கிரீஷ் கர்னாட் அவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். சற்று நேரத்தில் இன்று புதிய தலைமுறை தொலைக்காட்சியின் நிர்வாக ஆசிரியராக இருக்கும் கார்த்திகை செல்வன் வந்து இணைந்தார். அப்போது அவர் டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தார்.
அரங்கினுள் நுழையும் முன்பே அவர் எழுதி பாவண்ணன் மொழி பெயர்த்தஅக்னியும் மழையும்’ நூலை வாங்கிவிட்டேன்.
அவரிடம் நூலை கொடுத்து கையெழுத்து கேட்டேன்.
யாருக்காக இந்த புத்தகம் வாங்குகிறாய்? என்றார் தெளிவான ஆங்கிலத்தில்.
நானும் ஆங்கிலத்திலேயே எனது மகனுக்காக என்றேன்.
''How old is he....You look so young...' என்றார்.
'He is five years old'' என்றேன்.
சல்மா சிரித்து விட்டார். கிரீஷ் வியப்புடன் என்னை நோக்கி ''Don't you think this book is too much for a five year old kid?''
''Of course, I am aware of that. But, he has to read your writings at least once in his lifetime'' என்றேன்.
கையெழுத்து போட புத்தகத்தின் முதல் பக்கத்தை திறந்தார்.
''What is his name?''
''சரவண விக்னேஷ்'' என்றேன்.
பெயரை எழுதி ஆங்கிலத்தில் கையொப்பமிட்டார்.

சல்மா உடைந்த ஆங்கிலத்தில் உங்கள் தாய்மொழியில் கையெழுத்திடலாமே என்றார்.
''It is unfortunate that I can speak Konkani, but can't read and write since I was educated in Kannada medium school...nevertheless, Kannada is also my mother tongue...'' என்று சொன்னவாறு கன்னடத்தில் கையொப்பமிட்டார்.

''Sir, with due respect to your accolades, may I ask you a question?'' என்றேன்.
''Sure ....Why not?'' என்றார்.
''How can an individual have two mother tongues?'' என்ற எனது கேள்வியை சிரிப்புடன் எதிர்கொண்டவர் ''An individual cannot have but an Indian can'' என்றார்.
இந்த வித்தியாசமான பதிலில் வியந்து போய் ''How...How it is possible....I can have only one mother and only one mother tongue rest all foreign languages....ain't they?''
கிரிஷ் தனது பதிலை கீழ்க்கண்டவாறு பதிவு செய்தார்.
It is a fact that an individual cannot have two mothers and therefore two mother tongues. But it is also  a fact that in country like India where people migrate from one state to another are vulnerable. Because, they are forced to learn the language of the land and could speak mother tongue at home only. That’s the reason I forego my mother tongue. Even today I regret for not being able to write and read Konkani.
நான் சந்தித்து உரையாடிய மகத்தான இலக்கிய ஆளுமைகளில் கிரீஷ் கர்னாட் மறக்க இயலாதவர்.  அவருடன் பேசிய அந்த 25 நிமிடங்கள் என் வாழ்வின் அற்புத தருணங்கள்.
சென்னையில் ஆக்ஸ்போர்ட் பதிப்பகத்தில் எட்டாண்டு காலம் பணிபுரிந்தாலும் தமிழை பேசவோ எழுதவோ கற்க  முடியாமல் போனதை எண்ணி வருந்துவதாக ஏற்புரையில் குறிப்பிட்டார். அமைதியான நதி மீது ர்ப்பாட்டமில்லாமல்  மிதந்து செல்லும் இலை போல அவருடைய பேச்சு அன்று இருந்தது. விழாவின் முதல் வரிசை இருக்கையில் அமர்ந்து அவருடைய பேச்சை கேட்டு ரசித்தேன். பேசிவிட்டு மேடையை விட்டு இறங்கும் முன் என்னை நோக்கி ஒரு புன்னகையை சிந்தி விட்டு இறங்கினார். கிரீஷ் இன்று மறைந்து விட்டார். ஆனால் அவருடைய அந்த புன்னகை மட்டும் என்றும் என்னுடன் இருக்கும். ஆலிசின் அற்புத உலகத்தில் வரும் பூனையின் சிரிப்பை போல....!