Thursday, December 27, 2018

எழுத்தாளர் பிரபஞ்சன் நினைவாக...!

 ''மாப்பாளையம்'' என்று பேச்சு வழக்கிலும் 'மஹபூப் பாளையம்' என்று எழுத்து வழக்கிலும் வழங்கப்படக்கூடிய மதுரை நகரின் புறநகர் பகுதியின் துவக்கப்புள்ளியில் இருக்கும் அந்த விடுதியின் பெயர் அரிமா அரங்கம். அங்கு 1992ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடந்த ''இனி'' வாசகர் வட்டத்தின் கூட்டத்தில் தான் எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்களை சந்தித்தேன். வெள்ளை வேட்டி, முழுக்கை சட்டை, மயில்தோகை வண்ணத்தில் சால்வை நடுவகிடு எடுத்து படிய வாரிய தலைமுடி. பிரபஞ்சன் அரிமா அரங்கின் வாயிலில் புகைபிடித்துக் கொண்டிருந்தார். ஒரு பத்தடி இடைவெளியில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தேன். ஏனோ பேசத்தோன்றவில்லை. அந்த உள் அரங்கு கூட்டத்தின் சிறப்பு அழைப்பாளர்கள் பேரா.சுப.வீ (அப்போது அவர் தி.க/திமுக இரண்டையும் கடுமையாக எதிர்த்துக் கொண்டிருந்தார்) இன்று தொலைக்காட்சி விவாதங்களில் பெண்ணிய செயற்பாட்டாளர் என்று அறியப்படும் தோழர். ஓவியா மற்றும் எழுத்தாளர் பிரபஞ்சன்.
அப்போது ''இனி'' பத்திரிக்கையின் நடுப்பக்கத்தின் பிரபஞ்சன் அரசியல் கட்டுரைகள் எழுதுவார். அதை வாசித்து விட்டுத்தான் அந்த கூட்டத்திற்கு சென்றேன். சுப.வீ வாசகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். ஓவியா பேசும் போது பெண் எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு அதிக பக்கங்கள் ஒதுக்க வேண்டும் என்றார். இறுதியாக பிரபஞ்சன் பேசினார்.
.
அவரது பேச்சு அன்றைய அரசியல் போக்குகள் குறித்து அமைந்ததாக நினைவு. ஞாபகத்தில் நின்ற சில தகவல்கள் எனக் கீழ்க்கண்டவற்றை குறிப்பிடலாம்.
1) ''தி செகண்ட் செக்ஸ்''  (The Second Sex) என்னும் நூலை சிமோன் த பொவார் (Simone de Beauvoir) எழுதுவதற்கு முன்பாகவே ''பெண் ஏன் அடிமையானாள்?'' என்னும் நூலை தந்தை பெரியார் எழுதி முடித்து விட்டார்.
2) தமிழர்களில் இரு வகை உண்டு. ஒன்று தமிழ் பேசும் தமிழர்கள் மற்றொன்று தமிழ்நாட்டுத் தமிழர்கள். (''நாங்கள் தமிழ் பேசும் தமிழர்கள் தமிழ்   நாட்டுத்தமிழர்கள் அல்ல'' என்று பேச்சினிடையே அடிக்கடி குறிப்பிட்டார்)
3) தமிழர்களின் கற்பனை வற்றி போனதுக்கு முதன்மை காரணம் ''இட்லி''
4) ஆண் பெண் சமத்துவம் / சனாதன எதிர்ப்பு போன்றவற்றை தத்துவார்த்தரீதியாக சமூக அமைப்பு மாற்றம் வாயிலாக கொண்டு வருவதன் முக்கியத்துவம் போன்ற கூறுகளுடன் அமைந்தது அவரது பேச்சு.
பிரபஞ்சனின் பேச்சு பாணி சற்று வித்தியாசமானது. பேச்சும் மூச்சும் சரிவிகித சமானமாக கலந்து மந்திரஸ்தாயியில் அவரது குரல் ஒலிக்கும். சுவாரசியமாக பேசுவதில் அவர் சமர்த்தர் என்பதை தற்போது தான் ஸ்ருதி டிவியின் பதிவுகள் வாயிலாக  நான் தெரிந்து கொண்டேன். ஆனால் அவரது எழுத்து அப்போதே என்னை கவர்ந்தது. ''அப்பாவின் வேட்டி'' என்ற சிறுகதை இன்றும் நினைவில் நிற்கும் கதை. வானம் வசப்படும் / மானுடம் வெல்லும் போன்ற நாவல்களை படித்த பிறகுதான் அதற்கு முன் நான் படித்த பொன்னியின் செல்வன் வரலாற்று நாவல் இல்லை எனத்தெரிய வந்தது. சம்பவங்களை சான்றுகளுடன் பின்னி புனைவை அளவோடு கலந்து (அது கூட வாசிப்பின் தடைகளை அகற்றும் பொருட்டு) எழுதப்பட வேண்டும் என்ற நியதியை பிரபஞ்சனே தமிழிலக்கியத்தில் அறிமுகப்படுத்தினார் என்பது எனது தாழ்மையான கருத்து.
கல்கி புனைவையே வரலாறு என்று தமிழர்களை நம்பவைத்து விட்டார். கூடவே சாண்டில்யன் மற்றும் ஜெகசிற்பியன் துவங்கி இன்றைய பாலகுமாரன் வரை அதையே இறுக்கமாக பற்றிக்கொள்ள பிரபஞ்சன் அந்த தடைகளை மிக கவனமாக தனது படைப்புகளில் தகர்த்தெறிந்தார்.
ப்ரெஞ்ச் அரசின் மொழிபெயர்ப்பாளாராகவும் முதன்மை நிர்வாகியாகவும் விளங்கிய அனந்தரங்கம் பிள்ளையின் நாட்குறிப்புக்களை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட மானுடம் வெல்லும் / வானம் வசப்படும் இரண்டும் தமிழ் நாவல் பரப்புகளில் ஒரு முக்கிய இடத்தை பிடித்தன. பிரபஞ்சனுக்கு இசையில் அலாதி நாட்டம் உண்டு. காஃபி பற்றியும் அதை அருந்தும் விதம் பற்றியும் அவர் எழுத்துக்கள் மூலமாக அறிந்து கொண்டு எனது பணி நிமித்தம்  தஞ்சை செல்லும் போதெல்லாம் அவர் அறிமுகம் செய்த காபி பேலசில் (Coffee Place - South Ram Pet)  காஃபி அருந்துவதை வழக்கமாக வைத்திருந்தேன். ரசனையோடு வாழ பணம் ஒரு பொருட்டல்ல மனமே பிரதானம் என்பதை அவர் வாயிலாகவே பயின்றேன். இந்தவிதத்தில் பிரபஞ்சன் எனக்கு ஒரு ஞானாசிரியர்.
அவர் இறந்துவிட்டதாக செய்தி வந்த போது நான் ஆந்திராவின் காளஹஸ்தியிலிருந்து சென்னைக்கு காரில் வந்து கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்ததும் அவர் எழுதிய '' பிரபஞ்சன் மகாபாரதம்'' என்னும் நூலை என் மகனிடம் எடுத்துக்கொடுத்து படிக்கச் சொன்னேன். பிரபஞ்சனுக்கு நான் அஞ்சலி செலுத்திய முறை இதுதான். ஒரு படைப்பாளிக்கு வாசகனாக நான் அளிக்கும் அங்கீகாரமும் கௌரவமும் உயரிய மரியாதையும் அதுவே.



Wednesday, December 12, 2018

மழை (சிறுகதை - 12-12-2018)



சென்னைக்கு மழை புதிதல்ல. ஆனால் இந்த மழை சென்னைக்கு புதிது. தன்னை தொடர்ந்து இழிவு படுத்தும் இந்த ஜனத்திரளை பழிவாங்கியே தீருவது என்று கங்கணம் கட்டிக்கொண்டு பெய்த மழை மக்களின் ஜீவாதாரத்தை புரட்டிப் போட்டது. அடர்த்தியான மழைத்தாரைகள் நகரத்தை கனமாக நனைத்து வைத்திருந்தது. ஈரத்தால் கருத்த சுவர்கள் புதிய கட்டிடங்களுக்குக் கூட பழைமையை கொடுத்தன; காய்வதற்கும் மாறுவதற்கும் பல நாட்களாகும். மரங்களின் கிளைகள் முறிந்து தெருவெங்கும் நிரம்பி நனைந்து நாற்றம் குடலை புரட்டியது. மக்கள் முகத்தில் வறுமையின் நிழல் படிந்திருந்தது. இதற்கு பணம் படைத்தவர்களும் தப்பவில்லை. காரும் பங்களாவும் கிரிடிட் கார்டும் கம்ப்யூட்டரும் சோறு போடாது என்பதை மக்கள் உணர்ந்தார்களா என்பது தெரியவில்லை. வெள்ளம் வடிந்த பின்பும் அதன் பாதிப்பு சற்றும் குறையவில்லை. மழை சென்னை நகரை குப்பையால் அலங்காரம் செய்திருந்தது. அந்த அலங்காரத்தை மாநகராட்சி கலைக்க முயற்சித்து கொண்டுருந்தது. மழை இடைவேளை விட்ட போது போக்குவரத்து கொஞ்சம் கொஞ்சமாக அசையாமல் நின்ற நகரத்தை அசைய வைத்தது.  தொலைத்தொடர்பு வசதியும் மின்சாரமும் அவ்வப்போது உயிர் பெற்றன. சில நிமிடங்கள் நீடித்து மரணிக்கவும் செய்தன. ஆனால், இவை அனைத்தும் அவளுக்கும் அவளுடைய குழந்தைகளின் வயிற்றுக்கும் தெரியவில்லை. அப்போது தான் அவளுக்கு நம்பிக்கை தரும்படி ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.

''பல்லாவரம் வரைக்கும் ட்ரெயினில வந்துடுங்க...அங்கேயிருந்து பஸ் பிடிச்சி பம்மல் வந்திட்டீங்கன்னா....குமரன் காலணிக்கு ஷேர் ஆட்டோ கிடைக்கும்..ஒண்ணுமே பிரச்சினை இல்லை....4000 கொடுத்துர்றேன்...!

நாலாயிரம்.....நாலாயிரம்.....அந்த நாலாயிரத்தின் மதிப்பு அவளுக்கு மட்டுமே தெரியும். பேசியவனின் குரலை கணிக்கும் ஆற்றலை எட்டாண்டு கால அனுபவம் அவளுக்கு நன்றாகவே கற்றுத் தந்திருந்தது. கணிப்பொறி வல்லுனர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு பேசியவனின் குரலில் இருந்த அமைதியும் குளிர்ச்சியும் தன் இரண்டு குழந்தைகளையும் தனியே வீட்டில் விட்டு விட்டு கிளம்பும் தைரியத்தை கொடுத்தது.



‘’இதோ பாருங்க கண்ணுகளா...அம்மா வெளியே போய்ட்டு சீக்கிரம் வந்துடுவேன். மழை பெஞ்சிகிட்டே இருக்கு.....வெளியே போகக்கூடாது...பேசாம டி.வி பார்த்துட்டு இருக்கணும்...சவுண்டை கம்மியா வச்சிக்கணும்...சரியா....!’’

''ஓகேம்மா...நீ போய்ட்டு வா....எத்தனை மணிக்கு வருவே?''

‘’மணி இப்போ என்ன நாலரை...நான் எட்டு மணிக்குள்ள வந்துடுவேன்...வரும் போது டிஃபன் வாங்கிட்டு வர்றேன்...கதவை யார் வந்து தட்டினாலும் திறக்கக்கூடாது...சரியா?’’

வடிவு இருந்தால் இவளுக்கு இந்த பிரச்சினையே இல்லை. அவளுக்கும் இவளுடைய தொழில் தான். ஆனால் தற்போது காச நோயால் பாதிக்கப்பட்டு தாம்பரம் சானிடோரியத்தில் தங்கி சிகிச்சை எடுத்து வருகிறாள்.

மழை சைதாப்பேட்டையின் அந்த நெருக்கமான குடியிருப்பை  சேறும் சகதியுமாக்கியிருந்தது. வழக்கத்திற்கு மாறாக கவனமாக கால் பதித்து மூக்கைப் பிடித்துக் கொண்டு தான் ரயில் நிலையத்திற்கு வந்தாள். மழையின் காரணமாக ரயில் சேவை குறைக்கப்பட்டிருந்தது. அதனால் ஸ்டேசனில் கூட்டம் அதிகமாக இருந்தது. எப்படியாவது இந்த நாலாயிரத்தை கைப்பற்றியே ஆக வேண்டும். பணப்பையை திறந்து பார்த்த போது பணம் வெறும் நாற்பது ரூபாய் மட்டும் தான் இருந்தது. அதுவும் கூட அஞ்சரைப் பெட்டியை தோண்டித்துருவி சில்லரையாக எடுத்தது. ரயில் வரக் காத்திருந்தாள். ஏழு மணிக்குள் திரும்பிட முடியுமா? அல்லது அந்த கொடுங்கையூர் சம்பவம் மாதிரி ஏடாகூடமாக ஏதாவது நடந்துவிடுமோ என்று அச்சம் ஒருபுறம் மிரட்டியது. மின்சார ரயில் இன்னும் வரவில்லை.



ஒருமுறை கொடுங்கையூரில் இருந்து வந்த அழைப்பை ஏற்று சென்றாள். கதவை தட்டியதும் நவநாகரீக இளைஞன் திறந்தான்.

நளினமாக வரவேற்று '' என்ன சாப்பிடுறீங்க...டீ....காஃபி?''

''இப்போ எதுவும் வேணாம்...கொஞ்சம் தண்ணி மட்டும் தர்றீங்களா?''

''ஓ...ஷ்யூர்....''

தண்ணீர் குடித்தது மட்டும் தான் நினைவில் இருந்தது. நினைவு திரும்பியபோது அவள் முற்றிலுமாக சீரழிக்கப்பட்டிருந்தாள். அந்த இளைஞனோடு அவனது நண்பர்கள் மூவரும் சேர்ந்து அவளை தின்று தீர்த்திருந்தனர். அதோடு மட்டுமின்றி அவளுடைய கைப்பையில் வைத்திருந்த முன்னூறு ரூபாயையும் திருடியிருந்தனர். உடலெங்கும் ஊசி வைத்து குத்துவது போன்று வலி. எழுந்து நிற்க முடியாதபடி மயக்கம் அவளை தள்ளியதற்கு காரணம் பசியா அல்லது தண்ணீரில் கலக்கப்பட்ட மருந்தா என்று தெரியவில்லை. அவளுடைய பசி அவளுக்கு பழக்கப்பட்ட ஒன்று. ஆனால் இந்த பசியை அவளால் தாங்கமுடியவில்லை.

அந்த பெரிய வீட்டின் நடுவே நான்கு இளைஞர்கள் ஆடை அகன்று உணர்ச்சியற்று கிடந்தனர். அருகே ஊசிகள் மருந்து குப்பிகள் ஒழுங்கற்று கிடந்தன. போதை மருந்து பயன்படுத்துபவர்கள் போலும். மணி என்ன? குழந்தைகள் என்ன செய்துக்கொண்டிருப்பார்கள்? வடிவு இருக்கிறாள் என்றாலும் இரவு முழுதும் தனியே அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள்? வடிவுக்கு வாடிக்கையாளர் வந்தால் குழந்தைகளை எங்கே விட்டு செல்வாள்? இதற்கு நேரமில்லை. முதலில் இங்கேயிருந்து தப்ப வேண்டும். காசில்லாமல் எப்படி எங்கே செல்வது? கொடுங்கையூரிலிருந்து சைதாப்பேட்டைக்கு நடக்கவா முடியும்? ஆடையை உடுத்திக் கொண்டு கதவை திறந்த வேளையில் வீட்டின் வாசலுக்கு ஒரு டாக்சி வந்து நின்றது. என்ன இது....இன்னொருவன் வேறு வருகிறான்....யார் இவன்?

வந்தவன் இவளைப் பார்த்து ''யாரு நீங்க...இங்க என்ன பண்ரீங்க?

அதுவரை நிதானத்தில் இருந்தவள் உடைந்து அழுதே விட்டாள்.

''அண்ணே...என்னை கூட்டிட்டு வந்து ஏமாத்திட்டாங்கண்ணே....ஒரு ஆளு மூவாயிரம்னு சொல்லி போன் பண்ணி வரச்சொன்னாங்க....வந்தா குடிக்கிற தண்ணில ஏதோ கலந்து கொடுத்து நாலு பேர் என்னை.....அண்ணே...எனக்கு பசிக்குது...மயக்கமா வருது...காசும் தரலை...பையிலிருந்த முன்னூறு ரூபாயையும் திருடிக்கிட்டாங்க...ஒரு டீ வாங்கி தர்றீங்களா?''

வந்தவர் கண்களில் நீர் திரளக்கண்டாள். வீட்டினுள்ளே எட்டிப்பார்த்தார்.

''நாய்களா...நாய்களா...வீட்டுல அக்கா தங்கச்சிகளோட பொறக்கலை....கேவலம் உடம்பை விக்கிறவகிட்ட திருடியிருக்கீங்களேடா...உங்களுக்கு காசுக்கு என்னடா கொறச்சல்....பன்னிகளா.....! இந்த மேதைகளை பார்க்க அமெரிக்காவிலிருந்து ஆளுக வர்றாங்கலாம்...கம்பெனி கார் அனுப்பி மகாபலிபுரத்துல விடச்சொல்லி அனுப்புனாங்க...இவனுக எந்திரிக்க மாட்டானுக போலருக்கே....ஊசி வேறயா...சரிதான்...நீங்க வாங்கம்மா போகலாம்....!

''அண்ணே...கார்ல தண்ணி வச்சிருக்கிறீங்களா....இங்கே தண்ணி குடிக்க பயமா இருக்கு...''.

''கிச்சன்ல கேன் வாட்டர் இருக்கும் பாருங்க...அதை குடிங்க....தைரியமா போங்க....நான் இருக்கேன்....''

நாகரீகமாக வடிவமைக்கப்பட்ட கிச்சனின் மூலையில் குடிநீர் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு டம்ளர் குடித்தவளுக்கு ஒரு யோசனை வந்தது. ஜன்னல் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் இது கண்டிப்பாக சாத்தியம் தான். செய்வதை செய்துவிட்டு வந்தாள்.

டிரைவர் மெயின் ரோட்டில் உள்ள ஒரு கடையில் இட்லியும் டீயும் வாங்கி தந்து பஸ் செலவுக்கு முப்பது ரூபாய் பணமும் கொடுத்தார்.

மறுநாள் தொலைக்காட்சியில் அதுதான் விவாதப்பொருள். கணிப்பொறி விற்பன்னர்களிடையே பெருகி வரும் தற்கொலைகள். பணி அழுத்தம் காரணமா?

விவாதத்தில் பேசிய இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் ''இந்த இளைஞர்களின் தற்கொலைக்கு ஈ.வே.ரா கும்பல் தான் காரணம், அவர்களுடைய நாத்திக பிரச்சாரம் தான் காரணம் என்றும், திராவிடர் கழகம் ''இவர்கள் கணிப்பொறி அறிஞர்களானதற்கே பெரியார்தான் காரணம் என்றும், இவர்கள் கணிப்பொறி அறிஞர்களானதற்கு பெரியார் தான் காரணம் என்றால் கர்னாடகம், கேரளம், ஆந்திரத்தில் கணிப்பொறி அறிஞர்கள் உருவானதற்கு யார் காரணம் என்று நாம் தமிழர் கட்சியும் இந்த துர்மரணத்திற்கு காரணம் மத்தியில் நடைபெறும் மோடியின் ஆட்சியே காரணம் என்று காங்கிரசும் கம்யூனிஸ்ட்டுகளும் வாதிட்டு சிற்றுண்டி சாப்பிட்டு சிறுநீர் கழித்து விட்டு கலைந்தனர். இவள் வாய்விட்டு சிரித்தாள். அப்படி எதுவும் இன்று நடந்து விடக்கூடாது.



பாடகியாகியே தீருவது என்று திருவையாற்றை விட்டு ஓடிவந்த போது தான் சினிமா உலகின் நீள, அகல, ஆழங்கள் தெரிந்தது . வெளியே பருண்மையாக சொர்க்கம் போன்று காட்சியளிக்கும் இந்த நகரத்தின் பின்னால் ஒரு கொடும் நரகம் ஒளிந்து கொண்டிருந்ததையும்  அதன் பரிமாணம் அளவீடுகளுக்கு அப்பாற்பட்டது என்பதையும் அவள் உணர்ந்தாள். இந்த சொர்க்கத்தை இயக்கும் முதன்மை ஆற்றல்கள் அந்த நரகத்திலிருந்தே தோன்றுகின்றன. அவள் கற்ற கானடாவும் பீம்ப்ளாசும் தேவகாந்தாரியும், தி.ஜானகிராமனும் கு.ப.ராஜகோபாலனும் ஆதவனும் எதுவும் செல்லுபடியாகாது என்றும் இந்த நரகத்தில் .என்றும் விலை போகக்கூடிய ஒரே ஒரு பொருள் உடல் ஒன்றே என்பதை வடிவு தான் புரியவைத்தாள். வக்ரம் பிடித்த ஆண்களின் தினவுக்கு தீனி போட்டால் வயிற்றுக்கு உணவும் உடுத்த ஆடையும் கிடைக்கும் என்னும் வடிவின் பொருளியல் சூத்திரங்களை எளிதாக அவளால் உள்வாங்க முடியவில்லை. ஆனால் வேறு வழியில்லை. வடிவு நடிகையாகும் கனவோடு சென்னை வந்தவள். இப்போதும் நடிப்பாள். வெட்கப்படுவது போன்றும் உடல் சிலிர்ப்பது போன்றும் வாடிக்கையாளர்களிடம் நடிப்பாள். அந்த நடிப்புக்கு ஒரு ரசிகர் கூட்டமே இருந்தது. ஆனால் அவளே அரண்டு போன சம்பவம் ஒன்றும் நடக்கத்தான் செய்தது.



அவளுடைய வீட்டிற்கும் வடிவின் வீட்டிற்கும் நடுவே ஒரே ஒரு கதவுதான் தடுப்பு.  வீட்டின் உரிமையாளர் ஒரே வீட்டை இரண்டு பிரிவாக்கி வாடகைக்கு விட்டிருந்தார். ஒரு நாள் பகல் வேளையில் வீட்டைப்பிரிக்கும் அந்த கதவு வேகமாக தட்டப்படும் ஓசை கேட்டு எழுந்தாள். வீட்டிற்குள் நுழைந்த போது வடிவு ஒரு துண்டை போர்த்தியபடி நிற்க அவளுக்கு எதிரே ஒரு 25 வயது மதிக்கத்தக்க இளைஞன் கைகளால் முகத்தை மூடியபடி அழுது கொண்டிருந்தான்.

''என்னடி ஆச்சு...?"

''தெரியலைடி...போன் பண்ணிட்டுத்தான் வந்தான்...வந்து ஒக்காந்ததும் நான் ரெடியானேன்...வீட்டின் குறுக்கே நடந்து காட்டச்சொன்னான்...நடந்தேன்...பாத்துட்டு அழுகுறான்...எனக்கே ஒண்ணும் புரியலை....''

மெதுவாக அவன் முகத்தை நிமிர்த்தினாள்....''யாருப்பா நீ....எதுக்கு இங்கே வந்தே....ஏன் இப்படி அழுகுற...?''

''அக்கா...அவங்க நடந்தப்போ அவருடைய உடல் அதிர்வதை நான் பார்த்தனன்...சல்லிக்கு உடம்பு காட்டும் இவர்களுக்கே இப்படி என்றால் என் தங்கச்சி எப்படி துடிச்சிருப்பாள்...செத்துருப்பாளே....ஐயோ...குனிந்த தலை நிமிராமல நடக்கும் அவளை இறுதிப்போரின் போது சிங்கள ராணுவம் இப்படித்தான் நடக்க சொன்னதாம்....நாங்கள் எங்கட காணியையும் வீட்டையும் தானே கேட்டோம்...அதற்கா இந்த தண்டனை....என் தாய்க்கும் இதே தானே நடந்தது...அமைதியை நிலை நாட்டுறோம்னு சொல்லிக் கொண்டு இங்கேயிருந்து வந்த ராணுவமும் அதே தான் செய்தது...இவர்களுக்கும் அவர்களுக்கு என்ன வித்தியாசம்....! நான் இவரிடம் உல்லாசம் அனுபவிக்க வரவில்லை....மன்னிச்சிடுங்க....நம்ம வீட்டில பெண் மக்கள் உண்டுமா?



அவன் முன் மண்டியிட்டு அவனை தோளில் சாய்த்தபடி கேட்டாள் ''ஈழமா....?''



''ஓம்...கடைசிப்போரில் உயிர் தப்பி வந்தனன்...எட்டு வருசமாச்சு....இங்கே ஒரு நட்சத்திர ஓட்டலில் வேலை பார்க்குறேன்...அக்கா...நம்ம வீட்டில பெண் மக்கள் உண்டுமா?''

'ஒண்ணுல்ல ரெண்டு இருக்கு...ஏன் கேக்குற?''

''அந்த பிள்ளைகளுக்கு கொலுசு வாங்கி கொடுங்கோ...தங்கச்சிக்கு கொலுசு என்டால் ரொம்ப பிடிக்கும்...அதிலும் மணி இல்லாத ஓசை எழுப்பாத கொலுசு என்றால் ரொம்ப பிடிக்கும்....நடக்கும் போது கூட மற்றவர்கள் கவனத்தை தான் திசை திருப்பக்கூடாது என்று கவனமாக இருப்பாள்...அவளுக்கா இப்படி...ஐயோ...அவமானத்தில் கூனிக்குறுகி நின்னிருப்பாளே....பையிலிருந்து நான்கு ஐநூறு ரூபாய் தாள்களை எடுத்து கொடுத்தவன் உடனடியாக வெளியேறினான். வடிவு முதல்முறையாக உண்மையாக அழுதாள்.



ரயில் வழக்கத்தை விட கூட்டமாக இருந்தாலும் நிலையத்தில் கூடியிருந்தவர்கள் அனைவருக்கும் நிற்க இடம் கிடைத்தது. ரயில் கிளம்பவும் மழை பெய்யத் துவங்கியது.

தான் எடுத்த முடிவு சரிதானா என்ற சிந்தனை எழுந்த நேரம் ரயில் கிண்டியை வந்தடைந்திருந்தது. ஜன்னலோரம் அமர இடம் கிடைத்தும் அவள் அமரவில்லை. சூழலின் அசுத்தம் அவளுக்கு அருவருப்பை உண்டாக்கியது. கடலைத்தோளும் காகிதங்களும் மழை நீரில் ஊறி நாறிக்கொண்டிருந்தது. அசுத்தம் இந்த நரகத்தின் மூச்சுக்காற்று போலும்.



பல்லாவரம் வரும் போது மழை நின்று தூறல் தூறிக்கொண்டிருந்தது. நடப்பதற்கு சிரமமில்லை. ஸ்டேசனை விட்டு வெளியே வந்து எதிர்ப்புற சாலைக்கு மாறி பஸ் பிடித்து பம்மல் வந்து இறங்கியதும் வானம் மீண்டும் இருட்டத் துவங்கியது. ஆனால் அவளுக்கு நம்பிக்கை வெளிச்சம் இருந்தது.



அங்கிருந்து ஷேர் ஆட்டோ பிடிக்க வேண்டும். மூன்று நாள் தொடர்ந்து பெய்த மழையின் தீவிரம் குறைந்ததாலோ என்னவோ மக்கள் வெளியே நடமாடத் துவங்கியிருந்தனர். ஆட்டோவிற்கு கூட்டம் குறைவாகத்தான் இருந்தது.

'குமரன் காலணி போகுமா?'

''குமரன் காலணி இல்லைங்க....குமரன் நகர் தான் இருக்கு''

''ஆமா...அதே தான்....!"

''இருவது ரூவா...சில்லரையா இருக்கா...இப்போதான் வண்டிய எடுத்துருக்கேன்...கையில் ஒரு பைசா கிடையாது''

''இருக்கு...வண்டிய எடுக்கிறீங்களா சீக்கிரமா போகனும்''

''இரும்மா...இன்னும் ரெண்டு பேராவது வரட்டும்...உன்னை மட்டும் குமரன் நகர் வரைக்கும் கூட்டிட்டி போகணும்னா நூறு ரூவா ஆகும்...பரவாயில்லையா?'

''நூறு ரூபாயா....என்கிட்ட அவ்வளவு பணம் இல்லையே....''

''அப்போ கொஞ்ச நேரம் ஒக்காரு...''



மாலை ஆறு மணி நள்ளிரவு மாதிரி காட்சியளித்தது. பேய் மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்பட்டன. அவளோடு இன்னும் மூன்று பயணிகள் சேர்ந்ததும் வண்டியை நகர்த்தினார் ஆட்டோ ஓட்டுனர். வழியில் அனைவரும் இறங்கிக் கொள்ள இறுதியாக அந்த புறநகர்ப் பகுதியின் பொட்டலில் அவளை இறக்கி விட்டார்.

''இது தாம்மா குமரன் நகர்...இங்கே ஒன்னும் அங்கே ஒன்னுமா வீடுகள் இருக்கும்....அட்ரஸ் இருக்கா...இருந்தாலே கண்டுபிடிக்கிறது கஷ்டம்....பார்த்து போங்க....''

ஆட்டோ கிளம்பவும் மழை கொட்டவும் சரியாக இருந்தது.



இது என்ன இடம்....நான் எங்கே இருக்கிறேன்...கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் வீடுகளும் வெளிச்சமும் இல்லையே....என்று யோசித்தவள் அவனை செல்போனில் அழைத்தாள்.



''ஹலோ....நான் குமரன் நகர் வந்துட்டேன்...உங்க வீடு எங்கே இருக்கு.....?''''

'குமரன் நகரா...நான் குமரன் காலணி தானே சொன்னேன்....நீங்க ஏன் அங்கே போனீங்க...?

''ரெண்டும் வேறயா.....?''

''ஹலோ இது பம்மல்லேயிருந்து அனகாபுத்தூர் போற வழியில இருக்கு....நீங்க எங்கே இருக்கீங்க இப்போ?''

''தெரியலையே....கண்ணுக்கெட்டிய தூரம் வரை வீடே தெரியலையே....நான் எங்கே இருக்கேனு எனக்கே தெரியலை....நீங்க என்னை கொஞ்சம் பிக்கப் பண்ணி கூட்டிப்போக முடியுமா?''

இணைப்பு துண்டிக்கப்பட்டது.



இருட்டு மிரட்டியது. அவளுக்கு அவளுடையே கைகளே தெரியாத அளவிற்கு நெருக்கமாக விழுந்த மழைத்தாரைகள் நிலத்தை விட அவளை மூர்க்கமாக தாக்கியது. ஒதுங்கி நிற்க இடமில்லை. வெளிச்சமும் இல்லை.  சில மணித்துளிகளில் அந்த பிராந்தியம் முழுக்க நீரால் நிரம்ப சாலை எது திசை எது என்று புரியாமல் மொபைலை கைப்பையால் மறைத்துக் கொண்டு மீண்டும் தொடர்பு கொள்ள முயற்சித்து தோல்வியடைந்தாள்.

இப்போது திரும்பிச்செல்ல முடியுமா...மழை நீர் கணுக்கால் வரை ஏறியிருந்தது. எந்த திசையில் செல்வது....அந்த இடத்தில் அவளைத்தவிர யாருமே இல்லை.

மீண்டும் அவனை தொடர்பு கொள்ள முயற்சித்த போது இந்த முறை மணியடித்தது.

''ஹலோ...'

ஹலோ...ஹலோ....எனக்கு இங்கே வழி தெரியலை.....நீங்க சொல்லித்தானே நான் வந்தேன்....பேய் மழை கொட்டுது....ஒதுங்கக்கூட இடமில்லை...பயமா வேற இருக்கு.. ஹலோ''''



எதிர்முனையில் வெடிச்சிரிப்புடன் இணைப்பு துண்டிக்கப்பட்டது.



''ஐயோ...நான் எங்கே போவேன்....திக்கு திசை எதுவும் தெரியலையே.....இங்கேயிருந்து பம்மல் எவ்வளவு தூரம்....நடக்க முடியுமா...அதுவும் இந்த மழையில்....கையில் காசு வேற இல்லையே....என் பிள்ளைகளுக்கு சாப்பாடு....பசி பொறுக்காதுகளே ரெண்டும்....வீட்டில பால் பிஸ்கெட் எதுவுமே இல்லையே ...ஐயோ....''

சிறிது தூரம் நடந்தவளுடைய செருப்பு வார் அறுந்து போக அடிவயிற்றிலிருந்து அலறினாள் '''ஐயா...புண்ணியவான்களே....நீங்க ஏமாத்துறதுக்கு இந்த பாவி தானா கிடைச்சேன்....''

அதே வேளையில்,  சென்னை நகரம் முழுமைக்கும் மின்சாரம் முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு அந்த இருண்ட வீட்டின் சிறிய அறையில் தாயுமின்றி தைரியமுமின்றி அந்த குழந்தைகள் ஒருவரை ஒருவர் கட்டிப்பிடித்தபடி  கந்தசஷ்டி கவசத்தை உச்சரித்துக் கொண்டிருந்தன.





காக்க காக்க கனகவேல் காக்க நோக்க நோக்க நொடியில் நோக்க தாக்க தாக்க தடையறக் தாக்க பார்க்க பார்க்க பாவம் பொடிபட பில்லி சூனியம் பெரும்பகை அகல வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் பிள்ளைகள் தின்னும் புழக்கடை முனியும் கொள்ளிவாய்ப் பேய்களும், குறளைப் பேய்களும்.....



                                                                                                                                       (முற்றும்)


















Thursday, August 23, 2018

ஆண் நன்று (சிறுகதை)

அந்த அரசு குடியிருப்பின் அனைத்து வீடுகளும் தொலைக்காட்சி நெடுந்தொடரில் மூழ்கி இருந்தன. பச்சையும் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் சுவர்கள் கூடிய விரைவில் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தின. வெளியில் நின்ற மரங்களின் இலைகள் கூட அசையாமல் சூழலின் வெப்பத்தை தணிப்பதற்கு உதவி செய்ய மறுத்த மாலைப்பொழுது. வெட்கையை பொருட்படுத்தாமல் ஆங்காங்கே  விளையாடும் குழந்தைகளின் சத்தம். மாலையும் இரவும் சந்திக்கும் அந்த பொழுதின் இறுக்கம் அந்த பழைய பெரிய வீட்டை சற்று அதிகமாகவே பாதித்திருந்தது. 
விழுப்புரம் என்னும் அந்த 'விழுமியபுரம்'' மாவட்டத்தின் திட்ட அலுவலர் சஞ்சய் குமாரை நிலைகொள்ளவிடாமல் செய்தன தொலைக்காட்சியின் அலைவரிசைகள்.
எதிலும் நிலைக்காத கண்களும் மனமும் செய்தி தொலைக்காட்சியை தெரிவு செய்தது.
சஞ்சய் விழுப்புரம் மாவட்டத்ததின் திட்ட அலுவலர். ஆட்சியருக்கு அடுத்து அதிகாரம் படைத்த பதவி. தந்தையை சிறுவயதிலேயே இழந்தவன். தாயால் மட்டுமே போற்றி பாதுகாக்கப்பட்டவன். 
அவனுடைய தாய் பின்னால் அமர்ந்து இந்த உலகத்திற்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாதது போன்று ஜெயகாந்தனின் நாவலில் ஆழ்ந்திருந்தாள். செய்திகளுக்கு இடையே ''சற்று முன் வந்த தகவல்'' என்று செய்தியாளர் தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் என்ற அறிவிப்பை தந்தார். தலைமை செயலாளர் இந்த அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டதாக செய்தியாளர் கூறிவிட்டு விவரங்களை வாசிக்கலானார்.
அதுவரை ஜெயகாந்தனிடம் மூழ்கியிருந்தவள் செய்தியை கேட்டு தொலைக்காட்சியின் மீது கவனத்தை திருப்பினாள்.
மதுரை - தணிகாசலம்
திருச்சி - வெங்கடேஸ்வரன்
விழுப்புரம் - ஜே.பி. அருண்
கடலூர் - சஞ்சீவ் பாட்டியா.....விவரங்களை செய்தியாளர் தொடர்ந்தார்.

மிக வேகமாக கடந்த விவரங்களுக்கு இடையே வந்த புகைப்படங்களில் அந்த மூன்றாவதாக வந்த புகைப்படம் மட்டும் அவளுக்கு அதிர்வை ஏற்படுத்தியது.
28 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அதே முகம். அவன் தானா இது?
சஞ்சய் யார் இந்த புது கலெக்டர்? உனக்கு முன்னாடியே தெரியுமா....?
''இல்லைமா...இது கொஞ்சம் புது ஆளா தெரியுது....இரு நான் நாராயணண்ட்ட பேசுறேன்...''
''டேய்...இவன் என்னவோ அந்த ஜே.பியோட பையன் மாதிரி தான் தெரியுது....''
''ஐயோ..ஆரம்பிச்சிட்டியா...ஏம்மா இப்படி இருக்க....அந்தாளு நீ வேணாம்னு சொல்லிட்டு போயி முப்பது வருசம் ஆகுது...நீ இன்னுமா அவரை நினைச்சிட்டு இருக்குற? உன்னை மாதிரி ஒரு தேவதை வலிந்து போய் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டதுக்கு அப்புறமும் வேணாம்னு சொன்னான்னா அவன்லாம் ஒரு ஆம்பளையா?''
''பின்னே உங்க அப்பா மட்டும் ஆம்பளையா...தனக்கு கேன்சர் இருக்குன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி ஒரு புள்ளையை கொடுத்துட்டு செத்துப்போனவன் ஒரு ஆம்பளையா...அவர் சாகும் போது எனக்கு 22 வயசு...உனக்கு 7மாசம்....அவரோட தோப்பனாரும் அம்மாவும் வந்து ''எம்புள்ள எதையும் அனுபவிக்காம போய்ச்சேர்ந்துடப்டாதுன்னுட்டு இப்படி செய்துட்டோம்...அந்த ஆத்மா வானுக்கும் பூமிக்கும் இடையிலே தீராத ஆசைகளோட அல்லாடப்டாதுன்னுட்டு இப்படி செய்ய வேண்டியதா போச்சி....தயவு செய்து எம் பெண்டுகளை சபிச்சிடாதம்மான்னு கால்ல விழுந்தா....கால்ல விழுந்தா சரியா போச்சா...உனக்கு ஆம்பளைன்னா என்னான்னு தெரியுமா...உண்மையா இருக்குறவன் தான் ஆம்பளை...அந்த விசயத்துல ஜே.பி எவ்வளவோ மேல்...உண்மையான ஆம்பிளைனா அவன் தான்...அம்மாடி! என் குடும்பம் ஒரு காதல் கல்யாணத்தை தாங்காது....என் குடும்ப சூழ்நிலை வேறு ...உங்க குடும்ப சூழ்நிலை வேறு...ஐ காண்ட் அஃபோர்ட் அ லவ் நௌ அப்படின்னு சொன்னான் பாரு அது ஆம்பளைத்தனம்...'' மூச்சிரைக்க பேசி ஓய்ந்தாள்.
''பின்னே எதுக்கு வருசாவருசம் திதி குடுக்குற...உன்னை ஏமாத்திட்டு செத்துப்போனவனுக்கு எதுக்கு ஸ்ரார்த்தம்...பூசை...தர்ப்பணம்?''
''சுயநலம்...அதுகூட உனக்காகத்தான்...பித்ரு தோசம் வந்து உன் சந்ததியை பாதிச்சிரக் கூடாது பாரு அதுக்காக....''
சொல்லிவிட்டு மௌனமாக தனது அறையை நோக்கி நடந்தாள். 

கட்டிலில் படுத்தவாறு நினைவுகளில் பின்னோக்கி நடந்தாள். அவனை எப்போது நான் பார்த்தேன்...இல்லை பார்ப்பதற்கு முன்பு அவனது குரல் தான் என்னை கவர்ந்தது...திருநெல்வேலி ஜங்சனில் பெருமாள் தெற்கு ரதவீதியில் பேரின்ப விலாஸ் தியேட்டருக்கு அருகில் இருக்கும் வாணி விலாஸ் காம்பௌண்ட் என்னும் பிராமணர் குடியிருப்பில் சில குடும்பங்களும் பல மருத்துவ விற்பனை பிரதிநிதிகளும், பெரும்பாலும் திருமணமாகதவர்கள், தங்கியிருந்த காலம் அது. நான் கல்லூரிக்கு கிளம்பும் போது ஜே.பியை பார்த்திருக்கிறேன். ஒடிசலான தேகம், தேடல் நிறைந்த கண்கள், எப்போதும் வெளிர் நிற ஆடைகளில் தான் காணப்படுவான். வேலைக்கு கழுத்தில் டை இல்லாமல் போகமாட்டான். ஒரு மழைநாள் இரவில் உடை மாற்ற மேல்மாடிக்கு சென்ற போது தான் அந்த குரல் என் காதில் விழுந்தது.
''கவிஞர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவது ஒருவித மூட நம்பிக்கை...ஆங்கில இலக்கியத்தில் மகாகவி என்று போற்றப்படும் பைரன் ஒரு கவிதையில் கூறுகிறார் ''அன்பே...என் காதல் எவ்வளவு உயர்வானது தெரியுமா...இதோ ஓங்கி உயர்ந்து மேகத்தை முத்தமிடத் துடிக்கும் இந்த பைன் மரத்தை போன்றது....'' இதுவரை சரி...பைன் மரம் உயரமானது தான்...ஆனால் அடுத்த வரியை பாருங்கள்...''அன்பே என் காதல் எவ்வளவு ஆழமானது தெரியுமா...பூமியின் மையத்தை நோக்கி ஊடுருவிச்செல்லும் இந்த பைன் மரத்தின் வேர்களை போன்றது'' பைரனுக்கு தெரியாது....பைன் மரத்தின் வேர்கள் பக்கவாட்டில் விரவி செல்லுமே ஒழிய கீழ் நோக்கி ஒருபோதும் செல்லாது...கவிதையை ரசிப்பது ஒரு மனோபாவம் அவ்வளவுதான்...அதை உணர்ச்சி நிலையிலிருந்து அறிவுநிலைக்கு நகர்த்தும் போது சுவை குறைந்து விடுகிறது....ரொம்ப எளிமையா சொல்றேனே....மாதவி பொன்மயிலாள் தோகைவிரித்தாள்'' அப்படின்னு சினிமா பாட்டை கேட்டுட்டு பேசாம போயிடனும்...அதை விட்டுட்டு ஆண்மயிலுக்குத்தானே தோகை..பெண் மயிலுக்கு தோகை கிடையாதே...அப்படின்னா மாதவி ஆணா பெண்ணா இல்லை ரெண்டுகெட்டானா என்று சிந்தித்தால் குழப்பும்''  

யார் இவன்...இவ்வளவு தீர்க்கமாக தனது தரப்பு வாதத்தை முன்வைக்கும் லாவகம் எனது பேராசியர்களுக்கு கூட வாய்ப்பதில்லையே...அதுவும் லார்ட் பைரன். 
ஆடையை மாற்றாமல் ஈரத்துடன் இருந்ததை பார்த்த அம்மாதான் என்னை சுயநினைவிற்கு கொண்டு வந்தாள்.
''என்னடி...ஈரத்துணியைக் கூட மாற்றாமல் கனவு கண்டுக்கிட்டு''
இவனை நான் சந்தித்தே ஆக வேண்டும். மெடிக்கல் ரெப்ரெசண்டேடிவ் குடியிருக்கும் பகுதியில் இருப்பவர்களில் நன்கு பரிச்சயமானவன் ராமச்சந்திரன் தான்...அவனைக் கேட்டால் இவனைப் பற்றிய விவரம் கிடைக்கும். காலை காஃபிக்கு மோகன் கடைக்கு செல்லும் ராமச்சந்திரனை நிறுத்திக்கேட்டேன்.
''நேத்து ராத்திரி யார் லார்ட் பைரனைப் பத்தி பேசினது...சத்தியமா நீ இல்லைன்னு தெரியும்...வேறு யார்?''
''எனக்கு அவ்ளோ அறிவிருந்தா நான் ஏண்டி மருந்துப்பையத் தூக்கிட்டு தெருத்தெருவா அலையுறேன்...அது  புதுசா நம்ம ரூம்ல சேர்ந்துருக்கிற ஜே.பாலசுப்ரமணியன்..சுருக்கமா ஜே.பி...பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு இப்போதான் வேலைக்கு சேர்ந்திருக்கான்...மற்றபடி சொல்லிக்கிற மாதிரி வேறெதுவும் இல்லை...''

அவன் பேசுவதை கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆவல் என்னை தீயாய் பற்றியது. சண்டை போட்டு அந்த ஜன்னலோர கட்டிலை என் அக்காவிடமிருந்து பெற்றேன். ஒவ்வொரு நாளும் அவன் குரலுக்கு ஏங்கினேன். அவனும் வஞ்சம் வைக்காமல் பேசினான்.

இரவு விவாதங்களில் அவன் தொடாதத் தலைப்பே இல்லை. சரளமான மொழிவளம் அவனுடைய மிகப்பெரிய சொத்து. ஒரே நேரத்தில் ஆங்கிலத்தில் ஆகாயத்தையும் தமிழில் தாழ்வாரத்தையும் தொடும் சொல்லாட்சி. தமிழ் பேசும் போது தமிழனாகவும் ஆங்கிலம் போது ஐரோப்பியனாகவும் மாறும் உச்சரிப்பு. கேள்வி கேட்டமாத்திரத்தில் வந்து விழும் தகவல்கள். அதற்கு சான்றாக இலக்கிய மேற்கோள்கள். ஒருமுறை சாதியை பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் வந்த விவாதத்தில் குழுமியிருந்த நண்பர்கள் ஒரு அணியாகவும் இவன் தனித்தும் விடப்பட்டான். ஆனால் தனது அபாரமான வாதத்திறமையால் அனைவரையும் தெறிக்கவிட்டான். தமிழ்ச்சமுதாயத்தில் சாதிக்கும் குலத்துக்குமான தொடர்பையும் வேறுபாட்டையும் சேரமான் இளஞ்சேரலாதன் காக்கைபாடினி நச்செள்ளை இருவருக்குமான காதல் வழி நின்று நிறுவினான். பேச்சினிடையே ''காக்கைபாடினி நச்செள்ளை, புறநானூற்றில் 288ஆவது பாடல் 'நரம்பெழுந்து உலறிய நிரம்பா மென் தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் என்று' தொடங்கி முழுச்செய்யுளையும் வரிவிடாமல் சொல்லிவிட்டு அதற்கு கலைஞர். கருணாநிதி புதுக்கவிதை நடையில் எழுதிய உரையையும் சொன்னான்...பேச்சா அது....ம்ஹூம்..குற்றாலத்து அருவி வெள்ளம் போன்று கொட்டித்தீர்த்தான்....வெள்ளம் அவனது நண்பர்களுக்கு கிடைத்தாலும் அந்த சாரலை ஜன்னல் வழியே அனுபவித்தேன். அப்போதே முடிவு கட்டினேன்...வாழ்ந்தால் இவனோடு தான் வாழ்க்கை இல்லையெனின் அது வீண்'''

முதலில் ராமச்சந்திரனை பிடித்து இவனை சந்திக்கும் வாய்ப்பை பெற வேண்டும். இரண்டு முறை பதில் சொன்ன ராமச்சந்திரன் மூன்றாவது முறை கண்டுபிடித்துவிட்டான்.
''என்னடி...லவ்வா...அவன் யாரு..அவன் குலம் என்ன...கோத்திரம் என்ன...உங்கப்பா மூணு பெண்களை வச்சிண்டுருக்கார்...ஏதாவது அறிவோட தான் பேசுறியா...''
''ராமு...அவங்கள நான் கன்வின்ஸ் பண்றேன்...நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு ராமு....''
''யாரடி கன்வின்ஸ் பண்ணப்போற...உங்கப்பாவையா...இல்லை உங்க அக்காளுக்கு மாப்பிள்ளை கொடுக்கப்போறவனையா...இல்லை உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கொடுக்கப்போறவனையா...இல்லை உங்க மாமாக்களையா...அடிப்பைத்தியம்....இதெல்லாம் நடக்குற காரியமா...இந்த கருமத்தை எல்லாம் விடு... அவனும் நீயும் பக்கத்துல நின்னு பாருங்க...கொஞ்சமாச்சும் மேட்ச் ஆகுதான்னு...நீ தேவதைடி...உனக்கு இருக்குற அழகுக்கு ஒரு ராஜகுமாரன் வருவான்...மனசை போட்டு குழப்பிக்காத....அவன் நல்லா பேசுவான் ஒத்துக்கிறேன்...அதுக்குன்னு உனக்கு அவன் புருசனா....ஐயோ நெனெச்சாலே குமட்டுது...அவன் அப்பா ஒரு தினக்கூலி அவன் வீட்டுல இன்னவரைக்கும் கரண்ட் வசதி கிடையாது....தெரியுமா...!

சரி ராமு இதற்கு ஒத்துவரமாட்டான்...நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். துணிந்து அவனிடம் பேசினேன். அவனும் நன்றாகத்தான் பேசினான். ஆறு மாதத்தில் சந்திக்க நாள் குறித்தேன்.

அவனிடம் வாகனம் எதுவும் கிடையாது. நடந்து தான் வேலைக்கு போவான். வெளியூருக்கு என்றால் பஸ்சில் செல்வான். அவன் தென்காசிக்கு செல்லும் நாளை கண்டுபிடித்தேன். பேருந்து நிலையம் வரை அவன் பின்னாடியே சென்று நானும் அவன் ஏறிய பேருந்தில் ஏறினேன். நான் படித்த ராணி அண்ணா கல்லூரிக்கு தென்காசி செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும் என்பதால் சந்தேகமே வராது. பேருந்தில் என்னைக் கண்டதும் குழம்பியவன் சற்று நேரத்தில் தெளிந்து கண்களால் என்னை அழைத்தான். அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.
பேருந்தின் இரைச்சலையும் தாண்டி தெளிவாக கேட்டது அவனது குரல்.
''என்ன இந்த பக்கம்?''
''நான் எப்பவுமே இந்த ரூட்ல தான் காலேஜுக்கு போவேன்...''
''எந்த காலேஜ்?''
''ராணி அண்ணா காலேஜ்...பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் செகண்ட் இயர் படிக்கிறேன்''
''குட்...எனக்கும் லிட்ரேச்சர்ல ஆர்வம் உண்டு....டைம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கிறது எனக்கு பழக்கம்''
''தெரியும்..''
''எப்படி...எப்படி,,,என்னைப் பற்றி எப்படி உங்களுக்கு தெரியும்?'' வியப்புடன் கேட்டான்.
''தினமும் ராத்திரி நீங்க உங்கள் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசுறத நான் கேட்பேன்''
''ஓகோ....ஒட்டு கேட்கிறது தப்பில்லை?''
''எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்...பிராமணர்களை முன்னேறிய சமூகம்னு சொல்றீங்க...அவர்களுக்கு ரிசர்வேசன் கிடையாதுன்னு சொல்றீங்க...ஆனா இன்னைக்கும் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத பிராமணர் குடும்பங்கள் இருக்கு...கோயில்ல தட்டுல கிடைக்கிற அஞ்சோ பத்தோ தான் அவர்கள் வருமானமே...அவர்களுக்கு என்ன தீர்வு?''
''நீங்க சமூக ஏற்றத்தாழ்வையும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் போட்டு குழப்பிக்கிறீங்க....சாதியால் பிளவுபட்ட சமூகத்தில் சாதிரீதியான இட ஒதுக்கீடு தானே தீர்வாக இருக்க முடியும்...பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பிராமணர்களுக்கு உதவித்தொகை கேட்டு போராடுங்கள்...அது சரி...அது உங்கள் உரிமையும் கூட...சாதி பிறப்பின் அடிப்படையில் வருவது மேலும் மாற்ற இயலாலது...மதம் மாறமுடியும்...சாதி மாறமுடியுமா...பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஸ்திரத்தன்மை அற்றவை எனவே அதன் அடிப்படையில் ரிசர்வேசன் என்பது முறையற்றது. முதலில் ரிசர்வேசன் இடஒதுக்கீடு என்பதே தவறு மறுபங்கீடு ரீடிஸ்ட்ரிப்யூசன் என்பது தான் சரியான சொல்லாக இருக்க முடியும்.
''என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?''
''பொருளாதாரம் என்பதை....என்னது என்ன கேட்டீங்க?''
''என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டேன்''
''உங்க காலேஜ் வந்துருச்சு இறங்குறீங்களா?''
''அது கிடக்குது காலேஜ்...தினமும் போறது தானே...!''
கடந்து சென்ற கண்டக்டரிடம் தென்காசிக்கு டிக்கெட் வாங்கினாள்
"நாம இப்போ ரிசர்வேசனை பத்தி தான பேசிக்கிட்டு இருந்தோம்"
''இது கூட ரிசர்வேசனைப் பத்தினது தான்...மனசுலயும் மனையிலேயும் உங்க பக்கத்தில ஒக்கார்றதுக்கு ரிசர்வேசன்''
''இல்லைங்க...ஐ காண்ட் அஃபோர்ட் அ லவ் நௌ....என் குடும்ப சூழல் உங்களுக்கு தெரியாது...நான் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்...உங்களுக்கு புரியாது''
''என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?''
''உங்களை யாருக்குத்தான் பிடிக்காது....இந்த மாதிரி ஒரு தேவதையை பிடிக்காதுன்னு சொல்ல நான் என்ன முட்டாளா இல்லை பைத்தியமா...பட் ஐ டோண்ட் நோ வெதர் ஐ டிசர்வ் யூ ஆர் நாட்...ஆனால் ஒருவிதத்தில் நான் உங்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்...''
''எதுக்கு?''
''என்னையும் ஒரு மனிதனாக அங்கீகாரம் செய்ததற்கு...இந்த உலகத்தில் ஒரு உயிர் என்னையும் விரும்பும்  என்று எனக்கு நிரூபித்தற்கு...ஆனால் நான் பலவீனமானவன்...ஒரு பெண் வலிய வந்து தரும் அன்பைக்கூட சுமக்கமுடியாத வலுவில்லாதவன்...உங்கள் அழகுக்கு நல்ல கணவனும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் கண்டிப்பாக கிடைக்கும்...என்னால் அதை தரமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை...ஐ ஆம் சோ சாரி...''
ஆலங்குளம் தாண்டி பஸ் பாவூர்சத்திரம் வந்தவுடன் ஒன்றும் பேசாமல் இறங்கி சென்றேன்.

அடுத்த ஆறுமாதம் எனது விடாமுயற்சிகள் தோல்வியைத்தழுவின.
காலையில் எழுந்து கோலம் போட நான் வைத்த புள்ளிகள் அலங்கோலமாகின. கல்லூரித் தேர்வுகளில் மதிப்பெண் தொடர் வீழ்ச்சி.
திடீரென்று ராமு தான் அந்த தகவலை சொன்னான். தகவலா அது...பேரிடி...
''ஜே.பி நாளைக்கு ரூமை காலி பண்றான்...அவனுக்கு மல்டி நேசனல் கம்பெனில வேலை கிடைச்சிருக்கு...கர்னாடாகாவுல சிமோகா 
டிஸ்ட்ரிட்க் போறான்...உனக்கும் நல்ல காலம் பொறந்துருச்சு''
சிமோகா போறதுக்கு முன்னாடி அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றான். என்னிடம் பார்வையாலே விடைதந்தான். நான் கண்களாலேயே '' என்னை மறந்துட மாட்டியே'' என்று கசிந்தேன்.
28 வருசம் ஓடி இன்று அவனுடைய வாரிசைப்பார்க்கும் வாய்ப்பு....நான் அவனை பார்க்க வேண்டும்...அவனைத் தொட வேண்டும்..அவனை தொட்டு அவன் மூலமாக ஜே.பியை தொடவேண்டும்...
ஒரு நாள் சஞ்சயிடம் அருணை வீட்டுக்கு சாப்பிட அழைக்குமாறு கூறினேன்.
''அம்மா! நான் கண்டிப்பா அழைச்சிட்டு வர்றேன்; ஆனா உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது பேசி என் பொழப்பை கெடுத்துடாதே....'' என்றான்.

மீண்டும் அவன் நினைவுகள் சுழலாய் என்னை அலைக்கழித்தது. அதை நான் மிகவும் ரசித்தேன். மீண்டும் நான் அவனை சந்திக்க போகிறேன். அவன் அன்று பார்த்த நானும் இன்றைய நானும் ஒன்றா...எது மாறியிருக்கிறது? கண்ணாடி முன் நின்று ஆலோசித்தேன். என் வலதுகை நடுவிரலை நெற்றியிலிருந்து புருவமத்தி, நாசி நுனி, கழுத்து வரை ஓடவிட்டேன்....எதுவும் மாறவில்லை...உடலும் உள்ளமும் அப்படியேதான் இருக்கிறது...தலையை வலது தோள்ப்பட்டையில் சாய்த்துப்பார்த்தேன்...பின்பு இடது தோள்...மேல் கீழாக...இல்லை நான் மாறவில்லை..அவனுடைய நினைவுகளே என்னை இந்த துடிப்போடு வைத்திருக்கிறது...இந்த ஐம்பது வயதிலும் ஒரு பெயர்சொல்ல முடியாத உணர்ச்சி பகல் வானத்து நட்சத்திரம் போல் மின்னுகிறதே...இதன் பெயர் என்ன?

வாழ்க்கையின் சமன்பாடுகள் புதிரானவை. சதுரங்கப்பலகையில் ஒருபுறம் நானும் மறுபுறம் விதியுமாக ஆடிய ஆட்டத்தில் நானே தோல்வியை தழுவியிருக்கிறேன். இந்த தோல்வியை ஈடுசெய்யப்போவது எது? ஜே.பி என்னை மறந்திருப்பானா...இல்லை வாய்ப்பே இல்லை...என்னைப் போலத்தான் அவனும் வாழ்ந்திருக்க வேண்டும்...! 
மதிய உணவிற்குப்பின் அன்று அசந்து தூங்கியவளை சஞ்சய் வந்து எழுப்பினான்.
''அம்மா...அருண் வந்தருக்காரும்மா...சீக்கிரம் கீழே வா....அம்மா டோண்ட் கெட் எமோஷன்...ஓ.கே?"
துள்ளி எழுந்தேன். அருண் என்னிலிருந்து உதித்திருக்க வேண்டியவன்...என் உதிரம் குடித்து, என் உயிரை சுவாசித்து என் சதையை தின்று என்னிலிருந்து பிரிந்து இந்த மண்ணில் விழுந்திருக்க வேண்டியவன்...!
சுழலும் மரப்படிகளில் வேகமாக இறங்கி கதவருகே மறைந்து நின்று அருணை பார்த்தேன்....பார்த்தேன் என்று சொல்வதை விட அவனை பார்வையாலே அள்ளிப்பருகினேன் என்றே சொல்லவேண்டும். அவனே தான் ...அன்று பார்த்த அதே ஜே.பியின் இளமை வடிவம்...!
வேகமாக மூச்சு வாங்கி வந்து நின்றவளை பார்த்து வணங்கினான் அருண்.
''வணக்கம்...ஆண்ட்டி''
''நான் உனக்கு ஆண்ட்டி இல்ல...அம்மா"
சஞ்சய் அதிர்ந்து போய் ''அம்மா...ப்ளீஸ்''
அருண் ''இருக்கட்டும் சஞ்சய்...அம்மான்னு தான் இருக்கட்டுமே...அதுனால என்ன இப்போ''
''அருண்....அப்பா எப்படி இருக்காரு...எனக்கு உங்க அப்பாவை நல்லாத் தெரியும்...சஞ்சய் சொன்னானா?''
''இல்லியே...எங்கப்பாவை உங்களுக்கு எப்படி தெரியும்''
''அவர் திருநெல்வேலியில ரெப்ரெசெண்டேட்டிவா வேலை பார்த்த போது எங்க காம்பௌண்ட்ல தான் தங்கியிருந்தார்... உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா...நான் உங்கப்பாவுக்கு ப்ரபோஸ் பண்ணினேன்...அவர் குடும்பச்சூழல் ஐ காண்ட் அஃபோர்ட் லவ் நௌ அப்படின்னுட்டார்...''
சஞ்சய் ''அம்மா...ப்ளீஸ் இப்போ பழசைப் போட்டு கிளறாதே...!''
அருண் '' சஞ்சய்....லீவ் ஹெர் அலோன்...நீங்க சொல்லுங்கம்மா''
''இனிமேல் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லப்பா...இனி இதைப்பேசி என்னாகப்போகுது...உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு அம்மா செஞ்சு தாரேன்....வடை செய்யட்டுமா இல்லை பனியாரம் செய்யட்டுமா...உனக்கு பனியாரம் பிடிக்குமா?''
''சஞ்சய் நீ போய் கொஞ்சம் வெல்லம் மட்டும் வாங்கியாந்துடு...''
''சார் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வந்துடுறேன்'' சஞ்சய் வெளியே கிளம்பினான்.
''அருண்...எப்போ ஐ.ஏ.எஸ் கிளீயர் பண்ணின?''
''இப்போ தான் இரண்டரை வருசம் ஆச்சு"
''அதுக்கு முன்னாடி...''
''2012ல்ல பி.டெக் மெக்கானிக்கல் மெட்ராஸ் ஐ.ஐ.டில முடிச்சிட்டு லார்சன் அண்ட் டூப்ரோல  வொர்க் பண்ணினேன்...'அப்புறம் ஐ,ஏ.எஸ் கிளீயர் பண்ணினதும் சென்னைல ராஜ்பவன்ல போஸ்டிங்...அங்கே இரண்டு வருசம் இருந்தேன். அப்புறம் செகரட்ரியேட்ல ஆறுமாதம்...இப்போ இங்கே வந்துருக்கேன்..."
அப்பா எப்பவாவது என்னை பற்றி பேசிருக்காரா?''
''எனக்கு தெரிஞ்சு இல்லை...ஆனால் அவர் உங்களை மறந்துருப்பாருன்னு நான் நம்பலை...''
''ஏன்...எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?''
''தெரியலை...My intuition says so...''
அவன் கைகளை பிடித்தேன்....''அப்படியே அவரை மாதிரியே பேசுற''
சஞ்சய் வெல்லத்தோடு வந்தான்....நான் அவனை தொட்டுப்பார்த்த திருப்தியுடன் சமையலறைக்குள் நுழைந்தேன்.

அருணுக்குள் பல்வேறு கேள்விகள்...விடைகாண இயலாமல் தவித்தான்.
இப்படி ஒரு பெண்ணை மறுக்க அப்பாவிற்கு எப்படி மனசு வந்தது....என்னதான் குடும்ப சூழல் என்றாலும் தானே வலியவந்து தனது காதலை வெளிப்படுத்திய பெண்ணை ஒரு ஆண் அவ்வளவு எளிதில் மறக்கமுடியுமா? அப்பா மறந்திருக்க மாட்டார்...ஏதேனும் ஒரு வடிவில் இந்த பெண்ணை நினைவுபடுத்திக்கொள்ளும் ஒரு முறையை அவர் கைக்கொண்டிருப்பார்...அது என்ன? what is that mechanism by which he never forgets this beautiful woman? பனியாரம் தின்றுவிட்டு நன்றி கூறி விட்டு காரை நோக்கி சஞ்சயுடன் அருண் நடந்தான். ஒரே ஒரு பதில் தான் இந்த அனைத்து கேள்விகளுக்கும்...அது என்ன?
சஞ்சய் கார் கதவை திறக்கும் போது அருணுக்கு மின்னலென வெட்டியது அந்த கேள்வி '' சஞ்சய்...அம்மாவோட பேரு என்ன?''
''சார்...என்ன கேட்டீங்க?''
''அம்மாவோட பேரு என்ன?''
''அருணா...அருணா விஸ்வநாதன்''
(முற்றும்)



Saturday, August 11, 2018

மெல்ல நடக்கும் நதி (பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து)

நதிக்கரை அருகே
கவிதை தருவாய்
என்று காத்திருக்க
வந்ததும் வராததுமாய்
வரிகளின் முதல்ச்சீரை
மேலிருந்து கீழாக
எழுதி மறைந்தாய்

இதுவரை அகப்படவில்லை
மறுசீர் எதுவும்...
தெள்ளிய நதிநீர் மீது
புறாவின் சிறகும்
ஒற்றைச்செண்பகப்பூவும்
இரண்டையும் மனம் தொடர
சொற்களும் பின் தொடர்கின்றன

மதியற்ற நானும்
என் முன்னே
விதி போன்று நதியும்
பிரளயத்திற்காக காத்திருக்கும்
பிரபஞ்சமா என் மனம்?

(11-08-2018 அன்று தாய்லாந்தின் பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்திலிருந்து)


Wednesday, August 8, 2018

தி.மு.க = திருக்குவளை முத்துவேல் கருணாநிதி

கடந்த பத்து தினங்களாக இருந்து வந்த வேதனை சற்றே தணிந்தது. அந்த தொண்ணூற்றைந்து வயது உயிரை மருத்துவர்கள் போராடித் தான் காத்து வந்தனர். ஆயினும் பிறந்தன இறக்கும்; இறந்தன பிறக்கும், புணர்ந்தன பிரியும்; பிரிந்தன புணரும்; மலர்ந்தன உதிரும்; உதிர்ந்தன மலரும் என்பதை அறியாதவர் அல்ல கருணாநிதியும் அவரது தொண்டர்களும். எண்பது ஆண்டு கால பொதுவாழ்வில் கருணாநிதி நமக்கு விட்டு சென்றிருக்கும் படிப்பினைகள் ஏராளம். அதை உவத்தல் காய்த்தலின்றி பதிவிடுவதே எனது நோக்கம். நன்கு சூடேற்றப்பட்ட கத்தி வெண்ணெயை வெட்டுவது போன்று ஒரு அலசலை முன்வைக்க வேண்டிய தேவை இன்று எழுந்துள்ளது.



என் சமகாலச் சமூகம் கண்ட ஒரு மாபெரும் இயக்கத்தின் அசைக்க இயலா தலைவர் கருணாநிதி என்பதை முதலிலேயே பதிவு செய்து விடுகிறேன்.



திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்களுக்கு ''கலைஞர்'' எதிரிக்கட்சி நண்பர்களுக்கு ''தீயசக்தி'' ஆயினும் தமிழக அரசியலில் தவிர்க்க முடியாத சக்தி கருணாநிதி என்பதை அவரது எதிரிகள் கூட மறுக்க மாட்டார்கள்.



நான் பிறந்த போது கருணாநிதி தான் தமிழகத்தின் முதல்வர். நான் பள்ளி செல்ல துவங்கிய போது ஆட்சியை கருணாநிதி எம்.ஜி.ஆரிடம் இழந்திருந்தார். எம்.ஜி.ஆர் உயிருடன் இருந்த வரை அவரை கருணாநிதியால் வெல்ல இயலவில்லை. ஆனால் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருந்தார் என்று பேசும் உடன்பிறப்புகள் அவரால் ஏன் எம்.ஜி.ஆரை வெல்ல முடியவில்லை என்ற கேள்விக்கு மௌனத்தையே பதிலாக தருகிறார்கள். உயர்நிலைப்பள்ளி முடித்த போது கருணாநிதி மீண்டும் முதல்வர் ஆனார். ஆனால் அந்த ஆட்சி கலைக்கப்பட்டுவிட்டது. இதற்கு பின்னால் சர்வதேச ''மாமா'' சு. சாமியும் அன்றைய பிரதமர் சந்திரசேகர் அமைச்சரவையில் இருந்த சுபோத்கான் சகாயும் இருந்தனர். அதன் பின்பு சு.மாமா ராஜிவ்காந்தியை போட்டுத்தள்ளி விட்டு பழியை தி.மு.க மீது போட ஜெயலலிதா முதல்வரானார்.

ஜனநாயகத்தின் அனைத்து அம்சங்களையும் கேலிக்கூத்தாக்கிய ஜெ.வின் அந்த ஆட்சி 96ல் நிறைவு பெறும் போது கருணாநிதி மீண்டும் முதல்வரானார். பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ந்து தமிழக அரசியலை தன்னை சுற்றி நிகழுமாறு பார்த்துக் கொள்வதில் கருணாநிதி வல்லவர். ஆட்சியில் இருக்கும் போது சட்டம் ஒழுங்கு குறித்த அக்கறை அவர் பதவியை விட்டு இறங்கியதும் தலைகீழாக மாறுவது கண்கூடு.



தனது ஆட்சியில் தமிழகத்தை முன்னேற்றப்பாதையில் எடுத்துச் சென்றார் என்பதில் ஐயமில்லை. ஆனால் அதற்கு கட்டணமாக அவரது குடும்பத்தாரும் அமைச்சர் பெருமக்களும் சில ஆயிரம் கோடிகளை எடுத்துக் கொண்டனர் என்பதிலும் ஐயமில்லை. அவருடைய சுற்றத்தாரின் சொத்துக்கள், மேனாள் அமைச்சர்களின் சொத்துக்களின் விவரங்களை எடுத்து அலசினால் புரியும்.

1) சுயமரியாதை திருமணச்சட்டம்

2) அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக சட்டம்

3) முதல் பட்டதாரி இட ஒதுக்கீடு

4) மாவட்டம் தோறும் மருத்துவக் கல்லூரிகள்

5) தகவல் தொழிட்நுட்ப தொழிற்பேட்டைகள்

6) கனரக இயந்திர தொழிற்சாலைகள்

7) மருத்துவ காப்பீட்டு திட்டம்

8) பெண்களுக்கான சொத்துரிமை சட்டம்

மேற்கண்ட கருணாநிதியின் திட்டங்கள் எதுவுமே அவரை தொடர்ச்சியாக பதவியில் இருக்க விடவில்லை என்பதே யதார்த்தம், இலவசம் என்று தூக்கி கொடுத்த பிறகும் கூட. இதன் பின்னே இருக்கும் சித்தாந்த அரசியல் அல்லது வெகுஜன அரசியல் என்னவென்று நாம் ஆராய்ந்தே தீர வேண்டும்.



கருணாநிதியின் அரசியலை கூர்ந்து நான் கவனிக்கத் தொடங்கியது எனது பதின்ம வயதுகளில் தான். அப்போது மதுரையின் மேலமாசி வீதி -வ்டக்கு மாசி வீதி சந்திப்பில் தான் அரசியல் கூட்டங்கள் நடக்கும். நள்ளிரவு 11 மணிக்கு மேல் தான் கருணாநிதி பேசத்துவங்குவார். அது ஒண்ணரை மணி வரை நீளும். பேச்சின் இடையே வரும் இலக்கிய மேற்கோள்கள், சிறுகதைகள், சிலேடைகள் என ரசிக்கத்தக்க கூறுகள் ஏராளமாய் இருக்குமாறு பார்த்துக் கொள்வார். அதற்கு முன்பு அதிமுகவினர் கூட்டம் நடத்தியிருந்தால் அதில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு விடை தரும்படி அவரது உரை அமையும். (சான்று: எம்.ஜி,ஆரை திமுகவினர் மலையாளத்தான் என்று வசை பாட அதற்கு பதில் தந்த எம்.ஜி.ஆர் தனது பூர்வீகம் தஞ்சை என்றும் தான் மன்றாடியர் பரம்பரை என்றும் கருத்து தெரிவித்திருந்தார். அதற்கு கருணாநிதியின் பதில்; ''ஆம் அவர் மன்றாடியர் பரம்பரை தான் டெல்லியில் ''மன்றாடிய பரம்பரை'')

கருணாநிதியிடம் இளைய தலைமுறை கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் அவரது உழைப்பு. தனது வாழ்நாளின் இறுதிவரையிலும் அரசியல் பணிகளை செய்து கொண்டே இருந்தார். உடல் நலம் பேண தேவையான பயிற்சிகளை மேற்கொண்டார். அவரது சமரமற்ற உணவு முறை கவனிக்கத்தக்க ஒன்று. அவர் வளர்த்து வந்த நாய் ஒன்று இறந்தவுடன் அசைவ உணவை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். இது நடந்தது அவருடைய அறுபதாவது அகவையில். ஆட்சியில் இருப்பவருக்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது அவருக்கு பிடித்தமான ஒன்று. எம்,ஜி.ஆர் ஆட்சியின் பட்ஜெட் ரகசியங்கள், கோப்புகளின் நகர்வு, திட்டங்களில் நடைபெறும் பேரங்கள் என்று அனைத்தையும் தனது விரல் நுனியில் வைத்திருப்பார். எனவே எம்.ஜி.ஆர் சாராய வியாபாரிகள் தருவதை கருணாநிதியிடம் பகிர்ந்து கொண்டதாக கூட ஐ.ஏ.எஸ் வட்டாரங்களின் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. ''நீங்க தானே தலைவரே ஆட்சியில இருக்கீங்க...அவருக்கு எதுக்கு கொடுக்கணும்..''என்று சாராயம் உற்பத்தி செய்யும் தேசபக்தர்கள் கேட்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர் முறைத்தாக தகவல்.



விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் என்று எவரும் இல்லை. அது அதிமுகவினர் வணங்கும் இதய தெய்வமாக இருந்தாலும் சரி, திமுகவினர் போற்றி புகழும் கருணாநிதியாக இருந்தாலும் சரி குணம் நாடி குற்றமும் நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளலே நமது மரபு.

கருணாநிதி தவறிய தருணங்கள் என்று நிறைய உண்டு. கண்ணதாசன் கூறியதைப் போன்று வாழ்வில் ஒரு கட்டத்திற்கு பின்னால் தனது குடும்பம் சுற்றியே அவரது அரசியலை நகர்த்தினார். இதற்காக இனநலனை கூட காவு கொடுக்க அவர் தயங்கியதில்லை என்பது எனது அவதானிப்பு. இதை மறுப்பவர்கள் என்னோடு விவாதம் செய்யலாம். அது அறிவுப்பூர்வமானதாகவும் சான்றுகளின் அடிப்படையிலும் அமைதல் வேண்டும்.



முதலாவதாக நெருக்கடி நிலை விவகாரம். நெருக்கடி நிலையின் போது மிகவும் பாதிக்கப்பட்டது திமுக தான். எண்ணற்ற தொண்டர்கள் உயிரையும் உடைமைகளையும் இழந்தனர். ஆனால் அதே இந்திரா காந்தியை அழைத்து நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்றார். நெருக்கடி நிலையில் இழந்த உயிர்களின் மதிப்பை பற்றி யோசிக்கவே இல்லை. சர்க்காரியா கமிசன் அறிக்கையை வைத்து நடுவண் அரசு மிரட்டியதாக தகவல்.

தமிழ்மொழியை நீதிமன்ற அலுவல் மொழியாக பத்தாண்டு காலம் மத்தியில் ஆட்சி பொறுப்பில் இருந்த போது சாதிக்கவே முடியவில்லை. காரணம் மந்திரி பதவி மீது இருந்த அக்கறை தமிழ்மொழி மீது இல்லை என்பது வெள்ளிடை மலை. மும்மொழிக்கொள்கை, இருமொழிக்கொள்கை என்று பல்வேறு நாமகரணங்கள் சூட்டப்பட்டாலும் ஆட்சிமொழிக் கொள்கையை பற்றி பேசக்கூடாது என்று மத்திய ஆட்சியாளர்கள் உறுதிமொழி வாங்கிவிட்டு பதவிகள் தந்தார்களோ என்னவோ?

கருணாநிதி பதவி பேரத்தை மிகத்திறமையாக நடத்துவதில் வல்லவர். தனது மகன் அழகிரிக்கு யாதொரு தகுதியும் இல்லை என்று தெரிந்தும் உரம் மற்றும் வேதிப்பொருட்கள் துறையை போராடி பெற்றார். இதன் பொருள் அழகிரி இந்த துறையில் வல்லவர் என்பதாலோ அல்லது இந்திய உரத்துறை/மருந்துப்பொருள் உற்பத்தி/விற்பனை துறை/ வேதிப்பொருட்கள் துறையில் தற்சார்பு அடைவது என்ற திமுகவின் இலட்சிய வேட்கையினாலோ அல்ல. சில்லறை அதிகம் அவ்வளவே. அது போன்றே தயாநிதி மாறன். அவரும் தன் பங்குக்கு தொலைபேசித்துறையின் இணைப்பை தனது அண்ணனின் நிறுவனத்திற்கு தந்து தாத்தாவின் பெயரைக் கெடுத்தார். ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு அழியாக்கறையாக திமுகவின் மேல் விழுந்துள்ளது. யார் அதை துடைப்பது?



2ஜி அலைக்கற்றை ஒதுக்கலில் ஆ.ராசா ஒரு கோடியே எழுபத்தைந்து லட்சம் கோடி ஊழல் செய்து விட்டார் என்று நானும் நம்பவில்லை. ஆனால் தனக்கோ / கனிமொழிக்கோ பிரதிபலன் இல்லாமல் இந்த ஒதுக்கீடை அவர் செய்தார் என்பதையும் நம்பவில்லை. நீரா ராடியாவுடன் ராஜாவும் கனிமொழியும் ஏன் ராசாத்தியும் கூட உரையாடியது இன்றும் கேட்க கிடைக்கிறது. வெறும் பத்து லட்சம் ஒப்பந்தத்திலேயே 40% அடிக்கும் போது இவ்வளவு பெரிய தொகை கைமாறும் போது அதில் சிறுபலாபலன் இருக்கத்தான் செய்யும். ராஜாவோ கனிமொழியோ பொருளாசை அற்றுப்போனவர்கள் அல்லர் என்பதை அவர்களே ஒப்புக்கொள்வார்கள்.

இறுதியாக ஈழ விவகாரம், இதில் கருணாநிதி செய்தது பச்சை துரோகம் என்று தான் நான் சொல்வேன். இந்திய ஒன்றியத்துடனான கைகோர்ப்பு என்றளவில் மட்டுமல்லாது தமிழக மக்கள் போராடும் போதெல்லாம் அதை ஒடுக்கினார். சிறு இயக்கங்கள் துண்டு பிரசுரம் அடிக்கக்கூட வாய்வழி தடை உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. மே17 இயக்கம் நெல்லூர் சென்று சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் அடித்துக் கொண்டு வந்தார்கள். உளவுத்துறை ஐ.ஜி ஜாபர் சேட் இந்த பணியில் முக்கிய பங்காற்றினார். அவரது மகளுக்கு அரசு இடம் ஒதுக்கப்பட்டது. பாராளுமன்றங்களில் இடதுசாரிகள் இலங்கைக்கு எதிராக தீர்மாணம் கொண்டு வந்தால் காங்கிரசோடு சேர்ந்து அதை தோற்கடித்தனர்.

காலை உணவிற்கு பகல் சூப்பிற்குமிடையே அவர் நடத்திய வரலாற்று சிறப்புமிக்க அந்த உண்ணாவிரதம் வரலாற்றில் இடம் பிடிக்கக்கூடியது. போர் நிறுத்தம் வேண்டி மக்கள் மனிதசங்கிலி நிகழ்த்திய போது ''நான் உள்ளுக்குள்ளேயே அழுவது எத்தனை பேருக்கு தெரியும்'' என்ற வசனங்கள். எப்போது ஈழப்பிரச்சினை வந்தாலும் அன்றே தீர்மானம் போட்டேன், அன்றே சட்டசபையில் பேசினேன், கடிதம் எழுதினேன், இரவு ராசாத்தி  இட்லியை தட்டில் வைக்கும் போது ஈழவிடுதலை குறித்து பேசினேன், காலை தயாளு காபி கொடுக்க வரும்போது கூட தனி ஈழமே தீர்வு என்ற எனது எண்ண ஓட்டத்தை வெளிப்படுத்தினேன் என்று பேசுவாரே ஒழிய அன்றைய காங்கிரசு ஆட்சியை கவிழ்த்து அதை சர்வதேச பிரச்சினையாக்க வேண்டிய வரலாற்று கடமையை கருணாநிதி தவற விட்டுவிட்டார் என்றே சொல்ல வேண்டும்.



இறுதியாக சமூகநீதியை மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகச்சிறப்பாக செயல்படுத்திய கருணாநிதி செய்யத் தவறிய ஒன்று உண்டு. அற நிலையத்துறை அமைச்சராக அவர் இதுவரை தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை நியமிக்கவில்லை என்பதே அது. காமராஜர் ஆட்சியில் பரமேஸ்வரனை அறநிலையத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டதற்கு அடுத்து வேறு யாரும் அந்தப்பதவியில் நியமிக்கப்படவில்லை. இது கருணாநிதி தவிர்த்திருக்கக் கூடிய தவறு செய்திருக்க வேண்டிய சாதனை. ஏனோ அவர் இதை செய்ய மறுத்துவிட்டார்.

ஆனால் இவை அனைத்தையும் தாண்டியே கருணாநிதியையும் அவரது அரசியலையும் நாம் கணித்தாக வேண்டும். ஒரு படைப்பாளியாக அவர் நிகழ்த்திய சாதனைகள் ஏராளம். சமஸ்கிருதம் கலந்த தமிழ் திரையில் ஆட்சி செய்த போது அழகுத்தமிழை அரியணையில் ஏற்றியவர்.

''வசந்தசேனை வட்டமிடும் கழுகு, வாய் பிளந்து நிற்கும் ஓநாய், நம்மை சுற்றி வளைத்திட்ட மலைப்பாம்பு''

போன்ற உவமான உவமேயங்களும், ''ஆகாரத்திற்காக அழுக்கைச் சாப்பிட்டு தடாகத்தை சுத்தம் செய்கிறதே மீன் அதைப்போல'' போன்ற உவம உருபுகள், தெள்ளிய தமிழில் உரையாடல்களை நடிகர்களின் திறமைக்கு ஏற்ப வடிக்கும் நேர்த்தி. சிவாஜி என்றால் ஏற்ற இறக்கத்துடன் கூடிய பல பக்க வசனங்கள், எம்.ஜி.ஆர் என்றால் எண்ணிக்கையில் சொற்பமான ஆனால் கூரிய வலிமையான சொற்கள் என்று தேர்ந்த சமையல்காரனின் பக்குவத்துடன் சமைத்துத்தரும் சமையல்காரர் அவர்.



கருணாநிதி தமிழுக்கு ஆற்றிய தொண்டினை, அவரது தொண்டர்கள் தில்லி வழியே செயல்படுத்த தவறியிருப்பினும், நாம் பாராட்டியே ஆக வேண்டும். இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் 'நமஸ்காரம்' கிடையாது. வணக்கத்தை பிரபலபடுத்தியது, முன்னிலை படுத்தியது அரசியல் படுத்தியதில் கருணாநிதியின் பங்கே அதிகம்.  திருக்குறளை பேருந்துகளில் பொறித்தது, குமரியில் 133 அடியில் திருவள்ளுவருக்கு சிலை வைத்தது, என்று எங்கு திரும்பினாலும் அவரது முத்திரை. அவர் உடன்பிறப்புகளுக்கு எழுதும் கடிதமே ஒரு பேரிலக்கியம். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் அவரது கடிதம் ஒன்றை பாடமாகவே வைத்திருந்தனர்.



''தோன்றிற் புகழோடு தோன்றுக அஃதிலார்க்கு தோன்றலின் தோன்றாமை நன்று'' கருணாநிதி அரசியலிலும் திரைத்துறையிலும் புகழோடே தோன்றினார்...புகழோடே மறைந்தார். தனது புகழ் வெளிச்சத்தை ஆரிய இருள் மறைத்த போதெல்லாம் தனது அசாத்திய திறமையால் கிழித்துக்கொண்டு வெளிப்பட்ட உதயசூரியன் கருணாநிதி.

''என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புக்களே....'' அந்த குரலை இனி என்று கேட்போம்?








Tuesday, July 17, 2018

அடையாறு அருகே... (சிறுகதை)

ஒரு பெருநகரத்தின் நெடிய சாலைக்குரிய அனைத்து கல்யாண குணங்களும் கொண்டது மவுண்ட் பூந்தமல்லி சாலை. இந்த சாலையில் தான் இருபது ஆண்டுகளாக பயணிக்கிறேன். இயல்பாகவே போக்குவரத்து நெரிசல் மிகுந்திருக்கும் அந்த சாலையில் அரசுத்துறையினர் அவ்வப்போது மேற்கொள்ளும் குழிதோண்டும் பணிகள் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுபவை. ஆனால்  சென்னை வர்த்த மையத்தைத் தாண்டி சற்றே தள்ளி இருக்கும் சிக்னலிலிருந்து இரண்டாகப் பிரியும் சாலையில் அதற்கான குணங்கள் எதுவும் தென்படாது. நெரிசல் அற்ற அந்த சாலை நிம்மதியை தரும். அந்த சாலையில் வளைந்து நேராக சென்றால் அடையாறின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலம். அதைக் கடந்து இடது பக்கம் திரும்பினால் காவல்துறையின் உயர் அதிகாரகளின் பங்களாக்கள் மட்டுமே இருக்கும் குடியிருப்புகள். பாலத்தை ஒட்டி அமைந்துள்ள நந்தம்பாக்கம் போலிஸ் பூத்தை தள்ளி அரை கி.மீ தூரத்தில் அடையாறின் உள்ளே அமர்வதற்கு இயற்கையாகவே அமைந்துள்ள மணற்திட்டுகள். பெரிய அரச மரம் ஒன்று கிளைபரப்பி சூரியனின் வெப்பத்தை தணித்து நிழலும் தரும் அந்த இடம்தான் நானும் அவளும் இன்றும் என்றும் சந்தித்துக் கொள்ளும் இடம்.

அமைதியாக ஓடிக் கொண்டிருந்தது அடையாறு. மாலைவெயில் இன்னும் மீதம் இருந்தது. இன்று பௌர்ணமி வேறு. அடையாறின் தோற்றம் அமைதி நிறைந்த அழகாக இருக்கும். மூன்று நாட்களுக்கு முன் பெய்த மழையால் பூமி பசும்புற்களை பிரசவித்திருந்தது. கரையில் அமர்ந்து அடையாறு ஆற்றை உற்று பார்த்தேன். அது வெறும் ஆறு மட்டுமல்ல. எனக்கும் அவளுக்குமான உறவின் மௌன சாட்சி. தண்ணீர் பாம்பு ஒன்று கரைக்கு வந்து பகல் வெப்பத்தை உள்வாங்கிய மண் மீது ஊர்ந்து வெப்பம் தாங்காமல் மீண்டும் தண்ணீருக்குள் சென்றது. பாம்பு மனிதனின் இச்சைக்கான ஆதி குறியீடு. கடவுளால் மறுக்கப்பட்ட அந்த விலக்கப்பட்ட கனியை மனிதனுக்கு தந்து அவனை வெட்கப்பட வைக்கவும் அதனால் வேதனைப்பட வைக்கவும் முடிந்த பாம்பு இப்போது ஏன் என் முன் தோன்றியது? எதிர்க்கரையில் காகங்கள் கூடிக் கரைந்து கொண்டிருந்தன. உணவு கிடைத்திருக்க வேண்டும் அல்லது உறவினர் இறந்திருக்க வேண்டும்...இல்லையெனில் காகங்கள் கரைவதில்லை. சிறிய அணில் ஒன்று கீழே கிடந்த பழக்கொட்டையை கவ்விக்கொண்டு அருகே இருந்த மரத்தின் கிளை மீது ஏறியது. அவ்வப்போது ஒலி எழுப்பியபடி கடந்து செல்லும் காவல்துறை வாகனங்கள் என்னை கண்டுகொள்ளாமல் சென்றன. இருள் கவிழ்ந்து மாலை நிறைவுக்கு வந்தது. பறவைகள் வீடு திரும்பிக் கொண்டிருந்தன. மணி 6.30 இன்னும் அரை மணி நேரத்தில் அவள் வந்து விடக்கூடும்.

பத்தாண்டுகளுக்கு முன்பு அலுவலகத்தில் எனது அறைக்கு எதிரே அமர்ந்திருந்த அவள் மௌனமாக அழுது கொண்டிருந்தாள்.
அதற்கு அவளது கண்ணீரே சாட்சி. அவளைக் கடந்து பத்தடி தூரம் சென்று மீண்டும் திரும்பி அவளுக்கு தெரியாமல் பின்பக்கம் நின்றேன். காகிதத்தில் ஏதோ கிறுக்கிக் கொண்டிருந்தாள். அது மலையாளமா அல்லது கன்னடமா என்று தெரியவில்லை. அலுவலகப் பதிவுகளில்
பெயர் ஜெயசுதா என்றும் அழைக்கப்படுவது ஜெஸ்ஸி என்றும் தெரியவந்தது. ஊர் கேரளமும் கர்னாடகமும் சந்தித்துக் கொள்ளும் எல்லை கிராமம். வீட்டில் மலையாளமும் பள்ளியில் கன்னடமும் பயின்றவள். வாழ்க்கையில் துரோகம் காரணமாக தோற்கடிக்கப்பட்டவள். ஒரு நாள் என்னிடம் மிச்சம் வைக்காமல் கொட்டி தீர்த்தாள். காதல் திருமணம் செய்து கொண்ட போது அழுகை அவளது வாழ்க்கையின் ஒரு பகுதியானது.
தனது நெருங்கிய தோழியே தனக்கு துரோகம் செய்தது, அவளது காதல் கணவன் அவளது வீட்டிலேயே அந்த தோழியுடன் உறவு கொண்டது, அதை அவளது அம்மா பார்த்து வெடித்தது என ஓராண்டுக்குள் அவளது திருமண வாழ்வு முடிவுற்றது. அவள் வாழ்க்கை முழுதும் இரணங்கள். அவளுக்கு சொல்லி அழக்கூட ஒருவரும் இல்லை. காரணம் பெற்றோரை மீறி நடந்த திருமணம் அது. எது சொன்னாலும் ''நீயே தேடிக்கொண்ட வாழ்க்கை தானே இது''  என்ற ஓரே பதில் திரும்ப திரும்ப வரும். கணவனின் நயவஞ்சகமும் தோழியின் துரோகமும் பெற்றோரின் ஆற்றாமையும் அவளை கிழித்து நாராக்கி நடுவீதியில் எரிந்தன. இவை அனைத்திற்கும் மகுடம் வைத்தாற்போல் பொருளாதார சிக்கல்கள். அவளுக்கு ஒரே ஆறுதல் அவளது மகன் விஷ்ணு. அவ்வப்போது மகனின் கல்விக்காக என்னிடம் உதவி கேட்பாள். சொன்ன தேதியில் பணத்தை திருப்பித் தருவாள். தர முடியாவிடில் காலையில் நான் அலுவலகம் வரும் முன் காருக்காக காத்திருப்பாள்.
காரிலிருந்து நான் இறங்கியதும் ''இன்னைக்கு கேட்ட இடத்தில் பணம் கிடைக்கல...ரெண்டு நாள் கழிச்சு தரட்டுமா...உனக்கு அவசரம்னா இந்த சங்கிலியை அடமானம் வச்சு இப்போவே கொடுத்துடுறேன்...'' என்று படபடப்பாள்.

அவள் பேச நான் காது கொடுத்தேன். அவளது உள்ளக்கிடக்கையை கொட்டித்தீர்க்க செவி மடுத்தேன். அவளால் இந்த பிரச்சினைகளை கடந்து சாதிக்க முடியும் என்று ஊக்கம் கொடுத்தேன். அவளுக்கும் எனக்குமான உறவை எந்தவகையிலும் அடக்க முடியாது. இது பரஸ்பரம் ஒருவரை ஒருவர் ஆற்றிக்கொள்வதன்றி வேறொன்றுமில்லை. சில பொழுதுகளில் பேசும் போது என் சுண்டு விரலை தனது சுண்டு விரலோடு பிணைத்துக் கொள்வாள். உள்ளம் சார்ந்த உணர்ச்சிகளை உடல் சாராமல் பகிர்ந்து கொண்ட அந்த பொழுதுகள் அற்புதமானவை.
ஒரு நாள் வேலையை விட்டு விலகி எர்ணாகுளம் சென்றாள். ஆனால் தொடர்ந்து தொடர்பில் இல்லை. அவ்வப்போது பண உதவி கேட்டாள். ஆனால் நேரில் பார்க்க இயலவில்லை. அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நின்று போனது.

அவளுக்காக காத்திருப்பதை நான் மனப்பூர்வமாக விரும்பினேன். அந்த காத்திருப்பை நான் ரசித்தேன். தெருவிளக்குகள் ஒளி உமிழத்துவங்கின. போக்குவரத்தும் குறைந்து விட்டன. ஆளில்லா அந்த சாலையில் ஒரு ஆட்டோ வந்து அவளை இறக்கி விட்டு திரும்பியது.

அவளே தான்..கரையிலிருந்து கை ஆட்டினேன்...என்னைக் கண்டு உற்சாகமாக கை ஆட்டினாள். அவள் சுண்டு விரலை தீண்டக் காத்திருந்தேன். வந்தவள் கைப்பையை என் கையில் திணித்து விட்டு ''வந்துர்றேன்'' என்று அருகே இருந்த மரத்தின் பின் திசையை நோக்கி நடந்தாள்.
நான் புரியாமல் ''எங்கே போற?'' என்றேன்.
''எல்லாத்தையும் உங்கிட்ட சொல்லிட்டுருக்க முடியாது...பொறு வர்றேன்'' என்றவாறு நடந்தாள்.
சில நிமிடங்களில் சிக்கல் தீர்ந்து விடுதலை உணர்வுடன் புத்துணர்ச்சியாய் வந்தாள். கண்களால் என்னை அளவெடுத்தாள்.

''அப்படியே இருக்கியே....உடம்பு கொஞ்சம் வத்தியிருக்கு....அவ்வளவு தான்....உனக்கு ஒண்ணு தெரியுமா...இன்னையோட 1826 நாள் ஆகுது...ஆனால் உன்னை நான் நினைக்காத நாளில்லை....உனக்கும் எனக்கும் எந்தவொரு பிணைப்பும் சமூக ரீதியாக இருந்ததில்லை... இவ்வளவு நாள் உன்னை பிரிந்து நான் வாழ்ந்தது ஒரு தவம்....வைராக்கியம்...ஓணம் திருநாள் அன்று மொத்த கேரளமும் மாபலி சக்கவர்த்திக்காக காத்திருக்கையில் நானோ உனக்காக காத்திருந்தேன்....வாசலில் பூக்கோலமிட்டு விருந்து சமைத்து நான் கடைசியாக உண்ணுமுன் இதோ நீ வந்து காட்சி தரப்போகிறாய் என்று பலரிடமும் சொல்லி பைத்தியமென பெயர் வாங்கியிருக்கிறேன்....! டிவியில் இந்திப்பாடல்கள் பார்க்கும் போதெல்லாம் உன் ஞாபகம் வரும். '' துமாரி சாத் பி தன்ஹா ஹூ தும் நஹி ஸ்ம்ஜோகே'' மெஹ்தி ஹசனுடைய அந்த கஜல், அப்புறம் பத்மனாபசாமி கோயிலுக்கு செல்லும் போதெல்லாம் உன் பெயருக்கு அர்ச்சனை செய்திருக்கிறேன்...! அந்த சன்னிதியில் நிற்கும் போது ''புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலர்கள் தூவி'' என்று நீ பிரபந்தம் சொல்வது என் காதுகளில் ஒலிக்கும்..
தங்கக் கைக்குள்ளில் சங்கும் தாமரையும்
காணும் கண்ணின் புண்யம்
சூர்ய காயத்ரி ஞான் ஆர்ய தீர்த்தங்களில்
நீராட போய்வரான் ஆலில மஞ்ஞலில்
நீராடும் போல் காணுன்ன கண்ணாயிரம்
உனக்கு பிடித்தமான இந்தப்பாடல் நான் என் மகனுக்காக பாடியது...! அவனுக்காக மட்டுமல்ல உனக்காகவும் தான். ..கடற்கரையில் நான் கால் நனைத்தாலும் நீயும் நனைந்தாய்...உனக்கு பசி எடுக்கும் போது.....

ஜெஸ்ஸி....ஜெஸ்ஸி....ஒரு நிமிசம் பொறு....ஜெஸ்ஸி....இது உனது குணம் இல்லையே....பேச வார்த்தைகளை தேடுபவள் அல்லவா நீ....இன்னைக்கு ஏன் நொடிக்கு நூறு வார்த்தைகள்?

இப்போது என்னிடம் நேரம் இல்லை...சொல்ல வேண்டியது ஏராளம்...நேரமோ குறைவு...நல்ல வாழ்க்கை என்பது எனக்கு கற்பனையிலும் கனவிலும் கூட சாத்தியமாக வில்லை. போன மாதம் என்ன நடந்தென்று உனக்கு தெரியுமா? என் மகன் யாரோ ஒரு வங்காளிப் பெண்ணை திருமணம் செய்து கூட்டி வந்து விட்டான். என் அம்மா '' நீ செய்த பாவம் உன்னை தண்டிக்கிறது'' என்றாள். நான் திருமணம் செய்தது அவர்கள் வீட்டில் யாருக்கும் தெரியாது. அதை குத்திக்காட்டினாள். வந்த மருமகள் ஒரே வாரத்தில் என்னையும் அம்மாவையும் வீட்டை விட்டு துரத்தினாள். நான் இப்போது அம்மாவோடு தனியாக இருக்கிறேன். சினிமாவில் டப்பிங் குரல் கொடுக்கிறேன். ஏதோ வயிற்றுக்கு கிழங்கு வாங்கவும் வீட்டு வாடகை கொடுக்கவும் பணம் கிடைக்கிறது.

அவளுடைய அந்த பேச்சுக்கு நான் ஒரு சாட்சி மட்டுமே....அவள் கண்களை மட்டுமே நான் உற்று பார்த்துக் கொண்டிருந்தேன்...கண்ணாடி முன் நிற்கும் வரை மட்டுமே நீடிக்கும் பிம்பம் போல அவளுக்கு நான் எதிரே இருக்கும் வரை தான் பேச முடியும்....பேசட்டும் எங்கே நிறுத்துகிறாள் என்று காத்திருந்தேன்!

விஷ்ணு பணம் கொடுக்க முனைந்தாலும் இவள் ஊடே விழுந்து தடுக்கிறாள். இந்த பிறவியில் நான் நடந்த பாதை எங்கும் முட்களன்றி வேறில்லை...நான் பாதையெங்கும் மலர்கள் கேட்கவில்லை...புல் இருந்தால் கூட போதும் என்பதே எனது பிரார்த்தனை. உனக்கு தெரியுமா..காசர்கோட்டுக்கு பக்கத்தில் ஒரு அம்மன் கோயில் உண்டு...அங்கு சென்று அடுத்த பிறவியில் என்னவாக ஆக வேண்டுமோ அதை எண்ணி வேண்டிக்கொண்டால் நடக்கும் என்பது நம்பிக்கை...அங்கு சென்று அடுத்த பிறவியில் நீ எனக்கு கணவனாக வர வேண்டும் என்று வேண்டினேன். யாரையுமே வெறுக்கத்தெரியாதவன் நீ...உன் மனைவி உன்னை ஒரு நாளாவது மனிதனாக நடத்தியிருப்பாளா...உனக்கு இது பிடிக்கும் நான் உனக்காக இதை இன்று சமைத்தேன் என்று சொல்லிருப்பாளா...உனக்கு ஒரு பிள்ளை பெத்து தந்திருப்பளா...ஆனால் நீ அவளை எந்த அளவு நேசிக்கிறாய் என்று எனக்குத் தெரியும்....சமூகத்திலும் வேலை பார்க்கும் நிறுவனத்திலும் உனக்கு இருக்கும் அந்தஸ்தையும் செல்வாக்கையும் நன்கு அறிந்த அவள் நீ பிறந்த போது நிலவிய உன் குடும்பத்தின் வறுமையை இன்றளவும் சுட்டிக்காட்டி காயப்படுத்தும் போது வருத்தமோ கோபமோ கொள்ளாமல் அவளை நேசிக்கிறாய் பார்...இந்த அன்பு...பிரதிபலன் எதிர்பார்க்காத இந்த அன்பு எனக்கு மறுபிறவியிலாவது வேண்டும்....நாம் அடுத்த பிறவியில் திருமணம் செய்து கொள்ளலாம்...ஒன்றல்ல இரண்டல்ல...பத்து குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்....உன்னைப் போன்றும் என்னைப் போன்றும் வீடெங்கும் குழந்தைகள்...ஒரே சத்தம் ஆரவாரம் கூச்சல் கும்மாளம் குதூகலம்...பத்துக் குழந்தைகள் பத்து கல்யாணம் பத்து மருமக்கள்....இருபது அல்லது முப்பது பேரக்குழந்தைகள்....நான் மரணிக்கும் போது உன் சுண்டு விரலை பற்றிக்கொண்டே மரணிக்க வேண்டும்...என் இறுதி யாத்திரையில் நான் பெற்றதும் அவர்கள் பெற்றதுமாக பெரும் ஊர்வலமாக நடக்க வேண்டும். மரணமா அது...கொண்டாட்டம் அல்லவா...நிறைவான வாழ்க்கை ஒன்று முடிவுக்கு வருவது கூட திருவிழா மாதிரி தானே....உனக்காக நானும் எனக்காக நீயும் வாழும் அந்த வாழ்க்கையை கற்பனை செய்தாலே இவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறதே...அனுபவித்தால் எப்படி இருக்கும்? என் உடல் சிலிர்ப்பதை உன்னால் உணர முடிகிறதா?

என் முன்னே மண்டியிட்டாள். இரு கரத்தாலும் என் கன்னங்களை பற்றி நெற்றியில் அழுத்தி முத்தமிட்டாள்.
அவள் கண்களை அப்போது தான் உற்று நோக்கினேன். பௌர்ணமி இரவில் ஜொலிக்கும் கண்கள். சற்றே பாரதி நினைவில் வந்து சென்றான். நிலவூறி ததும்பும் விழிகள் அது இதுதானோ...கருவிழி மேலே சொருக பாதி வெண்மையான விழிப்படலத்தில் நிலவு ஊறித்ததும்பின. மயங்கி நின்ற எனக்கு எனது இடது தோள் பட்டையில் டார்ச் விளக்கின் வெளிச்சம் பட்டது. மயக்கத்தை கலைத்தது ஒரு முரட்டுக்குரல்.

''யாருடா அங்கே இந்த நடு ராத்திரில...'' கைகளிலிருந்து ஜெஸ்ஸி கன்னத்தை விடுவித்துக் கொண்டாள்.

பயப்படாதே...போலிஸ்தான்...நான் போய் பாத்துட்டு வர்ரேன்....! மண் பரப்பில் ஜெஸ்ஸி தன் உடல் மறைத்தாள்; நான் கரையை நோக்கி நடந்தேன்.

போலிஸ் ஜீப்பும் அதன் அருகில் ஒரு காவல்துறையின் உயர் அதிகாரியும் அவரது டிரைவரும் இருந்தனர்.
அந்த உயரதிகாரி எனது காரை சுற்றி வந்து கொண்டிருந்தார். ட்ரைவர் என்னை கண்களாலேயே அளவெடுத்தார்.

''பார்த்தா படிச்சாளு மாதிரி தெரியுது...இந்த நேரத்துல இங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்கீங்க?'' நான் மௌனம் காத்தேன்.

''டைம் என்னவாகுது தெரியுமா?''

பிரக்ஞை விழித்துக்கொண்டது. ஆமா...இப்போ நேரம் என்ன? அலைபேசி வந்ததிலிருந்து கடிகாரம் கட்டும் பழக்கம் நின்று போய்விட்டது. மொபைலைத் தேடி பாக்கெட்டிலிருந்து எடுத்துப் பார்த்தேன். அது நள்ளிரவு 1.30 என்றதோடு மட்டுமில்லாமல் 26 மிஸ்டு கால்கள் என்றும் காட்டியது. அனைத்தும் ஒரே எண்கள்.

இப்போது உயர் அதிகாரி பேச ஆரம்பித்தார்.

''சீம்ஸ் டு பி எஜுகேட்டட்....ம்ம்....பேர் என்ன?''


''த்..த்..த...த....தமிழ் செல்வன்....''

''என்ன இந்த நேரத்தில...அதுவும் இங்க...என்ன பண்றீங்க?''

''ரொம்ப நாள் கழிச்சு என் ஃப்ரெண்ட் வந்தாங்க...''

''ஃப்ரெண்டா....அங்கே வேற யாரும் இருக்கிற மாதிரி தெரியலையே...ஃப்ரெண்டை மீட் பண்ரதுக்கு வேற இடமே கிடைக்கலையா...ம்?''

''கதிர்...அங்கே போய் யார் இருக்கான்னு பாரு...''

''ஒகே சார்...'' காவலர் விரைந்தார்.

நீங்க யாரு தீவிரவாதியா...இல்லை பிரிவினைவாதியா...எந்த குரூப்....? உண்மையை சொல்றீங்களா...இல்லைன்னா உள்ளே தூக்கிவச்சு விசாரிக்கட்டுமா?

''எப்படி அரெஸ்ட் பண்ணுவீங்க...காரணமே இல்லாம....'' குரலிலும் கண்களிலும் எனது கோபத்தை காட்டினேன்.

''காரணமா...உங்க பேர் ஒண்ணு போதும்....சார்ஜ் ஃப்ரேம் பண்றதுக்கு...சொசைட்டில என்ன நடக்குதுன்னு தெரியாம இருக்கீங்க''

அலைபேசி சிணுங்கியது. அதே மிஸ்டு கால் எண் தான். எனது எதிர்வினைக்கு சற்றும் காத்திருக்காமல்
''அந்த போனைக் கொஞ்சம் குடுங்க... '' பறித்து அவரே பேசினார்.

''உங்களுக்குத்தான்...பேசுங்க....''

நான் போனை வாங்கி ''ஹலோ'' என்றேன்

எதிர்முனையில் ''அங்கிள் ஞானானு விஷ்ணு சம்சாரிக்கின்னது...ஜெஸ்ஸியோடே சன்...அம்மா இன்னைக்கு இப்போ 8 மணிக்கு நம்மை விட்டுட்டு போய்ட்டாங்க...கடைசியா ஒருமுறை உங்களை பாக்கணும்னு சொல்லிக்கிட்டே இருந்தாங்க...நான் உங்க நம்பரை கண்டினியுவா ட்ரை பண்ணிக்கிட்டே இருந்தேன்....நீங்க அட்டென் பண்ணவேயில்லை....நீங்க இப்போ திருவனந்தபுரம் வரமுடியுமா?'' நீங்க வந்தீங்கன்னா அவங்களோட கடைசி ஆசை.....''விஷ்ணு பேசிக்கொண்டே இருந்தான்.

இரத்தம் ஒரு நொடி உறைந்து மறுகணமே உருகி நரம்புகள் அனைத்திற்கும் சோகத்தையும் பயத்தையும் பாய்ச்சியது. என் பாதங்களிலிருந்து ஞாபக நாகங்கள் தலையை நோக்கி ஊர்ந்து பயணித்துக் கொண்டிருந்தன...கண்களில் கண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடியது.

''சார் இங்கே யாருமே இல்லை சார் ...அந்தாளு பொய் சொல்றான் சார்'' -- கதிர் அங்கேயிருந்து கத்திக்கொண்டே ஓடி வந்தார்.

யாருமே இல்லையா....அப்போ இங்கே வந்தது யார்...ஸ்தூலத்தை விட்டு சூட்சுமமாக என்னைத் தேடி வந்தது எது?...கனவுகளுக்கும் நிறைவேறாத ஆசைகளுக்கும் கால் முளைக்குமா....அவளே சொன்ன மாதிரி வந்தது அவளது ஆசைகள் தானா அது...பத்து குழந்தைகள் பெற்றுத்தர துடிக்கும் தாயுள்ளமா அது...என் சுண்டு விரல் பற்றி அரவணைக்கும் காதலா..எது உடல் பெற்று வந்தது...எந்த அறிவியல் இதை விளக்கும்?

காவல் அதிகாரி ''வீட்டுல பொண்டாட்டியோட சண்டையா...இல்லை தற்கொலை கேசா...தற்கொலை பண்ணனும்னா கூவத்துக்கு தானே போகணும்....இங்கே அரையடி தண்ணியில எப்படி தற்கொலை செய்ய முடியும்....என்னதான் உங்க பிரச்சினை?''

அவரது வார்த்தைகளை பொருட்படுத்தாமல் காருக்குள் நுழைந்து கதவை சாத்திக் கொண்ட மறு விநாடி அந்த உயர்அதிகாரி கண்ணாடியைத் தட்டினார். கார்க்கண்ணாடி இறக்கி விட்டு பார்வையாலேயே என்னவென்றேன்.

''வீட்டுக்குத்தானே போறீங்க...?''

''எஸ்...வீட்டுக்குத்தான் போறேன்...ஏன்?''

''நெற்றியில சிவப்பா ஏதோ லிப்ஸ்டிக் மாதிரி....கொஞ்சம் துடைச்சிக்கோங்க...!''

ரியர்வியூ கண்ணாடியில் பார்த்தேன்...ஜெஸ்ஸி என் நெற்றியில் கொடுத்த முத்தத்திற்கு ரத்த சாட்சியாக அந்த இதழ் தடம்.

அழிக்கணுமா....அழிக்கத்தான் வேண்டுமா...அழிக்கத்தான் முடியுமா...அழித்தாலும் அழியுமா?
(முற்றும்)




Tuesday, May 15, 2018

வளர்ச்சி...மாயை...புள்ளிவிவரம்...விலைவீக்கம் (16-05-2018)

நீண்ட இடைவேளைக்கு பிறகு முகனூலுக்கு திரும்பிய நான். இனி ஏதேனும் அறிவுப்பூர்வமாக மட்டுமே எழுதுவது, வெட்டி விவாதகங்களில் பங்கேற்பதில்லை என்ற கொள்கையுடன் வருகிறேன். அதன் விளைவே இந்த பதிவு. வீட்டில் யாருமில்லாத காரணத்தால் அலவலகத்திற்கு சீக்கிரம் வந்து வரவேற்பறையிலிருக்கும் செய்தித்தாள்களை புரட்டியதன் விளைவு இது. போலி ஜனநாயகத்தின் பிரதான விழாவான தேர்தல் கர்நாடகத்தில் நடந்து முடிந்து அதற்கான முடிவுகள் வெளியான சூழலில் மயிர்பிளக்கும் விவாதங்களில் நகைச்சுவை நாயகர்கள் (காவி + காதி) முனைப்புடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் மக்களை பாதிக்கும் ஒரு விசயத்தை பற்றி எழுதத்துணிந்தேன். இனி யாராவது உங்களிடம் வந்து மோடி, வளர்ச்சி, வலிமையான பாரதம் என்று வியாக்கியானம் பேசினால் செருப்பால் அடிக்கவும்.

கடந்த திங்களன்று (14-05-2018) ஏப்ரல் மாதத்திற்கான பணவீக்கம் புள்ளிவிபரங்கள் வெளிவந்தது. பொருளாதார வல்லுனர்களாலும் அறிவுஜீவிகளாலும் உற்பத்தி மற்றும் சேவைத் துறையின் சமீபத்திய செயல்பாடுகளும் அதன் வளர்ச்சியும் ஒரு நிவாரணமாக காணப்பட்டன. ஆனால் சமீபத்திய பணவீக்க புள்ளிவிவரங்கள், சந்தையில் சில்லறை விற்பனை மற்றும் மொத்த விற்பனை ஆகியவற்றின் தரவுகள் இந்த நிவாரணத்தை நோக்கி சந்தேகத்தை எழுப்புகின்றன.  கடந்த சில மாதங்களில், பணவீக்கம் கட்டுப்பாட்டில் உள்ளதாகத் தோன்றியது அல்லது அவ்வாறு நம்பவைக்கப்பட்டது. ஆனால் இப்பொழுது அந்த நிவாரணமானது தற்காலிகமானது என்று மெய்ப்பிக்கப்பட்டுள்ளது.. இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை ‘hold versus cut’ என்பதிலிருந்து ‘hold versus raise’ என்பதை நோக்கி மாறுகிறது.

பணவீக்கம் மார்ச் மாதத்தில் 4.28 சதவீதமாகவும், முந்தைய ஆண்டு (2017) இதே காலத்தில் 2.99 சதவீதமாகவும் இருந்தது. ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 4.58 சதவீதமாக உயர்ந்துள்ளது என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு முக்கிய காரணியாக தானியங்கள், இறைச்சி, மீன் மற்றும் பழங்களின் விலையேற்றமே ஆகும்.

இப்போது மொத்த பணவீக்க தரவை பாருங்கள். ஏப்ரல் மாதத்தில் இது 3.18 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கு முந்தைய மாதத்தில் இது 2.47 சதவீதமாக இருந்தது. உணவு மற்றும் எரிபொருள் விலைகளில் அதிவேக உயர்வு இந்த விலையேற்றத்திற்கு காரணம் என்பதை எளிதில் நாம் அறிந்து கொள்ளலாம். மார்ச் மாதத்தில் உணவுப் பொருட்களின் விலை 0.27 சதவீதம் குறைந்து தற்போது 0.87 சதவிகிதம் உயர்ந்துள்ளது. மார்ச் மாதத்தில் எரிபொருள் மற்றும் மின்சாரம் விலை 7.70 சதவீதம் அதிகரித்தது இந்த விலைவாசி உயர்வுக்கு காரணம். மார்ச் மாதத்தில் 4.70 சதவீதமாக இருந்த. எரிபொருள் விலை உயர்வில் பெட்ரோல் விலை 9.45 சதவீதமாக உயர்ந்தது, டீசல் விலை 13.01 சதவீதமாக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகள் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலையை மாற்றி அமைக்கும் காரணியாக கருதப்படுகின்றன.  ஆனால், இந்த பிரச்சினைக்கு மிகவும் பாதிக்கக்கூடிய பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா இருக்க வேண்டியதில்லை. அதைவிட துயரமானது இந்திய ரூபாயின் மதிப்பு. அமெரிக்க நாணயத்திற்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 67.51 என்ற அளவில் வீழ்ச்சியை சந்தித்தது. இது கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவிற்கு கடுமையான வீழ்ச்சியாகும். (மோடி ஆட்சிக்கு வந்தால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 40ரூபாயாக மாறும் என்று விதந்தோதிய வாழும் கலை வல்லுனர் ரவிசங்கரனை தேடிக்கொண்டிருக்கிறேன், யாராவது பார்த்தால் சொல்லவும், தாடி வைச்சிருப்பான், சட்டை போட மாட்டான், துண்டு போர்த்தியிருப்பான்) பணவீக்கத்திற்கு எதிரான திட்டங்கள் மற்றும் டாலருக்கு எதிராக இந்திய ஒன்றிய நாணயத்தின் மதிப்பை பாதுகாக்க ஏதேனும் திட்டம் ரிசர்வ் வங்கியிடமோ அல்லது நிதித்துறையிடமோ இருப்பதாக தகவல்கள் இல்லை.

வளர்ச்சி என்று எதை மத்திய அரசு மக்களுக்கு படமாக காட்டுகிறதோ அது வெறும் படம் மட்டுமே என்று அவர்களுடைய பொருளியல் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.