Sunday, December 31, 2017

அன்னமிட்ட கை - சுந்தரி அக்கா, தமிழர் கடல் - 31-12-2017

ஒரு நாள் அலுவலகத்தில் மதியஉணவு இடைவேளையின் போது நண்பர் சக்திசிவக்குமார் தமிழர் கடலின் (மெரினா) சிறப்புக்களை பற்றி எடுத்துரைத்தார். அன்னாரது உரையின் நடுவே தெரியவந்தது யாதெனில் அங்கே மிகப்பிரபலமாக விளங்கும் ''சுந்தரி அக்கா கடை''.
தமிழர் கடல் என்றதும் நமக்கு நினைவுக்கு வருவது அது உலகின் இரண்டாவது மிக நீண்ட கடற்கரை, கலங்கரை விளக்கம், அவ்வப்போது அரசியல் கோமாளிகள் நிகழ்த்தும் திடீர் தியானங்கள், சமாதியே பிளந்து போகும் அளவுக்கு அடித்து செய்யப்பட்ட தியாகத்தலைவியின் சபதம், குடைமிளகாய் பஜ்ஜி, பலூன் சுடுதல், வாங்கும் வரை மட்டுமே வேலை பார்க்கும் எலெக்ட்ரானிக் விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கடற்கரை நெடுக நிற்கும் சிலைகள் அவ்வளவு தான். ஆனால் நண்பர் அதையும் தாண்டி ஒரு விசயத்தை கண்டுபிடித்து வைத்திருக்கிறாரே என்று அவரை பாராட்டியதோடு நில்லாமல் அங்கே அழைத்துச் செல்லும் பொறுப்பையும் அவரிடம் ஒப்படைத்தோம்.
சனிக்கிழமை அன்று நானும் உடன் பணிபுரியும் சுரேந்திரன், சந்தானபாண்டியன் ஆகியோர் நண்பர் சக்தி சிவக்குமார் வழிகாட்டுதலில் விரைந்தோம்.
டிசம்பர் மாதம் குளிர்காலமாதலால் நண்பகல் வெயிலில் எரிச்சல் இல்லை, இருப்பினும் வெயிலின் தாக்கம் பார்வையை கூசச்செய்தது. கடையை கண்டுபிடித்தது ஒரு சாதனை என்றால் வண்டி நிறுத்த இடம் கிடைத்தது மற்றொரு சாதனை. சென்னை மாநகராட்சியின் நீச்சல் குளத்தருகே கடற்கரையை ஒட்டி நடப்பதற்காக அமைக்கப்பட்டிருக்கும் சாலையை ஒட்டி அமைந்திருந்த கடையிலிருந்து மக்கள் கூட்டம் வரிசையாக கடல்வரை நீண்டிருந்தது. மனைவிக்கு மதியஉணவை பொட்டலம் கட்டி வாங்கி வருவதாக உறுதி அளித்திருந்த சக்தி சிவக்குமார், கூட்டத்தை பார்த்து திகைத்து போய் உடனடியாக அவரது திருமதியை தொடர்பு கொண்டு சமைத்து உண்ணும்படி அறிவுறுத்தினார்.
வரிசையில்  நின்றபடி எனது பார்வையை சுழலவிட்டேன். அதிபயங்கர பணக்காரர்கள் முதல் அன்றாடங்காய்ச்சிகள் வரை, தள்ளுவண்டிக்காரர்கள் முதல் தளுக்காய் நுனி நாக்கு ஆங்கிலம் பேசுவோர் வரை, குமரிகள் முதல் கிழவிகள் வரை மண்ணின் மைந்தர்கள் முதல் மார்வாடிகள் வரை வரிசையில் நின்றார்கள். அதில் மிகப்பிரபலமான நட்சத்திர விடுதியின் தலைமை சமையற்காரரும் அடக்கம். கடையின் இருபுறமும் கிடைக்கும் சொற்ப நிழலில் குடும்பம் குடும்பமாக அமர்ந்து மக்கள் உணவருந்திக் கொண்டிருந்தனர். வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகமாகிக் கொண்டிருந்தது. அந்த  அவஸ்தை எங்களுக்கு பின்னால் நின்ற நூறு பேருக்கும் அதிகமானவர்களை பார்த்ததும் குறைந்தது.

சுந்தரி அக்கா கடை பிரபலமானது அவரது கணவர் இறந்த பிறகு தான். கணவர் இறந்த பின்னால் கடையை நடத்த முடியாது என்று மூடிவிட்ட சூழலில் அங்கிருக்கும் ஆட்டோ ஓட்டுனர்கள் கடையை மீண்டும் திறக்கும்படி அக்காவை வற்புறுத்தினர். அந்த ஆட்டோ ஓட்டுனர்களின் புண்ணியத்தில் இன்று ஒரு நாளைக்கு 60கிலோ இறால், 200கிலோ வஞ்சிரம், சில ஆயிரம் முட்டைகள், 200கிலோ அரிசி என்று ஆள்வோர் முதல் ஆளப்படுவோர் வரை அனைவரையும்  சுந்தரி அக்கா தனது கைவண்ணத்தால் அனுதினமும் கவர்ந்திழுக்கிறார்.

பில் வாங்க வரிசையில் நிற்கும் தருணத்தை வீணாக்காமல் நண்பர்களை அறிமுகம் செய்வது உத்தமம்.
சந்தான பாண்டியன் தான் குழுவில் முக்கியமான நபர். துள்ளலான பேச்சுக்கும் துடிப்பான நடவடிக்கைகளுக்கும் சொந்தக்காரர். அதுவும் போக அவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. பெரிய படிப்பும் பெரு நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்த போதிலும் இன்றுவரை மணப்பெண் அமையாதது ஏன் என்பது விடுவிக்கப்படாத புதிர். கல்யாண வயதில் பெண் வைத்திருக்கும் நபர்கள் பெண் கொடுக்க விரும்பினால் உடனடியாக என்னை தொடர்பு கொள்ளலாம். கமிசன் எதுவும் கேட்க மாட்டேன். பிரதிஉபகாரமாக திருமண தினத்தில் மணமேடையில் வைத்து ஒரு பட்டு மயில்கண் அங்கவஸ்திரமும் ஐந்து சவரன் தங்கச்சங்கிலியும் கொடுத்தால் மிகுந்த சங்கோஜத்துடன் ஏற்றுகொள்வேன் என்று உறுதிபடத் தெரிவிக்கிறேன்.
அடுத்து சுரேந்திரன். புன்னகை பூத்த முகத்தை நீங்கள் பார்த்திருக்ககூடும். ஆனால் புன்னகையே முகமாக திகழ்வதை கண்டதுண்டா?  துப்பாக்கியால் சுட்டாலும் சிரிப்பார். சுரேந்திரன் அப்படிப்பட்ட ஆசாமி. வருடம் ஒருமுறை சாமியாகி ஐயப்பனை தரிசனம் செய்ய தவறாமல் செல்வார். காதலித்து திருமணம் செய்தவர். இவரும் பெரிய படிப்பு படித்தவர் தான்.
சக்தி சிவக்குமார் எங்கள் நிறுவனத்தின் பயிற்சி மற்றும் திறன்மேம்பாட்டுத்துறையின் மேலாளர். ஊட்டியில் பெரும்புகழ் பெற்ற கல்லூரியான ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரியில் படித்தவர். மனோதத்துவமும் மூளை நரம்பியலும் அவரது பிரத்யேக கவனம் பெற்ற துறைகள். இந்த குழுவில் மிகக்குறைவாக படித்தவன் நான் மட்டுமே. இவர்களோடு உரையாடும் போது கிடைக்கும் சில தகவல்களை கவர்ந்து கொண்டு மற்றவர்களிடம் நானே கண்டுபிடித்ததாக சொல்லி பெயர் வாங்கி விடுவேன். இதில் உள்ள ஆபத்தை உணர்ந்தே இதை செய்து கொண்டிருக்கிறேன். இது போன்ற தவறு செய்யும் போது கிடைக்கும் சுவாரஸ்யம் ஒருவிதமான போதை. 
வரிசையில் நின்ற போது இவர் தான் சுந்தரி அக்கா என்று சக்தி சிவக்குமார் சுட்டிக்காட்டினார். கரிய நிறம், மீனவப்பெண்மணிகளுக்கே உரித்தான உழைத்து உரமேறிய உடல், ஆர்ப்பரிக்கும் கடலலைகளை ஒத்த குரல், தன்னிடம் பணிபுரிபவர்களை அடக்கி ஆளும் ஆண்களை ஒத்த ஆகிருதி என ஒரு ராணுவப் படைத்தளபதி போன்று பம்பரமாய் சுந்தரி அக்கா சுழன்று கொண்டிருந்தார்.  பில் வாங்குவதற்கே ஒரு மணி நேரம் ஆனது. பில் வாங்கிய பின்னால் உணவைப்பெற எங்கள் எண் வர காத்திருந்தோம் அதற்கு வேறு தனியே வரிசை . வரிசையில் என்னருகே நின்ற பெண்ணின் அலைபேசி சிணுங்கியது. அலைபேசியை எடுத்துப்பார்த்தவர் அதை அருகே இருந்த தோழியிடம் கொடுத்து 'அத்திம்பேர்டி...வீட்டுக்கு வர நாலு மணியாகும்னு சொல்லு'' என்றார். இன்னார் தான் என்றில்லாமல் சாதிமத வேறுபாடின்றி அக்காவின் மீன் குழம்பிற்கும் இறால் வருவலுக்கும் பொரித்த வஞ்சிரம் மீனுக்கும் காத்திருக்கின்றனர் என்பதை அறியும் போது மகிழ்ச்சி தான் ஏற்படுகிறது. சோறும் மீன் குழம்பும் தட்டில் வைத்து கொடுத்து விட்டு இறாலுக்கு காத்திருக்கும்படி பணித்தார் சிப்பந்தி. வஞ்சிரம் மீன் பொரித்துக் கொண்டிருக்கும் அக்காவிடம் பில்லைக் காட்டி பெற்றுக்கொள்ளலாம் என்றும் பணித்தார். அங்கேயும் ஒரே கூட்டம். அங்கேயும் வரிசைப்படி தான் டெலிவரி.
இரண்டு பெண்கள் அக்காவிடம் தங்களுக்கு மட்டும் உடனடியாக மீனைத்தரும்படி எங்களுக்கு பின்னால் நின்று கொண்டு வற்புறுத்தினர்.
''பில்லு நம்பர் என்னம்மா?"
''90...தொண்ணூறு''
''அம்மாடி...நீ சோறை சாப்பிட்டுக்கிட்டே இரு...தர்றேன்...இப்ப தான் பில் நம்பர் 52 போய்க்கிட்டு இருக்கு''
''சீக்கிரங்க்கா....இன்னைக்கி பிரதோசம் கோயிலுக்கு போகணும்''
திரும்பி பார்த்த போது அதே ''அத்திம்பேர்'' ஆட்கள் தான்.
அக்கா சிரித்துக் கொண்டே ''புள்ளைக பிரதோசத்துக்கு பிரதோசம் தவறாம வந்துடும்'' என்றார்.
ஜலதோசம் தெரியும் இது என்ன பிரதோசம் என்று சக்திசிவகுமாரிடம் வினவினேன். அவரோ ''அது ஒரு சிறப்பு சிவ வழிபாடு, அதுவும் சனிப்ரதோசம் என்றால் கூடுதல் சிறப்பு'' என்றார்.
உடனே மதுரைக்காரனான எனக்கு மண்டைக்குள் சிந்தனை ஓடியது. சிவன் வழிபாடு..ம்ம்ம்..சிவனென்றால் அவரது மனைவி மீனாட்சி...மீனாட்சின்னா மீன் + ஆட்சி...மேக்சிமம் கவர் பண்ணிட்டேன்...அப்போ சரிதான்''
ஆவி பறக்கும் சோறுடன் சுந்தரி அக்காவின் கைவண்ணத்தில் உருவான மீன் குழம்பு சேர உண்பது ஒரு தனிசுகம். மீன் சோற்றை சுவைத்துக் கொண்டே பொரிக்கப்பட்ட வஞ்சிரம் வரக்காத்திருப்பது துன்பமான இன்பம்.  புளிப்பும் அதற்கு ஈடாக சரிவிகிதசமானமாக காரமும் கலந்த மீன் குழம்பு நாவில் பட்டதும் மூளை நம் புலன்கள் அனைத்திற்கும் மகிழ்ச்சியை மின்னஞ்சல் செய்யும்.  கண்ணுக்குள் சொர்க்கம் தெரியும். எனக்கு காலஞ்சென்ற என் தாயார் தெரிந்தார். வீட்டில் மிக்சி இருந்தாலும் அம்மா மீன் குழம்பிற்கு மசாலாவை அம்மியில் தான் அரைப்பார். உணவின் சுவையை கூட்டுவதில் அம்மிக்கல்லுக்கு அலாதியான பங்குண்டு என்பதை சுவைஞர்கள் மறுக்க மாட்டார்கள் என்றே எண்ணுகிறேன். தாயின் காலடியில் சொர்க்கத்தை காணலாம் என்பார் நபிகள் நாயகம் (சல்). சுந்தரி அக்காவின் மீன் சாப்பாட்டிலும் காணலாம் என்கிறேன் நான்.

அனைவருக்கும் மீன் குழம்பும் இறா வருவலும் வஞ்சிரமும் சமைத்துப் போடும் சுந்தரி அக்கா ஒரு சுத்த சைவம் என்பது இந்த நூற்றாண்டின் ஆகச்சிறந்த வியப்புகளின் ஒன்று. ''அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன் பெற்றான் பொருள்வைப் புழி'' பசியைத் தீர்த்தலே, அழித்தலே  அறம். செய்வது வணிகமாக இருப்பினும் சுந்தரி அக்கா செய்வது மாபெரும் அறம் என்பதில் எனக்கு ஐயப்பாடு துளியுமில்லை.
இந்த புத்தாண்டில் தமிழர் கடற்கரை சென்று சுந்தரி அக்கா விடும் பாய்ண்ட் டூ பாய்ண்ட் சர்வீசில் ஏறி சொர்க்கத்திற்கு சென்று வருவோம் என்று உறுதி பூணுமாறு வாசகர்களை வேண்டுகிறேன்.




Monday, December 18, 2017

செனெகல் - கோரே தீவு - மரணப்பாதை

செனெகல் - கோரே தீவு - மரணப்பாதை
----------------------------------------------------------------------------
எந்த நேரத்தில் நூராவின் தாய் நரகம் என்று சொன்னாரோ தெரியாது. ஆனால், ஐரோப்பிய சமூகத்தின் மீது தீராப்பழியாகவும் சாபத்தின் நிழலாகவும் நிரந்தரமாக நீடிக்கும் வடு அது என்பது அங்கே சென்ற பிறகு தான் புரிந்தது.
செனெகல் தலைநகர் டக்கார் துறைமுகத்திலிருந்து 2கி.மீ தூரமே எனினும் நடுவில் ஒரு போர்க்கப்பல் கவிழ்ந்து கிடப்பதால் சற்று தூரம் சுற்றி வந்து தீவில் பயணிகள் இறக்கிவிடப்படுவார்கள்.
கோரே தீவு ஒரு சிறிய தீவு. இன்று அங்கே எஞ்சி நிற்கும் சாட்சியங்கள் மனிதமனத்தின் கொடூர பக்கங்கள். ஆப்பிரிக்க தேசமெங்கும் கருப்பின மக்களை பிடித்து வந்து இங்கே தான் சங்கிலியால் பிணைத்து கட்டி வைப்பார்கள். ஒவ்வொரு அறையும் எட்டுக்கு எட்டு சதுர அடி அவ்வளவே. அதில் பன்னிரெண்டு ஆண்களை கைகளை பின்னால் வைத்து ஒரு இரும்புக்கழி கொண்டு கால்களோடு பிணைத்து சங்கிலியால் பூட்டி விடுவார்கள். பெண்களுக்கு ஒரே ஒரு சலுகை அவர்களுடைய அறையில் சிறு நீர் கழிக்க ஒரு குழி உண்டு. ஆண்களுக்கு அதுவும் இல்லை. இங்கு தான் உலகில் முதல்முதலாக பிளேக் என்னும் தொற்றுவியாதி பலநூறு மக்களை காவு வாங்கியது . சிறுவர்களும் இந்த அடிமை வியாபாரத்தில் உண்டு. அவர்களின் வயதுக்கேற்ற விலை. வயதை கண்டுபிடிக்க குழந்தைகளின் பற்களை கொண்டு கணக்கிடுவார்களாம்.
உள்ளே நுழைந்ததும் இருபுறமும் படிக்கட்டுக்கள் உள்ள மேல்த்தளத்திற்கு நூரா அழைத்து சென்றார். அது இன்று யுனெஸ்கோவின் பாதுகாப்பில் அருங்காட்சியமாக பராமரிக்கப்படுகிறது. அடிமைவியாபாரம் நடத்தியோர் பயன்படுத்திய சங்கிலி விலங்குகள், துப்பாக்கிகள் புகைப்படங்கள், பெயர் அட்டவணைகள் காணக்கிடைக்கின்றன.

படிக்கட்டின் கீழே தான் அடிமைகளுக்கான அறைகள். கப்பலிலிருந்து இறக்கப்பட்டதும் இங்கே தான் ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் வரை அடைத்து வைப்பார்கள். ''ப'' வடிவில் இருக்கும் அந்த பிராந்தியத்தில் வலதுபுறம் நான்கு அறைகள் ஆண்களுக்கு எதிர்த்திசையில் நான்கு அறைகள் பெண்களுக்கு. படிக்கட்டுகளின் கீழே செங்கோண முக்கோண வடிவில் இருப்பது தண்டனை அறை. நான்கு பேர் கூட இருக்க முடியாத அந்த அறையில் 10பேரை திணித்து மூடி விடுவார்கள். மறுநாள் திறக்கும் போது இரண்டு அல்லது மூன்று பேர் செத்து போயிருப்பார்கள். பிணங்களை அகற்றி விட்டு அடுத்த இரண்டு பேர்களை திணித்து விடுவார்கள். கண் முன்னே சகமனிதன் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை தழுவுவதையும், மரணித்த பின்னால் சடலத்தோடு இரவு முழுவதும் கழிப்பார்கள்.
தப்பிக்க முயற்சிக்கும் அடிமைகள் சுட்டுக்கொள்ளப்படுவார்கள். அவர்களை சுடுவதற்கு பிரத்யேக துப்பாக்கிகளும் அங்குண்டு. அவர்கள் விதவிதமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுவது வாடிக்கை. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார்கள். அதில் சிலர் கர்ப்பம் தரித்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் அடிமை என்ற விதியும் உண்டு. அடிமைகளாக விற்கப்படுவோர் செய்யும் வேலைக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. உணவும் சொற்ப உடையும் மட்டுமே. இன்று மேற்கு ஐரோப்பா மின்னுவதற்கு காரணம் கருப்பின மக்களின் வியர்வையும் ரத்தமுமே காரணம்.
1997ஆம் ஆண்டு இங்கே வருகை தந்த நெல்சன் மண்டேலா, தண்டனை அறையை பார்த்ததும் கதறி அழுததாக நூரா சொன்னார்.
மானுடம் கண்ட அந்த மாபெரும் போராளியையே நிலைகுலையச் செய்த இடம் கோரே தீவு. வெடித்து அழுத அந்த மனிதன் கேட்டார் ''என் மக்கள் செய்த பிழை என்ன...கருப்பாக பிறந்தது ஒரு குற்றமா...அது இயற்கையின் தேர்வல்லவா? அதற்கு இப்படி ஒரு தண்டனையா?'' இந்த கேள்விக்கு இப்போது விடை கண்டும் பயனில்லை.


அடிமைகளை இந்த அறைகளிலிருந்து பத்து நாட்கள் கழித்து வேறு அறைக்கு மாற்றுவார்கள். அங்கே நாற்பது நாட்கள் வைத்திருப்பார்கள். இந்த அறையின் கட்டுமானம் சற்று வித்தியாசமானது. இந்த அறைகள் இருபக்கமும் முனையில் குவிந்து கப்பலின் தோற்றத்தை ஒத்து இருக்கும். கப்பலில் நாற்பது நாட்கள் பயணத்திற்கு அடிமைகள் தாங்குகிறார்களா என்ற பரிசோதனையில் அடிமைகள் தேர்வாக வேண்டும். அவர்ககள் மட்டுமே கலிஃபோர்னியாவிற்கோ கியுபாவின் கரும்பு தோட்டத்திற்கோ அல்லது பிரேசிலுக்கோ அனுப்பப்படுவார்கள். யார் வாங்குகிறார்கள் என்பதை பொறுத்து அடிமைகள் பயணிக்கும் திசைகள் மாறும். போர்த்துகீசியர்கள் வாங்கினால் பிரேசிலுக்கும் ஸ்பானியர்கள் வாங்கினால் கியுபாவிற்கும் பயணிக்க நேரும்.


அடிமைகள் தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால் பெயர்கள் கண்டிப்பாக மாற்றப்படும். இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு பின் அவர்களுக்கு தங்களது வேர் தெரியாது அறுபட்டு போகும். இன்று அமெரிக்காவில் இருக்கும் கருப்பின மக்களுக்கு தங்கள் வேர் தெரியாது. இன்று ப்ரேசிலில் இருப்போருக்கும் கியுபாவில் இருப்போருக்கும் இதுவே நிலை.
அடிமை சந்தை பல்கி பெருகிய காலத்தில் இதை எதிர்த்து குரலும் எழுப்பப்பட்டது. ஐரோப்பா முழுக்க பல்வேறு கல்வியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் சிறு சலசலப்பை எழுப்பினார்கள். ஒலௌதா எகியுனோ, வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் போன்றோர் முக்கியமான நபர்கள்.
முதலாளித்துவத்திற்கு உதவ எப்போதுமே ஒரு படித்த சிந்தனையாளர் கூட்டம் இருக்கத்தானே செய்யும். இவர்களின் குரலை நசுக்க மிக முக்கியமான அறிவுசார் ஆராய்ச்சிகள் துவக்கப்பட்டன. அதில் நிறுவப்பட்ட துறைக்கு ஃப்ரெனாலஜி (தமிழில்: மண்டை ஓட்டியல்) என்று பெயர். கருப்பின மக்களை மனித இனத்தில் வைத்திருந்தால் தானே இந்த பிரச்சினை? அதனால் மண்டை ஓட்டியல் ஆராய்ச்சி வாயிலாக இவர்கள் பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கும் குரங்குக்கும் இடைப்பட்ட ஒரு இனம் என்று நிரூபிக்கும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரத் துவங்கின. ஆனால் மனித உரிமைப்போராளிகள் தொடர்ந்து போராடினர். ஆப்ரஹாம் லிங்கன் தனது உயிரை பலி கொடுத்தார். கடைசியாக மார்டின் லூதர் கிங் வரை பல உயிர்களை பலிகொடுத்தே மனிதனாக அங்கீகாரம் பெற்றனர். கால் நூற்றாண்டு விடுதலை கண்ட தென் ஆப்பிரிகாவில் இன்றும் சமூக அந்தஸ்து மிகப்பெரும் கேள்விக்குறியே. (செனெகல் பயணம் நிறைவு பெற்றது)






Saturday, December 16, 2017

கினியாவிலிருந்து செனெகல்....டக்காரை நோக்கி...! (2) 22-08-2017

வாழ்க்கை ஒரு அபத்தம் என்பார் ஃப்ரான்சிஸ் காஃப்கா. அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அது புரியும். கணவனின் சடலம் எதிரே இருக்க தன்னைச் சுற்றி நான்கு குழந்தைகள் அமர்ந்திருக்க ஆலியாவிற்கு என்ன செய்வதன்றே புரியவில்லை. மொழி தெரியாத தேசம். ஆலியாவிற்கும் அவரது குழந்தைகளுக்கும் தெரிந்த ஒரே மொழி அரபி. செனெகலில் யாரும் அரபி பேசமாட்டார்கள். யோலோஃப் என்னும் உள்ளூர் மொழியும் ஃப்ரென்ச் மொழியும் தான் பேசுவார்கள். அதுபோக பல்வேறு உள்ளூர் வழக்கு மொழிகளும் உண்டு. ஆனால் நூராவின் குடும்பத்திற்கு அரபி தவிர இவை அனைத்துமே அன்னிய மொழிகள் தான். இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய மீனவர்கள் உதவினார்கள். ஆனால் அடுத்து என்ன செய்வது என்று புரியாமல் விழித்த போது அங்கிருந்த மீனவ மக்கள் சந்தையில் கூலி வேலை கிடைக்கும் என்றும் ஆனால் அது நான்கு குழந்தைகள் கொண்ட குடும்பத்திற்கு போதுமானதாக இருக்காது என்றும் கூறினர். எனவே ஆலியா தனது மகனையும் உடன் அழைத்துச் செல்ல முடிவெடுத்தார். நூரா தனது ஒரு வயது தங்கையை கவனித்துக் கொள்வதாக ஏற்பாடு. கடின உழைப்பின் வாயிலாக கூலித்தொழிலாளியாக இருந்து  மீன் வியாபாரி ஆனார். மொத்த விற்பனையாளர் ஆனார். மகனுக்கு படகு வாங்கித் தந்தார். நூராவிற்கு ஏர்கபான் விமான நிறுவனத்தின் விமானியை திருமணம் செய்து வைத்தார். நூராவின் தங்கையை ஒரு பொறியாளருக்கு திருமணம் செய்து வைத்தார். வாழ்க்கை நன்றாக போய் கொண்டிருந்த போது ஆலியாவின் மகன்கள் சென்ற படகு புயலில் சிக்கி அவர்களின் உயிரைக் குடித்தது. நூராவின் கணவர் விபத்தில் சிக்கி இறந்து போனார். கணவர் இறந்த போது நூரா நிறைமாத கர்ப்பிணி. ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருந்த சூழலில் அந்த குடும்பத்தில் மீண்டும் இடி விழ ஆலியா நொறுங்கிப் போனார். இந்தமுறை ஆலியா குழந்தைகளைப் வீட்டிலிருந்தபடி கவனித்துக் கொள்ள நூரா புதிய தொழிலை துவக்கினார். அமெரிக்கா, ஐரோப்பாவிலிருந்து வந்திறங்கும் பழைய துணிகளை வாங்கி துவைத்து சந்தையில் விற்கும் தொழில் தான் அது. கண்டெயினர்களில் வந்திறங்கும் துணிகளை தரம் பிரித்து வாங்கி துவைத்து சந்தைக்கு கொண்டு போய் விற்க வேண்டும். ஆப்பிரிக்காவில் மக்கள் பயன்படுத்தும் துணிகள் பெரும்பான்மையானவை இவ்வாறு வருபவை தான். 

ஆலியா தன் பிள்ளைகளுடனும் பேரக்குழந்தைகளுடனும் தனது பூர்வீக நினைவுகளை தொடர்ந்து பகிர்ந்து கொண்டே இருந்தார். பாலஸ்தீனத்தின் தேசிய கவி மஹ்மூத் தர்வீஷின் கவிதைகளில் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. உணர்ச்சி பொங்க சொல்லிக்காட்டுவார். கவிதை அரபு மொழியில் இருந்தாலும் அதை சொல்லிக்காட்டும் போது சொற்களுக்குள் அவர் உணர்ச்சியை செலுத்தும் வேகமும் அதற்கு ஈடாக முகபாவமும் உடல் மொழியும் அவரது கணீரென்ற குரலும் இணைந்து உருவாக்கும் அனுபவ வெளிப்பாட்டை காணுவது அற்புதமான தருணங்கள். 

ஒருமுறை நான் அவரிடம் அவருடைய நீண்ட நாள் ஆசை எதுவெனக் கேட்டேன். 
''ஜேசீ...செனெகல் வந்து கிட்டத்தட்ட நாற்பத்தைந்து வருடங்கள் ஓடி விட்டன. என் வாழ்க்கை முடிவதற்குள் நான் வாழ்ந்த அல்-பிர்வா கிராமத்தையும் நான் வாழ்க்கைப்பட்ட பெயித் ஃபஜ்ஜாருக்கும் ஒருமுறை சென்று வர வேண்டும். எனது கணவர் முதல் பிரசவத்திற்கு நான் பிறந்த அல்-பிர்வா கிராமத்திற்கு அனுப்பவில்லை. இஸ்ரேலிய ராணுவம் எனது கிராமத்தை முற்றிலுமாக தரைமட்டமாக்கி விட்டது. பெயித் ஃபஜ்ஜாரில் எனது கணவரின் வீட்டில் தான் என் மகன் பிறந்தான். நூரா பிறந்தாள். மற்ற இரு குழந்தைகளும் அந்த சிறிய வீட்டில் தான் பிறந்தன. இறைவன் அந்த வாய்ப்பை கொடுப்பானா என்று தெரியவில்லை...உனக்கு ஒன்று தெரியுமா மஹ்மூத் தர்வீஷ் சொல்லுவார் ''வீடு என்பது நினைவுகளின்றி வேறில்லை''...உண்மை தானே...செங்கலும் மண்ணுமா வீடு?  வீடு என்பது மனிதர்களும் அவர்களின் அழிக்க முடியா ஞாபகங்களும் தானே....''
நான் ''உண்மை...மனிதர்கள் என்பவர்களே நினைவுகளின் தொகுப்பு தானே...யாசர் அராஃபத் மறைந்து விட்டார், அவருடன் இணைந்து போரிட்ட பல்வேறு வீரர்களின் உடல் இந்த மண்ணில் விழுந்து உரமாகி விட்டது...ஆனால் அவர்கள் நமது நினைவுகளின் ஊடே வாழத்தானே செய்கிறார்கள்'' என்றேன்.
''.இன்ஷா அல்லா என்றாவது ஒரு நாள் பூரண விடுதலை பெற்ற பாலஸ்தீனத்தில் பாதம் பதிக்க வேண்டும்....''
''உங்கள் விருப்பம் நிறைவேற எனது வாழ்த்துக்கள்...''
''நாளை ஞாயிற்றுகிழமை என்ன செய்யப்போகிறாய்?''
''நூராவுடன் கோரே தீவிற்கு செல்லலாம் என்று இருக்கிறேன்''
''போய்ப்பார்... மனிதமனத்தின் கோரப் பக்கங்களை அங்கே காணலாம்...இன்று மானுட விடுதலை பேசுவோரும் அதற்காக போராடுவோரும் ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய நரகம் அது...'' 
மறுநாள்  காலை 8மணிக்கு நூராவும் நானும் கோரே தீவிற்கு சென்றோம். (தொடரும்)

மூன்றாவது வழிபாட்டுப் பாடல்
               -மஹ்மூத் தர்வீஷ் 
எனது சொற்கள்
மண்ணாய் மணத்த நாளில்
கோதுமைத் தாள்களின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கொதித்துச் சீறிய நாளில்
இரும்புத் தளைகளின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கற்களாய் உறைந்த நாளில்
தழுவிச் செல்லும் ஓடையின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
கலகமாய்க் கிளர்ந்த நாளில்
நடுங்கும் நிலத்தின்
நண்பனாயிருந்தேன்.

எனது சொற்கள்
புளித்த ஆப்பிளாய் சுருங்கிய நாளில்
நம்பிக்கை தளரா உள்ளங்களின்
நண்பனாயிருந்தேன்.

ஆனால்
சொற்கள் தேனாய்ச் சுரந்த தருணத்தில்…
ஈக்கள் மொய்த்தன
என் உதடுகளில்!
(தமிழ் மொழிபெயர்ப்பு - எம்.ஏ.நுஃப்மான்)


Tuesday, December 12, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - செனெகல் (21-08-2017)

கினியாவிலிருந்து செனெகல்....டக்காரை நோக்கி...!
இயற்கைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. அவற்றில் அழகானது, அமைதியானது, கோரமானது, கொடூரமானது என்று பலவகை உண்டு. செனெகலின் தலைநகரான டக்கார் (Dakar) இயற்கையின் அழகான முகங்களில் ஒன்று. கினியாவின் தலைநகரான கொனாக்ரியிலிருந்து டக்கார் ஒரு மணி நேரப்பயணம். விமான நிலையம் வரும் வழியில் பெருமழை நகரத்தை திணறடித்துக் கொண்டிருந்தது. வழக்கமான போக்குவரத்து நெரிசலுடன் மழையும் சேர்ந்து கொள்ள நகரமே மூச்சு திணறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல 15கி.மீ தூரத்தை 2மணி நேரத்தில் கடந்து விமான நிலையம் வந்து ஏர்கோத்திவார் (ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த விமான நிறுவனம்) விமான கவுண்டரை அணுகி நுழைவுச்சீட்டு கேட்டேன். ஒரு நிமிடத்தில் முடியும் இந்த வேலை பதினைந்து நிமிடமாகியும் முடியவில்லை. கையில் போர்டிங் பாஸ் வந்த போது தான் எனக்கு காரணம் புரிந்தது. அது முழுக்க முழுக்க கையால் எழுதப்பட்டிருந்தது. உலகில் எந்தவொரு விமான நிறுவனமும் இப்படி போர்டிங் பாஸ் வழங்கி நான் பார்த்ததில்லை. காரணம் கேட்டபோது அந்த சிப்பந்தி ''இங்கே பிரிண்டர் கிடையாது சார்., எமிரேட்ஸ் கவுண்டரில் மட்டும் தான் இருக்கும்., நாங்கள் மதியம் சாப்பிடப்போகும் போது பயணிகளின் பெயர் பட்டியலை எடுத்துட்டு போயி எழுதி வச்சிடுவோம்., இன்னைக்கு அது முடியலை'' என்றார். அவர் மீது பரிதாபம் கொள்ள முடிந்ததே ஒழிய கோபம் கொள்ள முடியவில்லை.
கொனாக்ரிக்கும் டக்காருக்கும் இடையே அதிக தூரமில்லை. டக்கார் செல்ல விசா தேவையில்லை. யாரும் எப்போதும் செல்லலாம். புதிய ஜனாதிபதி மாக் கி சால் வந்தது முதல் இந்த எளிமையான ஏற்பாடு. விமான நிலையத்தில் வரவேற்க தோழி நூரா மிலேஹம் காத்திருந்தார். வாழ்க்கையில் நான் சந்தித்த எத்தனையோ பெண்களில் நூராவிற்கு ஒரு தனி இடம் உண்டு.  அவரது குடும்பம் பாலஸ்தீனத்தில் இருந்து குடிப்பெயர்ந்த ஒன்று. 1970களின் துவக்கத்தில் இஸ்ரேலில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் அராபியர்களை யூதப்படைகள் வேட்டையாடத் துவங்கிய ஒரு நள்ளிரவில் நூராவின் தந்தை தனது நான்கு குழந்தைகளுடன் தப்பி ஓடி வந்தார். நூராவின் தந்தை முகம்மது அபுபக்கர் ஒரு கட்டிட கூலித்தொழிலாளி. அப்போது நூராவிற்கு வயது ஐந்து. அவரது அண்ணனுக்கு வயது ஏழு. தம்பிக்கு வயது மூன்று. அடுத்ததாக ஒரு தங்கை ஒரு வயது. ஆசியாவும் ஆப்பிரிக்காவும் சந்திக்கும் சினாய் தீபகற்பத்திற்கு அடைக்கலம் புகுந்தார்.  சினாய் தீபகற்பத்தில் வேலை வாய்ப்புக்கள் சரியாக கிடைக்காத காரணத்தால் ஒரு மாதம் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. அங்கிருந்து அலெக்சாண்ரியாவில் ஒரு பணக்காரரின் வீட்டில் வீட்டு வேலை செய்ய நூராவின் தாய்க்கு வாய்ப்பு கிடைத்தது. நூராவின் தாய் ஆலியாவிற்கு தற்போது வயது 70. வயது முதிர்ச்சி காரணமாகவோ கடின உடல் உழைப்பு காரணமாகவோ மூட்டுகள் தேய்ந்து போய் அதிகம் நடமாட முடியாமல் இருக்கிறார். எனக்கு அவரை பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு அராபிய மகாராணியை பார்க்கும் பிரமை தோன்றும். இப்பொது முதுமையின் தடயங்கள் முகத்தில் தென்பட்டாலும் அவரது கண்களில் எப்போதும் ஒரு அமைதியும் கருணையும் தென்படும். ஒரு மூன்று மாதத்தில் அந்த பணக்கார முதலாளியின் நடவடிக்கைகளில் மாறுதல் தென்பட ஆரம்பித்தது. நூராவின் தந்தையை அடிக்கடி வெளியூருக்கு அனுப்பி விட்டு அந்த தனிமையில் நூராவின் தாயை அடைய முயற்சி செய்தார். இதை அறிந்த அந்த பணக்காரரின் மனைவி ஒரு நள்ளிரவில் குடும்பத்தை ஒரு சிறிய சரக்குக் கப்பலில் ஏற்றி தப்பிக்க வைத்தார். கைக்குழந்தையுடனும் பச்சிளங்குழந்தைகளுடனும் அந்த பெற்றோர் கப்பலேறினர். கையில் ஆறு ரொட்டி துண்டுகள். குடிப்பதற்கு குடிநீர். சிறிதளவு பணம். எங்கே அந்த கப்பல் போகிறது என்று யாருக்கும் தெரியாது. கோதுமை, உருளைக்கிழங்கு, வெங்காய மூட்டைகளுக்கு மத்தியில் அந்த ஆறு ஜீவன்கள் பயணப்பட்டன. நான் ஒருமுறை நூராவின் தாயாரிடன் கேட்டேன் ''எந்த தைரியத்தில் இம்மாதிரி பயணப்பட்டீர்கள்? பாலஸ்தீனத்தில் எங்காவது ஒளிந்து கொண்டு கலவரம் முடிந்தவுடன் சராசரி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாமே?''
ஆலியா சொன்னார் '' ஜேசீ கலவரம் எப்படி நடக்கும் என்று உனக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட பூமியில் பிறந்து வளர்ந்தவன் நீ. கலவரத்தை இஸ்ரேலிய யூத அரசு ஏன் நடத்தியது, இப்போதும் நடத்துகிறது என்று உனக்கு தெரியுமா? கலவரம் என்பது அவர்களுடைய ராணுவத்திற்கு பயிற்சி. ராணுவத்திற்கு உணர்ச்சிகள் மரத்து அற்றுப்போக வேண்டும். அவர்கள் உயிரின் வேதனையை நேரில் கண்டு பழக வேண்டும். பத்து முறை பார்த்தால் பதினோராவது முறை பதட்டம் வராது மாறாக துணிச்சல் வரும்.  உனக்கு ஒன்று சொல்லட்டுமா? பெரிய மைதானத்தில் ஐம்பது அடி நீளமுள்ள கூர்மையான முள்கம்பியை தொய்வின்றி கட்டுவார்கள். பிடித்துவைத்துள்ள மக்களில் சிறு குழந்தையை பெற்றவர்களிடமிருந்து பிடுங்குவார்கள். இருவர் குழந்தையின் கைகளை ஆளுக்கொன்றாக பிடித்துக்கொள்ள இருவர் குழந்தையின் கால்களை ஆளுக்கொன்றாக பிடித்துக்கொள்ள முள்கம்பியின் மத்தியில் குழந்தையில் உடலை அழுத்திய வண்ணம் நால்வரும் ஓடுவார்கள். பெற்றவர்கள் கண் முன்னாலேயே குழந்தை குடல் சரிந்து துடிதுடித்துச் சாகும். அவர்களுக்கு இது ஒரு பயிற்சி. உனக்கு அதைக்காண மனோதிடம் இருக்கிறதா? நூராவிற்கு இப்போது வயது ஐம்பது. இப்போது கூட அவளுக்கு தும்மல் வந்தாலே எனக்கு பதறுகிறது. அனைத்து பெற்றோர்களுக்குமே அப்படித்தானே? அது ஒரு சாபம். தன் கண் முன்னே பிள்ளைகளை துள்ளத்துடிக்க பறிகொடுப்பது...பெரும் சாபம்...வயது பெண்களோ அல்லது என்னை மாதிரி பல குழந்தைகளை பெற்ற தாய்மார்களோ கிடைத்தால் போதும் குதறி விடுவார்கள். பெற்றோர் முன்பாக பிள்ளைகளையும் கணவன் முன்பாக மனைவியையும்...ச்சே...நாங்கள் அந்த சாபக்கேட்டிலிருந்து தப்பிக்கவே பாலஸ்தீனத்திலிருந்து ஓடி வந்தோம்....இப்போது நினைத்தாலும் பதறுகிறது. எங்கள் நிலத்தில் நாங்கள் சிந்திய ரத்தமும் கண்ணீரும் கொஞ்ச நஞ்சமல்ல.''
நான் கேட்டேன் '' அந்த சூழலை எதிர்கொள்ளும் ஆற்றலை எங்கிருந்து பெற்றீர்கள்?''
காஸா எல்லைப்பகுதியிலிருந்து தப்பித்த போதும் பதினேழு நாட்கள் சரக்குக் கப்பலில் பயணித்த போதும் குரானின் ஹதீஸ்களை ஓதிக்கொண்டே இருந்தோம். பகலில் வெயிலில் குழந்தைகள் வியர்த்து மயங்கும். இரவில் பனியில் அவர்களது உடல்கள் நடுங்கும். உருளைக்கிழங்கு இருந்த சாக்குகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவோம். அது கொஞ்சம் கதகதப்பாக இருக்கும். கையில் இருந்த ஆறு ரொட்டித்துண்டுகளையும் மூட்டையிலிருந்த வெங்காயங்களையும் மட்டுமே உண்டோம். இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் கஷ்டப்பட்டோம். அலெக்சாண்டிரியாவிலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் மொராக்கோ தேசத்தை வந்தடைந்தது. அந்தக்கப்பலை செலுத்திய மாலுமிகள் எங்களை அங்கிருந்து மற்றுமொரு கப்பலில் ஏற்றிவிட்டார்கள். அவரகள் மிகவும் நல்ல மனிதர்கள். தங்களிடம் மீதமிருந்த உணவுப்பொருட்களையும் குடி நீரையும் சிறிது அமெரிக்க டாலர்களையும் கொடுத்துவிட்டு சென்றார்கள். அந்த கப்பல் செனிகல் தேசத்தின் டக்காரை வந்தடைந்த போது நூராவின் தந்தை மிகவும் பலவீனமாகி விட்டார். ஒருவழியாக பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டோம் என்று நிம்மதி பிறந்தது. டக்காருக்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு படகில் எங்களை இறக்கி விட்டார்கள். போதிய ஆவணங்கள் இல்லாததால் துறைமுகம் வழியாக நுழைய முடியாது. இறங்கி விட்டோம் ஆனால் எங்கே தங்குவது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஒரு மீனவக்குடியிருப்பில் உதவி கேட்டு போய் நின்றோம். கருணைமிக்க அவர்கள் எங்கள் நிலைமையைக் கண்டு மனமிறங்கி ஒரு தகரக் கொட்டகையையும் சில பாத்திரங்களையும் துணிமணிகளையும் கொடுத்து உதவினர். நூரா பெரிய மனுஷி ஆகும் வரை நான்கு குழந்தைகளுடன் நான் அங்கே தான் இருந்தேன்''
எனக்கு வியப்பாக இருந்தது. உடனே கேட்டேன். ''நான் என்றால் நூராவின் அப்பா எங்கே சென்றார்?''
பெருகி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் சொன்னார் ''டக்கார் வந்திறங்கிய முதல் நாள் எங்களை வீட்டில் அமர்த்திவிட்டு மீனவர்களுடன் கடலுக்கு சென்றவர் பத்தே நிமிடத்தின் சடலமாக திரும்பி வந்தார்''
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் எனது புலன்கள் செயலற்று போவதை நானே உணர்ந்தேன். மெதுவாக அவரது கரம் பற்றினேன் '' என்ன நடந்தது?''
''தெரியலை ஜேசீ...தெரியலை...இன்னவரைக்கும் தெரியலை...படகை கரையிலிருந்து கடலுக்குள் தள்ளுமாறு மீனவர்கள் பணிக்க அதிக அழுத்தம் கொடுத்து தள்ளியவரின் இதயம் நின்று போனது...எங்கள் வாழ்க்கையும் முடிந்து போனது'' (தொடரும்)