Monday, February 27, 2017

சுஜாதா நினைவாக... (சுஜாதா நினைவு நாள்: பிப்ருவரி 27)


எழுத்தாளர் சுஜாதாவை ஒரு அறிவியல் எழுத்தாளராக மட்டுமே சிறுவயதில் அறிந்திருந்த எனக்கு அவரது ''ஸ்ரீரங்கத்து தேவதைகள்'' ஒரு புதிய பிம்பத்தை தந்தது. சுவாரசியமான எழுத்தில் நகைச்சுவை இழையாட ஸ்ரீரங்கத்தை மிக நேர்த்தியாக படம் பிடித்து காட்டியிருந்தார். அவர் மூலமாகவே பிரபந்தத்தின் சுவையை அறிந்தேன். ஆண்டாளை காதலித்தது அவர் வழியாகவே. அவரை 31-12-2000 ஆண்டு மெரினா கடற்கரையில் காந்தி சிலை அருகே நானும் எனது நண்பர் வெங்கடேசனும் சந்தித்தோம். ஒரு 40 நிமிடம் உரையாடினோம். இடையிடையே ஆங்கிலத்தில் பேசிய எனது நண்பரை தமிழிலேயே பேசலாமே என்று அன்புடன் கடிந்து கொண்டார். நவீன இலக்கியத்தில் எனக்கிருந்த ஈடுபாட்டை வெகுவாக பாராட்டினார். பின் நவீனத்துவத்தை அதன் அடிப்படையோடு போதித்தார். வாசிப்பை பரவலாக்கம் செய்வதன் அவசியத்தை உணர்த்தினார். ''ஒரு நாளில் நீங்களும் எழுத்தாளராக பரிணாமம் பெறுவதற்கு சாத்தியம் நிறைய இருக்கிறது'' என்றார். அவரும் வெண்பா எழுதுவார். நானும் எழுதுவேன். அங்கேயே இரண்டு வெண்பாக்கள் நான் சொல்ல, அதை அவர் திருத்தினார். பசுமையான அந்த நினைவுகளின் ஊடே சிந்தித்து பார்க்கையில் நானும் இப்போது மூன்று கதைகள் எழுதி அவருடைய ஆரூடத்தை மெய்ப்பித்து விட்டேன். ஆனால் வாசிக்கத்தான் என் ஆதர்சனமான சுஜாதா என்னும் மிகப்பெரும் ஆளுமை இல்லை. 

No comments:

Post a Comment