Sunday, October 2, 2016

மேற்கு ஆப்பிரிக்கா - சென்னையிலிருந்து துபாய்! 03-10-2016


ஒழுங்கின்மைக்கும் ஏர்-இந்தியா நிறுவனத்திற்கும் என்ன ஜென்மபரியந்தமோ நானறியேன். வழக்கம் போல சென்னையிலிருந்து துபாய் செல்லும் விமானம் ஒரு மணி ஐம்பது நிமிடம் தாமதம். அதைவிடக் கொடுமை அவர்கள் பயன்படுத்தும் தகவல்தொழில் நுட்பம்.
கடந்த ரசியப்பயணத்தில் பாடம் பயின்ற நான், இந்த முறை குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாகவே விமான நிலையம் சென்றேன். நுழைவு சீட்டு வழங்கும் நபரிடம் எனக்கு கேமரூன் தேசத்தின் தலைநகரமான யாவுண்டே வரைக்குமான மற்ற இரு விமானங்களின் போர்டிங் பாஸ்களையும் வழங்குமாறு வேண்டினேன். அவரோ பரிதாபமாக என்னை நோக்கி '' சார்., என்னோட சிஸ்டத்திலிருந்து கென்யா ஏர்வேஸ் கனெக்ட் ஆக மாட்டேங்குது சார்...சாரி சார்..." நீங்க துபாய் ஏர்போர்ட்ல போயி வாங்கிக்கங்க சார்...ப்ளீஸ் சார்...உங்க பேக்கேஜை யாவுன்டே வரைக்கும் புக் பண்ணிட்டேன் சார்'' என்றார். அவரை குறைகூறி பிரயோஜனம் இல்லை. பாவம் அந்த சிப்பந்தி.
விமான நிலையத்தில் கும்பகோணத்து நண்பர் அறிமுகமானார். ரயில் சினேகம் மாதிரி இது விமான சினேகம். முதல்முறையாக துபாய் செல்லுவதாகவும் அங்கே சைவ உணவுகள் எங்கே கிடைக்கும் என்பதை என்னிடம் கேட்டறிந்தார். தமிழ் பற்றாளரான அவருடன் பேசியதில் காத்திருப்பின் அவஸ்தை குறைந்தது. என்ன ஒரே ஒரு குறை என்றால் அழகான பெண்கள் யாராவது எங்களைக் கடந்தால் அவரது சிந்தனை தப்பிவிடும். மீண்டும் சிந்தனை ரதம் தடத்திற்கு வர நேரம் பிடிக்கும். தீவிர வைணவரான அவர் கும்பகோணத்தை சுற்றியுள்ள பிரசித்த பெற்ற கோயில்களை எடுத்துரைத்தார்.
பேச்சின் நடுவே கேட்டார்.''சார்...உங்களுக்கு பிரபந்தம் தெரியுமா?''
''எதை சொல்றீங்க....நாலாயிர திவ்ய பிரபந்தத்தை சொல்றீங்களா?''
''ஆமாம் சார்...படிச்சு பாருங்க சார்...உங்களுக்குத்தான் இந்த மாதிரி சும்மா ஒக்காந்திருக்கிற நேரம் நிறைய கிடைக்குமே...!''
''உண்மை தான்...நான் கொஞ்சம் போல படிச்சிருக்கேன்....!''
''அப்படியா...ஒங்களுக்கு பிடிச்ச ஆழ்வார் யார் சார்?''
''மொதல்ல இந்த சாரை நிறுத்துங்க சார்...உங்களை விட வயசுல நான் ரொம்ப சின்னவன்....எனக்கு பிடிச்சது ஆண்டாள் அந்தம்மா ஆழ்வார் வரிசையில வர்றாங்களான்னு எனக்கு தெரியாது....அடுத்து நம்மாழ்வார் பிடிக்கும்....!
''உங்களுக்கு நம்மாழ்வார் பாசுரத்துல எது பிடிக்கும்?"
யோசிக்காமல் உதிர்த்தேன்.
''புண்ணியம் செய்து நல்ல புனலொடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப் பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்தபுரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்''
''இதுக்கு என்ன அர்த்தம்னு தெரியுமா...?''
மிக்க கவனத்துடன் அவர் சாரை தவிர்த்ததை நான் ரசித்தேன்.
''நீ என்னதான் பூ போட்டு பெருமாளை அர்ச்சனை/பூஜை செய்தாலும் புண்ணியம் செய்யலைன்னா...மகனே நீ காலிடா அப்படின்னு நம்மாழ்வார் சொல்றாரு..."
''ஏன் நல்லாதான பேசிக்கிட்டு இருந்தீங்க...திடீர்னு என்ன ஆச்சு?''
''இந்த பாசுரத்திற்கு இது தானே பொருள்...நான் ஏதும் தப்பா சொல்லிட்டேனா...?''
''அப்படி இல்ல...பூமியில் பூக்கும் எல்லா மலர்களும் பெருமாளை வந்து சேர்வதில்லை, புண்ணியம் செய்த மலர்கள் மட்டுமே பத்மனாபம் பாதங்களை வந்தடைகின்றன...அந்த பாதத்தை சேவித்தால் மறு பிறப்பு என்பதே இல்லை...அப்படிங்கறாரு நம்மாழ்வார்...''
''ஓகோ..இனிமே சரி பண்ணிக்கிறேங்க...எனக்கு இந்த பாட்டின் சந்தம் ரொம்ப பிடிக்கும்...அதனால ஒருமுறை படித்தவுடனேயே ஒட்டிக்கொண்டு விட்டது...இல்லேன்னா ஆண்டாள் தான் என்னோட ஃஃபேவரிட்...''
''தெரியும்...பெண்களில் கவிதையில் காமத்தை வழியவிட்டதால் ஆண்டாளை நிறைய பேருக்கு பிடிக்கும்''
''தவறு...ஆண்டாளின் பாசுரங்களில் உள்ள சாஃப்ட் போர்னோவிற்காக நான் ரசிக்கவில்லை...மாறாக எனக்குத் தெரிந்து ஆண்டாள் தான் முதல்முதலாக எலமெண்ட் 'ஆஃப் க்யூரியாசிட்டியை தனது கவிதைகளில் தந்தாள் என்பது எனது அனுமானம்''
''இது புதுசா இருக்கே...எப்படி...எப்படி சொல்றீங்க....?''
''கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ...செம்பவள வாய்தான் தித்திருக்குமோ'' அப்படின்னு சொல்லும் போது வார்த்தைகளில் தொக்கி நிற்கும் ''ஓ'' ஒரு சாதாரண வெளிப்பாடு அல்ல. படிக்கிறவனுக்கு ஆண்டாளின் சிந்தனையோடு அவனும் சேர்ந்து பயணிக்க அளிக்கப்படும் வெளி...உங்களுக்கு புரியக்கூடிய எளிய தமிழில் சொல்வதாக இருந்தால் ஸ்பேஸ்....கம்பன் சீதையை சூர்ப்பனகை வர்ணிப்பதாக காட்டும் பாடலில் சீதையின் அழகை ஒரு முற்றுமுடிவான உவமையாக காட்டி கடைசியில் தான் பிரமிப்பை உண்டு பண்ணுவான்...ஆண்டாள் அப்படி அல்ல...ஒவ்வொரு வார்த்தையிலும் உண்டாக்குவாள்..."
''கம்பனோட எந்த பாடலை சொல்றீங்க?''
'வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,
பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,
சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ?
"நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!
அப்படின்னு வர்ணிச்சிட்டே போயி கடைசியில ''சொல் ஒக்கும் பொருள் ஒவ்வாதால்; சொல்லல் ஆம் உவமை உண்டோ?
அப்படின்னு முடிப்பான்'' எல்லாமே அவனே முடிவு பண்ணி இது இது இப்படி இருந்துச்சி அப்படிங்கறதுல கிக்கே இல்ல சார்?
இது அப்படி இருக்குமோ அது அப்படி இருக்குமோ அப்படின்னு ஏங்க வைக்கும் ஆண்டாள் தான் எனக்கு பிடிக்கும்''
''நல்லா பேசுறீங்க...'நீங்க சொல்ற கம்பனின் பாடல் பற்றி எனக்கு ஐடியா இல்லை
விமானத்திற்கான அழைப்பு வர இருவரும் விமானத்தின் உள்ளே நுழைந்தோம்.
இது மாதிரியான ஆகப் பாடாவதியான விமான சேவையை நான் பார்த்ததே இல்லை. நான் அமர்ந்த இருக்கை அமர்ந்த உடனேயே பின்னால் சாய்ந்தது. பின்னால் இருந்த நண்பர் கோபமாக '' சார்...டேக் ஆஃப் ஆன பின்னாடி சாய்ங்க..சார்'' என்றார்.
நானோ '' ஏங்க நான் என்ன வேணும்னா சாய்றேன்...பின்னால அதுவா போகுதுங்க''
உணவு பரிமாற பட்டது. ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்லை.
ஏர்-இந்தியா நிறுவன இயக்குனருக்கு இரண்டு கோரிக்கைகளை வைக்க உத்தேசித்திருக்கிறேன்.
ஒன்று நேரம் தவறாமையை கடைபிடியுங்கள்; இரண்டாவதாக இருக்கைகளை சரி செய்யுங்கள். துணைக் கோரிக்கையாக கருநீல கால்ச்சட்டை அணியும் பணிப்பெண்களை வெள்ளை உள்ளாடை அணியக்கூடாது என்று அறிவுறுத்துங்கள். கும்பகோணத்து மாமா ரொம்ப கஷ்டப்பட்டார்.

(03/10/2016 அன்று துபாய் சர்வதேச விமான நிலையத்திலிருந்து)



No comments:

Post a Comment