Tuesday, November 15, 2016

கருப்பு பணம் - வங்கி அனுபவம்:



மோடி புதிய இந்தியாவை படைக்கும் பொருட்டு கருப்பு பணத்தை ஒழிக்கும் விதமாக 500/1000 ரூபாய் தாள்களை மதிப்பிழக்க செய்ததன் விளைவு என் மனைவி எனக்குத் தெரியாமல் பதுக்கி வைத்திருந்த கருப்புப் பணமான சுமார் 4000 ரூபாய் 8 ஐநூறு தாள்களாக வெளிப்பட்டது. அதை மாற்ற வேண்டி என் வங்கியின்  போரூர் கிளைக்கு ஞாயிற்றுக் கிழமை சென்றேன். என்னை முதலில் வங்கியில் பாதுகாவலர் வரவேற்று உள்ளே அமர வைத்தார். என்னைக் கண்ட வங்கி மேலாளர் உடனடியாக ஓடி வந்தார். மற்ற ஆண் / பெண் பணியாளர்களும் என்னை சுற்றி வளைத்து என் தேவையை கேட்டறிந்தனர்.
நல்ல நறுமணம் கமழும் ஒரு பெண் அதிகாரி நான் என்ன பழரசம் விரும்பி அருந்துவேன் எனக் கேட்டார்.
நான் '' எந்த பழத்தையும் அப்படியே சாப்பிடுவதே எனக்கு பழக்கம்...இருந்தாலும் உங்களைப் போன்ற அழகான பெண்கள் பழரசம் தரும் போது அதை மறுக்கும் மனோதிடம் எனக்கு இல்லை'' என்றேன். அவர் வெட்கப்பட்டுக் கொண்டே ''மாதுளை பழரசம் அருந்துங்களேன்'' என்றார்.
உடனே வங்கி மேலாளர் '' ஒரு பொம்க்ரேனேட் ஜூஸ்'' என்று வங்கி அலுவலக உதவியாளரை பணித்தார்.
இருபுறமும் பெண் அதிகாரிகள் என்னை பரிவோடு கவனித்துக் கொள்ள மேலாளர் என்னிடம் சில படிவங்களில் கையெழுத்து வாங்கினார்.
பழரசம் வந்தது. அருந்த துவங்கினேன். இருபுறம் அழகான பெண்கள் இருக்கும் போது ஏற்படும் பதட்டத்தில் கையில் இருந்த குவளையில் இருந்து பழரசம் கொஞ்சம் அலும்பி சட்டையில் சிந்தியது. பதறிய இரு பெண்களும் தங்களது சுடிதாரின் சால்வையால் சுத்தம் செய்து ''இப்படியா...சிறுபிள்ளை மாதிரி குடிப்பது...ஏன் இந்த நடுக்கம்? வங்கி மிகவும் குளிராக இருக்கிறதா?....சி.யை சிறிது குறைக்க சொல்லட்டுமா?'' என்றனர். ''இல்லை...தேவையில்ல...'' என்றேன்.
வங்கி மேலாளர் ''இதோ உங்கள் பணத்திற்கு இணையான புதிய ரூபாய் தாள்கள்''
இரண்டு 2000 ரூபாய் தாள்களை தந்து எனது வாகனம் வரை அவரும் பெண் பணியாளர்களும் வந்து வழியனுப்பி வைத்தனர்.
இப்படி தேசம் சுபிட்சமாக இருக்கையில் கூப்பாடு போடுகிறார்கள் தேச துரோகிகள்...!

No comments:

Post a Comment