Thursday, January 17, 2019

விஞ்ஞானப் பயணம் - வெனிஸ் நகரத்திலிருந்து (2)


வெனிஸ் விமான நிலையத்திலிருந்து பதூவா நகரம் 63கி.மீ தூரத்தில் அமைந்திருந்தது. நாங்கள் அபேனோ க்ராண்ட் விடுதிக்குள் நுழைந்ததும் எங்களை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஓடோடி வந்து வரவேற்றார். லாரா நேரி என்பது அம்மையாரின் திருநாமம். எங்களைக் கண்டதும் ''உங்களோட வாட்சப் நம்பருக்கு தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருந்தேன்...நீங்கள் ஏன் எடுக்கவில்லை அப்புறம் மெயில் கூட அனுப்பிச்சேன்...பாத்தீங்களா?'' என்றார் அப்பாவியாக.  மரியா கடுப்பில் இருந்தாள். ''17 நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் வரும் போது இம்மாதிரி சில சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும்...நாங்கள் தான் பொறுத்துக் கொள்ளவேண்டும்...எங்களுக்கு ஒரு பிரச்சினையும் இல்லை....'' என்றேன்.



அன்றைய இரவு, விருந்தினர் அனைவருக்கும் சிறப்பு இரவு உணவு அளிக்கப்பட்டது. எதிலும் காரமும் இல்லை உப்புமில்லை. காரம் என்றால் அவர்களுக்கு தெரிந்தது மிளகு மட்டும் தான். நான் அவித்த மீனும் ரொட்டித்துண்டுகளும் பழங்களும் சாப்பிட்டேன். இயேசுவின் ரத்தம் ஆறாக ஓடியது. மேற்கு ஐரோப்பாவில் குறிப்பாக ஃப்ரான்சு மற்றும் இத்தாலியினருக்கு ஒயின் என்பது உணவின் ஒரு பகுதி. நம் மக்கள் மது அருந்துவது போன்று அவர்கள் அருந்துவதில்லை. போதையில் நினைவிழந்து சாலையில் விழுந்து கிடப்பதில்லை. எனவே மது அருந்துதல் அங்கே நம்மூரைப் போல ஒரு சமூகபிரச்சினையே இல்லை.



திருமதி. லாரா நேரி மறுநாளுக்கான செயல்திட்டத்தை விவரித்தார். காலை இத்தாலி வணிகர் பேரவை தரும் வரவேற்பைத் தொடர்ந்து பதோவா பல்கலைக்கழகம் மற்றும் பதோவா தாவரவியல் பூங்கா ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மறுநாள் காலை சிற்றுண்டியை முடித்து விட்டு வணிகர் சங்கம் சென்று வரவேற்பு மற்றும் அறிமுககூட்டத்தை முடித்து விட்டு பதோவா பல்கலைகழகம் சென்றோம்.

இங்கே தான் 18 ஆண்டு காலம் கணிதவியல் துறையின் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் கலிலியோ இருந்தார். அவரை ஒரு இயற்பியலாளர் என்று இதுகாறும் கருதிக்கொண்டிருந்த எங்களுக்கு இந்த செய்தி வியப்பை ஏற்படுத்தியது. கலிலியோ அடிப்படையில் கணிதமேதை. அதையும் தாண்டி அவருக்கு வானியல் மற்றும் இயற்பியலில் மிதமிஞ்சிய ஆர்வம் இருந்தது. பைசா நகரத்தில் இருக்கும் சாய்ந்த கோபுரத்தில் அவர் நிகழ்த்திய இறகு நாணய சோதனை பிரசித்தி பெற்ற ஒன்று. புவி பொருட்கள் மீது செலுத்தும் விசை மாறாதது எனவே அது ஒரு மாறிலி என்றும் கண்டறிந்தார். ஆனால் அதை பரிசோதனை வாயிலாக நிரூபித்த அவர் கணித ரீதியாக நிரூபிக்கும் முன் மரணடந்தார். அவர் மரணமடைந்த ஆண்டு ஐசக் நியூட்டன் பிறந்தார். அவரே புவி ஈர்ப்பு விசையை கணித சமன்பாடு வாயிலாக புவி ஈர்ப்பு மாறிலியை நிறுவினார்.  வெற்றிடத்தில் இறகும் இரும்புக்குண்டும் ஒரே அளவில் ஈர்க்கப்படுகின்றன என்பதை யூட்யூபில் இன்றும் காணலாம்.

https://www.youtube.com/watch?v=QyeF-_QPSbk


கலிலியோ பற்றி பல்வேறு விதமான சித்திரங்கள் அங்கே கிடைத்தன. பல்கலைக்கழகத்தில் மிக அதிக ஊழியம் பெற்ற பேராசிரியர் அவர் தான். ஆள் நல்ல குள்ளம் மற்றும் மாபெரும் கஞ்சன். கலிலியோ வகுப்பெடுக்கும் வளாகம் சதுர வடிவ தரைத்தளமும் அதன் விதானங்கள் சுற்றுச்சுவரிலிருந்து மையத்தை நோக்கி எழும்பும் கூம்பு வடிவமும் கொண்டவை.

வகுப்பின் மையத்திலிருந்து வாயில் வரை படிக்கட்டு பாணியில் கீழிருந்து மேலாக இருக்கைகள் அமைக்கப்பட்டிருக்கும். எனவே இறுதி வரிசை மாணவர்கள் கலிலியோவின் குரலை கேட்க முடியுமே தவிர அவரை பார்க்க முடியாது. எனவே அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கலிலியோவிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர். அதாவது, வகுப்பின் நடுவே மரத்தாலான மேடை ஒன்றை அமைப்பது, அதன் மீதேறி அவர் பாடம் எடுத்தால் அனைவரும் அவரை நன்கு கவனிக்கமுடியும் என்றனர். கலிலியோ ''நல்ல யோசனை...உடனே செயல்படுத்துங்கள்....ஆனால் என்னிடம் காசு எதுவும் கேட்கக்கூடாது'' என்றபடி நடையைக் கட்டினார். மாணவர்கள் நிதி திரட்டி மேடை அமைத்து தந்தனர்.



கலிலியோ வகுப்பில் கணிதம் கற்பித்துவிட்டு ஓய்வு நேரத்தில் வானியல் ஆராய்ச்சியிலும் இயற்பியல் ஆராய்ச்சியிலும் கவனம் செலுத்தினார். அவருக்கு ஒரு வித்தியாசமான குணம் இருந்தது. வாழ்வியல் சம்பவங்களைக்கூட ஒரு கணிதசமன்பாடாக மாற்றி சமன் செய்தால் தான் அன்றிரவு தூக்கம் வரும். வேலைக்காரன் வராவிட்டால் கூட அதை ஒரு நிகழ்தகவு தத்துவத்தின் (Probability Theory) அடிப்படையில் சமன்பாடாக மாற்றி விடுவார். (இது பற்றி தெரியாத வாசகர்கள் வீட்டுக்கு அருகாமையில் இருக்கும் கணித / இயற்பியல் மாணவர்களை அணுகலாம். பையன் பதில் சொன்னால் ஒழுங்காக கல்லூரிக்கு போய் படிக்கிறான்னு அர்த்தம். இல்லைனா கட் அடிச்சுட்டு ஊர் சுத்துறான்னு அர்த்தம்) அப்படிப்பட்ட மனிதனுக்கு டாலமியின் புவிமையக்கொள்கையின் பால் பல்வேறு சந்தேகங்கள் இருந்தன. நிலவு தேய்வதும், வளர்வதும், கிரகணத்தின் போது காணக்கிடைக்கும் பூமியின் நிழல், சந்திரனின் நிழல், பூமிக்கும் சந்திரனுக்குமிடையே உள்ள தூரம் (சூரியனுக்கும் பூமிக்குமிடையேயான தூரத்தை அவருக்கு முன்பே க்ரேக்கர்கள் பாரலாக்ஸ் முறைப்படி அளந்திருந்தனர்) இந்த தரவுகளின் அடிப்படையில் கலிலியோ சமன்பாடுகளை உருவாக்க அவை இடிபட்டன. ஆனால், அவர் சூரியனை மையத்திற்கு தள்ளி பூமியை சுற்றுப்பாதைக்கு கொண்டு வந்து கணக்கிடும் போது சமன்பாடுகள் சமனிலை அடைந்தன. இதைக் கண்ட கலிலியோ தனது ஆராய்ச்சியை தீவிரப்படுத்த அன்றைய கத்தோலிக்க மதம் அதிர்ந்து போனது.

இறைவன் படைத்த உலகில் பூமியே மையத்தில் இருக்க, சூரியன் அதை சுற்றி வருகிறது. அதை மாற்ற அற்ப மானுடனான ஒருவன் முற்படுவதா? அதை திருச்சபை அனுமதிப்பதா? திருச்சபையின் தலைவர் போப்பாண்டவர் கலிலியோவை அழைத்துவர செய்தார். விசாரணை துவங்கியது.

''என்ன தம்பி....உடம்பு எப்படி இருக்கு....ம்ம்...ஏதோ சூரியன் தான் நடுவில் இருக்கு...பூமி அதை சுற்றி வருதுன்னு...பசங்களுக்கு பாடம் நடத்துறியாமே...உண்மையா?'' என்று அன்பொழுக கேட்டார்.

மிரண்டு போன கலிலியோ '''ஐயா...அப்பிடி ஒண்ணுமில்லீங்க....ஆண்டவர் இப்படி படைச்சிருக்காரே...அதுக்கு பதிலா சூரியனை நடுவுல வச்சிருந்தா எப்படி இருக்கும்னு பசங்க கேட்டாய்ங்க....அப்படி இருக்குற மாதிரி கற்பனை பண்ணி வியாசம் எழுதச்சொல்லி வீட்டுப்பாடம் கொடுத்தேன்...அம்புட்டுதான் ஆண்டவரே...'' என்றார்.

''பாத்து தம்பி...மண்டை பத்திரம்'' என்று கருணையோடு அனுப்பி வைத்தார் போப்பாண்டவர்.

ஒரு விஞ்ஞானிக்கே உண்டான தேடலும் தாகமும் கொண்ட கலிலியோ தொடர்ந்து தனது ஆராய்ச்சியில் முனைப்போடு செயல்பட்டு உண்மையை கணித ரீதியாக நிரூபணம் செய்தார். மாணவர்களோடு ஒரு விதமான தயக்கத்துடனே பகிர்ந்து கொண்டார்.

இந்தமுறை போப்பாண்டவர் அழைத்து விசாரணையை தனது அடியாட்களோடு வேறுவிதமாக நடத்தினார்.

தலைகீழாக தொங்கவிடப்பட்ட கலிலியோவின் உடலில் போப்பாண்டவரின் அடியாட்கள் சில பயிற்சிகளை மேற்கொண்டனர்.

கலிலியோ இறுதியாக ஒரு முடிவிற்கு வந்தார். இப்போது சமயோசிதமாக செயல்பட்டு இங்கேயிருந்து தப்பிக்க வேண்டும். உயிர் பிழைத்தால் உண்மையும் பிழைக்கும். எனவே, போப்பிடம் ஒரு வேண்டுகோள் விடுத்தார். பூமியே மையப்புள்ளி என்றும் சூரியனே பூமியை சுற்றி வருகிறது என்றும் தாம் ஒப்புக்கொள்வதாகவும் தனக்கு தலைசுற்றுவதால் இப்போதே விடுவிக்கும்படியும் வேண்டினார். ''மகனே அப்படி வா வழிக்கு ஆராய்ச்சியா பண்ற ஆராய்ச்சி...ஆண்டவர் படைப்பையே ஆராய்ச்சி பண்றியா....இனிமே இந்த மாதிரி கத்தோலிக்க நம்பிக்கைக்கு மாறாக பேசினா நான் போப்பாகவே இருக்க மாட்டேன்....நாஸ்தியாயிடுவே....ஓடுறா...'''என்று விரட்டினார் போப்.

கலிலியோ அன்றிரவு ஆராய்ச்சி குறிப்புக்களை படியெடுத்து தனது மாணவர்களில் நான்கு பேரை தேர்ந்தெடுத்து  திசைக்கொருவராக அண்டை நாட்டு ஆசிரியர்களிடம் சேர்ப்பிக்கும்படி அனுப்பி வைத்தார். அவ்வாறு தப்பித்த ஆராய்ச்சி குறிப்புகள் தான் இன்று நமக்கு கிடைக்கின்றன.

ஆனால் அதே காலகட்டத்தில் கலிலியோ போன்று தலைவணங்காமல் கத்தோலிக்க திருச்சபையை தனது அறிவாயுதத்தால் எதிர்த்த அறிவியலாளரும் இருந்தார். அந்த விஞ்ஞானியின் பெயர் ''புருனோ''.



கலிலியோவை விசாரித்ததை போன்றே புருனோவையும் விசாரித்தார். புருனோ மசியவில்லை. தான் கண்ட உண்மையை மாற்றி உரைக்க முடியாது என்று பிடிவாதமாக மறுத்தார். இறுதியாக போப்பாண்டவர் இவ்வாறாக தீர்ப்பெழுதினார் ''புருனோ, கத்தோலிக்க நம்பிக்கைகளுக்கு எதிராக பேசுகிறான் எனவே மரண தண்டனை விதிக்கிறேன்''.

புருனோ உயிரோடு எரித்துக் கொள்ளப்பட்டார். ஆனால் உண்மையை எரிக்க முடியுமா? எந்த தெருமுனையில் வைத்து புருனோ எரித்துக் கொள்ளப்பட்டாரோ அதே இடத்தில் அவர் சிலையாக இன்றைய தலைமுறைக்கு சத்தியத்தின் சாட்சியாக தலை நிமிர்ந்து நின்று கொண்டிருக்கிறார். கத்தோலிக்க திருச்சபை உண்மையின் முன்னால் தலைகவிழ்ந்து நின்று கொண்டிருக்கிறது. சத்தியத்திற்கு ஏது சாவு?

(தொடரும்)


1 comment: