செப்டம்பர் மாதத்தின் மூன்றாம் வாரம் எங்கள் நிர்வாக இயக்குனர் என்னை அழைத்து
''நவம்பர் 11ஆம் தேதியிலிருந்து 17ஆம் தேதி வரை இத்தாலி போக வேண்டியிருக்கும். போய்ட்டு
வந்துடு'' என்று சொல்லிவிட்டு எனது பதிலுக்குக் கூட காத்திராமல் இணைப்பை துண்டித்தார்.
அவருக்கு தெரியும் ''சார்., நவம்பர் 11ஆம் தேதி எனக்கு தலைவலி சார் ... அதனால இரண்டு
நாள் லீவு வேணும் சார்'' என்று நான் கேட்டுவிடும் அபாயம் இருப்பதை முன் கூட்டியே உணர்ந்த
அவர் உத்தரவை மட்டும் பிறப்பித்து விட்டு தகவல் தொடர்பை துண்டித்தார்.
உறவினர்கள் தகவல் கேள்விப்பட்டதும்
''கழுதை கெட்டா குட்டிச்சுவரு'' என்று ஒதுங்கினார்கள். நண்பர்களில் சிலர் பெருமை
கொண்டார்கள். காரணம் அழைத்தது இத்தாலியின் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும்
இத்தாலி வணிக முகவாண்மை. பயணத்திட்டத்தின் முதன்மைக்கூறு அங்கிருக்கும் பதுவா பல்கலைக்கழகத்திற்கும்
அதன் கீழ் இயங்கும் மூலக்கூறு வேதியியல் தொழிட்நுட்பக்கழகத்திற்கும், வெனிஸ் புற்று
நோய் ஆய்வு நிறுவனத்திற்கும் சென்று வரவேண்டும். இதுவே பயணத்தின் சிறப்பம்சம். இந்தியாவில்
இருக்கும் இரண்டு நிறுவனங்களுக்குத்தான் அழைப்பு. அதில் ஒன்று எங்கள் நிறுவனம்.
நண்பர்கள் சிலர் குழம்பினார்கள்.
''இவனுக்கும் பல்கலைகழகத்திற்கும் என்ன சார் சம்பந்தம்?''
''அட அதை விடுங்க சார்...பல்கலைகழகம் ரெண்டாவது...முதல்ல அறிவுக்கும் இவனுக்கும்
என்ன சம்பந்தம்? மைசூர் போண்டாவில் கூட ஒரு மாதிரியா மைசூரை கண்டு பிடிச்சிடலாம் சார்...இவன்கிட்ட
அறிவின் சாயல்னு துளியும் கிடையாதே....என்ன கொடுமை இது?''
குழம்பியவர்கள் அவரவர் பொருளாதார வலிமைக்கேற்ப வெளிநாடு மற்றும் ராணுவ சரக்குகளிடமும்
ஒன்றுமில்லாதவர்கள் டாஸ்மாக் நோக்கியும் விரைந்தனர்.
இதைப் பற்றி துளியும் அக்கறை இல்லாத நான் இத்தாலிக்கும் தமிழனான எனக்கும் உள்ள
வரலாற்று தொடர்பை ஆராய முனைந்தேன்.
இதற்கிடையில் இத்தாலிய அரசு எனக்கும் பயணச்சீட்டு, ஐந்து நட்சத்திர விடுதியில்
முன்பதிவு என பல ஏற்பாடுகளை விரைந்து செய்து முடித்துவிட்டது.
இத்தாலிக்கும் தமிழர்களான நமக்கும் பன்னெடுங்கால தொடர்பு உண்டு. இன்றைய இத்தாலி
அன்று இல்லை. இன்றைய இத்தாலியின் ஒரு பகுதி வெனிஸ் பேரரசாகவும் மற்றொரு பகுதி ரோமப்பேரரசின்
கீழும் இருந்தது. ரோமாபுரியிலிருந்து வந்து பாண்டிய நாட்டின் முத்து, பவளம், பட்டாடைகள்,
மிளகு, தேன் போன்றவற்றை வாங்கி வணிகம் செய்து வந்துள்ளனர். சங்க இலக்கியத்தில் யவனர்கள்
என்று குறிப்பிடப்படுவது ரோமாபுரிவாழ் வணிகர்களைத்தான். ரோமிலிருந்து துருக்கி வழியாக
ஐரோப்பாவை கடந்து அரேபியா பின்பு அங்கிருந்து தமிழகம் வந்து வணிகம் செய்துள்ளனர் என்று
ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மதுரை உறங்கா நகரமாக இயங்கியது. தேனை அதிகமாக உற்பத்தி செய்யும்
கேந்திரங்களில் மதுரையும் ஒன்று. மதுரைக்கு மதுரை என்று பெயர் வரக்காரணமும் அதுவே.
மது என்றால் தேன் என்று தான் அன்றைய பொருள்...இன்றும் கூட. இந்த பிராந்தியத்தில் மருதமரங்கள்
நிரம்பியிருந்த காரணத்தால் கிராமத்து மக்கள்
''மருதை'' என்றும் குறிப்பிடுவர்.
இத்தாலியில் இருந்து மதம் பரப்ப வந்த காண்ஸ்ட்டாடின் பெஸ்கி என்னும் பாதிரியார்,
வீரமாமுனிவர் என்று தனது பெயரை மாற்றிக் கொண்டு தமிழ் கற்று தேம்பாவணி என்னும் காவியத்தை
இயற்றினார். சதுர் அகராதி படைத்தார். பரமார்த்தகுரு கதைகள் எழுதினார். அதைவிட அவர்
ஆற்றிய அரும்பணி தமிழ் எழுத்து முறையில் கொண்டு
வந்த சீர்திருத்தங்கள். அதற்கு முன்பு வரை நமக்கு மெய்யெழுத்துக்களுக்கு புள்ளி வைக்கும்
பழக்கம் இல்லை. காரணம், பனை ஓலையில் எழுதும் போது எழுத்தாணி கொண்டு புள்ளி வைத்தால்
அது பொத்தலாகி விடும். பனை ஓலையின் ஆயுளும் குறையும். அதே போல 'ஏ' என்ற எழுத்து இல்லை.
'எ' என்று எழுதி அதன் கீழே கோடு ஒன்று கிழிப்பர் அல்லது அதன் தலைமேலே பொட்டொன்று வைப்பர்.
வீரமாமுனிவர் தான் 'எ' என்னும் எழுத்தின் கீழே ஒரு இழுப்பை இழுத்துவிட்டார்.
தமிழின் சிறப்புகளில் இதுவும் ஒன்று. காலத்திற்கு ஏற்றவாறு தொழிட்நுட்பவளர்ச்சிக்கு
தக்கவாறு தன்னை தகவமைத்துக் கொள்ளும் இயல்பை தன்னகத்தே கொண்ட ஒரே மொழி தமிழ் மட்டுமே.
இந்தப் பண்புகள் இல்லாத சமசுகிருதம், லத்தீன், கிரேக்கம், எபிரேயம் போன்ற மொழிகள் செத்துப்போயின.
இத்தாலிக்கும் தமிழருக்குமான தொடர்பு குறித்த ஆராய்ச்சிகளை ஒரு பக்கம் செய்து கொண்டே
துணிமணிகளுடன் சென்னை பன்னாட்டு விமான முனையம் வந்தடைந்தேன். நள்ளிரவு மணி 1.50க்கு
விமானம். சென்னையிலிருந்து ஃப்ராங்க்ஃப்ர்ட் பின்பு அங்கிருந்து வெனிஸ் என்பதாக பயணம்.
சென்னையிலிருந்து ஃப்ராங்க்ஃப்ர்ட் 10 மணி நேரப்பயணம். அங்கே 4 மணிநேரக் காத்திருப்புக்கு
பின் வெனிஸ் ஒண்ணரை மணி நேரம்.
ஃப்ராங்க்ஃப்ர்ட் செல்லும் லுஃப்தான்சா விமானத்தில் ஜெர்மானிய பாட்டிகள் வரவேற்றனர்.
அமெரிக்கா செல்லும் பயணிகளே அதிகம். எனது இருக்கைக்கு அருகே ஒரு மாமாவும் மாமியும்
அமெரிக்காவிலிருக்கும் தனது மகன் வீட்டுக்கு பயணம். மாமா ஜோதிட சாஸ்திரத்தில் விற்பன்னர்
என்று மாமி மூலமாக தெரிய வந்தது.
''ஏன்னா சகுனம் ஜாதகம் பார்த்தேளா இல்லியா ஒன்னும் பிரச்சினையில்லையே....''
''பாத்துட்டேண்டி...அதிலும் நீ கும்ப ராசி பார்த்தியா...இன்னைக்கு அமோகமா இருக்கு...உனக்கு
மாற்றுமதத்துக்காரா ஒத்தாசையா இருப்பா...குடை இல்லாட்டி போனா ரெயின் கோட் இலவசமா கிடைக்க
வாய்ப்பிருக்குன்னா பாத்துக்கோயேன்...அமோகமா இருக்க போறது நமக்கு''
எனக்கு வியப்பாக இருந்தது. ஜோதிடத்தில் வீடு வாங்கலாம், கல்யாணம் பண்ணலாம் என்று
கணித்து சொல்வார்கள். குடை கிடைக்கும் வடை கிடைக்கும் என்றெல்லாம் கணிக்க முடியுமா?
இவரை மாதிரி ஒருத்தரைத்தான் தேடிக் கொண்டிருந்தேன். எனது எதிர்காலம் பற்றி மாமா எப்படி
கணிக்கிறார் என்று பார்க்கலாம். மாமாவிடம் பேச்சுக் கொடுத்தேன். துளியும் யோசிக்காமல்
இருக்கைக்கு முன்னே இருந்த வாந்தி கவரில் எனது ஜாதகக் கட்டத்தை வரைந்தார்.
''மிதுன ராசி ....சிம்ம லக்னம்...நீர் உருப்படறதுக்கு வாய்ப்பே இல்லையே''
''அதுதான் எனக்கே தெரியுமே....வேறேதாவது உங்களுக்கு தெரியுதா?
''இதோ பாரும் உம்மோடத மட்டும் வச்சிண்டு ஒன்னும் பண்ண முடியாதுங்காணும்....ஆம்படையா
அப்புறம் புள்ளாண்டானோட கட்டம் இருந்தா தான் ஏதாவது சொல்ல முடியும்...இல்லைனா இது ஒரு
வீணாப்போன ஜாதகம்'' என்றளவில் எனது எதிர்காலம் குறித்த கணிப்பிற்கு முற்றுப்புள்ளி
வைத்தார்.
அரைத்தூக்கத்தில் இருந்த பயணிகளை தலைமைப்பணிப்பெண்ணின் அழைப்பு நிமிர்ந்து அமரச்செய்தது.
அதாவது வதக்கப்பட்ட காய்கறிகள் வைத்து சுற்றப்பட்ட சப்பாத்தி வழங்கப்படும் என்பதாக
அறிவிப்பு. உண்மையிலேயே சுவையாக இருந்தது. பணிப்பெண்கள் அனைவரும் பாட்டிகள் என்பதால்
பயணிகள் அனைவரும் நித்திரைக்கு விரைந்தனர். அது ஏனோ தெரியவில்லை ஜெர்மானிய பணிப்பெண்களிடம்
ஒரு பணிவோ பணி நேர்த்தியோ இல்லை. ஒருவித மூர்க்கத்தனம் இருந்ததை உணர்ந்தேன்.
தூங்கி எழுந்த போது பேய் மழையோடு ஃப்ராங்க்ஃபர்ட் எங்களை வரவேற்றது. மாமா குஷியாகி
விட்டார். ''ஜிட்டு...நான் சொன்னேனோலில்லியோ பார் மழை பெய்யறது...நம்ம எல்லோருக்கும்
குடை கொடுக்கப் போறா...'' என்றார். நானும் மாமாவின் ஜோதிட அறிவு குறித்து வியந்தபடி
விமானத்தின் கதவருகே வந்தேன். அங்கே குடையுமில்லை படையுமில்லை.. எல்லோரும் நனைந்தபடியே
இறங்கி பேருந்தில் ஏறினார்கள். மாமா பவ்யமாக சென்னை ஆங்கிலத்தில் ''மழையில் நனைஞ்ச
படி எப்படி எறங்குறது...குடை தர மாட்டேளா? என்றார். மூதாட்டி பணிப்பெண்ணோ ''குடையும்
கிடையாது வடையும் கிடையாது...எறங்குங்க .ம்...நேரமில்ல...அடுத்த போர்டிங் ஸ்டார்ட்
பண்ணனும்....சீக்கிரம்'' என்றார் கோபமாக. அடுத்த விமானத்தை பிடிப்பதற்கு முன்பாக குடியேறல்
பிரிவில் விசாவில் நுழைவு அனுமதி முத்திரை பெற வேண்டும். செங்கன் விசா வைத்திருப்போர்
முதல்ல் நுழையும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் முத்திரையை வாங்கி விட்டால் அடுத்து எங்கும்
வாங்க வேண்டியதில்லை. இத்தாலிக்கு ஜெர்மனி வாயிலாக செல்வோர் இரண்டு விமானத்திற்கும்
இடையே மூன்று மணி நேரம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது நலம். இல்லையெனில் படாத பாடு
படவேண்டியிருக்கும். விமானத்தை தவறவிடும் வாய்ப்புக்கள் அதிகம். நானும் நுழைவு முத்திரை
பெற்று காத்திருந்து வெனிஸ் வந்து இறங்கிய போது நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு
செய்திருந்த பேருந்து என்னை விட்டுவிட்டு எப்போதோ சென்றிருந்தது. நான் கையில் அழைப்பிதழை
வைத்துக்கொண்டு ஒரு மணி நேரம் இங்குமங்கும் அலைந்து கொண்டிருந்தேன். அங்கே யாரும் ஆங்கிலம்
பேச மாட்டார்கள். நமக்குத்தான் அப்படி ஒரு வியாதி உண்டு, ஆங்கிலத்தில் பேசினால் அதை
ஒரு கௌரவமாக கருதுவோம். ஆனால் இங்கிலாந்தின் மிக அருகாமையில் இருக்கும் இத்தாலியில்
ஒருவருக்கும் அந்த வியாதி இல்லை. நான் குறுக்குமறுக்குமாக விமான நிலையத்தில் அலைந்து
கொண்டிருந்த அதே வேளையில் இன்னொரு அபலை அங்கே அதே அழைப்பிதழோடு அலைந்து கொண்டிருந்தது.
அந்த அபலையின் பெயர் மரியா. தென்ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர். இருவரும் ''நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளரால் கைவிடப்பட்டோர் சங்கம்'' என்ற ஒன்றை ஆரம்பித்தோம். உடனடியாக கார்
ஒன்றை வாடகைக்கு எடுத்து பதோவா என்னும் ஊரில் இருக்கும் க்ராண்ட் அபேனோ என்னும் நட்சத்திர
விடுதிக்கு செல்வது என்ற தீர்மானம் நிறைவேற்றி செயல்படுத்தினோம். வழிநெடுக மரியா புலம்பிக்கொண்டே
வந்தாள். ''எங்க வீட்டுக்காரரு அப்பவே சொன்னாரு....இலவசமா டிக்கெட் தர்றான், ஹோட்டல்
தர்றான்னு போகாதே...நட்டாத்துல விட்டுருவானுகன்னு....நான் கேட்கலை...இப்போ அவதி படுறேன்....ஒருத்தனுக்கும்
இங்கிலீஷ் தெரியலை.....நல்ல வேளை நீ இருந்தே...இல்லைன்னா...நெனெச்சுப்பாக்கவே பயமே
இருக்கு....'
(தொடரும்)
No comments:
Post a Comment