Thursday, March 4, 2021

பிறந்த நாள் வாழ்த்துப்பா- 01/11/2006

 

 

 
   விசும்பு அதிர முளைத்த தாரை
   சிறுகை நீட்டி தூமலர்பாதம் பதிய
   மழலைச் சொல் பேசி- விளிக்கும்
   கண்ணொளி கண்டு மொட்டுநாசி  தொட்டு
   மென்பட்டு மெய்தடவி கேசம் வருடி
   பல்லில்வாய் நகைகண்டு மயங்கிய வேளை
   தெய்வம் உண்டெனக் கண்டேன்!
 

   நுண்புல் தாங்கிய பனித்துளி - செறிந்த
   அடவி சுரந்த நன்னீர் புனல்
   பாழ்பாலை கண்ட பெருமழை
   ஆவின் பால்சுவை நறுவீ மணமென
   செப்பிடினும் உன்தீண்டல் ஈடோ

 
   வற்றாத செல்வம் பொதிந்த மெய்வளம்
   திரள்மிகு நிறைகேள்வி பெற்றாங்கே 
   விளையும் மகிழ்ச்சி பெறுகி - நெடுநாள்
   இசைபெற வாழ மகிழ்ந்தே வாழ்த்தும்
   வானும் மண்ணும் தமிழும் - உன்
   அன்னையும் நானும் இயைந்து.






No comments:

Post a Comment