Sunday, August 20, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(3) - அசோக் வாஸ்வானி என்னும் அற்புதம்:

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - கினியா(3) - அசோக் வாஸ்வானி என்னும் அற்புதம்:
இந்த பயணத்தில் நிகழ்ந்த அற்புதங்களில் ஒன்று அசோக் வாஸ்வானி அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பு. தனது 27ஆம் வயதில் தான் பார்த்துக் கொண்டிருந்த  வேலையை விட்டுவிட்டு கினியாவில் தொழில் துவங்க முயற்சி செய்த போது சிலர் அவரை ஏற இறங்க பார்த்தனர். பலர் ஒரு மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு பரிந்துரைத்தனர். அவர்களின் கூற்றில் பிழையில்லை. காரணம் அன்றைய சூழலில் கினியா தொழில் துவங்குவதற்கு உகந்த நாடு அல்ல. கினியாவில் குடிமை பாதுகாப்பு என்பது அந்த மண்ணின் மைந்தர்களுக்கே  அரசாங்கங்கள் உறுதி செய்யாத சூழல். இப்போதும் அதுவே நிலைமை. ஆனால் அசோக் வாஸ்வானி துணிந்து அந்த முடிவெடுத்தார். பொருட்களை வாங்கி விற்பதில் துவங்கி உற்பத்தியை நோக்கி முன்னேறினார். அது மிக இலகுவான பயணம் அல்ல. கினிய அரசாங்கத்திற்கு அதிகமாக வரி கட்டும் தனி நபர் என்ற நிலைக்கு உயர்ந்தார். பெயிண்ட், ஞெகிழிப் பொருட்கள், ஞெகிழி குழாய்கள், பைகள், வடங்கள் என்று உற்பத்தித்துறையில் சாதித்துக்காட்டினார். இன்று அவரது அலுவலகங்கள் உலகமெங்கும் விரவி கிடக்கின்றன. இந்தியாவிற்கான கௌரவ தூதரும் கூட.
இடையில் 2004ல் அவருக்கு பிறந்த பெண் குழந்தை ஒரு வினோதமான பிறவியாக பிறந்தது. அந்த குழந்தைக்கு உணவுக்குழாய் பிறப்பிலேயே இல்லை. நண்பர்கள் குழந்தைதான் முக்கியம் எனவே தொழிலை மூடிவிட்டு குழந்தையை காப்பாற்ற ஆலோசனை கூறினர். சென்னை அப்பொலோவில் 5 மாதங்கள் வைத்து காப்பாற்றிய பின் அதை ஃப்ரான்சில் புகழ் பெற்ற நிக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக எடுத்து சென்றார். அந்த போராட்டமான காலங்களில் அசோக் மீண்டும் ஒரு துணிச்சலான முடிவெடுத்தார். நிர்வாகத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தை தனது அதிகாரிகளுக்கு கொடுத்தார். காசோலையில் கையெழுத்திடுவது, மூலப்பொருட்கள் கொள்முதல் செய்வது, விற்று பணவசூல் செய்வது, ஊழியர்களை பணியிலமர்த்த்வது சம்பளம் வழங்குவது என அனைத்தையும் நிர்வாகிகள் முடிவுக்கு விட்டார். அப்போதும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் எச்சரித்தனர். செய்யாதே ஏமாற்றப்படுவாய், அனைத்தையும் இழந்து விடுவாய் இது நிச்சயம் என்று பயமுறுத்தினார்கள். ஆனால் அசோக் தான் எடுத்த முடிவு சரி என்று நிரூபித்தார். குழந்தையையும் காப்பாற்றினார். இதன் மூலம் அசோக் நமக்கு சில பாடங்களை கற்று தருகிறார்.
1) மனிதர்களை நம்புங்கள் (ஏமாற்றுபவர்கள் இருக்கத்தான் செய்வார்கள்; ஒரு சிலர் ஏமாற்றுகிறார்கள் என்பதற்காக அனைவரையும் சந்தேகிப்பது அறமாகாது)
2) எதிலும் துணிந்து முடிவெடுங்கள் (காலம் தான் செல்வம்; முடிவெடுக்க காலம் கடத்துபவர்கள் ஒரு போதும் வெல்வதில்லை)
3) உழைக்க தயங்காதீர்கள் (சோம்பேறிகளுக்கு முன்னேற்றமுமில்லை; அதனால் அவர்களுக்கு வருத்தமும் இல்லை. சாதனையாளர்களே உழைக்கிறார்கள், உழைப்பவர்களே சாதிக்கிறார்கள்)

தொழில் சம்பந்தமான விவாதங்கள் நிறைவுற்ற பிறகு பகல் உணவிற்காக சாப்பாட்டு கூடத்திற்கு அழைத்து சென்றார். பகலுணவை தனது தொழிலில் முடிவெடுக்கும் அதிகாரமிக்க அதிகாரிகளுடன் உண்பதை தனது நிறுவன கலாச்சாரமாகவே வைத்திருக்கிறார். 200 இந்தியர்கள் அவர்களில் 40பேர் தமிழர்கள் என்று ஒரு கூட்டுக்குடும்பமாக வாழ்கிறார்கள்.
பகலுணவு முடிந்த பிறகு தனது தொழிற்சாலையை சுற்றி காண்பிக்க என்னை அழைத்துச் சென்றார். அலுவலக வாயிலை விட்டு இறங்கும் போது இரண்டு ராணுவ அதிகாரிகள் தங்களுக்கு பணம் தேவைப்படுவதாகவும் இந்த பிராந்தியத்தின் கட்டுப்பாடு முழுவதும் தங்களது கட்டுப்பாட்டிலேயே இருப்பதாகவும் பணம் கொடுத்தால் சேவை இன்னும் சிறப்பாக இருக்கும் என்றும் தெரிவித்தனர். '' நீங்கள் இருவரும் இங்கே வந்தது உங்கள் அமைச்சருக்கு தெரியுமா?'' என்றார். திரும்பி தனது அலுவலக வரவேற்பாளரிடம் ஜனாதிபதி ஆல்ஃபா கோண்டேவை உடனடியாக அழைக்கும்படி குரல் கொடுத்து திரும்பும் வேளையில் இரண்டு அதிகாரிகளும் தொழிற்சாலையின் முகப்பு வாயில்வரை ஓடிக்கடந்திருந்தனர்.
தொழிற்கூடத்தில் ஒரு புறம் ஞெகிழிப் பொருட்கள், மறுபுறம் வர்ணப்பூச்சுக்கள், மற்றொரு புறம் இணையதளத்திற்கான கம்பி வடங்கள் என்று பல்வேறு பகுதிகள் துடிப்பாக இயங்கிக் கொண்டிருந்தன.
தொழிற்கூடத்தின் ஒரு மூலையில் இரு பெரிய இயந்திரங்கள் வடிவ அச்சுக்களை கடைந்து கொண்டிருந்தன. அது என்னவென்ற புரியாமல் உற்று பார்த்துக்கொண்டிருந்தேன். என் பார்வையை புரிந்த கொண்ட அசோக் ''ஜேசீ...பத்தாண்டுகளுக்கு முன்னால் இந்த ''டை'' என்னும்
வடிவ அச்சுக்களை சீனாவிலிருந்து இறக்குமதி செய்தோம்.. இன்று அதை நாங்களே உருவாக்கிக் கொள்கிறோம்'' என்றார்.
நான் கேட்டேன் '' நீங்கள் என்ன படித்தீர்கள்...பொறியியலா...?'' எனது தோளைத்தட்டி சிரித்துக் கொண்டே அசோக் சொன்னார் ''பத்தாம் வகுப்பில் அனைத்துப் பாடங்களிலும் தோல்வி''
கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் ''படிப்பிற்கு அறிவிற்கும் துளியும் தொடர்பில்லை.




No comments:

Post a Comment