Thursday, August 23, 2018

ஆண் நன்று (சிறுகதை)

அந்த அரசு குடியிருப்பின் அனைத்து வீடுகளும் தொலைக்காட்சி நெடுந்தொடரில் மூழ்கி இருந்தன. பச்சையும் மஞ்சளும் கலந்த வண்ணத்தில் சுவர்கள் கூடிய விரைவில் புதுப்பிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தின. வெளியில் நின்ற மரங்களின் இலைகள் கூட அசையாமல் சூழலின் வெப்பத்தை தணிப்பதற்கு உதவி செய்ய மறுத்த மாலைப்பொழுது. வெட்கையை பொருட்படுத்தாமல் ஆங்காங்கே  விளையாடும் குழந்தைகளின் சத்தம். மாலையும் இரவும் சந்திக்கும் அந்த பொழுதின் இறுக்கம் அந்த பழைய பெரிய வீட்டை சற்று அதிகமாகவே பாதித்திருந்தது. 
விழுப்புரம் என்னும் அந்த 'விழுமியபுரம்'' மாவட்டத்தின் திட்ட அலுவலர் சஞ்சய் குமாரை நிலைகொள்ளவிடாமல் செய்தன தொலைக்காட்சியின் அலைவரிசைகள்.
எதிலும் நிலைக்காத கண்களும் மனமும் செய்தி தொலைக்காட்சியை தெரிவு செய்தது.
சஞ்சய் விழுப்புரம் மாவட்டத்ததின் திட்ட அலுவலர். ஆட்சியருக்கு அடுத்து அதிகாரம் படைத்த பதவி. தந்தையை சிறுவயதிலேயே இழந்தவன். தாயால் மட்டுமே போற்றி பாதுகாக்கப்பட்டவன். 
அவனுடைய தாய் பின்னால் அமர்ந்து இந்த உலகத்திற்கும் அவளுக்கும் சம்பந்தமே இல்லாதது போன்று ஜெயகாந்தனின் நாவலில் ஆழ்ந்திருந்தாள். செய்திகளுக்கு இடையே ''சற்று முன் வந்த தகவல்'' என்று செய்தியாளர் தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் என்ற அறிவிப்பை தந்தார். தலைமை செயலாளர் இந்த அறிவிப்பை சற்றுமுன் வெளியிட்டதாக செய்தியாளர் கூறிவிட்டு விவரங்களை வாசிக்கலானார்.
அதுவரை ஜெயகாந்தனிடம் மூழ்கியிருந்தவள் செய்தியை கேட்டு தொலைக்காட்சியின் மீது கவனத்தை திருப்பினாள்.
மதுரை - தணிகாசலம்
திருச்சி - வெங்கடேஸ்வரன்
விழுப்புரம் - ஜே.பி. அருண்
கடலூர் - சஞ்சீவ் பாட்டியா.....விவரங்களை செய்தியாளர் தொடர்ந்தார்.

மிக வேகமாக கடந்த விவரங்களுக்கு இடையே வந்த புகைப்படங்களில் அந்த மூன்றாவதாக வந்த புகைப்படம் மட்டும் அவளுக்கு அதிர்வை ஏற்படுத்தியது.
28 ஆண்டுகளுக்கு முன்னால் பார்த்த அதே முகம். அவன் தானா இது?
சஞ்சய் யார் இந்த புது கலெக்டர்? உனக்கு முன்னாடியே தெரியுமா....?
''இல்லைமா...இது கொஞ்சம் புது ஆளா தெரியுது....இரு நான் நாராயணண்ட்ட பேசுறேன்...''
''டேய்...இவன் என்னவோ அந்த ஜே.பியோட பையன் மாதிரி தான் தெரியுது....''
''ஐயோ..ஆரம்பிச்சிட்டியா...ஏம்மா இப்படி இருக்க....அந்தாளு நீ வேணாம்னு சொல்லிட்டு போயி முப்பது வருசம் ஆகுது...நீ இன்னுமா அவரை நினைச்சிட்டு இருக்குற? உன்னை மாதிரி ஒரு தேவதை வலிந்து போய் என்னை கல்யாணம் பண்ணிக்கோன்னு கேட்டதுக்கு அப்புறமும் வேணாம்னு சொன்னான்னா அவன்லாம் ஒரு ஆம்பளையா?''
''பின்னே உங்க அப்பா மட்டும் ஆம்பளையா...தனக்கு கேன்சர் இருக்குன்னு தெரிஞ்சும் கல்யாணம் பண்ணி ஒரு புள்ளையை கொடுத்துட்டு செத்துப்போனவன் ஒரு ஆம்பளையா...அவர் சாகும் போது எனக்கு 22 வயசு...உனக்கு 7மாசம்....அவரோட தோப்பனாரும் அம்மாவும் வந்து ''எம்புள்ள எதையும் அனுபவிக்காம போய்ச்சேர்ந்துடப்டாதுன்னுட்டு இப்படி செய்துட்டோம்...அந்த ஆத்மா வானுக்கும் பூமிக்கும் இடையிலே தீராத ஆசைகளோட அல்லாடப்டாதுன்னுட்டு இப்படி செய்ய வேண்டியதா போச்சி....தயவு செய்து எம் பெண்டுகளை சபிச்சிடாதம்மான்னு கால்ல விழுந்தா....கால்ல விழுந்தா சரியா போச்சா...உனக்கு ஆம்பளைன்னா என்னான்னு தெரியுமா...உண்மையா இருக்குறவன் தான் ஆம்பளை...அந்த விசயத்துல ஜே.பி எவ்வளவோ மேல்...உண்மையான ஆம்பிளைனா அவன் தான்...அம்மாடி! என் குடும்பம் ஒரு காதல் கல்யாணத்தை தாங்காது....என் குடும்ப சூழ்நிலை வேறு ...உங்க குடும்ப சூழ்நிலை வேறு...ஐ காண்ட் அஃபோர்ட் அ லவ் நௌ அப்படின்னு சொன்னான் பாரு அது ஆம்பளைத்தனம்...'' மூச்சிரைக்க பேசி ஓய்ந்தாள்.
''பின்னே எதுக்கு வருசாவருசம் திதி குடுக்குற...உன்னை ஏமாத்திட்டு செத்துப்போனவனுக்கு எதுக்கு ஸ்ரார்த்தம்...பூசை...தர்ப்பணம்?''
''சுயநலம்...அதுகூட உனக்காகத்தான்...பித்ரு தோசம் வந்து உன் சந்ததியை பாதிச்சிரக் கூடாது பாரு அதுக்காக....''
சொல்லிவிட்டு மௌனமாக தனது அறையை நோக்கி நடந்தாள். 

கட்டிலில் படுத்தவாறு நினைவுகளில் பின்னோக்கி நடந்தாள். அவனை எப்போது நான் பார்த்தேன்...இல்லை பார்ப்பதற்கு முன்பு அவனது குரல் தான் என்னை கவர்ந்தது...திருநெல்வேலி ஜங்சனில் பெருமாள் தெற்கு ரதவீதியில் பேரின்ப விலாஸ் தியேட்டருக்கு அருகில் இருக்கும் வாணி விலாஸ் காம்பௌண்ட் என்னும் பிராமணர் குடியிருப்பில் சில குடும்பங்களும் பல மருத்துவ விற்பனை பிரதிநிதிகளும், பெரும்பாலும் திருமணமாகதவர்கள், தங்கியிருந்த காலம் அது. நான் கல்லூரிக்கு கிளம்பும் போது ஜே.பியை பார்த்திருக்கிறேன். ஒடிசலான தேகம், தேடல் நிறைந்த கண்கள், எப்போதும் வெளிர் நிற ஆடைகளில் தான் காணப்படுவான். வேலைக்கு கழுத்தில் டை இல்லாமல் போகமாட்டான். ஒரு மழைநாள் இரவில் உடை மாற்ற மேல்மாடிக்கு சென்ற போது தான் அந்த குரல் என் காதில் விழுந்தது.
''கவிஞர்களுக்கு எல்லாம் தெரியும் என்று நம்புவது ஒருவித மூட நம்பிக்கை...ஆங்கில இலக்கியத்தில் மகாகவி என்று போற்றப்படும் பைரன் ஒரு கவிதையில் கூறுகிறார் ''அன்பே...என் காதல் எவ்வளவு உயர்வானது தெரியுமா...இதோ ஓங்கி உயர்ந்து மேகத்தை முத்தமிடத் துடிக்கும் இந்த பைன் மரத்தை போன்றது....'' இதுவரை சரி...பைன் மரம் உயரமானது தான்...ஆனால் அடுத்த வரியை பாருங்கள்...''அன்பே என் காதல் எவ்வளவு ஆழமானது தெரியுமா...பூமியின் மையத்தை நோக்கி ஊடுருவிச்செல்லும் இந்த பைன் மரத்தின் வேர்களை போன்றது'' பைரனுக்கு தெரியாது....பைன் மரத்தின் வேர்கள் பக்கவாட்டில் விரவி செல்லுமே ஒழிய கீழ் நோக்கி ஒருபோதும் செல்லாது...கவிதையை ரசிப்பது ஒரு மனோபாவம் அவ்வளவுதான்...அதை உணர்ச்சி நிலையிலிருந்து அறிவுநிலைக்கு நகர்த்தும் போது சுவை குறைந்து விடுகிறது....ரொம்ப எளிமையா சொல்றேனே....மாதவி பொன்மயிலாள் தோகைவிரித்தாள்'' அப்படின்னு சினிமா பாட்டை கேட்டுட்டு பேசாம போயிடனும்...அதை விட்டுட்டு ஆண்மயிலுக்குத்தானே தோகை..பெண் மயிலுக்கு தோகை கிடையாதே...அப்படின்னா மாதவி ஆணா பெண்ணா இல்லை ரெண்டுகெட்டானா என்று சிந்தித்தால் குழப்பும்''  

யார் இவன்...இவ்வளவு தீர்க்கமாக தனது தரப்பு வாதத்தை முன்வைக்கும் லாவகம் எனது பேராசியர்களுக்கு கூட வாய்ப்பதில்லையே...அதுவும் லார்ட் பைரன். 
ஆடையை மாற்றாமல் ஈரத்துடன் இருந்ததை பார்த்த அம்மாதான் என்னை சுயநினைவிற்கு கொண்டு வந்தாள்.
''என்னடி...ஈரத்துணியைக் கூட மாற்றாமல் கனவு கண்டுக்கிட்டு''
இவனை நான் சந்தித்தே ஆக வேண்டும். மெடிக்கல் ரெப்ரெசண்டேடிவ் குடியிருக்கும் பகுதியில் இருப்பவர்களில் நன்கு பரிச்சயமானவன் ராமச்சந்திரன் தான்...அவனைக் கேட்டால் இவனைப் பற்றிய விவரம் கிடைக்கும். காலை காஃபிக்கு மோகன் கடைக்கு செல்லும் ராமச்சந்திரனை நிறுத்திக்கேட்டேன்.
''நேத்து ராத்திரி யார் லார்ட் பைரனைப் பத்தி பேசினது...சத்தியமா நீ இல்லைன்னு தெரியும்...வேறு யார்?''
''எனக்கு அவ்ளோ அறிவிருந்தா நான் ஏண்டி மருந்துப்பையத் தூக்கிட்டு தெருத்தெருவா அலையுறேன்...அது  புதுசா நம்ம ரூம்ல சேர்ந்துருக்கிற ஜே.பாலசுப்ரமணியன்..சுருக்கமா ஜே.பி...பி.எஸ்.சி கெமிஸ்ட்ரி முடிச்சுட்டு இப்போதான் வேலைக்கு சேர்ந்திருக்கான்...மற்றபடி சொல்லிக்கிற மாதிரி வேறெதுவும் இல்லை...''

அவன் பேசுவதை கேட்டுக் கொண்டேயிருக்க வேண்டும் என்ற ஆவல் என்னை தீயாய் பற்றியது. சண்டை போட்டு அந்த ஜன்னலோர கட்டிலை என் அக்காவிடமிருந்து பெற்றேன். ஒவ்வொரு நாளும் அவன் குரலுக்கு ஏங்கினேன். அவனும் வஞ்சம் வைக்காமல் பேசினான்.

இரவு விவாதங்களில் அவன் தொடாதத் தலைப்பே இல்லை. சரளமான மொழிவளம் அவனுடைய மிகப்பெரிய சொத்து. ஒரே நேரத்தில் ஆங்கிலத்தில் ஆகாயத்தையும் தமிழில் தாழ்வாரத்தையும் தொடும் சொல்லாட்சி. தமிழ் பேசும் போது தமிழனாகவும் ஆங்கிலம் போது ஐரோப்பியனாகவும் மாறும் உச்சரிப்பு. கேள்வி கேட்டமாத்திரத்தில் வந்து விழும் தகவல்கள். அதற்கு சான்றாக இலக்கிய மேற்கோள்கள். ஒருமுறை சாதியை பற்றியும் இட ஒதுக்கீடு பற்றியும் வந்த விவாதத்தில் குழுமியிருந்த நண்பர்கள் ஒரு அணியாகவும் இவன் தனித்தும் விடப்பட்டான். ஆனால் தனது அபாரமான வாதத்திறமையால் அனைவரையும் தெறிக்கவிட்டான். தமிழ்ச்சமுதாயத்தில் சாதிக்கும் குலத்துக்குமான தொடர்பையும் வேறுபாட்டையும் சேரமான் இளஞ்சேரலாதன் காக்கைபாடினி நச்செள்ளை இருவருக்குமான காதல் வழி நின்று நிறுவினான். பேச்சினிடையே ''காக்கைபாடினி நச்செள்ளை, புறநானூற்றில் 288ஆவது பாடல் 'நரம்பெழுந்து உலறிய நிரம்பா மென் தோள் முளரி மருங்கின் முதியோள் சிறுவன் என்று' தொடங்கி முழுச்செய்யுளையும் வரிவிடாமல் சொல்லிவிட்டு அதற்கு கலைஞர். கருணாநிதி புதுக்கவிதை நடையில் எழுதிய உரையையும் சொன்னான்...பேச்சா அது....ம்ஹூம்..குற்றாலத்து அருவி வெள்ளம் போன்று கொட்டித்தீர்த்தான்....வெள்ளம் அவனது நண்பர்களுக்கு கிடைத்தாலும் அந்த சாரலை ஜன்னல் வழியே அனுபவித்தேன். அப்போதே முடிவு கட்டினேன்...வாழ்ந்தால் இவனோடு தான் வாழ்க்கை இல்லையெனின் அது வீண்'''

முதலில் ராமச்சந்திரனை பிடித்து இவனை சந்திக்கும் வாய்ப்பை பெற வேண்டும். இரண்டு முறை பதில் சொன்ன ராமச்சந்திரன் மூன்றாவது முறை கண்டுபிடித்துவிட்டான்.
''என்னடி...லவ்வா...அவன் யாரு..அவன் குலம் என்ன...கோத்திரம் என்ன...உங்கப்பா மூணு பெண்களை வச்சிண்டுருக்கார்...ஏதாவது அறிவோட தான் பேசுறியா...''
''ராமு...அவங்கள நான் கன்வின்ஸ் பண்றேன்...நீ கொஞ்சம் ஹெல்ப் பண்ணு ராமு....''
''யாரடி கன்வின்ஸ் பண்ணப்போற...உங்கப்பாவையா...இல்லை உங்க அக்காளுக்கு மாப்பிள்ளை கொடுக்கப்போறவனையா...இல்லை உன் தங்கச்சிக்கு மாப்பிள்ளை கொடுக்கப்போறவனையா...இல்லை உங்க மாமாக்களையா...அடிப்பைத்தியம்....இதெல்லாம் நடக்குற காரியமா...இந்த கருமத்தை எல்லாம் விடு... அவனும் நீயும் பக்கத்துல நின்னு பாருங்க...கொஞ்சமாச்சும் மேட்ச் ஆகுதான்னு...நீ தேவதைடி...உனக்கு இருக்குற அழகுக்கு ஒரு ராஜகுமாரன் வருவான்...மனசை போட்டு குழப்பிக்காத....அவன் நல்லா பேசுவான் ஒத்துக்கிறேன்...அதுக்குன்னு உனக்கு அவன் புருசனா....ஐயோ நெனெச்சாலே குமட்டுது...அவன் அப்பா ஒரு தினக்கூலி அவன் வீட்டுல இன்னவரைக்கும் கரண்ட் வசதி கிடையாது....தெரியுமா...!

சரி ராமு இதற்கு ஒத்துவரமாட்டான்...நாமே களத்தில் இறங்க வேண்டியதுதான் என்று முடிவு செய்தேன். துணிந்து அவனிடம் பேசினேன். அவனும் நன்றாகத்தான் பேசினான். ஆறு மாதத்தில் சந்திக்க நாள் குறித்தேன்.

அவனிடம் வாகனம் எதுவும் கிடையாது. நடந்து தான் வேலைக்கு போவான். வெளியூருக்கு என்றால் பஸ்சில் செல்வான். அவன் தென்காசிக்கு செல்லும் நாளை கண்டுபிடித்தேன். பேருந்து நிலையம் வரை அவன் பின்னாடியே சென்று நானும் அவன் ஏறிய பேருந்தில் ஏறினேன். நான் படித்த ராணி அண்ணா கல்லூரிக்கு தென்காசி செல்லும் அனைத்து பேருந்துகளும் செல்லும் என்பதால் சந்தேகமே வராது. பேருந்தில் என்னைக் கண்டதும் குழம்பியவன் சற்று நேரத்தில் தெளிந்து கண்களால் என்னை அழைத்தான். அருகில் சென்று அமர்ந்து கொண்டேன்.
பேருந்தின் இரைச்சலையும் தாண்டி தெளிவாக கேட்டது அவனது குரல்.
''என்ன இந்த பக்கம்?''
''நான் எப்பவுமே இந்த ரூட்ல தான் காலேஜுக்கு போவேன்...''
''எந்த காலேஜ்?''
''ராணி அண்ணா காலேஜ்...பி.ஏ இங்கிலீஷ் லிட்ரேச்சர் செகண்ட் இயர் படிக்கிறேன்''
''குட்...எனக்கும் லிட்ரேச்சர்ல ஆர்வம் உண்டு....டைம் கிடைக்கும் போதெல்லாம் வாசிக்கிறது எனக்கு பழக்கம்''
''தெரியும்..''
''எப்படி...எப்படி,,,என்னைப் பற்றி எப்படி உங்களுக்கு தெரியும்?'' வியப்புடன் கேட்டான்.
''தினமும் ராத்திரி நீங்க உங்கள் ஃப்ரெண்ட்ஸ் கூட பேசுறத நான் கேட்பேன்''
''ஓகோ....ஒட்டு கேட்கிறது தப்பில்லை?''
''எனக்கு உங்ககிட்ட ஒன்னு கேட்கணும்...பிராமணர்களை முன்னேறிய சமூகம்னு சொல்றீங்க...அவர்களுக்கு ரிசர்வேசன் கிடையாதுன்னு சொல்றீங்க...ஆனா இன்னைக்கும் ஒருவேளை சாப்பாட்டுக்கு வழியில்லாத பிராமணர் குடும்பங்கள் இருக்கு...கோயில்ல தட்டுல கிடைக்கிற அஞ்சோ பத்தோ தான் அவர்கள் வருமானமே...அவர்களுக்கு என்ன தீர்வு?''
''நீங்க சமூக ஏற்றத்தாழ்வையும் பொருளாதார ஏற்றத்தாழ்வையும் போட்டு குழப்பிக்கிறீங்க....சாதியால் பிளவுபட்ட சமூகத்தில் சாதிரீதியான இட ஒதுக்கீடு தானே தீர்வாக இருக்க முடியும்...பொருளாதார ரீதியாக கஷ்டப்படும் பிராமணர்களுக்கு உதவித்தொகை கேட்டு போராடுங்கள்...அது சரி...அது உங்கள் உரிமையும் கூட...சாதி பிறப்பின் அடிப்படையில் வருவது மேலும் மாற்ற இயலாலது...மதம் மாறமுடியும்...சாதி மாறமுடியுமா...பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஸ்திரத்தன்மை அற்றவை எனவே அதன் அடிப்படையில் ரிசர்வேசன் என்பது முறையற்றது. முதலில் ரிசர்வேசன் இடஒதுக்கீடு என்பதே தவறு மறுபங்கீடு ரீடிஸ்ட்ரிப்யூசன் என்பது தான் சரியான சொல்லாக இருக்க முடியும்.
''என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களா?''
''பொருளாதாரம் என்பதை....என்னது என்ன கேட்டீங்க?''
''என்னை கல்யாணம் பண்ணிக்கிறீங்களான்னு கேட்டேன்''
''உங்க காலேஜ் வந்துருச்சு இறங்குறீங்களா?''
''அது கிடக்குது காலேஜ்...தினமும் போறது தானே...!''
கடந்து சென்ற கண்டக்டரிடம் தென்காசிக்கு டிக்கெட் வாங்கினாள்
"நாம இப்போ ரிசர்வேசனை பத்தி தான பேசிக்கிட்டு இருந்தோம்"
''இது கூட ரிசர்வேசனைப் பத்தினது தான்...மனசுலயும் மனையிலேயும் உங்க பக்கத்தில ஒக்கார்றதுக்கு ரிசர்வேசன்''
''இல்லைங்க...ஐ காண்ட் அஃபோர்ட் அ லவ் நௌ....என் குடும்ப சூழல் உங்களுக்கு தெரியாது...நான் கடக்க வேண்டிய தூரம் மிக அதிகம்...உங்களுக்கு புரியாது''
''என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?''
''உங்களை யாருக்குத்தான் பிடிக்காது....இந்த மாதிரி ஒரு தேவதையை பிடிக்காதுன்னு சொல்ல நான் என்ன முட்டாளா இல்லை பைத்தியமா...பட் ஐ டோண்ட் நோ வெதர் ஐ டிசர்வ் யூ ஆர் நாட்...ஆனால் ஒருவிதத்தில் நான் உங்களுக்கு நன்றி சொல்லியாக வேண்டும்...''
''எதுக்கு?''
''என்னையும் ஒரு மனிதனாக அங்கீகாரம் செய்ததற்கு...இந்த உலகத்தில் ஒரு உயிர் என்னையும் விரும்பும்  என்று எனக்கு நிரூபித்தற்கு...ஆனால் நான் பலவீனமானவன்...ஒரு பெண் வலிய வந்து தரும் அன்பைக்கூட சுமக்கமுடியாத வலுவில்லாதவன்...உங்கள் அழகுக்கு நல்ல கணவனும் மகிழ்ச்சியான வாழ்க்கையும் கண்டிப்பாக கிடைக்கும்...என்னால் அதை தரமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை...ஐ ஆம் சோ சாரி...''
ஆலங்குளம் தாண்டி பஸ் பாவூர்சத்திரம் வந்தவுடன் ஒன்றும் பேசாமல் இறங்கி சென்றேன்.

அடுத்த ஆறுமாதம் எனது விடாமுயற்சிகள் தோல்வியைத்தழுவின.
காலையில் எழுந்து கோலம் போட நான் வைத்த புள்ளிகள் அலங்கோலமாகின. கல்லூரித் தேர்வுகளில் மதிப்பெண் தொடர் வீழ்ச்சி.
திடீரென்று ராமு தான் அந்த தகவலை சொன்னான். தகவலா அது...பேரிடி...
''ஜே.பி நாளைக்கு ரூமை காலி பண்றான்...அவனுக்கு மல்டி நேசனல் கம்பெனில வேலை கிடைச்சிருக்கு...கர்னாடாகாவுல சிமோகா 
டிஸ்ட்ரிட்க் போறான்...உனக்கும் நல்ல காலம் பொறந்துருச்சு''
சிமோகா போறதுக்கு முன்னாடி அம்மா, அப்பாவிடம் சொல்லிவிட்டுத்தான் சென்றான். என்னிடம் பார்வையாலே விடைதந்தான். நான் கண்களாலேயே '' என்னை மறந்துட மாட்டியே'' என்று கசிந்தேன்.
28 வருசம் ஓடி இன்று அவனுடைய வாரிசைப்பார்க்கும் வாய்ப்பு....நான் அவனை பார்க்க வேண்டும்...அவனைத் தொட வேண்டும்..அவனை தொட்டு அவன் மூலமாக ஜே.பியை தொடவேண்டும்...
ஒரு நாள் சஞ்சயிடம் அருணை வீட்டுக்கு சாப்பிட அழைக்குமாறு கூறினேன்.
''அம்மா! நான் கண்டிப்பா அழைச்சிட்டு வர்றேன்; ஆனா உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது பேசி என் பொழப்பை கெடுத்துடாதே....'' என்றான்.

மீண்டும் அவன் நினைவுகள் சுழலாய் என்னை அலைக்கழித்தது. அதை நான் மிகவும் ரசித்தேன். மீண்டும் நான் அவனை சந்திக்க போகிறேன். அவன் அன்று பார்த்த நானும் இன்றைய நானும் ஒன்றா...எது மாறியிருக்கிறது? கண்ணாடி முன் நின்று ஆலோசித்தேன். என் வலதுகை நடுவிரலை நெற்றியிலிருந்து புருவமத்தி, நாசி நுனி, கழுத்து வரை ஓடவிட்டேன்....எதுவும் மாறவில்லை...உடலும் உள்ளமும் அப்படியேதான் இருக்கிறது...தலையை வலது தோள்ப்பட்டையில் சாய்த்துப்பார்த்தேன்...பின்பு இடது தோள்...மேல் கீழாக...இல்லை நான் மாறவில்லை..அவனுடைய நினைவுகளே என்னை இந்த துடிப்போடு வைத்திருக்கிறது...இந்த ஐம்பது வயதிலும் ஒரு பெயர்சொல்ல முடியாத உணர்ச்சி பகல் வானத்து நட்சத்திரம் போல் மின்னுகிறதே...இதன் பெயர் என்ன?

வாழ்க்கையின் சமன்பாடுகள் புதிரானவை. சதுரங்கப்பலகையில் ஒருபுறம் நானும் மறுபுறம் விதியுமாக ஆடிய ஆட்டத்தில் நானே தோல்வியை தழுவியிருக்கிறேன். இந்த தோல்வியை ஈடுசெய்யப்போவது எது? ஜே.பி என்னை மறந்திருப்பானா...இல்லை வாய்ப்பே இல்லை...என்னைப் போலத்தான் அவனும் வாழ்ந்திருக்க வேண்டும்...! 
மதிய உணவிற்குப்பின் அன்று அசந்து தூங்கியவளை சஞ்சய் வந்து எழுப்பினான்.
''அம்மா...அருண் வந்தருக்காரும்மா...சீக்கிரம் கீழே வா....அம்மா டோண்ட் கெட் எமோஷன்...ஓ.கே?"
துள்ளி எழுந்தேன். அருண் என்னிலிருந்து உதித்திருக்க வேண்டியவன்...என் உதிரம் குடித்து, என் உயிரை சுவாசித்து என் சதையை தின்று என்னிலிருந்து பிரிந்து இந்த மண்ணில் விழுந்திருக்க வேண்டியவன்...!
சுழலும் மரப்படிகளில் வேகமாக இறங்கி கதவருகே மறைந்து நின்று அருணை பார்த்தேன்....பார்த்தேன் என்று சொல்வதை விட அவனை பார்வையாலே அள்ளிப்பருகினேன் என்றே சொல்லவேண்டும். அவனே தான் ...அன்று பார்த்த அதே ஜே.பியின் இளமை வடிவம்...!
வேகமாக மூச்சு வாங்கி வந்து நின்றவளை பார்த்து வணங்கினான் அருண்.
''வணக்கம்...ஆண்ட்டி''
''நான் உனக்கு ஆண்ட்டி இல்ல...அம்மா"
சஞ்சய் அதிர்ந்து போய் ''அம்மா...ப்ளீஸ்''
அருண் ''இருக்கட்டும் சஞ்சய்...அம்மான்னு தான் இருக்கட்டுமே...அதுனால என்ன இப்போ''
''அருண்....அப்பா எப்படி இருக்காரு...எனக்கு உங்க அப்பாவை நல்லாத் தெரியும்...சஞ்சய் சொன்னானா?''
''இல்லியே...எங்கப்பாவை உங்களுக்கு எப்படி தெரியும்''
''அவர் திருநெல்வேலியில ரெப்ரெசெண்டேட்டிவா வேலை பார்த்த போது எங்க காம்பௌண்ட்ல தான் தங்கியிருந்தார்... உனக்கு ஒண்ணு சொல்லட்டுமா...நான் உங்கப்பாவுக்கு ப்ரபோஸ் பண்ணினேன்...அவர் குடும்பச்சூழல் ஐ காண்ட் அஃபோர்ட் லவ் நௌ அப்படின்னுட்டார்...''
சஞ்சய் ''அம்மா...ப்ளீஸ் இப்போ பழசைப் போட்டு கிளறாதே...!''
அருண் '' சஞ்சய்....லீவ் ஹெர் அலோன்...நீங்க சொல்லுங்கம்மா''
''இனிமேல் சொல்றதுக்கு ஒண்ணுமே இல்லப்பா...இனி இதைப்பேசி என்னாகப்போகுது...உனக்கு என்ன பிடிக்கும்னு சொல்லு அம்மா செஞ்சு தாரேன்....வடை செய்யட்டுமா இல்லை பனியாரம் செய்யட்டுமா...உனக்கு பனியாரம் பிடிக்குமா?''
''சஞ்சய் நீ போய் கொஞ்சம் வெல்லம் மட்டும் வாங்கியாந்துடு...''
''சார் ஒரு ஃபைவ் மினிட்ஸ் வந்துடுறேன்'' சஞ்சய் வெளியே கிளம்பினான்.
''அருண்...எப்போ ஐ.ஏ.எஸ் கிளீயர் பண்ணின?''
''இப்போ தான் இரண்டரை வருசம் ஆச்சு"
''அதுக்கு முன்னாடி...''
''2012ல்ல பி.டெக் மெக்கானிக்கல் மெட்ராஸ் ஐ.ஐ.டில முடிச்சிட்டு லார்சன் அண்ட் டூப்ரோல  வொர்க் பண்ணினேன்...'அப்புறம் ஐ,ஏ.எஸ் கிளீயர் பண்ணினதும் சென்னைல ராஜ்பவன்ல போஸ்டிங்...அங்கே இரண்டு வருசம் இருந்தேன். அப்புறம் செகரட்ரியேட்ல ஆறுமாதம்...இப்போ இங்கே வந்துருக்கேன்..."
அப்பா எப்பவாவது என்னை பற்றி பேசிருக்காரா?''
''எனக்கு தெரிஞ்சு இல்லை...ஆனால் அவர் உங்களை மறந்துருப்பாருன்னு நான் நம்பலை...''
''ஏன்...எப்படி அவ்வளவு உறுதியா சொல்ற?''
''தெரியலை...My intuition says so...''
அவன் கைகளை பிடித்தேன்....''அப்படியே அவரை மாதிரியே பேசுற''
சஞ்சய் வெல்லத்தோடு வந்தான்....நான் அவனை தொட்டுப்பார்த்த திருப்தியுடன் சமையலறைக்குள் நுழைந்தேன்.

அருணுக்குள் பல்வேறு கேள்விகள்...விடைகாண இயலாமல் தவித்தான்.
இப்படி ஒரு பெண்ணை மறுக்க அப்பாவிற்கு எப்படி மனசு வந்தது....என்னதான் குடும்ப சூழல் என்றாலும் தானே வலியவந்து தனது காதலை வெளிப்படுத்திய பெண்ணை ஒரு ஆண் அவ்வளவு எளிதில் மறக்கமுடியுமா? அப்பா மறந்திருக்க மாட்டார்...ஏதேனும் ஒரு வடிவில் இந்த பெண்ணை நினைவுபடுத்திக்கொள்ளும் ஒரு முறையை அவர் கைக்கொண்டிருப்பார்...அது என்ன? what is that mechanism by which he never forgets this beautiful woman? பனியாரம் தின்றுவிட்டு நன்றி கூறி விட்டு காரை நோக்கி சஞ்சயுடன் அருண் நடந்தான். ஒரே ஒரு பதில் தான் இந்த அனைத்து கேள்விகளுக்கும்...அது என்ன?
சஞ்சய் கார் கதவை திறக்கும் போது அருணுக்கு மின்னலென வெட்டியது அந்த கேள்வி '' சஞ்சய்...அம்மாவோட பேரு என்ன?''
''சார்...என்ன கேட்டீங்க?''
''அம்மாவோட பேரு என்ன?''
''அருணா...அருணா விஸ்வநாதன்''
(முற்றும்)



1 comment: