Monday, December 18, 2017

செனெகல் - கோரே தீவு - மரணப்பாதை

செனெகல் - கோரே தீவு - மரணப்பாதை
----------------------------------------------------------------------------
எந்த நேரத்தில் நூராவின் தாய் நரகம் என்று சொன்னாரோ தெரியாது. ஆனால், ஐரோப்பிய சமூகத்தின் மீது தீராப்பழியாகவும் சாபத்தின் நிழலாகவும் நிரந்தரமாக நீடிக்கும் வடு அது என்பது அங்கே சென்ற பிறகு தான் புரிந்தது.
செனெகல் தலைநகர் டக்கார் துறைமுகத்திலிருந்து 2கி.மீ தூரமே எனினும் நடுவில் ஒரு போர்க்கப்பல் கவிழ்ந்து கிடப்பதால் சற்று தூரம் சுற்றி வந்து தீவில் பயணிகள் இறக்கிவிடப்படுவார்கள்.
கோரே தீவு ஒரு சிறிய தீவு. இன்று அங்கே எஞ்சி நிற்கும் சாட்சியங்கள் மனிதமனத்தின் கொடூர பக்கங்கள். ஆப்பிரிக்க தேசமெங்கும் கருப்பின மக்களை பிடித்து வந்து இங்கே தான் சங்கிலியால் பிணைத்து கட்டி வைப்பார்கள். ஒவ்வொரு அறையும் எட்டுக்கு எட்டு சதுர அடி அவ்வளவே. அதில் பன்னிரெண்டு ஆண்களை கைகளை பின்னால் வைத்து ஒரு இரும்புக்கழி கொண்டு கால்களோடு பிணைத்து சங்கிலியால் பூட்டி விடுவார்கள். பெண்களுக்கு ஒரே ஒரு சலுகை அவர்களுடைய அறையில் சிறு நீர் கழிக்க ஒரு குழி உண்டு. ஆண்களுக்கு அதுவும் இல்லை. இங்கு தான் உலகில் முதல்முதலாக பிளேக் என்னும் தொற்றுவியாதி பலநூறு மக்களை காவு வாங்கியது . சிறுவர்களும் இந்த அடிமை வியாபாரத்தில் உண்டு. அவர்களின் வயதுக்கேற்ற விலை. வயதை கண்டுபிடிக்க குழந்தைகளின் பற்களை கொண்டு கணக்கிடுவார்களாம்.
உள்ளே நுழைந்ததும் இருபுறமும் படிக்கட்டுக்கள் உள்ள மேல்த்தளத்திற்கு நூரா அழைத்து சென்றார். அது இன்று யுனெஸ்கோவின் பாதுகாப்பில் அருங்காட்சியமாக பராமரிக்கப்படுகிறது. அடிமைவியாபாரம் நடத்தியோர் பயன்படுத்திய சங்கிலி விலங்குகள், துப்பாக்கிகள் புகைப்படங்கள், பெயர் அட்டவணைகள் காணக்கிடைக்கின்றன.

படிக்கட்டின் கீழே தான் அடிமைகளுக்கான அறைகள். கப்பலிலிருந்து இறக்கப்பட்டதும் இங்கே தான் ஒரு வாரத்திலிருந்து பத்து நாட்கள் வரை அடைத்து வைப்பார்கள். ''ப'' வடிவில் இருக்கும் அந்த பிராந்தியத்தில் வலதுபுறம் நான்கு அறைகள் ஆண்களுக்கு எதிர்த்திசையில் நான்கு அறைகள் பெண்களுக்கு. படிக்கட்டுகளின் கீழே செங்கோண முக்கோண வடிவில் இருப்பது தண்டனை அறை. நான்கு பேர் கூட இருக்க முடியாத அந்த அறையில் 10பேரை திணித்து மூடி விடுவார்கள். மறுநாள் திறக்கும் போது இரண்டு அல்லது மூன்று பேர் செத்து போயிருப்பார்கள். பிணங்களை அகற்றி விட்டு அடுத்த இரண்டு பேர்களை திணித்து விடுவார்கள். கண் முன்னே சகமனிதன் கொஞ்சம் கொஞ்சமாக மரணத்தை தழுவுவதையும், மரணித்த பின்னால் சடலத்தோடு இரவு முழுவதும் கழிப்பார்கள்.
தப்பிக்க முயற்சிக்கும் அடிமைகள் சுட்டுக்கொள்ளப்படுவார்கள். அவர்களை சுடுவதற்கு பிரத்யேக துப்பாக்கிகளும் அங்குண்டு. அவர்கள் விதவிதமான சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்படுவது வாடிக்கை. பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானார்கள். அதில் சிலர் கர்ப்பம் தரித்தால் அவர்களுக்கு பிறக்கும் குழந்தையும் அடிமை என்ற விதியும் உண்டு. அடிமைகளாக விற்கப்படுவோர் செய்யும் வேலைக்கு சம்பளம் என்று எதுவும் கிடையாது. உணவும் சொற்ப உடையும் மட்டுமே. இன்று மேற்கு ஐரோப்பா மின்னுவதற்கு காரணம் கருப்பின மக்களின் வியர்வையும் ரத்தமுமே காரணம்.
1997ஆம் ஆண்டு இங்கே வருகை தந்த நெல்சன் மண்டேலா, தண்டனை அறையை பார்த்ததும் கதறி அழுததாக நூரா சொன்னார்.
மானுடம் கண்ட அந்த மாபெரும் போராளியையே நிலைகுலையச் செய்த இடம் கோரே தீவு. வெடித்து அழுத அந்த மனிதன் கேட்டார் ''என் மக்கள் செய்த பிழை என்ன...கருப்பாக பிறந்தது ஒரு குற்றமா...அது இயற்கையின் தேர்வல்லவா? அதற்கு இப்படி ஒரு தண்டனையா?'' இந்த கேள்விக்கு இப்போது விடை கண்டும் பயனில்லை.


அடிமைகளை இந்த அறைகளிலிருந்து பத்து நாட்கள் கழித்து வேறு அறைக்கு மாற்றுவார்கள். அங்கே நாற்பது நாட்கள் வைத்திருப்பார்கள். இந்த அறையின் கட்டுமானம் சற்று வித்தியாசமானது. இந்த அறைகள் இருபக்கமும் முனையில் குவிந்து கப்பலின் தோற்றத்தை ஒத்து இருக்கும். கப்பலில் நாற்பது நாட்கள் பயணத்திற்கு அடிமைகள் தாங்குகிறார்களா என்ற பரிசோதனையில் அடிமைகள் தேர்வாக வேண்டும். அவர்ககள் மட்டுமே கலிஃபோர்னியாவிற்கோ கியுபாவின் கரும்பு தோட்டத்திற்கோ அல்லது பிரேசிலுக்கோ அனுப்பப்படுவார்கள். யார் வாங்குகிறார்கள் என்பதை பொறுத்து அடிமைகள் பயணிக்கும் திசைகள் மாறும். போர்த்துகீசியர்கள் வாங்கினால் பிரேசிலுக்கும் ஸ்பானியர்கள் வாங்கினால் கியுபாவிற்கும் பயணிக்க நேரும்.


அடிமைகள் தெரிவு செய்யப்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்படுவதற்கு முன்னால் பெயர்கள் கண்டிப்பாக மாற்றப்படும். இரண்டு அல்லது மூன்று தலைமுறைகளுக்கு பின் அவர்களுக்கு தங்களது வேர் தெரியாது அறுபட்டு போகும். இன்று அமெரிக்காவில் இருக்கும் கருப்பின மக்களுக்கு தங்கள் வேர் தெரியாது. இன்று ப்ரேசிலில் இருப்போருக்கும் கியுபாவில் இருப்போருக்கும் இதுவே நிலை.
அடிமை சந்தை பல்கி பெருகிய காலத்தில் இதை எதிர்த்து குரலும் எழுப்பப்பட்டது. ஐரோப்பா முழுக்க பல்வேறு கல்வியாளர்கள், சமூக சீர்திருத்தவாதிகள் சிறு சலசலப்பை எழுப்பினார்கள். ஒலௌதா எகியுனோ, வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் போன்றோர் முக்கியமான நபர்கள்.
முதலாளித்துவத்திற்கு உதவ எப்போதுமே ஒரு படித்த சிந்தனையாளர் கூட்டம் இருக்கத்தானே செய்யும். இவர்களின் குரலை நசுக்க மிக முக்கியமான அறிவுசார் ஆராய்ச்சிகள் துவக்கப்பட்டன. அதில் நிறுவப்பட்ட துறைக்கு ஃப்ரெனாலஜி (தமிழில்: மண்டை ஓட்டியல்) என்று பெயர். கருப்பின மக்களை மனித இனத்தில் வைத்திருந்தால் தானே இந்த பிரச்சினை? அதனால் மண்டை ஓட்டியல் ஆராய்ச்சி வாயிலாக இவர்கள் பரிணாம வளர்ச்சியில் மனிதனுக்கும் குரங்குக்கும் இடைப்பட்ட ஒரு இனம் என்று நிரூபிக்கும் ஆராய்ச்சி முடிவுகள் வெளிவரத் துவங்கின. ஆனால் மனித உரிமைப்போராளிகள் தொடர்ந்து போராடினர். ஆப்ரஹாம் லிங்கன் தனது உயிரை பலி கொடுத்தார். கடைசியாக மார்டின் லூதர் கிங் வரை பல உயிர்களை பலிகொடுத்தே மனிதனாக அங்கீகாரம் பெற்றனர். கால் நூற்றாண்டு விடுதலை கண்ட தென் ஆப்பிரிகாவில் இன்றும் சமூக அந்தஸ்து மிகப்பெரும் கேள்விக்குறியே. (செனெகல் பயணம் நிறைவு பெற்றது)






No comments:

Post a Comment