Tuesday, December 12, 2017

ஆப்பிரிக்காவின் பரிதாபம் - செனெகல் (21-08-2017)

கினியாவிலிருந்து செனெகல்....டக்காரை நோக்கி...!
இயற்கைக்கு பல்வேறு முகங்கள் உண்டு. அவற்றில் அழகானது, அமைதியானது, கோரமானது, கொடூரமானது என்று பலவகை உண்டு. செனெகலின் தலைநகரான டக்கார் (Dakar) இயற்கையின் அழகான முகங்களில் ஒன்று. கினியாவின் தலைநகரான கொனாக்ரியிலிருந்து டக்கார் ஒரு மணி நேரப்பயணம். விமான நிலையம் வரும் வழியில் பெருமழை நகரத்தை திணறடித்துக் கொண்டிருந்தது. வழக்கமான போக்குவரத்து நெரிசலுடன் மழையும் சேர்ந்து கொள்ள நகரமே மூச்சு திணறிக்கொண்டிருந்தது. வழக்கம் போல 15கி.மீ தூரத்தை 2மணி நேரத்தில் கடந்து விமான நிலையம் வந்து ஏர்கோத்திவார் (ஐவரி கோஸ்ட் நாட்டை சேர்ந்த விமான நிறுவனம்) விமான கவுண்டரை அணுகி நுழைவுச்சீட்டு கேட்டேன். ஒரு நிமிடத்தில் முடியும் இந்த வேலை பதினைந்து நிமிடமாகியும் முடியவில்லை. கையில் போர்டிங் பாஸ் வந்த போது தான் எனக்கு காரணம் புரிந்தது. அது முழுக்க முழுக்க கையால் எழுதப்பட்டிருந்தது. உலகில் எந்தவொரு விமான நிறுவனமும் இப்படி போர்டிங் பாஸ் வழங்கி நான் பார்த்ததில்லை. காரணம் கேட்டபோது அந்த சிப்பந்தி ''இங்கே பிரிண்டர் கிடையாது சார்., எமிரேட்ஸ் கவுண்டரில் மட்டும் தான் இருக்கும்., நாங்கள் மதியம் சாப்பிடப்போகும் போது பயணிகளின் பெயர் பட்டியலை எடுத்துட்டு போயி எழுதி வச்சிடுவோம்., இன்னைக்கு அது முடியலை'' என்றார். அவர் மீது பரிதாபம் கொள்ள முடிந்ததே ஒழிய கோபம் கொள்ள முடியவில்லை.
கொனாக்ரிக்கும் டக்காருக்கும் இடையே அதிக தூரமில்லை. டக்கார் செல்ல விசா தேவையில்லை. யாரும் எப்போதும் செல்லலாம். புதிய ஜனாதிபதி மாக் கி சால் வந்தது முதல் இந்த எளிமையான ஏற்பாடு. விமான நிலையத்தில் வரவேற்க தோழி நூரா மிலேஹம் காத்திருந்தார். வாழ்க்கையில் நான் சந்தித்த எத்தனையோ பெண்களில் நூராவிற்கு ஒரு தனி இடம் உண்டு.  அவரது குடும்பம் பாலஸ்தீனத்தில் இருந்து குடிப்பெயர்ந்த ஒன்று. 1970களின் துவக்கத்தில் இஸ்ரேலில் ஏற்பட்ட ஒரு கலவரத்தில் அராபியர்களை யூதப்படைகள் வேட்டையாடத் துவங்கிய ஒரு நள்ளிரவில் நூராவின் தந்தை தனது நான்கு குழந்தைகளுடன் தப்பி ஓடி வந்தார். நூராவின் தந்தை முகம்மது அபுபக்கர் ஒரு கட்டிட கூலித்தொழிலாளி. அப்போது நூராவிற்கு வயது ஐந்து. அவரது அண்ணனுக்கு வயது ஏழு. தம்பிக்கு வயது மூன்று. அடுத்ததாக ஒரு தங்கை ஒரு வயது. ஆசியாவும் ஆப்பிரிக்காவும் சந்திக்கும் சினாய் தீபகற்பத்திற்கு அடைக்கலம் புகுந்தார்.  சினாய் தீபகற்பத்தில் வேலை வாய்ப்புக்கள் சரியாக கிடைக்காத காரணத்தால் ஒரு மாதம் மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்தது. அங்கிருந்து அலெக்சாண்ரியாவில் ஒரு பணக்காரரின் வீட்டில் வீட்டு வேலை செய்ய நூராவின் தாய்க்கு வாய்ப்பு கிடைத்தது. நூராவின் தாய் ஆலியாவிற்கு தற்போது வயது 70. வயது முதிர்ச்சி காரணமாகவோ கடின உடல் உழைப்பு காரணமாகவோ மூட்டுகள் தேய்ந்து போய் அதிகம் நடமாட முடியாமல் இருக்கிறார். எனக்கு அவரை பார்க்கும் போதெல்லாம் ஏதோ ஒரு அராபிய மகாராணியை பார்க்கும் பிரமை தோன்றும். இப்பொது முதுமையின் தடயங்கள் முகத்தில் தென்பட்டாலும் அவரது கண்களில் எப்போதும் ஒரு அமைதியும் கருணையும் தென்படும். ஒரு மூன்று மாதத்தில் அந்த பணக்கார முதலாளியின் நடவடிக்கைகளில் மாறுதல் தென்பட ஆரம்பித்தது. நூராவின் தந்தையை அடிக்கடி வெளியூருக்கு அனுப்பி விட்டு அந்த தனிமையில் நூராவின் தாயை அடைய முயற்சி செய்தார். இதை அறிந்த அந்த பணக்காரரின் மனைவி ஒரு நள்ளிரவில் குடும்பத்தை ஒரு சிறிய சரக்குக் கப்பலில் ஏற்றி தப்பிக்க வைத்தார். கைக்குழந்தையுடனும் பச்சிளங்குழந்தைகளுடனும் அந்த பெற்றோர் கப்பலேறினர். கையில் ஆறு ரொட்டி துண்டுகள். குடிப்பதற்கு குடிநீர். சிறிதளவு பணம். எங்கே அந்த கப்பல் போகிறது என்று யாருக்கும் தெரியாது. கோதுமை, உருளைக்கிழங்கு, வெங்காய மூட்டைகளுக்கு மத்தியில் அந்த ஆறு ஜீவன்கள் பயணப்பட்டன. நான் ஒருமுறை நூராவின் தாயாரிடன் கேட்டேன் ''எந்த தைரியத்தில் இம்மாதிரி பயணப்பட்டீர்கள்? பாலஸ்தீனத்தில் எங்காவது ஒளிந்து கொண்டு கலவரம் முடிந்தவுடன் சராசரி வாழ்க்கை வாழ்ந்திருக்கலாமே?''
ஆலியா சொன்னார் '' ஜேசீ கலவரம் எப்படி நடக்கும் என்று உனக்கு தெரிய வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட பூமியில் பிறந்து வளர்ந்தவன் நீ. கலவரத்தை இஸ்ரேலிய யூத அரசு ஏன் நடத்தியது, இப்போதும் நடத்துகிறது என்று உனக்கு தெரியுமா? கலவரம் என்பது அவர்களுடைய ராணுவத்திற்கு பயிற்சி. ராணுவத்திற்கு உணர்ச்சிகள் மரத்து அற்றுப்போக வேண்டும். அவர்கள் உயிரின் வேதனையை நேரில் கண்டு பழக வேண்டும். பத்து முறை பார்த்தால் பதினோராவது முறை பதட்டம் வராது மாறாக துணிச்சல் வரும்.  உனக்கு ஒன்று சொல்லட்டுமா? பெரிய மைதானத்தில் ஐம்பது அடி நீளமுள்ள கூர்மையான முள்கம்பியை தொய்வின்றி கட்டுவார்கள். பிடித்துவைத்துள்ள மக்களில் சிறு குழந்தையை பெற்றவர்களிடமிருந்து பிடுங்குவார்கள். இருவர் குழந்தையின் கைகளை ஆளுக்கொன்றாக பிடித்துக்கொள்ள இருவர் குழந்தையின் கால்களை ஆளுக்கொன்றாக பிடித்துக்கொள்ள முள்கம்பியின் மத்தியில் குழந்தையில் உடலை அழுத்திய வண்ணம் நால்வரும் ஓடுவார்கள். பெற்றவர்கள் கண் முன்னாலேயே குழந்தை குடல் சரிந்து துடிதுடித்துச் சாகும். அவர்களுக்கு இது ஒரு பயிற்சி. உனக்கு அதைக்காண மனோதிடம் இருக்கிறதா? நூராவிற்கு இப்போது வயது ஐம்பது. இப்போது கூட அவளுக்கு தும்மல் வந்தாலே எனக்கு பதறுகிறது. அனைத்து பெற்றோர்களுக்குமே அப்படித்தானே? அது ஒரு சாபம். தன் கண் முன்னே பிள்ளைகளை துள்ளத்துடிக்க பறிகொடுப்பது...பெரும் சாபம்...வயது பெண்களோ அல்லது என்னை மாதிரி பல குழந்தைகளை பெற்ற தாய்மார்களோ கிடைத்தால் போதும் குதறி விடுவார்கள். பெற்றோர் முன்பாக பிள்ளைகளையும் கணவன் முன்பாக மனைவியையும்...ச்சே...நாங்கள் அந்த சாபக்கேட்டிலிருந்து தப்பிக்கவே பாலஸ்தீனத்திலிருந்து ஓடி வந்தோம்....இப்போது நினைத்தாலும் பதறுகிறது. எங்கள் நிலத்தில் நாங்கள் சிந்திய ரத்தமும் கண்ணீரும் கொஞ்ச நஞ்சமல்ல.''
நான் கேட்டேன் '' அந்த சூழலை எதிர்கொள்ளும் ஆற்றலை எங்கிருந்து பெற்றீர்கள்?''
காஸா எல்லைப்பகுதியிலிருந்து தப்பித்த போதும் பதினேழு நாட்கள் சரக்குக் கப்பலில் பயணித்த போதும் குரானின் ஹதீஸ்களை ஓதிக்கொண்டே இருந்தோம். பகலில் வெயிலில் குழந்தைகள் வியர்த்து மயங்கும். இரவில் பனியில் அவர்களது உடல்கள் நடுங்கும். உருளைக்கிழங்கு இருந்த சாக்குகளை கட்டிப்பிடித்துக் கொண்டு தூங்குவோம். அது கொஞ்சம் கதகதப்பாக இருக்கும். கையில் இருந்த ஆறு ரொட்டித்துண்டுகளையும் மூட்டையிலிருந்த வெங்காயங்களையும் மட்டுமே உண்டோம். இயற்கை உபாதைகளை கழிக்க மிகவும் கஷ்டப்பட்டோம். அலெக்சாண்டிரியாவிலிருந்து புறப்பட்ட அந்த கப்பல் மொராக்கோ தேசத்தை வந்தடைந்தது. அந்தக்கப்பலை செலுத்திய மாலுமிகள் எங்களை அங்கிருந்து மற்றுமொரு கப்பலில் ஏற்றிவிட்டார்கள். அவரகள் மிகவும் நல்ல மனிதர்கள். தங்களிடம் மீதமிருந்த உணவுப்பொருட்களையும் குடி நீரையும் சிறிது அமெரிக்க டாலர்களையும் கொடுத்துவிட்டு சென்றார்கள். அந்த கப்பல் செனிகல் தேசத்தின் டக்காரை வந்தடைந்த போது நூராவின் தந்தை மிகவும் பலவீனமாகி விட்டார். ஒருவழியாக பாதுகாப்பான இடத்திற்கு வந்து விட்டோம் என்று நிம்மதி பிறந்தது. டக்காருக்கு அருகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த ஒரு படகில் எங்களை இறக்கி விட்டார்கள். போதிய ஆவணங்கள் இல்லாததால் துறைமுகம் வழியாக நுழைய முடியாது. இறங்கி விட்டோம் ஆனால் எங்கே தங்குவது என்ன செய்வது என்று ஒன்றும் புரியவில்லை. ஒரு மீனவக்குடியிருப்பில் உதவி கேட்டு போய் நின்றோம். கருணைமிக்க அவர்கள் எங்கள் நிலைமையைக் கண்டு மனமிறங்கி ஒரு தகரக் கொட்டகையையும் சில பாத்திரங்களையும் துணிமணிகளையும் கொடுத்து உதவினர். நூரா பெரிய மனுஷி ஆகும் வரை நான்கு குழந்தைகளுடன் நான் அங்கே தான் இருந்தேன்''
எனக்கு வியப்பாக இருந்தது. உடனே கேட்டேன். ''நான் என்றால் நூராவின் அப்பா எங்கே சென்றார்?''
பெருகி வந்த கண்ணீரை அடக்க முடியாமல் சொன்னார் ''டக்கார் வந்திறங்கிய முதல் நாள் எங்களை வீட்டில் அமர்த்திவிட்டு மீனவர்களுடன் கடலுக்கு சென்றவர் பத்தே நிமிடத்தின் சடலமாக திரும்பி வந்தார்''
எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஒரு நிமிடம் எனது புலன்கள் செயலற்று போவதை நானே உணர்ந்தேன். மெதுவாக அவரது கரம் பற்றினேன் '' என்ன நடந்தது?''
''தெரியலை ஜேசீ...தெரியலை...இன்னவரைக்கும் தெரியலை...படகை கரையிலிருந்து கடலுக்குள் தள்ளுமாறு மீனவர்கள் பணிக்க அதிக அழுத்தம் கொடுத்து தள்ளியவரின் இதயம் நின்று போனது...எங்கள் வாழ்க்கையும் முடிந்து போனது'' (தொடரும்)








3 comments:

  1. பாலஸ்தினர்களின் வாழ்கையோ ஒரு போராட்டம் தான்

    ReplyDelete
  2. பாலஸ்தினர்களின் வாழ்கையோ ஒரு போராட்டம் தான்

    ReplyDelete
  3. We are blessed to born in India.

    ReplyDelete