Tuesday, April 12, 2016

நைரோபியில் பருப்பு ரசம்: 05-04-2016


எனக்கு பிடித்தமான பொழுதுபோக்குகளில் ஒன்று சமைப்பது. சமையல் இன்றும் ஆண்களுக்கான துறை என்று தீவிரமாக வாதாடும் கழகத்தின் ''நிரந்தர பொதுச்செயலாளர்'' மற்றும் ''கழகத்தின் காவல் தெய்வம்'' நான். எனது கென்ய தேசத்து இறக்குமதிளார் மற்றும் விநியோகிப்பாளர் துளு பேசும் கன்னடர், அவர் மனைவி மராத்தியர். கண்டிப்பாக வீட்டிற்கு வந்து பருப்பு ரசம் வைத்துத்தர வேண்டுமென்று இரண்டு ஆண்டுகளாக தொடர் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருந்தார். இந்தமுறை தப்ப இயலவில்லை. செவ்வாய் கிழமை கடுமையான பணி அழுத்தம் காரணமாக அதிலிருந்து விடுவித்துக் கொள்ள நண்பர் ஒரு இரவு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்தார். நான் பருப்புரசம் வைப்பதாக ஒப்புக்கொண்டேன். நன்கு பராமரிக்கப்பட்ட அந்த அடுமனையில் துரிதமாக செயல்பட்டு பருப்பு ரசம் வைத்தேன். இந்த ஊரில் துவரம் பருப்பை ஏதோ எண்ணெயில் ஊறவைத்துக் கொடுக்கிறார்கள்., ஏனென்று தெரியவில்லை. அதைக் கழுவ மட்டும் நேரம் எடுத்துக் கொண்டேன். நான் பிரம்மசாரியாக திருப்பதியிலும் ஜோத்பூரிலும் குப்பைக் கொட்டிய காலங்களில் சமைத்து சாப்பிடுவது வழக்கம். மிகத்துரிதமாக அடுமனையில் செயல்படுவது எனது பாணி. திருமணத்திற்கு பின் என் மனைவி அடுமனையை தனது சர்வாதிகாரத்தை பயன்படுத்தி எடுத்துக்கொண்டதால் 13ஆண்டுகளாக அவள் மட்டுமே ஆட்சி செய்த துறை அது. எனவே, நீண்ட இடைவெளிக்கு பின்னால் சமையல் செய்தது ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது. பருப்பு ரசத்திற்கு இறுதிகட்டமாக சிறிதளவு நெய்யில் கடுகு, உ.பருப்பு. பட்டை வற்றல், கருவேப்பிலை போட்டு சிறுது பெருங்காயமும் இட்டு தாளித்து தட்டை வைத்து மூடி 5 நிமிடம் கழித்து திறக்க சொன்னேன். நண்பரின் மனைவி திறந்த பொழுது தனது இரண்டாவது பீர் குப்பியை காலி செய்திருந்த நண்பரை ரசத்தின் மணம் அடுமனைக்கு இழுத்துக் கொண்டு வந்தது. அந்த வீட்டிலிருந்தோர் மட்டுமல்ல வானம் பெருமழை பொழிந்து ரசத்தை உண்ணும் அனுபவத்தை பிரம்மாண்டப்படுத்தியது....இனி ஒவ்வொரு முறை நைரோபி செல்லும் போதும் கண்டிப்பாக நான் பருப்பு ரசம் வைப்பேன்...ஆனால் அப்போதெல்லாம் மழை பொழியுமா....? தெரியாது...!

No comments:

Post a Comment