Saturday, April 23, 2016

அடையாறு அனந்தபத்மநாபனும் மணிமேகலையும்: 23-04-2016

காலை அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பிகொண்டிருந்தேன். என் பன்மாடிக்குடிலின் மேலடுக்கில் குடியிருக்கும் நண்பர் என்னை பதட்டத்தோடு அணுகினார்
''ஜேசீ இன்னைக்கு ஆஃபிஸ் போறீங்களா? சாந்தோம்லதான உங்க ஆஃபிஸ்? என்னைய அடையாறில் ட்ராப் செய்யமுடியுமா?
ஏன் சார் என்னாச்சு...எதுக்கு இவ்வளவு டென்சன்?
''இல்ல...வந்து இன்னைக்கி என்னோட ஜென்மநட்சத்திரம். அதனாலஅடையார் அனந்தபத்மநாபசாமி கோயிலில் போய்அர்ச்சனை செய்யணும்''
''ஓ...உங்களுக்கு பர்த்டேயா...பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்...''
''அட அது இல்லையா...அதுஏப்ரல் 26ஆம் தேதி...இது வந்து நட்சத்திரநாள்...எங்களுக்கு நட்சத்திரம் தான் முக்கியம்''
''சரி...கோயில்அடையாறில் எங்கே இருக்கு?''
கேட்டதற்கு காரணம் இருக்கிறது.  மெயின்ரோட்டில்   என்றால் இறக்கி விட்டுட்டு நாமபாட்டுக்கு போயிடலாம். உள்ளே என்றால் ஒருவழிப்பாதை என்றும் நோஎன்ட்ரி என்றும் பல்வேறு விடைகாணஇயலா புதிர்கள் நிரம்பிய Maze என்பார்களே அதுமாதிரியான மாயவலைஅது.
என்னது...கோயில்தெரியாதா? காந்திநகர்ல இருக்கே...ரொம்பஃபேமசான டெம்ப்லாச்சே அது...இதுகூடவா தெரியாது'' நண்பர்வியப்பில்ஆழ்ந்தார்.
''காந்திநகர்ல க்ராண்ட்ஸ்வீட்ஸ் தெரியும்... பொருளுக்கு பணம் கட்டிவிட்டு காத்திருக்கையில் சூடான பொங்கலோ சுவையான சுண்டலோ தருவார்கள். இரண்டுமுறை சாப்பிட்டிருக்கிறேன்...ஆனால் கோயிலை நான் பாக்கலையே''
''அங்கேயிருந்து நேரே போனா....மலர் ஹாஸ்பிடல் வருமே''  நண்பர்.
தெரியுமே...2010 நவம்பர் மாதம் போயிருந்தேனே... நண்பர் கிஷோர் அட்மிட் ஆயிருந்தார் .சைலஜா என்னும் மலையாளி நர்ஸ்தான் அவருக்கு ஈசிஜி எடுத்தார் .அவருக்கு இடதுகையில் ஆறுவிரல் இருந்தது. வலதுகை மோதிரவிரலில் பவளம்பதித்த மோதிரம் போட்டிருந்தார். இடதுகால் சாக்ஸ் கொஞ்சம் கிழிந்திருந்தது...ஊர் கோட்டயம் மாவட்டத்தில் உள்ள சங்கனாச்சேரி...பத்மனாபசாமி கோயிலை நான் பாக்கலையே...!
க்ராண்ஸ் ஸ்வீட்டுக்கும் மலர் ஹாஸ்பிடலுக்கும் நடுவிலே தான் கோயில்இருக்கு...அடக்கடவுளே...  மாமிமட்டும் என் வண்டியில் ப்யூட்டிபார்லர் போகாம இருந்திருந்தா நானே போயிருப்பேன்... இப்போ வர்றீங்களா இல்லையா?
டென்சன்  ஆகாதீங்க சார்...லெஸ் டென்சன் மோர் வொர்க்...மோர் டென்சன் லெஸ்வொர்க்...வாங்கபோகலாம்'' என்றேன்.

எனக்கு இந்த மாதிரி அசாதாரணமான சூழலில் தான் கோயிலுக்கு போகும் வாய்ப்புக்கள் கிடைக்கின்றன. போனால் செருப்பு தொலைந்து போகும் அபாயம் இருப்பதை (Murphy's law) அனுபவஅறிவு தொடர்ந்து நினைவூட்டிக் கொண்டே இருக்கிறது. கடந்தமுறை ஐய்யப்பன்கோயிலில் என் செருப்பு    (எண் - 8) தொலைந்து போனதும் புதுசெருப்பு காதிம்ஸில் வாங்கினேன் (விலை 15% கழிவுபோக ரூ.819). அதை தொலைக்க மனமில்லை. இருப்பினும் நண்பருக்கு உதவவே வண்டியை கிளப்பினேன். கோயில் அவர் சொன்ன மாதிரி க்ராண்ஸ் ஸ்வீட்டுக்கும் மலர் ஹாஸ்பிடலுக்கும் நடுவிலே தான் கோயில் இருந்தது.
ஜேசீ...நீங்களும்வாங்களேன்...ரொம்ப சக்தி வாய்ந்த கோயில்...''

கோயில், மருத்துவமனை, குழந்தைகள் இருக்கும் வீடு, பெரியவர்கள் இருக்கும் வீட்டிற்கு போகும் போது வெறும்கையுடன் போகக்கூடாது என எனது பேராசிரியர்.கு.ஞானசம்பந்தன் சமீபத்தில் தான் அறிவுறுத்தியிருந்தார்.

நண்பரிடமே கேட்டேன் '' சார்..பெருமாளுக்குஎன்னபிடிக்கும்?''
''பெருமாள்அலங்காரப்பிரியர்...துளசி அல்லது தாமரை ஏதாவது வாங்கிக்கங்க...என்று என்னை சொல்லிவிட்டு அவர் அர்ச்சனை செட், தாமரைப்பூமாலை, ஒரு நெய்டப்பா என்று என்னென்னவோ வாங்கினார்.
நான் துளசிமாலை மட்டும் வாங்கினேன் (விலை ரூ.20)
கோயில் அதிநவீனமாகவும் சுத்தமாகவும் அமைதியாகவும் இருந்தது. உள்ளே நுழைந்தவுடன் விநாயகர் சன்னிதி. நண்பர் பிள்ளையாரை கண்டுகொள்ளாமல் பெருமாளை நோக்கி விரைந்தார். பத்மநாபசாமி ஆதிசேஷன் மீது பள்ளி கொண்டிருக்க அவருக்கு கீழே பூதேவி சீதேவி இருவரும் வீற்றிருக்க பெருமாளின் வலதுகரம் சிவலிங்கத்தை தொட்டபடி இருந்ததைக் காணமுடிந்தது.
அவரது  மேனி  முழுக்க தாமரைமலர்களாலும் சம்பங்கிமாலைகளாலும் துளசிஇலைகளாலும் மிகநேர்த்தியாக ஒருதேர்ந்த இசைக்கலைஞனின் தொகுக்கப்பட்ட இசைக்குறிப்புகள் போல் ஒழுங்காக வடிவமைக்கப்பட்டிருந்தன.  இது போன்ற அலங்காரம் செய்த பெருமாளை பார்த்துதான் ''பச்சைமாமலை போல்மேனி; பவளவாய் கமலச்செங்கண், அச்சுதா அமரரே..ஆயர்தம் கொழுந்தே...இச்சுவை ஞான்பெறினும்; இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டே அரங்கமா நகருளானே'' என ஆழ்வார் பாடியிருக்க வேண்டும்.
சன்னிதிக்கு நேரே மூன்றுவரிசை படிக்கட்டுக்கள் அமைக்கப்ப்ட்டிருந்தது. பக்தர்கள் அமர்ந்து தியானித்து கொண்டிருந்தனர். அர்ச்சனை முடிந்து தீபாராதனை காட்டும் போது முகத்திற்கும், மார்பிற்க்கும் பின்பு பாதத்திற்கும் காட்டப்பட்டது. பாதத்தை பார்க்கும் போது நண்பர் பரவசம் அடைந்தார். திரும்பி வந்தால் சக்கரத்தாழ்வார் சன்னிதி,  அடுத்து லக்ஷ்மி நரசிம்மர் சன்னிதி. அதற்கு எதிரே அரசமரம் சிவன்சன்னிதி என்று ஒரு போர்டு .நான் நண்பரை அங்கே துரத்தலாமா என்று யோசித்து பின்பு அதை கைவிட்டேன். பிள்ளையாரையே கைவிட்டவர் சிவனை என்ன செய்வார் என்று எண்ணி எடுத்த முடிவு அது.
ஆனால் நண்பரோ...ஜேசீ...நீங்க வேணும்னா போயி சிவன் சன்னிதியை பாத்துட்டு வாங்களேன்...நான் அங்கே வரமாட்டேன்'' என்றார் நண்பர்,
ஏன்...சார்'' என்றேன் நான் பரிதாபமாக...
நாங்கள் தீவிர வைணவர்கள்...எங்கள் வைணவ சம்பிரதாயத்தில் பெருமாளுக்குள்ளேயே எல்லாம் அடக்கம்...நீங்கபோயிட்டுவாங்க''
என்னடா...இது மதுரைக்கு வந்த சோதனை சரி வந்தது வந்தோம் அந்த மனிதனையும் பாத்துட்டு போவோமே என்று சென்றேன். மிக எளிமையான சன்னிதி. சிவலிங்கத்திற்கு மேலே ஒரு கூம்பு வடிவிலான பாத்திரம் தொங்கவிடப்பட்டிருந்தது. அதிலிருந்து சொட்டுசொட்டாக தீர்த்தம் வடிந்து சிவலிங்கத்திற்கு அபிசேகம் நடந்து கொண்டிருந்தது. அருகிலிருந்த பக்தர் ஒருவர் ''சார்..நீங்களும் கொஞ்சம் அந்த குழாய்ல தண்ணி பிடிச்சு ஊத்துங்க சார்'' என்றார்.
நானும் கொஞ்சம் தண்ணீர் பிடித்து ஊற்றினேன். அதற்குள் நண்பர் வெளியே வந்து கொடிமரத்தை வணங்கி பிரசாத வரிசையில் முண்ணனியில் நின்று கொண்டிருந்தார். அந்த வரிசையில் நின்றால் நான் அலுவலகம் போய் சேரமுடியாது என்ற காரணத்தினாலும் புதுசெருப்பு என்னவானது என்ற பதட்டத்தினாலும் வாசலை நோக்கி விரைந்தேன். நண்பர் ஆட்டோ பிடித்து செல்வதாக ஏற்பாடு.
நான் வண்டியை எடுக்க பூக்கடைக்கு வந்தேன். பிச்சைக்காரர்கள் வரிசையாய் அமர்ந்திருக்க எனது தற்போதைய கொள்கைப்படி ஆளுக்கு பத்துரூபாய் கொடுத்தேன்.  (இரண்டு வேளை அம்மா உணவகத்தில் சாப்பிட வழிசெய்யும் உபாயம்). பிளாட்ஃபாரத்தில் உக்காந்திருந்த இரண்டு வயது குழந்தை ஒன்று ''என்..கு..என்..கு'' என்று ஓடிவந்தது. கரியநிறமாய் இருந்தாலும் பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் வனப்பு.. எண்ணெயைப் பார்த்தே இராத தலைமுடி... கன்னத்தில் திருஷ்டிபொட்டு ...இடுப்பில் சிகப்பு அரைஞாண் கயிறு மட்டும்...துணி இல்லை... கண்களில் குறும்பு கலந்த சிரிப்பு..  .கையில் எப்போதோ யாரோ கொடுத்த லாலிப்பாப். சிறுகுழந்தை என்று எண்ணி இருபது ரூபாயை கொடுத்தேன். இப்போது குழந்தையின் கண்களில் வெற்றிப் புன்னகை. அடுத்த விநாடியே அது மறைந்து பணத்தை என்ன செய்வதென்று தெரியாத வியப்பு கலந்த பார்வை. திடீரென எங்கிருந்தோ முளைத்த ஒரு கரியகரம் அந்த பணத்தை பிடுங்கியது. பணத்தை பறி கொடுத்த குழந்தை வீறிட்டு அழத் தொடங்கியது. அந்த நபர் கீழேயிருந்த தனது துண்டை எடுத்து நிமிர்ந்த வேளையில் மற்றொரு கரம் அவர் கன்னத்தை தாக்கியது. அடிவாங்கியது அவர் என்றாலும் பொறி கலங்கியது போலிருந்தது எனக்கு.
குடிகார...நாயே...பச்சப்புள்ளகிட்டயிருந்து பணத்த புடுங்கற...குடுறா பணத்தை....''   அந்த நபர் பாதுகாப்பிற்காக வந்த தலைமை காவலர்.
சார்...நான் வேணும்னா அந்த குழந்தைக்கு பணம் கொடுத்துறேன் சார்...என்றேன் நான்.
அவரோ '' நீங்க போங்க சார்...இவனெல்லாம் உயிரோட விடக் கூடாது..குடிகார நாயி.''
அந்த நபர் துளியும் சலனமில்லாமல் இருபது ரூபாயை தூக்கி தலைமைக் காவலரிடம் கொடுத்து விட்டு சாலையின் எதிர்திசையை நோக்கி நடந்தார். இரண்டடி எடுத்து வைத்துவிட்டு அந்த பூக்காரியை நோக்கி ''ம்ம்...நீயெல்லாம்ஒருபொண்டாட்டி...தூ...'' துப்பிய எச்சில் வெயிலில் தகித்துக் கொண்டிருந்த தார்ச்சாலையின் மத்தியிலே போய் விழுந்தது.
''ஆமாமா...ஊரறிய கல்யாணம் பண்ணி கூட்டிட்டு வந்தபாரு'' குரல் வந்த திசையை நோக்கி பார்வையை திருப்பினேன். குனிந்தபடி பூக்கட்டி கொண்டிருந்த பெண்மணி துளியும் பதட்டப்படாமல் பூக்கட்டும் நேர்த்தியிலேயே வார்த்தைகளை உதிர்த்துக்கொண்டிருந்தாள்.
"குழந்தைக்கு பேரு என்னம்மா?
'' மணிமேகலை''
அடடா...கோவலன் & மாதவியின் புனிதப்படைப்பு. பொருத்தமான பெயர் தான். அமுதசுரபி கொண்டு இப்புவியில் பசிப்பிணி போக்கிய  கதாபாத்திரம் இன்று கையேந்தி நின்று கொண்டிருக்கிறது. அடுத்தமுறை அடையாறு பத்மனாபசாமி கோயிலுக்கு போகும் போது பெருமாளுக்கு துளசி வாங்குகிறேனோ இல்லையோ இரண்டு பிஸ்கட் பாக்கெட்டுகளும் ஒரு சிலேட்டும் இரண்டு பலப்பமும் மணிமேகலைக்கு வாங்கி கொண்டு போக வேண்டும்.


No comments:

Post a Comment