Tuesday, April 19, 2016

வீடு திரும்புதல்: 31 Aug'15

பாங்காங் சுவர்ண பூமி விமான நிலையத்தில் 10மணி நேரம் காத்திருப்புக்கு பின் தாய்தமிழகம் திரும்பினேன். வெளிநாட்டு விமான நிலையங்களில் காத்திருப்பது போன்ற ஒரு கொடுமையான விடயம் வேறொன்றும் இல்லை. நான் இருந்த வாசலில் இருந்து எனது விமானத்திற்கு செல்லும் வாசல் 960மீட்டர் தூரத்தில் இருந்தது. அதாவது சுமார் ஒரு கிலோ மீட்டர். அது விமான நிலையம் மட்டுமல்ல., பெரும் வணிக வளாகமும் கூட. அனைத்து பொருள்களும் மிக மலிவான விலையில் கிடைத்தன. ஒரு காபியின் விலை 280ரூ. மற்றவற்றை உங்கள் ஊகத்திற்கே விட்டுவிடுகிறேன். இந்தியப் பயணிகள் ஸ்காட்ச் விஸ்கி வாங்குவதிலும் ஐரோப்பிய பயணிகள் வாசனை திரவியங்கள் வாங்குவதிலும் பேரார்வம் கொண்டிருந்தனர். நான் இரண்டுமே வாங்கவில்லை போதுமான அளவு பணமிருந்தும். குடிப்பதில்லை என்பதால் ஸ்காச் விஸ்கியும் குளிப்பதால் வாசனை திரவியங்களும் தேவைப்பட வில்லை.
களைத்துப்போய் காத்திருந்த வேலையில் விமானம் தாமதம் என்னும் செய்தி வந்தது. இந்த தகவலை எவ்வாறு என் மனைவிக்கு தெரிவிப்பது என்று குழம்பியிருந்தேன். மொபைல் போனில் வைஃபை இணைப்பை ஏற்படுத்த முயற்சித்து தோற்றுப்போனேன். இரண்டாம் தளத்தில் இலவச இணைய வசதி இருப்பதை கேள்விப்பட்டு விரைந்து ஓடினேன். முகனூல் பக்கத்தை திறந்து நண்பர்கள் யாரேனும் இணைப்பில் உள்ளனரா என்று தேடினேன். கவிஞர். சல்மா மட்டும் இருந்தார். அவருக்கு தகவல் தந்து மனைவியிடம் தெரிவிக்குமாறு கூறிவிட்டு விமானம் ஏறினேன்.
கவிஞர். சல்மா என் மனைவியை அழைத்து தகவலை தெரிவித்து விட்டார்... எனவே என் மனைவி பதட்டமில்லாமல் காத்திருந்தார். வீடு திரும்பினேன்...!

No comments:

Post a Comment