Monday, April 18, 2016

கி.பி.2254 மாசிக் களரி :




இரண்டாண்டுக்கு ஒருமுறை நிகழும் மாசிக்களரி எங்கள் குலதெய்வ வழிபாடு. இம்முறை ஒரு புதுவித அனுபவத்தை தந்தது. மதுரையிலிருந்து கமுதி, அங்கிருந்து சாயல்குடி செல்லும் வழியில் அமைந்துள்ள ஒரு சிறு கோயில். பகவதி அம்மனும் பரஞ்சோதி அம்மனும் இரு கன்னி தெய்வங்களாக வீற்றிருக்க, அவர்களுக்கும் அந்த இரு அம்மன்களின் வாரிசுகளான எங்களுக்கும் காவலாக தொட்டிச்சி, குப்பச்சி தொடங்கி செந்தளையன், மாசானக்கருப்பு ஈராக 18 காவல் தெய்வங்களும் உள்ள கோயில். மாசி அமாவாசைக்கு அடுத்த நாள் இவர்களை குலதெய்வமாகக் கொண்ட அனைத்து மக்களும் அந்த பிராந்தியத்தில் கூட நானும் எனது மனைவியும் மகனும் இணைந்து கொண்டோம். நண்பகல் சுமார் 12.30 மணியளவில் மாசானக்கருப்பு களரி ஆட கலுமரத்தை நோக்கி முழு உக்கிரத்துடன் ஓடிவர அதற்கென பிரத்தியேக வாத்தியங்கள் முழக்கப்பட்டன. ஒட்டு மொத்த பிராந்தியமே ஒரு சிதறுண்ட மனநிலையில் பித்து நிலையில் இருந்தது. எத்தனையோ ஆண்டுகளாக பார்த்து வரும் எனக்கு இந்த முறை அந்த வாத்தியக்கருவிகளில் இசையில் என் மனம் பேதலிக்கத் துவங்கியதை உணர்ந்தேன். ஒரு முப்பது நிமிடம் நானும் அந்த பரவச நிலையில் ஆழ்ந்திருக்க களரி ஆடிய மாசானக்கருப்பு பேய் பிடித்தவர்களை பேயோட்டத் துவங்கியது. வழக்கதிற்கு மாறாக, இம்முறை பல பெண் பேய்கள் சுடிதார் அணிந்து சவுக்கடி வாங்கின. சவுக்கின் சுழற்றலுக்கு பேய்கள் சிதறி ஓடின. நானும் களரி ஆட முடியுமா என்று அங்கிருந்த ஒரு பெரிசிடம்* கேட்டேன். என் பூர்விகத்தை கேட்டபின்பு அவர் ஒரு கணக்கு போட்டு 236ஆண்டுகள் கழித்து களரி ஆடும் முறை எங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும் என்றார். ஒவ்வொருமுறை பணி பொருட்டு இந்த தேசத்தை விட்டு அன்னிய தேசப் பயணம் மேற்கொள்ளும் போதும் எனது தந்தையார் சொல்லும் வார்த்தை ''தைரியமா போய்ட்டு வாப்பா...நீ போறதுக்கு முன்னாடி நம்ம மாசானகருப்பு அங்க நிக்கும்''. ஒட்டுமொத்த குடிமை சமூகமும் பாதுகாப்பற்ற சூழலில் வசிக்கும் புர்க்கின ஃபாசோ என்ற மேற்கு ஆப்பிரிக்க தேசத்திலும், கேளிக்கை அலைமோதும் தாய்லாந்திலும், அமைதி தவழும் மயான்மரிலும் மாசானக் கருப்பு என்னோடு இருப்பதை உணர்ந்திருக்கிறேன். 236 ஆண்டுகள் கழித்து அதாகப்பட்டது கி.பி 2254ஆம் வருடத்தில் நான் உயிரோடிருக்க மாட்டேன். ஆனால் என் வாரிசுகளோடு மாசானக் கருப்பு மட்டும் எப்போதும் இருக்கும்.
(*பெரியவர் என்றும் பாடம்)

No comments:

Post a Comment