Tuesday, April 12, 2016

காதல் திருமணமும் லெக் பீஸ் பிரியாணியும்: 11-04-2016








இன்று என்னுடன் பணிபுரியும் சகோ. எட்வின் அவர்களின் தம்பியின் திருமணம். அழைப்பிதழை பிரித்துப் பார்த்தவுடனேயே நான் இதில் பங்கு கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தேன்,. மணமகன் - ராபின்சன்; மணமகள் - வைஷ்ணவி...புரிஞ்சிருக்குமே...அதே தான். சாதிமறுப்பு மட்டுமல்ல...மத மறுப்பு திருமணமும் கூட. இதை தவறவிட்டால் மிகப்பெரும் வரலாற்றுப்பிழையாகி விடும். மேலும் விருந்தினர்களுக்கு கோழி பிரியாணியும் பன் அல்வாவும் வழங்கப்படும் என்று எட்வின் அளித்த உத்திரவாதம் இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவத்தை மேலும் அதிகப்படுத்தியது. அழைப்பிதலில் 7மணி என்று குறிப்பிட்டிருந்ததால் சரியான நேரத்திற்கு நாங்கள் சென்று விட்டோம். மணமகன் மட்டும் தேவாலயத்திலிருந்து சரியான நேரத்திற்கு வந்து சேர்ந்தார். மணமகள் நவீன தமிழ்த் திருமண மரபுப்படி ப்யூட்டி பார்லரிலிருந்து நேரடியாக அரைமணி நேரம் தாமதமாக வந்து சேர்ந்தார். புகைப்படம் எடுக்கும் சடங்கு தொடங்கியது. நண்பர்கள் மொய்கவரைக் கொடுத்துவிட்டு போட்டோ எடுத்து கொள்ளலாம் என்று பரிந்துரைத்தனர். நானோ, முதல் பந்தியில் அமர்வதில் உள்ள அவசியத்தையும் மேலும் கீழுமாக கனலில் வெந்த கோழி பிரியாணியை மூடியைத் திறந்தவுடன் ஆவி பறக்க உண்பதின் முக்கியத்துவத்தை சுருக்கமாக எடுத்துரைத்து அவர்களை பந்தியை நோக்கி ஓட்டினேன். எங்களைப் போன்று ஒத்த சிந்தனை கொண்ட நூறு பேரால் பந்தி ஏற்கனவே நிரம்பியிருந்தது. சோகத்துடன் காத்திருந்து இரண்டாம் பந்தியில் அமர்ந்தோம். முதல் பந்தியை தவற விட்ட சோகத்தை எனக்கு கிடைத்த லெக்பீஸ் போக்கியது. இரண்டாம் முறை கொடுத்த பிரியாணியில் மேலும் ஒரு பெரிய கறித்துண்டு நான் உண்ணும் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கியது. வழக்கத்திற்கு மாறாக அதிகமாகவே உண்டேன். பன் அல்வா, கத்தரிக்காய் கூட்டு வெங்காய தயிர் பச்சடி என மெனுவை அமர்க்களப்படுத்தியிருந்தார் எட்வின். தற்கால தமிழ் சமூகச்சூழலில் இது போன்ற காதல் திருமணங்கள் மட்டுமே சேரியையும் அக்ராகாரத்தையும் அழித்து, ஏற்றத்தாழ்வுகளை போக்கி, தீண்டாமையை மாய்த்து புதிய சமூக கட்டமைப்பை ஏற்படுத்தும். இந்த முயற்சியில் தனது பங்களிப்பை நல்கிய மணமக்களை தமிழும் இனிமையும் போல, குறளும் பொருளும் போல, உருதும் கஜலும் போல, ஜென்னும் பட்டாம்பூச்சி போல வாழ வாழ்த்தி விடைபெற்றோம்.
காதல் என்பது
நம் வசத்தில் இல்லை
அது ஒரு வினோதமான நெருப்பு
பற்ற வைத்தால் பற்றாது
அணைத்தால் அணையாது
(கஜல் கவிதை பிதாமகர் - மிர்ஜா காலிப்)
சென்னை நகரம் வெம்மையால் தகித்துக் கொண்டிருக்க எங்கள் உள்ளம் மட்டும் குளிர்ச்சியாக...மிக்க மகிழ்ச்சியாக...!

1 comment:

  1. Sir Ithamathiri ithuvaraielum arum vazlthu tharivithathu illa Thankyou very much sir.

    ReplyDelete