Tuesday, April 19, 2016

நவராத்திரி: பதிவிட்டது: Oct 19, 2015 12:44pm

ஞாயிற்றுகிழமை அன்று கொலு பார்க்க வருமாறு நண்பர் வேண்டுகோள் விடுத்தார். வந்தால் எனது மனைவிக்கு ஜாக்கெட் துணியுடன் கூடிய தாம்பூலமும் எனக்கு சுண்டலும் கிடைக்கும் என்றார். நண்பரின் மனைவி செய்யும் சக்கரை பொங்கல் பிரசித்தமானது. பதமாக வடிக்கப்பட்ட பச்சரிசி சாதத்தில் இரண்டு மடங்கு வெல்லமும் அளவாக நெய்யும் ஆங்காங்கே தென்படும் வறுத்த முந்திரிப்பருப்புடன் கூடிய சர்க்கரைப் பொங்கலை சுவைப்பது ஒரு தனி அனுபவம். சூடாக இருப்பின் கூடுதல் சிறப்பு.  மெனுவை மாற்றி சுண்டலுக்கு பதில் சக்கரை பொங்கல் செய்ய இயலுமா என்றேன். பொங்கல் சனிக்கிழமை செய்யப்பட்டதால் சுண்டல் என்பதில் மாற்றமில்லை என்றார். சரி போவோம் என்று மனைவி மகன் என குடும்பமாக சென்றேன். நண்பர் வரவேற்று கொலுவின் சிறப்புகளை எடுத்துரைத்தார். அம்பாள் இந்த ஒன்பது நாட்களும் மற்ற தெய்வங்களின் ஆற்றலைப் பெற்றுக்கொண்டு பரிபூரண சக்தியாக பத்தாம் நாள் விஜயதசமி அன்று மகிசாசுரனை வதம் செய்தாள் என்கிறது புராணம். கதை நன்றாக இருந்தது. கற்பூர ஆராதனை முடிந்தவுடன் சுண்டல் வழங்கப்படும் என்றார். கற்பூரம் கொழுத்தப்படும் நேரம். வீட்டின் அழைப்பு மணி அடித்தது. நண்பரின் மனைவி என்ன இது அபசகுனம் என்றார். நான் தான் கதவை திறந்தேன். பச்சை பட்டுப்பாவாடை சட்டையுடன் ஒரு நான்கு வயது குட்டி தேவதை நின்று கொண்டிருந்தாள். பளீரென்று உடை உடுத்தி காண்போரை ஒரு கணம் சுண்டியிழுக்கும் தோற்றம். காதுகளுடன் மௌன மொழியில் தொடர்ந்து பேசும் ஜிமிக்கி. சிரிக்கும் பொழுது ஒரு மின்னல் ஜிமிக்கியில் பட்டுத் தெறித்து ஒடியது. நான் சுய நினைவிற்கு வருவதற்குள் நண்பர் வந்து விட்டார்.                                                                                       நண்பர் ''சுபத்ரா.... சாட்சாத் அம்பிகையே வந்திருக்காடீ...வந்து பாரு...''  என்றார். நண்பர் மனைவியை முழுப்பெயர் சொல்லி அழைப்பது கடும் கோபத்திலும் காதலிலும் மட்டுமே. இல்லையெனில் வெறும் சுபா மட்டுமே. இது காதலா கோபமா என அறியாத சுபா மாமி பதறி ஓடிவந்தார். அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் குழந்தை விழித்தது. நண்பரோ அம்பிகையின் காதணி பௌர்ணமி நிலவானதைக் கண்ட அபிராமி பட்டர் போன்று உணர்ச்சி பிழம்பாக இருந்தார். நான் தான் அந்த குட்டி தேவதையிடம் பேசினேன்.
''என்னம்மா வேணும்... நீங்க யாரு?
''கேஸ் ஸ்டவ் லைட்டர் வேலை செய்யலை...அம்மா தீப்பெட்டி வாங்கிட்டு வரச் சொன்னாங்க''
(நண்பரின் வீட்டிற்கு மேல்தளத்தில் புதிதாக குடிவந்த குடும்பம் என புரிந்தது)
''உங்க பேர் என்ன?''
''மௌஷ்மி'' என்றாள்.
சுபா மாமி தீப்பெட்டி எடுத்து கொடுக்க நண்பரோ ''அம்பாள்...பாயம்மா ரூபத்துல வந்துருக்கா சார்'' என்றார்.
சுண்டல் பரிமாறப் பட்டது. நாவில் நிற்கும் சுவை. எனது மகனும் நன்கு சாப்பிட்டான். எனது மனைவிக்கு தாம்பூலம் வழங்கப்பட்டது. விடைபெறும் முன் சுபா மாமி கேட்டாள் ''ஜேசீ சுண்டல் நல்லாயிருந்ததா?''
''ஏன் நல்லா இருந்துச்சே...அப்பு கூட நல்லா சாப்பிட்டானே'' என்றேன். (அப்பு என் மகனின் செல்லப்பெயர்)
''இல்ல...இப்போ தான் நான் சாப்பிட்டு பார்த்தேன்...உப்பு போட மறந்துட்டேன்'' என்றார்.
எல்லாம் அம்பிகையின் (மௌஷ்மியின்) கைங்கர்யம்.

No comments:

Post a Comment